Home Blog Page 16

திருச்செந்தூருக்கு ’சைக்கிள்’ யாத்திரை!

cycle yatra in maduri - 2026

உசிலம்பட்டி: திருச்செந்தூர் முருகனை தரிசிக்க உசிலம்பட்டி பகுதி வழியாக 150 க்கு மேற்பட்ட முருக பக்தர்கள் மிதிவண்டியில் யாத்திரை பயணம் மேற்கொண்டனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.

இந்நிலையில் , தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் மாலை அணிந்து மிதிவண்டியில் யாத்திரை பயணம் செல்கின்றனர்.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி வழியாக பயணம் செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் செல்வது வழக்கம் இந்தாண்டு 34 வது ஆண்டு பயணம் செல்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் பெரும்பாலும் முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் உள்ள முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதை யாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.

தை அமாவாசை: சரவணப் பொய்கையில் பிதுர் தர்ப்பணம் அளித்து முன்னோர் வழிபாடு!

thai amavasai tharpanam in saravana poygai - 2026

மதுரை: தை மாத மகாய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்தனர்.

தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சரவணப் பொய்கை உள்ளது. இங்கு தை மாத மகாளய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு இறந்த தங்கள் குடும்ப முன்னோர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் பிதுர் தர்ப்பணம் செய்தனர்.

இதன் மூலம் இறந்த தங்களின் முன்னோரின் ஆத்மா சாத்தியடைந்து அவர்களின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சரவண பொய்கையில் ஏராளமானோர் பிதுர் தர்ப்பணம் செய்தனர்.
மதுரை அண்ணாநகர் யாணைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயம், வைகை காலனி, அருள்மிகு வைகை விநாயகர் ஆலயம், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயம் , வரசித்தி விநாயகர் கோயில்களில் தை அம்மா வாசயை ஒட்டி, தர்பணம் செய்து வைக்கப்பட்டது.

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தை அமாவாசை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக அவர்களை வேண்டி அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோவில் அருகில் உள்ள வைகை ஆற்றில் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கினர்.
தொடர்ந்து, வைகை ஆற்றில் நீராடி சூரியனை வணங்கினர் பின்னர் திருவேடகத்தில் உள்ள திரு ஏடகநாதர் ஏலவார்குழலி திருக்கோவிலில் விளக்கேற்றி முன்னோர்களை வணங்கினர் .

இதில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் அருகில் உள்ள தேனி திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர் தர்ப்பணம் கொடுக்கும் வருகை தரும் பொது மக்களுக்காக கோவில் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

காவல் துறையினர் வாகனங்களை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வணங்கி செல்கின்றனர்.

டாலரை விற்று… தங்கத்தை ஏற்று… சரிக்கட்டும் போட்டியில் இந்தியா!

doller vs gold - 2026
  • சக்ரவர்த்தி மாரியப்பன்

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் விவாதிக்கும் நபர்கள், ஊடகங்கள் மத்தியில் சர்வதேச நிகழ்வுகள் குறித்து பார்ப்பது அவசியம் ஆகிறது.

● கடந்த ஓராண்டில் இந்தியா, சீனா, பிரேசில், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தங்களிடம் இருந்த டாலர் கடன் பத்திரங்களைப் #USTreasuryBonds பெருமளவு விற்றுள்ளன.

● US Treasury Bonds / Dollar Bonds என்பது அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரம். இவற்றை Bills (ஓராண்டு), Notes (2 முதல் 10 ஆண்டுகள்), Bonds (20 முதல் 30 ஆண்டுகள் வரை) என மூன்றாகப் பிரிக்கிறார்கள்.

● நமது ரிசர்வ் வங்கி இந்த பத்திரங்களை வாங்கி வைத்தால் ஆண்டுக்கு 4% முதல் 4.75% வரை வருமானம் ஈட்டும். அமெரிக்க அரசின் உறுதி (Sovereign Guarantee), பொருளாதார பலம், டாலரின் சர்வதேச டிமாண்ட் இந்த வருமானத்தை முடிவு செய்கிறது. இவை எல்லாம் சாதகமான அம்சங்கள்.

● பாதகங்கள் என்று பார்த்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பத்திரங்களை பயன்படுத்த முடியாமல் ரஷ்யா சிரமப்பட்டு வருகிறது. Sovereign Guarantee ஐ அரசே மீறுகிறது.

● ரஷ்யா போல ஈரான் உட்பட வேறு சில நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து சர்வதேச வர்த்தகத்தில் அவர்களின் செல்வாக்கைக் குறைத்து வருகிறது.

● #SWIFT போன்ற சர்வதேச கரன்சி பரிமாற்றங்களிலும் முட்டுக்கட்டை போடுகிறது. லண்டன் மற்றும் நியூ யார்க்கில் உள்ள சர்வதேச பணப்பரிமாற்ற வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள டாலர்களைத் தொட முடியாத வண்ணம் உள்ளூர் அரசின் அதிகாரம் வழியாகத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

● அண்மையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் இயங்கும் நயாரா #Nayara (ரஷ்யாவுடன் இணைந்து நாம் இயக்கும் பெட்ரோலிய நிறுவனம்) நிறுவனத்திற்கு Cloud Service Support ஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அமெரிக்க அரசின் உத்தரவைக் காட்டித் தொழிலில் நேர்மையில்லாமல் அது நடந்து கொள்கிறது.

● அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் காரணமாக சீனா கடந்த சில ஆண்டுகளாகத் தன் கையிருப்பில் இருந்த டாலர்களை விற்று வருகிறது. சுமார் 200 பில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.16 இலட்சம் கோடி) அளவு கையிருப்பை அது குறைத்து விட்டது.

● சீனா மட்டுமல்லாது நமது ரிசர்வ் வங்கியும் சுமார் 50 பில்லியன் டாலர்கள் (ரூ.4 இலட்சம் கோடி) அமெரிக்க டாலர் பத்திரங்களை கடந்த ஓராண்டில் விற்று விட்டது.

● சீனா, இந்தியா மட்டுமின்றி பிரேசில், சவுதி ஆகிய நாடுகளும் இதனைச் செய்வது முக்கியத்துவம் பெறுகின்றது.

● இன்று ரஷ்யா, ஈரானுக்கு நடப்பது நாளை #BRICS உட்பட பல்வேறு நாடுகளுக்கும் நடக்கும் என்று நாம் எண்ணுகிறோம்.

● முதற்கட்டமாக நாம் இங்கிலாந்தில் அடமானம் வைத்திருந்த 200 டன் தங்கத்தை சென்ற ஆண்டு இந்தியாவிற்கு கொண்டு வந்து விட்டோம். ஒரே நாளில் நமது அடமானத்தை மீட்க முடியாமல் போகலாம் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

● படிப்படியாக டாலர் சேமிப்பைக் குறைத்து மாற்று வழிகளில் நமது சேமிப்பை அதிகரிக்கிறோம். அதில் முக்கிய சொத்தாக தங்கம் உருவெடுத்துள்ளது.

● வருங்காலத்தில் டாலர் அல்லாத பன்னாட்டு வர்த்தகம் செய்ய வாய்ப்புகளைத் தேடி வருகிறோம். ரூபாய், யுவான், ரூபிள், திர்ஹாம், பிரேசிலின் ரியல் என இருநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தவும் முயற்சி செய்கிறோம்.

● #Vostro Accounts – வெளிநாட்டு வங்கிகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய இந்தக் கணக்குகளைத் துவக்க ரிசர்வ் வங்கி ஆறு மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது. இதற்கு இந்தியாவில் கிளை இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தையும் தளர்த்தியுள்ளது.

● வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்தால் அப்பணத்தை ரூபாய் கணக்கிலேயே இந்தியாவில் முதலீடு செய்யலாம் என்றும் சலுகை அளித்துள்ளது.

● நேற்று ரூபாய் மூலம் ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு பரிமாற்றத்தை ஈடு செய்ய கூடுதலாக மூன்று மாதங்கள் (eg 15 for $ vs 18 for ரூ) அவகாசம் அளித்துள்ளது.

● சரி, #BRICS நாடுகள் டாலரைத் தொடர்ந்து விற்று வந்தால் டாலர் மதிப்பு ஏன் குறையவில்லை. அமெரிக்கச் சந்தை ஏன் விழவில்லை என்று கேள்வி எழுகிறது. இங்கு தான் அமெரிக்க லாபி வேலை செய்கிறது.

● அமெரிக்க டாலரை நாம் விற்றாலும் இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற வேறு சில நாடுகள வாங்க அமெரிக்க மறைமுகமாக நிர்பந்திக்கிறது.

● Treasury International Capital என்று இணையத்தில் தேடினால் அமெரிக்க டாலர் கடன் பத்திரங்களை யார் வாங்குகிறார்கள் என்கிற விபரம் தெரிய வரும்.

● இந்த TIC Data வில் வெளிப்படும் உண்மை என்னவெனில் கடன் பத்திரங்களை வாங்குவது U.K அரசு அல்ல, அங்குள்ள சர்வதேச நிதி நிறுவனங்கள் என்று தெரிய வருகிறது.

