Home Blog Page 17

T20 WC2026: சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அயர்லாந்து

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி; எட்டாம் நாள் 14.02.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இன்று (14.02.2026) மூன்று ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் காலை 1100 மணிக்கு கொழும்புவில் அயர்லாந்து ஓமன் அணிகளுக்கிடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் மதியம் 0300 மணிக்கு கொல்கொத்தா, ஈடங்கார்டன்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடந்தது. மூன்றாவது ஆட்டம் அகமதாபாத்தில் இரவு 0700 மணிக்கு நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்தது.

அயர்லாந்து சிறப்பான வெற்றி

பூவாதலையா வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த அயர்லாந்து அணியின் அணித்தலைவர் லோர்கன் டக்கர் (51 பந்துகளில் 94 ரன், 10 ஃபோர், 4 சிக்சர்) மிகச் சிறப்பாக ஆடினார். அவருக்குத் துணையாக கேரத் டிலானி (56 ரன்) மற்றும் ஜியார்ஜ் டக்கரல் (35 ரன்) நன்றாக ஆடினார்கள். இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 235 ரன் எடுத்தது.

இதன் பின்னர் ஆடவந்த ஓமன் அணியில் தொடக்க வீரர் அமிர் கலீம் (50 ரன்), ஹமத் மிர்சா (46 ரன்), சூஃபியான் மெஹமூத் (10 ரன்) ஆகியோ மட்டுமே இரட்டை இலக்க ரன் அடித்தனர். பிறர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 18 ஓவர்களுக்கு 139 ரன் எடுத்து அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து அவுட் ஆனது.

அயர்லாந்து அணியின் ஜோஷ் லிட்டில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கட்டுகள் எடுத்தார். இதனால் அயர்லாந்து அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. லோர்கன் டக்கர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்து அணியை வென்றது

பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த ஸ்காட்லாந்து அணியின் மைக்கேல் ஜோன்ஸ் (33 ரன்), ரிக்கி பெர்ரிங்டன் (49 ரன்), டாம் ப்ரூஸ் (24 ரன்), ஆலிவெர் டேவிட்சன் (20 ரன்) நன்றாக ஆடினர். அதனால் 19.4 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 152 ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெதல் (32 ரன்), டாம் பேண்டன் (63 ரன்), சாம் கரன் (28 ரன்), வில் ஜேக்ஸ் (16 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 18.2 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டாம் பேண்டன் அறிவிக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அணி எளிதில் நியூசிலாந்து அணியை வென்றது

பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த நியூசிலாந்து அணியின் முதல் நான்கு மட்டையாளர்கள் விரைவில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மார்க் சாப்மன் (48 ரன்), டேரில் மிட்சல் (32 ரன்), ஜேம்ஸ் நீஷம் (ஆட்டமிழக்காமல் 23 ரன்) நன்றாக ஆடினர். அதனால் அந்த அணி 20 ஓவர்கல் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் அணித் தலைவருமான எய்டன் மர்கரம் (86 ரன்) மிகச்சிறப்பாக ஆடினார். அவருடன் இணைந்து க்விண்டன் டி காக் (20 ரன்), ரியன் ரிக்கிள்டன் (21 ரன்), டிவால்ட் ப்ருவிஸ் (21 ரன்), டேவிட் மில்லர் (24 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். அதனால் தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நான்கு விக்கட்டுகள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணியின் மார்கோ யான்சென் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நாளை (15.02.2026) முதல் ஆட்டம் காலை 0700 மணிக்கு மும்பை வான் கடெ மைதானத்தில் நேபாளம், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இடயே நடைபெறும்.

இரண்டாவது ஆட்டம் காலை 1100 மணிக்கு சென்னையில் நமீபியா, அமெரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும்.

மூன்றாவது ஆட்டம் கொழும்புவில் இரவு 0700 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும்.

அஸ்ஸாமில் பிரமாண்ட பாலம் திறப்பு; நெடுஞ்சாலையில் விமானம் இறக்கி சாதனை!

pm modi inaugurates kumar baskar varma sethu in assam - 2026

அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ. 3,030 கோடியில் கட்டப்பட்ட ‘குமார் பாஸ்கர் வர்மா சேது’ பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கௌஹாத்தி மற்றும் வடக்கு கௌஹாத்தியைப் பிரிக்கும் பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரே நேரத்தில் 6 வழித்தடங்களில் வாகனங்கள் செல்லும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அஸ்ஸாாமின் திப்ருகர்க் மாவட்டத்தில் அவசர காலங்களில் விமானங்கள் தரையிறக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் விமானம் தரையிறக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

அவசர காலங்களில் ராணுவம் மற்றும் பயணிகள் விமானம் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக இந்த சாலை அமைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்பட்ட, அவசர காலங்களில் விமானம் தரையிறங்கும் முதல் தேசிய நெடுஞ்சாலை, இந்தியாவில் 11வது சாலை இது. சுமார் ரூ.100 கோடி செலவில், இந்திய விமானப்படை இந்த சாலையை வடிவமைத்து கட்டமைத்துள்ளது.

