
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடைசி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஞாயிறு இன்று குரூப் -2 , குரூப் -2ஏ தேர்வுகள் நடைபெற இருந்தன. உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக இருக்கும் 828 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருந்தது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த சூழலில், இன்று சென்னையில் சில இடங்களில் தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டன . இதனால் குளறுபடி ஏற்பட்டது. தேர்வு எழுத வந்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்தார். இதனால் தேர்வு எழுத ஆர்வத்துடன் வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், கடைசி நேரம் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இதற்கு அரசியல் மட்டத்தில் பெரும் விமர்சனம் எழுந்தது.
இளைஞர் வாழ்வை வஞ்சிக்கும் திமுக.,
டிஎன்பிஎஸ்சி தேர்வைக்கூட நடத்த முடியாத அவலத்தில் திமுக அரசு..!லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சித்து வாழ்வை அழிக்கும் திமுக அரசு.. என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெறவிருந்த நிலையில் திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாகவும், சில தேர்வு மையங்களில் தேர்வர்களின் எண் இடம்பெறவில்லை என புகார் எழுந்துள்ளது.சில இடங்களில் வினாத்தாள் வரவில்லை. பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட காரணத்தினால், தேர்வர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. திமுக அரசின் அலட்சியத்தால் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அலைக்கழித்து, தவிக்க வைத்துள்ள
TNPSC நிர்வாகத்திற்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அரசு பணியிடங்களுக்கான தேர்வைக் கூட நடத்த முடியாத லட்சணத்தில் தான் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும், போலி திராவிட மாடல் திமுக அரசும் இருக்கிறது. திமுக அரசின் அலங்கோல ஆட்சியை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது இந்த நிகழ்வு. அரசு பணியில் சேரும் தமிழக இளைஞர்களின் கனவை கலைத்து, பணம் பறித்து, லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் திமுக மன்னர் குடும்பமும் திமுக அமைச்சர்களும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அலங்கோல ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். – என்று குறிப்பிட்டார்.
திமுக அரசின் திட்டமிட்ட சதி?
பாஜக., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் அரசு செய்த குளறுபடிகளின் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நம்மை கொதிப்படையச் செய்கின்றன. ஆளும் அரசின் நிர்வாகத் தோல்விக்கு நமது இளைஞர்களின் பலமாத உழைப்பு வீணாவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அரியணை ஏறியதும் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளை வழங்குவோம் எனப் போலி வாக்குறுதி அளித்த திமுகவின் ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்பதையும், கமிஷன் அடிப்படையில் தான் அரசுப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் வெறும் 9 ஆயிரம் தேர்வாளர்கள் பங்குபெறும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளில் இத்தனை குளறுபடிகள் நடப்பது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.
உண்மையிலேயே அரசுத் தேர்வுகளில் இம்மாதிரியான குழப்பங்கள் எதேச்சையாக நடைபெற்றனவா? அல்லது தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்ற அரசின் திட்டமிட்ட சதியா? என்பதை ஆதாரங்களுடன் பொதுமக்களிடம் விளக்க வேண்டியது முதல்வர் ஸ்டாலினின் தார்மீகப் பொறுப்பு – என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்!
இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டு காலம் கடுமையாக தங்கள் உழைப்பைக் கொடுத்து, தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத இந்தக் குளறுபடி, லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அமைச்சர்களால் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
லஞ்சம் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். – என்று, பாஜக., தலைவர்களில் ஒருவரான கு. அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மாடல் அரசால் மாணவர் வாழ்க்கை கேள்விக்குறி
மீண்டும் மீண்டும் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் திராவிட மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக, இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் C.P. சண்முகம் அறிக்கை வெளியிட்டார். அதில்,
இன்று தமிழகமெங்கும் நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் துவங்கிய நிலையில் சென்னையில் பிரசிடென்சி நந்தனம் மற்றும் வைஷ்ணவ் தேர்வு மையங்களில் குளறுபடிகள் ஏற்பட்டதாகக்கூறி ஒட்டுமொத்த தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
பல்லாயிரக்கணக்கானோர் இரவு பகல் பாராமல் ஆண்டு கணக்கில் இதற்காக படித்து தேர்வு மையத்தில் வந்து அமர்ந்தபின் தேர்வு ரத்து என்று கூறுவது இளைஞர்களது மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது மட்டுமல்லாமல் நம்பிக்கையற்ற தன்மையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மூன்று மையங்களில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக ஒட்டுமொத்தமாக தேர்வு ரத்து செய்திருப்பதை பார்க்கும் போது, இதில் டெக்னிக்கல் பிரச்சனைதான் ஏற்பட்டுள்ளதா? அல்லது வினாத்தாள் முன்கூட்டியே கசிவது அல்லது சதி ஏதாவது நடந்திருக்கிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோல் குளறுபடிகள் நடப்பது இது முதல் முறையல்ல, கடந்த முறை குரூப் 4 தேர்வு நடைபெற்ற போது வினா தாள்கள் முறையான பாதுகாப்பின்றி பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டதை நாம் அறிவோம்.
ஒரு தேர்வினை ரத்து செய்வதென்பது ஏதோ ஒரு நாள் நிகழ்வை ரத்து செய்தது போல் கிடையாது. அத்தேர்விற்கான தயாரிப்புகளை கடந்த ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மாணவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் தேர்விற்காக அவர்கள் கட்டும் கட்டணமும் தேர்வு எழுதுவதற்காக அவர்கள் பயணம் செய்து செலவிடும் கட்டணங்களும் பல குடும்பங்களின் ஒரு சில நாள் வாழ்வாதாரத்தையே மாற்றும் அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்பதை ஆளும் திமுக அரசுக்கு நினைவூட்ட கடமை பட்டிருக்கிறோம்.
மேலும் இது போல் தேர்வுகளை ரத்து செய்யும்போது மாணவர்களின் மனநிலையையும் இது பெரிய அளவில் பாதிக்கும். இது மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் செயலாகும்.
எனவே தமிழக அரசின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதோடு,இன்று நடைபெற்ற இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து இளைஞர் முன்னணி தமிழக அரசினை வலியுறுத்துகிறது… – என்று குறிப்பிட்டார்.
வரலாற்றிலேயே முதல் முறை…
TNPSC Group 2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை… திமுக ஆட்சியில் ‘நிர்வாகம்’ என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. – என்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசுக்கு துப்பு இல்லை!
அடிப்படை ஏற்பாடுகளைக் கூட செய்யாததால் டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2 தேர்வுகள் ரத்து: போட்டித்தேர்வை நடத்தக் கூட திமுக அரசுக்கு துப்பு இல்லை! என்று பாமக., தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மிகச்சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு இளநிலை அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை விடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்று குறிப்பிட்டுள்ளார்