● பெல்ஜியத்தில் உள்ள மிகப்பெரிய ICSD ( நம்ம ஊர் NSDL, CSDL மாதிரி சர்வதேச Demat கணக்குகளை கையாளும்) நிறுவனம் #Euroclear வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

● இதே போல வரி சொர்க்க நாடான #CaymanIslands இல் இருந்து பெருமளவு டாலர் கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

● இவை எல்லாம் பங்குச்சந்தை வணிகர்கள் போல, நீண்ட கால முதலீட்டாளர்கள் அல்ல. தேவையான இலாபம் கிடைத்தவுடன் குறுகிய காலத்தில் விற்றுச் சென்று விடுவார்கள்.

● அமெரிக்கா இந்த விஷயத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

● மேலும் திரு.டிரம்ப் அறிவித்துள்ள கடன் அட்டைகள் (Credit Card Interest) மீதான வட்டிக் குறைப்பு (<10% from 24-36%) அமெரிக்க வங்கிகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

● வங்கிகள் தங்களது கடன் அட்டை வணிகத் தொகையை சந்தையில் பங்குப் பத்திரங்களாக விற்று வருகின்றன. டாலர் பத்திரங்களைப் போல இதுவும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

● நாளை அதிரடியாக வட்டியைக் குறைத்தால் அமெரிக்க வங்கித் துறை ஆட்டம் கண்டு விடும்.

● அமெரிக்க அரசின் கடன் மீதான வட்டி ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.1 இலட்சம் கோடி டாலர் அளவுக்கு உயர்ந்து வருகிறது. வருமானத்தை விட செலவு அதிகரித்துப் பற்றாக்குறை கூடியுள்ளது கவலைக்குரிய அம்சம்.

● அமெரிக்க அரசு தனது நம்பகத்தன்மையை இழந்து வருவதால், ரிசர்வ் வங்கி போன்ற நாட்டின் தலைமை வங்கிகள் டாலருக்கு மாற்றாகத் தங்கம், உள்நாட்டு கரன்சி வர்த்தகம், கச்சா எண்ணெய் போன்ற மாற்றுப் பாதையில் கவனம் செலுத்துகின்றன.

● அமெரிக்கக் கடன் பத்திரங்கள் மிகவும் ரிஸ்க்கானவை என்று சீனா மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் முடிவெடுப்பது மிகவும் முக்கியமான விஷயம்.

● விசா, மாஸ்டர் கார்டுக்கு மாற்றாக நாம் #Rupay, #UPI, #RTGS என நிதிக் கட்டமைப்பை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் மாற்றியமைத்துள்ளோம்.

● #SWIFT க்கு மாற்றாக #BRICSpay, சீனாவின் #CIPS, Project #mBridge என பல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன.

உங்கள் கண்களைத் திறந்திருக்கும் போதே வெண்ணெய் என்று ஏமாற்றி சுண்ணாம்பு வைக்கும் பேர்வழிகள் சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும் உண்டு. தீவிரமான வாசிப்பு, ஒவ்வொரு எதிர்மறைச் செய்திக்கும் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வம் இல்லை என்றால் நீங்கள் விட்டில் பூச்சிகளாகத் தான் மாட்டிக் கொள்வீர்கள்.

ஸ்டாலின் போடும் கணக்கு! ஒத்துழைப்பாரா ராகுல்?

rahul and stalin - 2026

தமிழ்நாட்டில் தலித் வாக்கு 21 சதவீதம், சிறுபான்மை மக்களுக்கான வாக்கு சுமார் 18 சதவீதம். இந்த இரண்டு சேர்ந்து கிட்டத்தட்ட 40 சதவீதம். இந்த 40 சதவீத வாக்குகளை (இந்தியாவிலேயே தலித்+ சிறுபான்மை வாக்கு சதவிதம் அதிகம் உள்ள பெரிய மாநிலம் தமிநாடு தான். )மையமாக வைத்தே திமுக கடந்த 15 ஆண்டுகளாக தனது அரசியல் அறுவடையை செய்து வருகிறது. பாஜக என்ற ஒரு “பூச்சாண்டி”யை தொடர்ந்து காட்டி, தலித் மற்றும் சிறுபான்மை மக்களை அச்சத்தில் வைத்துக் கொண்டு தேர்தல் வெற்றிகளை குவிப்பதே திமுகவின் முதன்மை உத்தி.

தலித் மக்களிடம், “பாஜக வந்தால் இடஒதுக்கீடு ரத்து, இந்தி திணிப்பு, வடநாட்டு பிராமண ஆட்சி” என்ற செய்தியை திமுக தனது ஊடகங்கள் மூலம் இடைவிடாது செலுத்துகிறது. கல்வி அறிவு குறைந்த ஏழை தலித் மக்களை முழுமையாக பாஜக மற்றும் இந்திக்கு எதிராக திருப்புகிறது. அதே முறையை சிறுபான்மை மக்களிடமும் பயன்படுத்துகிறது. “பாஜக ஆட்சிக்கு வந்தால் மத சுதந்திரம் இல்லை, நாட்டைவிட்டு விரட்டுவார்கள், பாதுகாப்பு இருக்காது” என்ற அச்சத்தை தினசரி வீடியோக்கள், மேடைகள், பேச்சுகள் மூலம் விதைக்கிறது. இப்படி தலித் மற்றும் சிறுபான்மை மக்களை இந்து அரசியலுக்கும் இந்திக்கும் எதிரான மனநிலையில் உறைய வைத்து, திமுக இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்நாட்டை முழுமையாக சுருட்டி நூறு சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டார்கள்.

இந்த அரசியல் தமிழ்நாட்டில் திமுகவுக்கு அறுவடை கொடுக்கிறது. ஆனால் அதே அரசியல், காங்கிரஸ் கட்சிக்கு வட இந்தியாவில் கல்லறை வெட்டுகிறது. திமுக இந்தி, இந்துத்துவா, வட இந்தியர்கள், இந்துக்கள் என்று ஒட்டுமொத்தமாக தாக்கும் அரசியலை நடத்துகிறது. இதை பாஜக வட மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாக மாற்றுகிறது. “உங்கள் கூட்டணி கட்சி திமுக உங்களை இழிவுபடுத்துகிறது, உங்கள் மதத்தையும் மொழியையும் கேவலப்படுத்துகிறது” என்று காங்கிரஸை சுவர் ஓரமாக தள்ளுகிறது. அதன் விளைவாக வட மாநிலங்களில் காங்கிரஸ் பல இடங்களில் அரசியல் வரைபடத்திலேயே காணாமல் போகிறது.

இந்த பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிட்டிக்ஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ராகுல் காந்தியின் முன் ஒரு கடுமையான கணக்கை வைக்கிறார். “திமுகவின் இந்தி எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்டில் நமக்கு 40 தொகுதிகளை வாங்கித் தருகிறது. ஆனால் அதே அரசியல் வட இந்தியாவில் நம்மிடம் இருந்து 400 தொகுதிகளை பறிக்கிறது. இது லாபம் அல்ல, பேரழிவு” என்று நேரடியாக சொல்கிறார்.

அதோடு நிற்காமல் இன்னொரு உண்மையையும் மேசையில் வைக்கிறார். “திமுக எப்போதும் வெற்றி பெற முடியாது. அவர்களின் அறுவடை காலம் முடிவை நோக்கி செல்கிறது. 2029 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 40 இடங்களையும் அவர்கள் மீண்டும் எடுக்க முடியாது. கடந்த தேர்தலிலேயே பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், நம் கூட்டணிக்கு 15 இடங்கள் கூட கிடைத்திருக்காது” என்று கையில் புள்ளி விபர எண்களோடு பேசுகிறார்.

பிறகு அடுத்த அடி. “திமுகவை மெதுவாக கழட்டி விடுங்கள். தாவேக்கா என்ற புதிய கட்சியுடன் கூட்டணி போங்கள். அதன் மூலம் தமிழ்நாடு மட்டும் அல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, பாண்டிச்சேரி என முழு தென் இந்தியாவிலும் நமக்கு புதிய வாசல் திறக்கும். 2029 தேர்தலுக்கு அது தான் சரியான முதலீடு” என்று ராகுல் காந்தியிடம் நேரடியாக பரிந்துரை செய்கிறார்.

அதே நேரத்தில் ஒரு பிளான் பி-யையும் வைக்கிறார். “திமுகவை உடனே விட்டு வெளியேற முடியாவிட்டால், அவர்களை அழுத்துங்கள். 38 முதல் 40 சட்டமன்ற தொகுதிகள் கேளுங்கள். ஒரு ராஜ்யசபா சீட் கேளுங்கள். மூன்று முக்கிய அமைச்சுப் பதவிகள், ஒரு துணை முதலமைச்சர் பதவி கேளுங்கள். இதை தரவில்லை என்றால், தாவேக்கா கூட்டணிக்கு நகருங்கள்” என்று தெளிவாக கோடு இழுக்கிறார்.

ஆனால் இந்த கணக்கு டெல்லியில் சரியாக இருந்தாலும், தமிழக காங்கிரஸின் சென்னை கணக்கு வேறு. தமிழக காங்கிரஸ் என்பது தொண்டர்கள் இல்லாத தலைவர்கள் நிறைந்த கட்சி. 99 சதவீத தலைவர்கள் திமுகவின் தயவில் அரசியல் உயிர் பிழைப்பவர்கள். திமுகவை விட்டு வெளியேறினால் தங்கள் அரசியல் வாழ்க்கை முடியும் என்பதை அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் “திமுக இல்லாமல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் சாவு” என்ற குரலே தமிழக காங்கிரஸ் முகாமில் ஒலிக்கிறது.