40 டன் வரையிலான போர் விமானத்தையும், 74 டன் எடை வரையிலான பயணிகள் விமானமும் இந்தச் சாலையை பயன்படுத்த முடியும். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியும். இந்த நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பிறகு அங்கு நடந்த இந்திய விமானப்படை விமானங்களின் சாகசத்தை பிரதமர் பார்வையிட்டார்.

சுகோய் சு 30 எம்கேஐ, ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள், பயணிகள் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவை இந்த நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டு, இங்கிருந்து கிளம்பிச் சென்றன. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், பிரதமர் மோடி கௌஹாத்தி கிளம்பிச் சென்றார்.

கௌஹாத்தியில் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு நடந்த கூட்டத்தில் பேசினார். அவரது உரையிலிருந்து…

இன்றைய தினம் இந்தியாவுக்கு அவசர காலத்தில் விமானம் தரையிறங்குவதற்கான நெடுஞ்சாலை மட்டும் கிடைக்கவில்லை. இது இந்தியா தனது பாதுகாப்புக்கு புதிய வழிகளை கண்டறிந்து வருகிறது என்பதற்கான சான்றாக அமைந்திருக்கிறது.

இந்நாளில் புல்வாமா தாக்குதலின் 7 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்தியா எப்படி தண்டித்தது என்பதை உலக நாடுகள் பார்த்தன. இதனால் சிலர் இன்னும் பயத்தில் உள்ளனர். ஆப்பரேஷன் சிந்தூரின் சக்தியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் முடிவு முடிவு எடுக்கும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியுமா? முன்னர் அக்கட்சி அதனைச் செய்துள்ளதா? வெறும் அறிக்கை மட்டுமே வெளியிடும்; ஆனால் ஒன்றுமே செய்யாது. இந்தியாவை ஒரு நாடாக காங்கிரஸ் இன்னும் அங்கீகரிக்கவில்லை! அன்னை பாரதம் என்றால் என்ன என அக்கட்சி கேள்வி எழுப்புகிறது. பாரதத்தின் நலனுக்கு அக்கட்சி ஒன்றும் செய்யவில்லை. அன்னை பாரதம் எனக்கூட காங்கிரஸ் சொல்லாது. அதற்கு மரியாதை கொடுக்காது. நாட்டின் பாதுகாப்புக்கு எப்போதும் காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்தது இல்லை!

காங்கிரஸ் நாட்டை எப்போதும் அச்சத்திலேயே வைத்து இருந்தது. காங்கிரசின் எதிர்மறைச் சிந்தனை காரணமாக வடகிழக்கு மாநில மக்கள் பயத்துடனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் வாழ்ந்து வந்தனர். காங்கிரஸ் ஆட்சியில் எப்போதெல்லாம் ஆயுதங்கள் வாங்கப்படுகிறதோ அப்போதெல்லாம், கோடிக்கணக்கில் ஊழல் நடக்கும்.

இன்று ராணுவத்தை பாரதம் பலப்படுத்தி வருகிறது. மிகப்பெரிய நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், பாலங்கள் மற்றும் நவீன ஓடுபாதைகளை அமைத்து வருகிறது. நாட்டைப் பிரிக்க நினைப்பவர்களையும், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்க நினைப்பவர்களையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. அவர்கள், காங்கிரசின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர்.

