
கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு வாரத்தில் சுமார் 1500 பேர் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை டவுண்லோட் செய்துள்ளனராம். இவர்களுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
சைபர் க்ரைம் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையிலான தகவலை வெளியிட்ட கூடுதல் டிஜிபி ரவி, நவம்பர் மாதத்தில் ஒரே வாரத்தில் குறைந்தபட்சம் 1500 பேர் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை டவுண்லோட் செய்துள்ளனர் என்று கூறினார்.
மேலும், இவ்வாறு ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்துள்ளவர்களின் ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர்களை கண்டறியும் முயற்சியில் சைபர் பிரிவு களம் இறங்கியுள்ளதாகவும் டிஜிபி ரவி கூறினார்.
இந்த ஆபாச வீடியோக்கள் எல்லாம், வாட்ஸ்ஆப் அல்லது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்களாம்.
மொபைல் போன் அல்லது லேப்டாப்பில் டார்க்வெப் (darkweb) அல்லது விபிஎன் எனப்படும் விர்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க் மூலம் இணையத்தை பயன்படுத்தினால் தங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல.
எங்களிடம் இதற்கு என்றே பிரத்யேக சைபர் லேப் உள்ளது. அதன் மூலம் சில நுணுக்கங்களைக் கொண்டு எங்களால் அவர்களைக் கண்டறிய முடியும்! இது போன்ற ஆபாச வீடியோக்களை டவுண்லோட் செய்பவர்கள் மற்றும் பகிர்பவர்களின் மீது வழக்கு தொடர்ந்து, ஐபி முகவரியை டிஜிட்டல் ஆதாரமாகக் கொண்டு விரைவுநீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றும் தரமுடியும். அந்த முயற்சியில் தற்போது இறங்கியுள்ளோம் என்கின்றனர் போலீசார்.
எனவே இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, இது போன்ற வீடியோக்களை பகிர்வோரை ஊக்குவிக்க வேண்டாம் என்று போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக மொபைல் போன்களில் காவலன் ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தும் படி போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இது ஆபத்துக் காலங்களில் அவர்களுக்கு உதவும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