இந்த நிலையை காங்கிரஸ் மேலிடமும் புரிந்து கொள்கிறது. “திமுகவுக்கு நாம்தான் தேவை, நமக்கு திமுக அவசியம் இல்லை” என்ற முடிவுக்கு டெல்லி மெதுவாக வருகிறது. அந்த கருத்தையும் ராகுல் காந்தியின் முன் மீண்டும் வைக்கிறார்கள்.

இதற்கிடையில் திமுகவும் கணக்குப் போடுகிறது. காங்கிரஸ் கூட்டணியை விட்டால் கன்னியாகுமரியில் கூட ஒரு சீட் கிடைக்காது. மூன்று புள்ளி ஐந்து சதவீத வாக்குகள் ஒரே இரவில் கரைந்து போகும். சிறுபான்மை வாக்குகள் விஜய் பக்கம் நகரும். இந்த உண்மை திமுக தலைமைக்கு தெளிவாக தெரியும். அதனால் தான், வெளியில் பேசாவிட்டாலும், உள்ளுக்குள் ஒரு முடிவை எடுக்கிறார்கள். “எத்தனை தொகுதிகள் கேட்டாலும் தருவோம். அமைச்சரவையில் இடம் தருவோம். துணை முதலமைச்சர் பதவியும் தருவோம். கூட்டணியை மட்டும் உடைக்காதீர்கள்”, கூட்டணியை உடைத்துக் கொண்டு போனால் உங்கள் கட்சி உடைந்து இதற்கு முன்பு மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது போல சிதம்பரம் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் அல்லது தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்னும் ஒரு புதிய காங்கிரஸ் கட்சியின் பிளவு தமிழ்நாட்டின் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களை வைத்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமைக்கு கசிய விடுற நிலைக்கு திமுக தயாராகிறது.

ஆனால் இதை இப்போது வெளியில் சொல்ல மாட்டார்கள். அதுபோல இப்போதே ஆட்சிப் பங்கு பேசினால், “திமுகக்கு தன்னம்பிக்கை இல்லை” என்று மக்கள் நினைத்து விடுவார்கள். அந்த பயம் அவர்களை அடக்கி வைத்திருக்கிறது.

இந்த எல்லாவற்றுக்கும் நடுவில் காங்கிரஸ் ஒரு முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் நிற்கிறது. திமுகவுடன் தொடர்வதா, அல்லது புதிய அரசியல் பாதையை திறப்பதா என்பது தான் கேள்வி. மல்லிகார்ஜுன கார்கே பெயரில் தலைவர் தான். அதிகாரம் இல்லை. ராகுல் காந்தி முடிவெடுக்க தயங்குகிறார். சோனியா காந்தி உடல்நலத்தால் அரசியலிலிருந்து ஓரமாக இருக்கிறார்.

யார் முடிவு எடுப்பார்கள் என்று தெரியாது. ஆனால் ஒரு முடிவு எடுக்காமல் காங்கிரஸால் இனிமேல் நகர முடியாது. அந்த முடிவு திமுகவின் அரசியலையும், காங்கிரஸின் எதிர்காலத்தையும், தமிழ்நாடு அரசியலின் திசையையும் ஒரே நேரத்தில் மாற்றப் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், காங்கிரஸ் எந்த பக்கம் திரும்புகிறது என்று.

  • எம். தங்கராஜ்

பரமன் அளித்த பகவத் கீதை (17): சர்மிஷ்டை கதை

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 17
மகாபாரதக் கதைஆதிபர்வம் -2 – யயாதி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

சர்மிஷ்டை கதை

          சர்மிஷ்டை, அசுர குல அரசன் விருசபர்வாவின் மகள். இவளது நெருங்கிய தோழி, அசுர குலகுரு சுக்கிராச்சாரியின் மகள் தேவயானி. விருசபர்வாவின் ஆட்கள்தான் கசன் சுக்ராச்சாரியாரிடம் சீடனாக இருந்தபோது அவனை பலமுறை கொன்றவர்கள். ஒரு முறை குளத்தில் நீராடிவிட்டு திரும்புகையில் கவனக்குறைவாக அரச குமாரி சர்மிஷ்டையின் ஆடையை தேவயானி அணிந்துவிட்டாள். அதற்காக அவளை உடலாலும் மனதாலும் துன்புறுத்தினாள் சர்மிஷ்டை. தேவயானியை சர்மிஷ்டை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டாள். அதற்கு சர்மிஷ்டையை பழி வாங்க தேவயானி முடிவு செய்தாள்.

          தனது தந்தை சுக்ராச்சாரியாரிடம் சொல்லி, சர்மிஷ்டையை தனது வேலைக்காரியாக்கிக் கொண்டாள். தேவயானியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றிய மன்னன் யயாதியை தேவயானி திருமணம் செய்துகொண்டாள். யயாதியுடன் தேவயானி அவனது நாடிற்குச் செல்லும்போது சர்மிஷ்டையும் அவளுடன் சென்றாள். 

          தேவயானிக்குத் தெரியாமல் சர்மிஷ்டை மீது காதல் கொண்ட யயாதி, சர்மிஷ்டையையும் மணந்துகொண்டான். யயாதிக்கும்-தேவயானிக்கும் பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்கள் (ஸ்ரீகிருஷ்ணரின் வம்சத்தவர்) என்றும் இரண்டாவது மகன் துர்வசுவின் வழித்தோன்றல்கள் சேர, சோழ, பாண்டியர்கள், மேலும் இவர்களின் ஒரு கிளையினர் ஒழுக்கங்குன்றி அரேபிய தேசம் அடைந்து யவனர்கள் ஆயினர் என்றும் யயாதிக்கும் சர்மிஷ்டைக்கும் பிறந்த மூன்றாவது மகன் திரஹ்யுவின் வழித்தோன்றல்கள் போஜர்கள் என்றும், நான்காவது மகன், அனுவின் வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் என்றும், ஐந்தாவது மகன் புருவின் வழித்தோன்றல்கள் பௌரவர்கள் (புரு வம்சம் – கௌரவர்கள் மாற்றும் பாண்டவர்கள்) என்றும் அழைக்கப்பட்டனர்.

          ஒரு முறை ஷர்மிஷ்டையின் அரண்மனைக்கு சென்ற தேவயானி, அங்கு யயாதியின் உருவம் ஒத்த மூன்று குழந்தைகளை கண்டு, உங்கள் தந்தை யார் என வினவ, அவர்களும் யயாதி என உரைத்தது கண்டு, சர்மிஷ்டை மற்றும் யயாதி மீது கோபமுற்று, நடந்ததை தந்தை சுக்கிராச்சாரியாரிடம் உரைத்தாள். சுக்கிராச்சாரியும், தன் மகளுக்கு துரோகம் செய்த, யயாதியை உடனே கிழவனாக மாற சாபமிட்டார். பின்னர் வருத்தமுற்ற தேவயானி, சாபவிமேசனத்திற்கு வழி கேட்க, அவரும், யயாதியின் முதுமைப் பருவத்தை மகன்களில் ஒருவர் ஏற்றால், யயாதியின் முதுமை நீங்கி இளமை அடைவான் என்று கூற, யயாதியின் முதுமையைத் தேவயானியின் நான்கு மகன்களில் ஒருவர் கூட ஏற்காத நிலையில், ஷர்மிஷ்டையின் மகன்களில் புரு என்பவன், யயாதியின் முதுமை ஏற்று தன் இளமையை வழங்கினான். இதனால் மகிழ்ந்த யயாதி, தனக்குப் பிறகு சர்மிஷ்டைக்கு பிறந்த இளவரசன் புரு, தன் நாட்டை ஆள வரமளித்தான்.

          புருவம்சத்தில் பல தலைமுறைகள் கழித்து துஷ்யந்தன் பிறந்தான். அவன் சகுந்தலாவை மணந்து பரதன் என்ற மகனைப் பெற்றெடுத்தான். இவனால் இந்த வம்சம் பரதவம்சம் எனப் பெயர்கொண்டது. அதற்குப் பல தலைமுறைகள் கழித்து ஹஸ்தி என்பவர் பிறந்தார். இவர்தான் ஹஸ்தினாபுரத்தை அமைத்தவர். இவருக்குப் பலதலமுறைகள் கழித்து குரு பிறந்தார். இவரால்தான் இந்த வம்சம் குரு வம்சம் என அழைக்கப்படுகிறது. குருவின் மகன் விதுர்த். விதுர்த்தின் கொள்ளுப்பேரன் பிரதிபா. பிரதிபாவின் மகன் சந்தனு.

          குரு குல மன்னர்களின் முக்கியமான அரசர்கள் குரு, பிரதீபன், சந்தனு, பீஷ்மர், திருதராட்டிரன், பாண்டு, விதுரன், பாண்டவர், கௌரவர், பரிட்சித்து மற்றும் ஜனமேஜயன் ஆவர். குரு குல மன்னர்கள் கங்கை ஆற்றிக்கும், யமுனை ஆற்றிக்கும் இடைப்பட்ட வளமான பகுதிகளை ஆண்டனர். பின்னர் குரு நாடு, குருஜாங்காலம் மற்றும் உத்தரகுரு என மூன்று நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. குரு நாட்டிற்கு மேற்கில் குருஜாங்காலம் மற்றும் கிழக்கில் உத்தரகுரு நாடுகள் இருந்தன.