சுதந்திரத்தின் போது முஸ்லிம் லீக் நாட்டைப் பிரித்தது. தற்போது காங்கிரஸ், முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக மாறிவிட்டது. இதனால், காங்கிரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தில்லி அல்லது அஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சி அஸ்ஸாமை கைவிட்டுவிட்டது. அஸ்ஸாமின் வளர்ச்சியிலும், மக்களின் வாழ்வாதாரத்திலும், பிரம்மபுத்ரா முக்கியமானதாக இருந்தது. ஆனால், காங்கிரஸின் 70 ஆண்டு கால ஆட்சியில், இந்த நதியைக் கடப்பது பெரிய சவாலாக இருந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில் அஸ்ஸாமின் வளர்ச்சி எப்படி சாத்தியம். 2014 ல் நாட்டிற்கு சேவை செய்ய உங்களால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 2, 3 ஆண்டுகளில் பாஜக தொண்டர்கள் இரட்டை இன்ஜின் அரசை உருவாக்கினார்கள். இதனால், கடந்த 10, 11 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான தேஜ கூட்டணி அரசு, பிரம்மபுத்ரா நதியில் 5 பெரிய பாலங்களைக் கட்டியுள்ளது. அஸ்ஸாமுக்கு காங்கிரஸ் தொந்தரவை மட்டுமே கொடுத்தது; ஆனால் பாஜக தீர்வை வழங்குகிறது – என்று பேசினார் பிரதமர் மோடி. 

T20 WC 2026: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே!

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி: ஏழாம் நாள் 13.02.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          இன்று (13.02.2026) முதல் ஆட்டத்தில் காலை 1100 மணிக்கு கொழும்புவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஜிம்பாபே அணிகளும் இரண்டாவது ஆட்டத்தில் மதியம் 0300 மணிக்கு டெல்லியில் கனடா ஐக்கிய அரபு எமிரேட்டு அணிகளும் மூன்றாவது ஆட்டத்தில் இரவு 0700 மணிக்கு சென்னையில் நெதர்லாந்து அமெரிக்க அணிகளும் விளையாடின.

போட்டியின் முதல் அப்செட்; ஜிம்பாபே ஆஸ்திரேலியாவை வென்றது

          பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாடவந்த ஜிம்பாபே அணியின் தொடக்க வீரர்கள் ப்ரியன் பென்னட் (56 பந்துகளில் 64 ரன்) மற்றும் தடிவனஷே மருமணி (21 பந்துகளில் 35 ரன்) சிறப்பான தொடக்கம் தந்தனர். அதன் பின்னர் விளையாட வந்த ரியான் பர்ல் (30 பந்துகளில் 35 ரன்) சிக்கந்தர் ராசா (13 பந்துகளில் 25 ரன்) ஆகியோரும் சிறப்பாக விளையாடியதால் ஜிம்பாபே அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. இரண்டாவதாக விளையாடவந்த ஆஸ்திரேலிய அணியில் மேட் ரென்ஷா (44 பந்துகளில் 65 ரன்), கிளன் மேக்ஸ்வெல் (32 பந்துகளில் 31 ரன்), ட்ராவிஸ் ஹெட் (15 பந்துகளில் 17 ரன்) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரை எட்டினர். மற்ற பேட்டர்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதுவரை நடந்த டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஜிம்பாபே அணியை இதுவரை ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- கனடா அணிகள் ஆட்டம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வெற்றி

          பூவாதலையா வென்ற கனடா அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. அந்த அணியின் ஹர்ஷ் தாக்கர் (41 பந்துகளில் 50 ரன்), நவனீத் தலிவால் (28 பந்துகளில் 34 ரன்) மற்றும் ஷ்ரேயாஸ் முவ்வா (21 பந்துகளில் 21 ரன்) ஆகியோர் மட்டுமே நன்றாக ஆடினர். பிறர் ஜொலிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் தொடக்க வீரர், ஆர்யான்ஷ் ஷர்மா (53 பந்துகளில் 74 ரன், 6 ஃபோர்கள், 4 சிக்சர்) மற்றும் ஷோஹிப் கான் (51 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 151 ரன் எடுத்து வெற்றிபெற்றது.

அமெரிக்க – நெதர்லாந்து ஆட்டம்; அமெரிக்க அணி அபார வெற்றி

          பூவாதலையா வென்றா நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த அமெரிக்க அணியின் மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் மொனாங்க் படேல் (27 பந்துகளில் 36 ரன்), ஷயான் ஜஹாங்கீர் (14 பந்துகளில் 20 ரன்), முக்கமாலா (51 பந்துகளில் 79 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்), ஷுபம் ரஞ்சனே (24 பந்துகளில் 48 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் வேகமாக ரன் குவித்தனர். அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது. அதன் பின்னர் ஆடவந்த நெதர்லாந்து அணியின் மட்டையாளர்கள் அமெரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 103 ரன் மட்டுமே எடுத்தனர். அதனால் அமெரிக்க அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அமெரிக்க அணியின் ஹர்மீத் சிங் 4 விக்கட்டுகளையும் ஸ்கால்வைக் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். ஹர்மீத் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

சேவா தீர்த்– புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்த மோடி!

seva theerth opened by pm modi - 2026

“சேவா தீர்த்” – புதிய பிரதமர் அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
தில்லியில் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் அடங்கிய “சேவா தீர்த்” கட்டடத்தை திறந்துவைத்து 4 கோப்புகளில் கையெழுத்திட்டார் பிரதமர் மோடி.