குருச்சேத்திரப் போர்

          குரு குலத்தினரில் பாண்டவர்கள் தாங்கள் சூதாடி தோற்ற நாட்டின் உரிமை கோரி கௌரவர்களுடன் குருச்சேத்திரத்தில் போரிட்டனர். இவ்விருவருக்கும் ஆதாரவாக பரத கண்டத்து நாடுகளின் மன்னர்கள் படைகளுடன் போரிட்டனர். குருச்சேத்திரப் போரின் முடிவில் எஞ்சியவர்கள் குரு குலத்தினரில், பாண்டவர் ஐவர், யது குலத்தவரில் சாத்தியகி மற்றும் கிருதவர்மன் மற்றும் அந்தணர்களில் கிருபர், அசுவத்தாமன், மட்டுமே. மற்ற அனைவரும் மாண்டனர்.

கம்யூனிஸ்டுகளால் கைவிடப்பட்ட கம்யூனிசம்

china communist party leaders met rss leaders - 2026

— டாக்டர் ராகேஷ் சின்ஹ
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்

ஒரு காலத்தில் இந்திய அரசியலில் வலிமையான குரலாகவும் அசைக்க முடியாத சக்தியாகவும் இருந்த கம்யூனிஸ்டுகள் இப்போது தேர்தல் அரசியலில் மட்டுமன்றி தொழிலாளர்கள் , விவசாயிகள் மத்தியிலும் மதிப்பிழந்து போயுள்ளனர். ஆர் எஸ் எஸ் சார்புள்ள பாரதிய மஸ்தூர் சங்கம் இன்று தொழிற்சங்க களத்தில் மிகப்பெரிய, வலிமையான தொழிற்சங்கமாக ஆளுமை கொண்டுள்ளது. நூற்றாண்டு கால கருத்தியல், அரசியல் பயணத்தில் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கான காரணத்தை எந்த கம்யூனிச அமைப்பும் பொதுவெளியில் மட்டுமல்ல அமைப்புக்குள்ளும் ஆய்வு செய்வதாக , விவாதிப்பதாக தெரியவில்லை. எதையும் தீவிரமாக விவாதிப்போம் என்கின்ற அவர்களின் மரபுக்கு கூட இது முரணாக இருக்கிறது.

புதிய தலைமுறையைச் சார்ந்த கம்யூனிஸ்டுகள் (தில்லியில் உள்ள) பிரதமர்களின் காட்சி யகம், நூலகத்தில் அவர்களது முன்னோடிகள் பேசிய பதிவுகளை கேட்டு தங்கள் அறியாமையை போக்கிக் கொள்ள முடியும். ஆனாலும் உலகம் முழுவதும் அரசியலில் போக்கு மாறி உள்ளது. பிலு மோடி அல்லது மினு மசானி போன்ற வலதுசாரிகள் இன்று இல்லை. அதேபோல் எம் என் ராய், பசவபுன்னையா போன்ற இடதுசாரிகளும் இன்றில்லை.

கடந்த பல தசாப்தங்களாக எந்த ஒரு தீவிரமான இலக்கியத்தையோ, ஆழமான அரசியல் கருத்தாய்வையோ கம்யூனிஸ்டுகள் உருவாக்கவில்லை. 1990 களில் தொடங்கி அவர்களின் கவனம் முழுக்கவும் ஆர் எஸ் எஸ் , பாஜக மீது மட்டுமே உள்ளது. அதுவும் கூட ஆழமற்றதாகவே இருக்கிறது. பொதுத்துறை, அரசுடைமை என்று பேசும் சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம் எல்) போன்ற கட்சிகள் கூட்டாக சேர்ந்து கூட நவதாராளவாதம், நேரடி அந்நிய முதலீடு, தனியார் மயமாதல் , சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு மாற்று கண்ணோட்டத்தை, செயல்திட்டத்தை இதுவரை உருவாக்கவில்லை. இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ் சார்புடைய பி எம் எஸ் , சுதேசி ஜாக்ரன் மன்ச் போன்ற அமைப்புகள் முன்னோடியாக வெகு தூரம் பயணித்துள்ளன.

இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் ஐரோப்பாவில் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுக்கு அடையாள சிக்கல் இல்லை. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் ‘நாம் யார்?’ என்ற கேள்விக்கு விடை தேட போக பல முரண்பாடுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பிளவுகளுக்கும் ஆளாகியுள்ளனர். அதில் முதல் விஷயம் தேசியம் பற்றிய கருத்தியல் கேள்வி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவரான சத்யபக்தர், தங்கள் கட்சி இந்திய நாட்டிற்கே உரிய கட்சியாக இருக்க வேண்டும் என்றும் இந்திய சமுதாயத்தை மாற்றி அமைக்க கம்யூனிச கொள்கைகளை ‘இந்திய சூழ்நிலைகளுக்கும் இந்திய மக்களின் மனநிலைக்கும் ஏற்ப’ செயல்படுத்த வேண்டும் , என்றார். அவர் 1929 இல் வெளியிட்ட மீரட் சதி வழக்கு ஆவணத்தில் ‘ நாங்கள் எங்கள் கைகளை கட்டிக் கொள்ள தயாரில்லை. வேறு எவரிடமிருந்தும் ஆணைகளையோ அறிவுறுத்தலையோ ஏற்க மாட்டோம் ‘ என்று பதிவு செய்துள்ளார்.

சோவியத் ஆதரவு கோஷ்டி அவர் குரலை நசுக்கி அவரை கட்சியிலிருந்து வெளியேற்றியது. அவர்கள் சோவியத் ஆதிக்கத்தில் இருந்த காம்இன்டர்னிடமிருந்து (Comintern – கம்யூனிச அகிலம்) தங்கள் கருத்தியல் வழிகாட்டுதலை பெற்றார்கள்.

சீனா-இந்தியா போரின் போது விசுவாசம் குறித்த அதே கேள்விதான் சிபிஐ கட்சியின் பிளவுக்கு வழி வகுத்தது. கட்சியில் ஒரு சாரார் சீனாவை ஆக்கிரமிப்பாளர் என்று கூறத் தயாராக இல்லை. பின்னாளில் சிபிஎம் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த பி டி ரணதிவே, ஒரு சோசலிச நாட்டை ஆக்கிரமிப்பாளன் என்று நம்புபவன் முட்டாளாகவோ அல்லது அயோக்கியனாகவோ தான் இருப்பான். அவன் ஒரு கம்யூனிஸ்டாகவோ சோசலிஸ்டாகவோ இருக்க முடியாது, என்று சொன்னார்.

கம்யூனிச கட்சிகளின் தலைவர்கள் பெரும்பாலோர் பாட்டாளி வர்க்க பின்னணி இல்லாதவர்களாகவும் மக்கள் இயக்கத்தை பற்றி ஒன்றும் தெரியாதவர்களாகவோ அல்லது அது பற்றி சற்றே அறிமுகம் ஆனவர்களாகவோ தான் இருக்கிறார்கள். உயர்நிலை தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி அந்த கட்சிகளில் இருக்கிறது. நாடாளுமன்ற (ஜனநாயக) அரசியலில் ஒருங்கிணைந்த அங்கமாக ஆவது குறித்து கம்யூனிச இயக்கத்தின் உள்ளார்ந்த தடுமாற்றத்தில் இருந்து அது இன்னும் மீளவில்லை.

கம்யூனிஸ்டுகள் தங்கள் ஆதரவாளர்கள் இடையே கூட , ஒருங்கிணைப்புக்கு மாறாக , பிளவையே அதிகம் ஏற்படுத்தி உள்ளனர். பிகாரில் கம்யூனிச தலைவர்கள் ஜாதிய கட்சிகளில் அடைக்கலம் ஆகியுள்ளனர். கம்யூனிஸ்டுகளின் கருத்தியல் பற்றியோ அரசியல் பங்களிப்பு பற்றியோ இன்று வெறும் பாடமாக படிக்கலாமே தவிர அவர்கள் முன்னணி வீரர்களாக களத்தில் இல்லை. அவர்கள் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ளனர். மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கையும் இல்லை. மதிப்பும் இல்லை.

அது மட்டுமன்றி, நாடாளுமன்ற (தேர்தல் ஜனநாயக) முறையில் ஈடுபடுவதா அல்லது அதை சிதைக்க வேண்டுமென்ற கம்யூனிச கருத்தியலை பின்பற்றுவதா என்ற முரண்பாட்டை அவர்களால் தீர்க்க முடியவில்லை. கட்சி தொண்டர்கள் இன்னமும் ஸ்டாலின், மாவோவின் சிந்தனைகளையே படித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் இரண்டாம் கெட்டானாக இருக்கிறார்கள். கவர்ச்சிகரமான கருத்தியலால் அதிகாரத்தை பிடித்து விடலாம் என்ற நினைப்பு அவர்களிடம் இன்னமும் இருக்கிறது. பொது மக்களிடையே தங்களால் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி விட முடியும் என்ற மிகை கற்பனையில் அவர்கள் இருக்கிறார்கள். அது அவர்கள் அமைப்புக்கு கூட உதவவில்லை.

அவர்களது கண்ணோட்டத்தில், கருத்தியலில் கலாச்சாரத்திற்கு இடமே இல்லை. அவர்கள் பாட்டாளி வர்க்கத்தை பற்றி பேசுவதை விட இந்து மதவாதம் பற்றி விவாதிப்பதிலேயே அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறார்கள். உளுத்துப்போன கருத்துக்களிலும் பழைய கனவுகளிலும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களே தவிர மாறியுள்ள சூழ்நிலையை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ள தெம்பில்லாமல் இருக்கிறார்கள்.

சோசியலிச கருத்துக்களுக்கு இன்றைய அரசியலில் இடம் இருக்கிறது. 1967 வரை ஒவ்வொரு தேர்தலிலும் சோசலிச கருத்துக்களை கொண்ட கட்சிகள் இருபது சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளனர். ஆனால் அதை தக்க வைத்துக்கொள்ள திராணியற்று போய்விட்டனர்.

கம்யூனிஸ்டுகள் டிரோஜன் குதிரையை போன்றவர்கள் என்று ஒரு பிரிட்டிஷ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இன்று அந்த வேலையை கூட செய்ய முடியாதவர்களாக அவர்கள் ஆகிவிட்டனர். புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நூறாண்டுகளுக்கு முன்பு அவர்கள் தொடங்கினார்கள். இன்று அவர்கள் உயிர்த்திருப்பது அவர்களது பலத்தாலோ கருத்தியல் உறுதியாலோ இல்லை. கூட்டணி கட்சிகளின் பரந்த மனப்பான்மையால் தான்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

கட்டுரையாளர் பாஜகவின் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர்

இந்தியா முழுவதும் தமிழ்க் கலாச்சாரம்: பிரதமர் மோடி!

modiji speech at gangaikonda chozhapuram - 2026

1026-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோம்நாத் மீதான முதல் தாக்குதலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சோம்நாத் சுயமரியாதை விழாவில் பங்கேற்க நான் புனித பூமியான சோம்நாத் சென்றிருந்தேன்.

வரலாறு, கலாச்சாரம், இந்திய மக்களின் நீடித்த மனவுணர்வு ஆகியவற்றின் மீது பகிரப்பட்ட மரியாதையால் ஒன்றுகூடிய இந்த நினைவு நிகழ்வில் இந்தியா முழுவதிலுமிருந்து மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தின் போது சோம்நாத்துக்கு வந்திருந்த சிலரையும், காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கு வந்திருந்த சிலரையும் நான் சந்தித்தேன்.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் அளித்த பாராட்டு வார்த்தைகள் என்னை நெகிழச்செய்தன. எனவே, இந்த விஷயத்தில் சில எண்ணங்களை நான் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

தமிழ் கற்காமல் இருப்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியின் போது நான் கூறியிருந்தேன். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில ஆண்டுகளில், இந்தியா முழுவதும் தமிழ்க் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்தவும், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை ஆழப்படுத்தவும் எங்கள் அரசுக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

அத்தகைய முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணம் காசி-தமிழ் சங்கமம். நமது பண்பாட்டில், சங்கம் அல்லது சங்கமம் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இந்த வெளிச்சத்தில் பார்க்கும்போது, காசி-தமிழ் சங்கமம் உண்மையில் தனித்துவ முயற்சியாக விளங்குகிறது. இது இந்தியாவின் பல மரபுகளில் வாழும் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. அதே நேரத்தில் அவற்றின் தனித்துவ அடையாளங்களை மதிக்கிறது.

அத்தகைய சங்கமத்தை நடத்துவதற்குக் காசியை விட சிறந்த இடம் எதுவாக இருக்க முடியும்? பழங்காலத்திலிருந்தே நாகரிகத்தின் நங்கூரமாகத் திகழ்ந்து வரும் அதே காசிக்கு… ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அறிவையும், வாழ்க்கை அனுபவத்தையும், மோட்சத்தையும் தேடி வந்துள்ளனர்.

தமிழ் மக்களுடனும் கலாச்சாரத்துடனும் காசியின் தொடர்பு மிகவும் ஆழமானது. காசியில் உறைந்துள்ள பகவான் விஸ்வநாதர் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உறைகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள தென்காசி, தெற்கின் காசி அல்லது தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது. துறவி குமரகுருபர சுவாமிகள் தனது ஆன்மீகம், புலமை மற்றும் நிறுவனக் கட்டுமானம் மூலம் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நீடித்த தொடர்பை உருவாக்கினார்.

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த புதல்வர்களில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதி, காசியில் அறிவுசார் வளர்ச்சி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வுக்கான இடத்தைக் கண்டார். அவரது தேசியவாதம் ஆழமாகி, அவரது கவிதை கூர்மையானது. சுதந்திரமான, ஒன்றுபட்ட இந்தியா பற்றிய அவரது பார்வை தெளிவான வடிவம் பெற்றது இங்குதான். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் நெருக்கமான பிணைப்பை எடுத்துக்காட்டும் இதுபோன்ற பல நிகழ்வுகள் உள்ளன.

காசி-தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்வு 2022-ல் நடைபெற்றது. தொடக்க விழாவில் கலந்து கொண்டதை நான் நினைத்துப்பார்க்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து அறிஞர்கள், கைவினைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் செய்தனர்.

அடுத்தடுத்த நிகழ்வுகள் இந்த முயற்சியின் அளவையும் ஆழத்தையும் விரிவுபடுத்தின. புதிய கருப்பொருள்கள், புதுமையான வடிவங்கள் மற்றும் ஆழமான ஈடுபாட்டை அறிமுகம் செய்வதே இதன் நோக்கமாக இருந்தது. சங்கமம், அதன் முக்கிய உணர்வில் வேரூன்றி தொடர்ந்து மேம்படுவதை இது உறுதி செய்தது.

2023-ம் ஆண்டின் இரண்டாவது நிகழ்வில், மக்களுக்கு மொழி ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. மூன்றாவது நிகழ்வில், இந்திய அறிவுமுறைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில், கல்வி சார்ந்த விவாதங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் அதிக அளவிலான பங்கேற்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது ஆண்டு நிகழ்வுகள் 2025 டிசம்பர் 2 அன்று தொடங்கியது. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள் மிகவும் சுவாரஸ்யமானது. தமிழ் கற்கலாம் என்ற அந்த கருப்பொருள் காசியிலும் அருகில் உள்ள பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அழகான தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது.

தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் காசிக்கு வந்தனர். காசியைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற்றனர்! இந்த முறை பல சிறப்பு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தொல்காப்பியம், 4 இந்திய மொழிகளிலும் 6 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

தென்காசியில் இருந்து காசிக்கு ஒரு தனித்துவமான நிகழ்வாக அகத்திய முனிவர் வாகனப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. வழியில், கண் மருத்துவ முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு முகாம்கள், டிஜிட்டல் எழுத்தறிவு முகாம்கள் போன்ற பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டன.

கலாச்சார ஒற்றுமையின் செய்தியைப் பரப்பிய பாண்டிய மன்னர் அதி வீர பராக்கிரம பாண்டியனுக்கு இந்தப் பேரணி அஞ்சலி செலுத்தியது. நமோ படித்துறையில் கண்காட்சிகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்வி அமர்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களில் ஒன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பதாகும். நமது வேர்களுடன் தங்கள் தொடர்பை ஆழப்படுத்த வேண்டும் என்ற நமது இளைஞர் சக்தியின் ஆர்வத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

இதில் நடைபெற்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளின் போது தங்கள் திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த இது ஒரு சிறந்த தளமாகவும் அமைந்தது.

காசி தமிழ் சங்கமத்தின்போது மேற்கொண்ட காசி பயணத்தை மறக்கமுடியாத சிறப்பான பயணமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து உத்தரபிரதேசத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கியது. பல ரயில் நிலையங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில், அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். ரயில் பயணத்தில் மெல்லிசைப் பாடல்கள் ஒலிக்கச் செய்ததுடன், உரையாடல்களும் நடைபெற்றன.

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்றவர்களுக்குக் காட்டப்பட்ட அரவணைப்புக்காகவும் சிறந்த விருந்தோம்பலுக்காகவும் காசியையும் உத்தரபிரதேசத்தையும் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளைப் நான் பாராட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டிலிருந்து வந்த விருந்தினர்களுக்காக பலர் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்து வரவேற்றனர். விருந்தினர்கள் தடையற்ற சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய உள்ளூர் நிர்வாகம் 24 மணி நேரமும் உழைத்தது. வாரணாசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான நான் இதில் பெருமைப்படாமல் இருக்க முடியாது!

இந்த முறை, காசி-தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அதில் குடியரசுத் துணைத்தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு மைந்தருமான திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்தியாவின் ஆன்மீக மகத்துவத்தையும், தேசிய ஒருங்கிணைப்பையும் இத்தகைய தளங்கள் எவ்வாறு ஆழப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்து, மிகவும் ஊக்கமளிக்கும் உரையை அவர் நிகழ்த்தினார்.

காசி – தமிழ் சங்கமம் கலாச்சார புரிதலை வலுப்படுத்தி, மக்களிடையே பரிமாற்றங்களை வளர்க்கிறது. அத்துடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே நிலையான பிணைப்புகளை உருவாக்கி ஆரோக்கியமான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது.