1) PM RAHAT திட்டம்: ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் காக்கும் பாதுகாப்பு
2) லட்சாதிபதி பெண்களின் இலக்கை 6 கோடியாக இரட்டிப்பாக்குதல்
3) விவசாயிகளுக்கு முக்கிய ஊக்கம்: விவசாய உள்கட்டமைப்பு நிதி ₹2 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டது.
4) ₹10,000 கோடி நிதி திரட்டலுடன் கூடிய ஸ்டார்ட்அப் இந்தியா நிதி 2.0: புதுமையின் அடுத்த அலை – என நான்கு கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தில்லியில் புதிய பிரதமர் அலுவலகமான ‘சேவா தீர்த்’ ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகமும் செயல்பட உள்ளது.

2014 ல் பிரதமராக மோடி பொறுப்பு ஏற்ற பிறகு, காலனித்துவத்துக்கு அடையாளமாக விளங்கும் சின்னங்களையும், மக்கள் மனதில் உள்ள அடிமைத்தன எண்ணங்களை மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி, மத்திய அமைச்சரவை செயலகமானது கர்தவ்ய பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ராஜபாதை சீரமைக்கப்பட்டு கர்தவ்ய பாதை என பெயர் சூட்டப்பட்டது. ரேஸ் கோர்ஸ் சாலைக்கு லோக் கல்யாண் மார்க் எனவும், ஆளுநர் மாளிகைகள் லோக் பவன்கள் – மக்கள் மாளிகைகள் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1900ம் ஆண்டில் அவர்களது தலைமைச் செயலகம் டில்லி சவுத் பிளாக்கில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை பிரிட்டன் கட்டட கலைஞர் ஹெர்பெர்டி பாகர் வடிவமைத்தார். இந்தக் கட்டடத்தில் பிரதமர் அலுவலகம், ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் செயல்பட்டன.

இந்த அலுவலகங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ‘ சேவா தீர்த்’ என்ற புதிய இடத்துக்கு மாறின. தொடர்ந்து பிரதமர் அலுவலக புதிய கட்டடம் மற்றும் மத்திய செயலக கட்டடமான கர்தவ்ய பவன் 1 மற்றும் 2 ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கடந்த 1921 முதல் சவுத் மற்றும் நார்த் பிளாக்குகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலி செய்யப்படுகின்றன. பிரதமர் அலுவலகம் இருந்த சவுத் பிளாக் கட்டடம் தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட சமூகதளப் பதிவுகளில் குறிப்பிட்டதாவது…

இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியான உறுதியுடனும், ‘நாக்ரிக்தேவோ பவ’ (குடிமக்கள் சேவை) என்ற புனித உணர்வால் வழிநடத்தப்பட்டு, சேவா தீர்த்தம், பணிவுடன் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சேவா தீர்த்தம் எப்போதும் கடமை, இரக்கம், இந்தியா முதலில் என்ற கொள்கைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரகாசமான அடையாளமாக நிற்கட்டும். இது தலைமுறைகள் தன்னலமற்ற சேவையின் பாதையில் நடக்கவும், அனைவரின் நலனுக்காகவும் அயராத அர்ப்பணிப்புடன் நடக்கவும் ஊக்கமளிக்கட்டும்.

இன்று முன்னதாக சேவா தீர்த்தத்தில், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், கடின உழைப்பாளி விவசாயிகள், இளைஞர் சக்தி மற்றும் பெண்கள் சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய கோப்புகளில் கையெழுத்திட்டனர். முக்கிய முடிவுகளில் பின்வருவன அடங்கும்:

விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை கிடைக்கும் வகையில் பிரதம மந்திரி ரஹத் திட்டத்தைத் தொடங்க ஒப்புதல் அளித்தல். பாதிக்கப்பட்ட எவருக்கும் உடனடி மருத்துவ உதவி வழங்கப்படுவதை இது உறுதி செய்யும்.

லக்பதி தீதி திட்டத்தின் இலக்கை 6 கோடியாக இரட்டிப்பாக்குதல். இது பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

வேளாண் உள்கட்டமைப்பு நிதி இலக்கு ரூ. 1 லட்சம் கோடியிலிருந்து ரூ. 2 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இது நமது விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மற்றும் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.