வரும் காலங்களில், இதை இன்னும் துடிப்பானதாக மாற்ற விரும்புகிறோம். மிக முக்கியமாக, இது ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை வலுவாக வளர்த்துள்ளது. இந்த உணர்வு பல நூற்றாண்டுகளாக நமது பண்டிகைகள், இலக்கியம், இசை, கலை, உணவு வகைகள், கட்டடக்கலை, அறிவுசார் அமைப்புகள் என பலவற்றின் மூலம் செழித்து வளர்ந்துள்ளது.

இந்த ஆண்டு இந்தக் காலகட்டம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் புனிதமான பண்டிகைக் காலமாகும். சூரியன், இயற்கை, விவசாயம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சங்கராந்தி, உத்தராயண், பொங்கல், மஹா பிஹு போன்ற பல்வேறு பண்டிகைகளை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகைகள் மக்களை ஒருங்கிணைத்து, நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்துகின்றன. இந்தப் பண்டிகைகளையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற பண்டிகைகள், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தையும், கூட்டுப் பங்கேற்பையும், தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்தி, தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்

தாக்கரே சகோதரர்கள் இழந்தது களமல்ல! காலம்!

mumbai municipal elections - 2026

பியோர்ன் போர்க் (ஜான் போர்க்) என்ற டென்னிஸ் வீரரை இந்த உலகம் மறந்திருக்காது. 1970கள் மற்றும் 1980களின் முற்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியவர். 5 விம்பிள்டன், 6 பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை வென்றவர். தன்னுடைய வெற்றிகளால் மிகப் பெரிய கோடீஸ்வரரானார். சொந்தமாக ஒரு தீவையே வாங்கினார். அதிகமான வெற்றியும், தன்னைச் சுற்றி சூழ்ந்திருந்த புகழ் வெளிச்சமும் அவருக்கு சோர்வைக் கொடுத்துவிட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 27 ஆம் வயதிலேயே ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு உலக வெளிச்சத்தில் அவர் இல்லை. தனது சொத்துக்களை இழக்கத் தொடங்கினார். அதற்கு பல காரணங்கள். 1990ல் அவருக்கு மீண்டும் டென்னிஸ் ஆட வேண்டும், மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மீண்டும் களமிறங்கினார். மீண்டும் களமிறங்கினால் தன்னால் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது அவரது பழைய வெற்றிகளே! ஆனால் இடைப்பட்ட வருடங்களில் டென்னிஸ் உலகம் பல மாற்றங்களை கடந்திருந்தது.

பியோர்ன் போர்க் வெற்றிகளைக் குவித்த காலத்தில் டென்னிஸ் மட்டை மரத்தினால் ஆனது. கால மாற்றத்தால் 1990 களில் அது ஃபைபர் மட்டையாக மாறியிருந்தது. ஆட்டத்திலும் பல மாற்றங்களை கடந்திருந்தது. டென்னிஸ் அதிரடி ஆட்டமாக மாறியிருந்தது. களமிறங்கிய போர்க்’ கினால் ஒரு வெற்றியைக் கூட பெற முடியவில்லை. வெற்றியும், புகழும் தன்னுடனே இருந்த போது அதைச் சுமையாக நினைத்தார். மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்த போது வெற்றி தேவதை அவரை சுமையாக நினைத்தாள். நிச்சயமாக அவருக்குப் புரிந்திருக்கும் வெற்றியும், புகழும் தன்னுடைய நிரந்தர சொத்தல்ல என்பது.

இன்றைய தினத்தில் பியோர்ன் போர்க்கையும், மகாராஷ்டிர தாக்கரே சகோதரர்களையும் ஒரே கோட்டில் வைத்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை உருவாக்கியது மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்.

தமிழகத்தைச் சேர்ந்த திரு. அண்ணாமலை பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

”மும்பை மாநகரம் மகாராஷ்டிரத்திக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது சர்வதேச நகரம்”, என்று பேசினார்.

இந்தப் பேச்சு சர்ச்சையானது. தாக்கரே குடும்பத்தில் ஒருவரும், நவநிர்மாண் சேனை தலைவருமாகிய ராஜ் தாக்காரே, திரு. அண்ணாமலையின் பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்தார்.

”தமிழ்நாட்டில் இருந்து வந்த உங்களுக்கு இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் (அண்ணாமலை என்ற பெயரின் உச்சரிப்பை ரசமலாய் என்று கிண்டல் செய்தார்) மும்பையைப் பற்றி பேசுகிறார். அதனால்தான் உங்களையெல்லாம் பால் தாக்கரே மகாராஷ்டிரத்திலிருந்து விரட்டி அடித்தார்…. மும்பையில் அண்ணாமலை கால் வைத்தால் வெட்டுவோம்” என்றெல்லாம் கூட விமர்சனம் வளர்ந்தது.

பதிலுக்கு அண்ணாமலையும், ”மும்பைக்கு வருகிறேன். வெட்டுங்கள் பார்க்கலாம்”, என்று பேசினார்.

இதையெல்லாம் ஒரு ஓரமாக வைப்போம். இன்று மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நாட்டின் மிகவும் பணக்கார மாநகராட்சியாக கருதப்படும் மும்பை மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியது. கடந்த 30 ஆண்டுகளாக சிவசேனைக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை மாநகராட்சி பாஜக வசம் வந்திருக்கிறது.

உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே போன்றவர்கள் தங்கள் களத்தை இழந்திருக்கிறார்கள். களத்தை இழந்திருக்கிறார்கள் என்பதைவிட தங்களுக்கான காலத்தை இழந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

தமிழகத்தைச் சேர்ந்த ப. சிதம்பரம் அவர்கள் 2016ம் ஆண்டு, மகாராஷ்டிராவிலிருந்துதான் ராஜ்ய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் இந்த தாக்கரேக்கள் எங்கு சென்றார்கள்? மற்ற மாநிலத்தவர் மராட்டியர்களின் எம்.பி பதவியை தட்டிப்பறித்தார்கள் என்ற எண்ணம் எங்கே போனது? மொழியும், சொந்த மாநிலப் பற்றும் தனக்கு வேண்டிய போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் அது எத்தகைய சந்தர்ப்ப வாதம்?

மகாராஷ்டிரத்தின் சிங்கம் வீர சாவர்க்கரை, காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி பல நேரங்களில் அவமானப் படுத்தினாரே! அப்போதெல்லாம் சாவர்க்கரை வைத்து அரசியல் வாழ்க்கையை நடத்திவரும் தாக்கரே சகோதரர்கள் ஏன் மெளனமாக இருந்தார்கள்? காங்கிரஸோடு மெளனமாக கூட்டணி அமைத்தார்களே! அது எந்த விதத்தில் ஞாயம்? இன்று அவர்களின் சந்தர்ப்ப வாத மெளனமே அவர்களை அரசியல் களத்தைவிட்டு அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மகாபாரத குருட்சேத்திர போரில் சாகசங்களைச் செய்த அர்ஜுனன் தனது கடைசி நாட்களில் திருடர்களிடம் தோற்றுப் போகிறான். இந்த உலகம் தோல்வியே அறியாத மாவீரன் நெப்போலியனுக்கு வாட்டர்லூ தோல்வியை சுவைக்கக் கொடுத்தது. பியோர்ன் போர்க்கும் இந்த நிலையிலேயே காலத்தின் வசத்தால் தோல்வியைத் தழுவினார். இன்று அந்த நிலையிலேயே தாக்கரே குடும்பம் வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது.

ராஜ்தாக்கரேயின் பேச்சில் கவனிக்க வேண்டியவை :

  • தமிழ்நாட்டில் இருந்து வந்த உங்களுக்கு இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு?
  • தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் மும்பையைப் பற்றி பேசுகிறார்.
  • அதனால்தான் உங்களையெல்லாம் பால் தாக்கரே மகாராஷ்டிரத்திலிருந்து விரட்டி அடித்தார்….

தன்னுடைய மாநிலத்தின் மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கலாம். அதில் தவறில்லை. அவருடைய மாநிலம் அவருடைய மக்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும் என்று நினைக்கலாம். அதிலும் தவறில்லை. ஆனால், அவரது மாநிலத்தில் இந்தியாவைச் சேர்ந்த மற்ற மாநிலத்தவர் இருப்பதில் அவர்களுக்குப் பிரச்னை என்றால், அது எத்தகைய மனநிலை?

ஒடிசாவை ஒரு தமிழர் தனது கைப்பாவையாக வைத்திருக்கிறார் என்ற பிரச்னையை பாஜக கையிலெடுத்து, அதையே ஒடிசா தேர்தலில் முன்னிலைப்படுத்தியது. அங்கு பாஜக பெற்ற வெற்றி இதனால்தான் என்று யாரும் சொல்லிவிட முடியாது. முதலமைச்சரை பொம்மையாக வைத்துக் கொண்டு தனது ஆட்டங்களை நடத்திய அந்த ஆலோசகரால் தான் அவரை முன்னிலைப்படுத்தும் நிலை பாஜகவிற்கு ஏற்பட்டது.

ஆளும் வாய்ப்பு கிடைக்கும் போது அதைவைத்து முன்னேற்றத்தை கொண்டுவர வேண்டும். அல்லது அப்படியொரு நம்பிக்கையையாவது ஏற்படுத்த வேண்டும். வெறும் உணர்வுகளைத் தூண்டி வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்புவது ஒருநாள் அவர்களை மூழ்கடித்துவிடும்.

பால்தாக்கரேயின் நாட்கள் வேறு. இப்போது உள்ள சோஷியல் மீடியா நாட்கள் வேறு. இன்னமும் வன்முறை தனக்கு கைகொடுக்கும் என்று யாராவது நினைத்தால் அவர்கள் தோல்வியை யாராலும் தடுக்க முடியாது. வன்முறை என்பது காலாவதியான ஆயுதம்.

அடாவடி அரசியல் எல்லா நேரங்களிலும் வெற்றியைக் கொடுக்காது. கடந்த 5 வருடங்களுக்கும் மேல் சிவசேனா தோல்வியை மட்டுமே தழுவியிருக்கிறது. தனது மாநிலம், மொழி என்ற விஷயங்களில் அவையெல்லாம் தன் கட்சிக்கு மட்டுமே சொந்தம் என்பது போல அரசியல் செய்து வந்த தாக்கரே குடும்பம் வீழ்ச்சியை எதிர்நோக்கியிருக்கிறது.

இந்தியா என்ற தேசத்தில் இந்த நிலம் இவர்களுக்கு மட்டும் சொந்தம், மற்றவர்கள் சொந்தமல்ல! என்ற குரல்கள் தோல்வியைத் தழுவத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக பால்தாக்கரே பெயரைச் சொன்னால் எதையும் சாதித்துவிடலாம் என்ற சிந்தனைக்கு இந்தத் தோல்வி சம்மட்டியடி கொடுத்திருக்கிறது.

மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் கொடுத்த வெற்றி பாஜக கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா? திரு அண்ணாமலையின் பிரச்சாரமும் கொடுத்த வெற்றியா? அல்லது தாக்கரே குடும்பத்துக்கு பரிசளிக்கப்பட்ட தோல்வியா என்று கணக்குப் போட்டுப் பார்த்தால், இவை எல்லாவற்றையும் விட வெறுப்புப் பேச்சுக்கு கிடைத்த தோல்வி என்பது தான் யதார்ததமாக இருக்கும். தேசியத்தை மனத்தில் கொண்டு பாஜக தேர்தல்களை அணுகுவதால் கிடைத்த வெற்றி என்றும் சொல்லலாம்.

நம் மாநிலத்தைச் சேர்ந்த அண்ணாமலை மும்பையில் சென்று பிரச்சாரம் செய்து, அந்தப் பிரச்சாரம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம்.

வடக்கன், பானிபூரிக்காரன், இந்தி தெரியாது போடா என்றெல்லாம் அவமரியாதையாகப் பேசும் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கும் இப்படிப்பட்ட தோல்வி காத்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி செய்ய மக்கள் கொடுக்கும் வாய்ப்பு என்பது அற்புதமானது. அதை சிறப்பாக பயன்படுத்துபவர்களின் வெற்றி தலைமுறை தாண்டிய புகழைக் கொடுக்கும்.

மும்பை உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் செய்து உலக கவனத்தை தன் பக்கம் ஈர்த்த திரு. அண்ணாமலைக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்.

அன்புடன்
சாது ஶ்ரீராம்
saadhusriram@gmail.com

பரமன் அளித்த பகவத்கீதை (16): ஆதிபர்வம் -1 – சந்திர வம்சம்

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 16 மகாபாரதக் கதை
ஆதிபர்வம் -1 – சந்திர வம்சம்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          ஸ்ரீ ராமர் ரகுவம்சத்தைச் சேர்ந்தவர். ரகுவம்சம் முதலில் இஷ்வாகு வம்சம் என அழைக்கப்பட்டது. அதற்கு முன்னர் சூரிய வம்சம் என அழைக்கப்பட்டது. சூரிய வம்சம் போலவே சந்திர வம்சமும் பிரபலமானது. சந்திரன் தனது குருவாகிய தேவகுருவின் மனைவியான தாரை என்பவரைக் காதலித்து கடத்திக்கொண்டு போகிறார். அவர்களுக்குப் பிறந்தவர்தான் புதன். புதன் இளா என்பவளை மணக்கிறார்.

          இளா சூரிய குலத்தின் இஷ்வாகு வம்ச நிறுவனரான வைவஸ்தமனுவின் மகன்களில் ஒருவர் ஆவார். அவரின் பெயர் இளன். ஒரு முறை இளன் வேட்டையாட காட்டிற்குச் சென்ற போது, காட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரும் ஆண்கள் பெண்களாக மாற நேரிடும் எனும் சாபத்தை அறியாமல், அங்கு சென்றுவிடுகிறார். அதனால் பெண்னாக உருவமாற்றம் அடைந்து இளா என்ற பெண்னாக மாறிவிடுகிறார். இவரைத்தான் புதன் மனக்கிறார். இவர்களுக்குப் பிறந்தவர் புரூரவன் ஆவார்.

          புரூரவன் கேசி என்னும் அரக்கனுடன் போரிட்டு ஊர்வசியை மீட்கிறான். அதனால் இந்திரன் ஊர்வசியை புரூரவனுக்கே அன்பளிப்பாகக் கொடுத்துவிடுகிறான். அவர்களுக்குப் பிறந்த மகன் ஆயு. ஆயுவின் மகன் நகுஷன். இவன் இந்திராணியை அடைய சப்தரிஷிகளை பல்லாக்கில் தன்னைத் தூக்கிச் செல்லச் சொல்லுகிறான். அப்போது ‘சர்ப்ப, சர்ப்ப” என அவர்களை வேகமாகச் செல்லச் சொன்னதால் அகத்தியர் கோபமுற்று அவனைப் பாம்பாக மாற சாபமிட்டார். நகுஷனின் மகன் யயாதி.

கசன் தேவயானி

          தேவகுரு ப்ருகஸ்பதியின் மகன் கசன். தேவாசுரப் போரில் அசுரர்களை சுக்ரன், தன்னுடைய சஞ்சீவனி மந்திரம் மூலம் உயிர்ப்பித்து விடுவதா, போர் நீளுகிறது. சுக்ரனிடமிருந்து சஞ்சீவினி மந்திரத்தை கற்க கசன் அனுப்பப்படுகிறான். சுக்ரனின் மகள் தேவயானி அவனை விரும்புகிறாள். அசுரர்கள் கசன் சஞ்சீவினி மந்திரத்தை கற்கக்கூடாது என்பதற்காக அவனை கொன்றுவிடுகிறார்கள். ஆனால் தேவயானியின் வேண்டுகோளின்படி சுக்ரன் அவனை உயிர்ப்பிக்கிறார். இது பலமுறை நடக்கிறது. ஒருமுறை கசனைக் கொன்று, துண்டுகளாக்கி, எரித்துச் சாம்பலாக்கி, அந்தச் சாம்பலை ஒரு பானத்தில் கலக்கி சுக்கிரனுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். இம்முறை கசன் எங்கிருக்கிறான் என சுக்கிரன் ஞானதிருஷ்டி மூலமாகப் பார்க்கும்போது அவன் தன் வயிற்றில் இருப்பதை உணர்கிறார். அவனை உயிர்ப்பித்தால் தான் இறந்துவிடுவோம் என உணர்கிறார். அதனால் வயிற்றுக்குள் இருக்கும் அவனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைச் சொல்லிக்கொடுக்கிறார். பின் அவனை உயிர்ப்பித்து இறக்கிறார். வெளியே வந்த கசன் அவரை உயிர்ப்பிக்கிறான்.

          கசனின் குருகுலக் கல்வி முடியும் நிலையில் தேவயானி கசனை அனுகி தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினாள். தேவயானி தனது குருவின் மகள் என்பதாலும் மேலும் தான் குருவின் வயிற்றிலிருந்து மீண்டும் வெளிப்பட்டதால் தேவயானி தனக்கு சகோதரிமுறை ஆவதாலும் கசன் தேவயானியை மணக்க மறுத்தான். இதனால் ஆத்திரம் கொண்ட தேவயானி, தனது தந்தையான சுக்கிராச்சாரியிடம் கற்ற சஞ்சீவினி மந்திரத்தை கசன் பயன்படுத்த முடியாதபடி சாபமிட்டாள். அதற்கு கசன், நான் பயன்படுத்தா விட்டாலும் மற்ற தேவர்களுக்கு இம்மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன் என்று கூறினான். பதிலுக்கு கசன், தேவயானியை நோக்கி உன்னை உன் குலத்தவன் திருமணம் செய்து கொள்ளமாட்டான் எனச் சாபமிட்டான். பின் சுக்கிராச்சாரியாரிடம் விடைபெற்று சஞ்சீவினி மந்திரத்துடன் தேவலோகத்தில் உள்ள பிரகஸ்பதியை அடைந்தான்.

          பின்னாளில் தேவயானி சந்திரகுல மன்னன் யயாதியை மணக்கிறாள்.

தமிழால் பாரதத்திற்கு பெருமை: தில்லி பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்!

pongal day celeb by modiji - 2026

தில்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினார். அப்போது பேசியவர், பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது என்று தெரிவித்தார். 

தில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் அண்மைக் காலமாக தவறாமல் பொங்கல் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கருப்பொருளில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி எல்.முருகன் இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த பொங்கல் விழாவிற்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன், ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் பிரதமர் மோடி கன்றுகளுக்கு உணவு வழங்கி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்.

விழாவில் பிரதமர் மோடி பேசியவை…

வணக்கம்.  இனிய பொங்கல், நல்வாழ்த்துகள்.  இன்று, பொங்கல், ஒரு உலகளாவிய திருவிழாவாக ஆகி விட்டது.  உலகம் எங்கிலும், தமிழ் சமுதாயம், மற்றும் தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கக்கூடிய மனிதர்கள், இதை உற்சாகத்தோடு கொண்டாடுகிறார்கள்.  அதிலே நானும்கூட ஒருவன்.  இந்தச் சிறப்பான திருநாளை, உங்கள் அனைவரோடும் இணைந்து கொண்டாடுவது, என்னைப் பொறுத்தவரை, சௌபாக்கியம் நிறைந்த விஷயம். 

நம் தமிழர்களின் வாழ்க்கையிலே, பொங்கல், ஒரு சுகமான அனுபவமாக இருக்கின்றது;  இதிலே, அன்னமளிப்பவரின் உழைப்பு, பூமி, மற்றும் சூரியனிடத்தில் நன்றியறிதல் உணர்வு வெளிப்படுகிறது.  அதோடு கூட, இந்த திருவிழா நமக்கு, இயற்கை, குடும்பம், மற்றும் சமூகத்திலே, சமநிலையை ஏற்படுத்தும் பாதையைக் காட்டுகிறது.  இந்த சமயத்திலே தேசத்தின் பல்வேறு பாகங்களிலே, லோஹ்டி, மகர சங்கராந்தி, மாக் பிஹூ, மற்றும் இன்னும் பிற பண்டிகைகளின் உற்சாகம் நிரம்பியிருக்கிறது. 

நான் பாரதம், மற்றும் உலகெங்கிலும் வசிக்கின்ற, அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும், பொங்கலுக்கான, மற்றும் அனைத்துப் பண்டிகைகளுக்குமான, பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.   

நண்பர்களே, உள்ளபடியே எனக்கு, என்ன இனிமையாக இருக்கிறதென்றால், அதாவது கடந்த ஆண்டு எனக்கு, தமிழ் கலாச்சாரத்தோடு தொடர்புடைய, பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது.  நான் தமிழ்நாட்டிலே, ஓராயிரம் ஆண்டுகள் பழமையான, கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில் வழிபாடு செய்தேன். 

வாராணசியிலே, காசி தமிழ் சங்கமத்தின் போது, கலாச்சார ஒற்றுமையின் சக்தியை, ஒவ்வொரு கணமும்… நான் இணைந்திருந்தேன், நான் எங்கே இருந்தாலும், நான் அதை அனுபவித்தேன்.  நான் பாம்பன் பாலத்தைத் திறந்துவைக்க இராமேஸ்வரம் சென்றிருந்த போது, அப்போது தமிழ் வரலாற்றின், மகத்துவத்திற்கு, மீண்டும் ஒருமுறை சாட்சியாக இருந்தேன். 

நம்முடைய தமிழ் கலாச்சாரம், ஒட்டுமொத்த பாரதத்தின், பகிரப்பட்ட பாரம்பரியம் ஆகும்.  இது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்தின், பகிரப்பட்ட பாரம்பரியம் ஆகும்.  நான் ஒரே பாரதம் உன்னத பாரத த்தின் எந்த உண்ர்வைப் பற்றிக் கூறுகிறேன் என்றால், அதைப் பொங்கல் போன்ற பண்டிகை, மேலும் சக்தியுடையதாக ஆக்குகிறது. 

நண்பர்களே, உலகின் கிட்டத்தட்ட அனைத்துக் நாகரீகங்களிலும், அறுவடையோடு தொடர்புடைய ஏதாவது ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.  தமிழ் கலாச்சாரத்திலே, விவசாயிகள், வாழ்க்கையின் ஆதாரங்களக கருதப்படுகிறார்கள்.  திருக்குறளிலே, விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றி, விரிவான முறையிலே எழுதப்பட்டிருக்கிறது.

நம்முடைய விவசாயிகள், தேச நிர்மாணத்தின் பலமான அடித்தளங்கள்.  அவர்களின் முயற்சிகள் காரணமாக, தற்சார்பு பாரதம் இயக்கத்துக்கு, அதிக பலம் கிடைத்து வருகிறது.  மத்திய அரசும் கூட, விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கப்படுவதில், உறுதிபூண்டிருக்கிறது, தொடர்ந்து பணியாற்றி வருகிறது.  நண்பர்களே, பொங்கல் மங்கலத் திருநாள், நமக்கென்ன உத்வேகம் அளிக்கிறதென்றால், இயற்கையிடத்திலே, நன்றியறிதல், வெறும் சொற்களோடு மட்டும் தேங்கி விடக்கூடாது, அதை நாம், வாழ்க்கைமுறையின் அங்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். 

நமது மண்ணானது நமக்கு, இந்த அளவுக்குக் கொடுக்கிற போது, அதைப் பேணிப் பாகுகாக்கும் கடமையும், நமக்கிருக்கிறது.  அடுத்த தலைமுறைக்கு, மண்ணை ஆரோக்கியமாக வைத்திருப்பது, நீரைப் பாதுகாப்பது, மேலும் ஆதாரங்களை சமச்சீராகப் பயன்படுத்துவது, மிகவும் அவசியமானது.  மிஷன் லைஃப், தாயின் பெயரில் ஒரு மரம், அமுத நீர்நிலைகள்.  இந்த இயக்கங்கள் எல்லாம், இந்த உணர்வைத் தான் முன்னெடுத்துச் செல்கின்றன. 

நாம் விவசாயத்தை, அதிக நீடித்ததாக, மேலும் சுற்றுச்சுசூழலுக்கு உகந்ததாக ஆக்க, தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம்.  வருகின்ற காலத்திலே, நீடித்ததன்மையுடைய விவசாயம், நீர் மேலாண்மை, நான் தொடர்ந்து கூறி வருகிறேன், ஒவ்வொரு சொட்டுக்கும்… அதிக பயிர்.  இயற்கை விவசாயம், அக்ரிடெக், மற்றும் மதிப்புக்கூட்டலின் பங்களிப்பு, மிகவும் மகத்துவம் வாய்ந்தது.  இத அனைத்துத் துறைகளிலும், நமது இளைஞர்கள், புதிய எண்ணத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். 

சில மாதங்கள் முன்புதான், நான் தமிழ்நாட்டிலே, இயற்கை விவசாயத்தோடு தொடர்புடைய, ஒரு மாநாட்டிலே பங்கெடுத்துக் கொண்டேன்.  அங்கே நான் என்ன பார்த்தேன் என்றால், நம்முடைய தமிழ் இளைஞர்கள், எத்தனை சிறப்பாக செயலாற்றுகிறார்கள் என்றால், அதாவது தொழில்சார் பெரிய பணிகளைத் துறந்து விட்டு, வயல்வெளிகளில் பணியாற்றும் அவர்கள் என்னை சந்தித்தார்கள்.  நான் விவசாயத்தோடு தொடர்புடைய நம்முடைய இளைஞர்களான தமிழ் நண்பர்களிடம் கேட்டுக் கொள்கிறேன், அதாவது அவர்கள், நீடித்ததன்மையுடைய விவசாயத்திலே, புரட்சி ஏற்படுத்தும் இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  

நம்முடைய இலக்கு என்னவாக இருக்க வேண்டுமென்றால், அதாவது நம்முடைய தட்டும் நிறைந்திருக்க வேண்டும், நம்முடைய பையும் நிறைந்திருக்க வேண்டும், மேலும் நம்முடைய பூமித்தாயும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  நண்பர்களே, தமிழ் கலாச்சாரம், உலகத்தின் மிகவும் தொன்மையான, உயிர்ப்புடைய கலாச்சாரங்களிலே ஒன்று. 

தமிழ் கலாச்சாரம், பல நூற்றாண்டுகளை இணைக்கிறது.  அது வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்டு, தற்காலத்திற்கு, முன்னேறும் பாதையைக் காட்டுகிறது.  இந்த உத்வேகத்தின் துணையாலே, இன்றைய பாரதம், தன்னுடைய வேர்களிலிருந்து சக்தி பெற்று, புதிய சாத்தியக்கூறுகளை நோக்கி, முன்னேறிக் கொண்டிருக்கிறது.  

இன்று பொங்கலின் இந்தப் புனிதமான வேளையிலே, நாம் என்ன நம்பிக்கையை உணர்கிறோம் என்றால், அதுவே பாரதத்தை முனேற்றிக் கொண்டிருக்கிறது.  எப்படிப்பட்ட பாரதம்? இது தனது கலாச்சாரத்தோடு இணைவுள்ள பாரதம்.  தன்னுடைய பூமிக்கு மரியாதை அளிக்கிறது.  மேலும் எதிர்காலம் குறித்து, நம்பிக்கை நிரம்பி இருக்கிறது. 

இனிய பொங்கல், நிறை நல்வாழ்த்துக்கள்.  வாழ்க தமிழ், வளர்க பாரதம்.   மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும், பொங்கலுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.  பலப்பல நன்றிகள். வணக்கம்.

பிரதமர் மோடி பேச்சின் தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்