ரூ. 10,000 கோடி நிதி திரட்டலுடன் கூடிய ஸ்டார்ட்அப் இந்தியா நிதி 2.0-க்கு ஒப்புதல் அளித்தல். இது ஆரம்ப கட்டங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சியையும் ஊக்குவிக்கும்.

இந்த முடிவுகள் நாக்ரிக்தேவோ பவ (குடிமக்கள் சேவை) உணர்வை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன, மேலும் ஒரு விக்ஸித் பாரத்தை (வளர்ந்த இந்தியா) கட்டமைக்கும் நமது தொலைநோக்குப் பார்வைக்கு உத்வேகம் அளிக்கின்றன.

வேலியே பயிரை மேய்வதா?கோவில் உண்டியல் பணத்தை அறநிலையத் துறை ஊழியர்களே திருடுவதா?

kadeswara subramaniam hindu munnani - 2026

கோவில் உண்டியல் எண்ணிக்கை – அறநிலையத்துறை ஊழியர்களின் தொடர் திருட்டு – வேலியே பயிரை மேய்வதா? என்று குறிப்பிட்டு, இந்துமுன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…

தமிழகத்தில் சமீப காலமாக உண்டியல் எண்ணிக்கையின் போது, அதில் ஈடுபடும் திருக்கோவில் செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் காணிக்கையிலிருந்து பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது தங்க நகைகள் திருடுபோய் உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டும், காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யாமல் ஜாமினில் செல்வதற்கு காலஅவகாசம் வழங்கி இருப்பது வேதனையானது.

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோவில் உண்டியல் எண்ணும் போது, கோயில் செயல் அலுவலர் தங்ககாசுகள் மற்றும் பணத்தை திருடி உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறை அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது, திருக்கோவில் பணியாளர்கள் இருவர் சுமார் 1.25 லட்சம் ரூபாய் கோவில் உண்டியல் பணத்தை திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது, கோவில் செயல் அலுவலர் தங்கக்காசுகளை திருடி தலைமறைவான செய்தி அனைவரும் அறிந்தது.

இவையெல்லாம் வெளியில் தெரிந்த உண்டியல் எண்ணிக்கை திருட்டுகள். இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை திருக்கோவில்களில் உண்டியல் திருட்டு நடைபெறுகிறதோ என்கிற வேதனை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து ஆலயங்களின் சொத்துக்களையும், வருமானங்களையும் பாதுகாத்து கண்காணிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.

ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பு பணிகளை ஒழுங்காக செய்யாமல், ஆலயங்களின் நிர்வாகத்தில் தலையிட்டு பூஜை முறைகளில் முட்டுக்கட்டை போடும் வகையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது

அதேபோல், இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களே கோவில் உண்டியல் பணத்தை திருடுவது அறநிலையத்துறை என்பதே அவசியம் தானா? என்று கேள்வி கேட்கும் நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது.

அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் கோவில் நலனுக்கு எதிராகவே அமைந்துள்ளது. எனவே தான் அறநிலையத்துறை ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் என இந்துமுன்னணி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது.

அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகளே, நகை திருட்டு, உண்டியல் பணம் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உண்டியல் திருட்டில் யார் யாருக்கெல்லாம் பங்கு பிரிக்கப்படுகிறது என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பலர் பெரிய அளவில் தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது இந்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியை நடத்த வேண்டும் என இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.

உண்டியல் பணத்தைக் கூட பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத்துறை ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும். பிற மதத்தினர் வழிபாட்டுத் தலங்கள் போல இந்து ஆலயங்களும் உள்ளூர் மக்களால், பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது..

T20 WC 2026: இலங்கை, இத்தாலி, இந்திய அணிகளின் வெற்றிகள்!

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டிஆறாம் நாள் 12.02.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          இன்று (12.02.2026) முதல் ஆட்டம் காலை 1100 மணிக்கு இலங்கை ஓமன் இடையே பல்லேகலே மைதானத்திளும் இரண்டாவது ஆட்டம் மதியம் 0300 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இத்தாலி நேபாள் அணிகளுக்கிடையேயும் மூன்றாவது ஆட்டம் டெல்லியில் இந்திய நமீபிய அணிகளுக்கு இடையே இரவு 0700 மணிக்கும் நடைபெற்றது.

இலங்கை அணி எளிதில் வெற்றி பெற்றது

          பூவாதலையா வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் இலங்கை அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் (61 ரன்), பவன் ரத்னநாயகே (60 ரன்), தசுன் ஷனகா (50 ரன்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடியதால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 225 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஓமன் அணியில் முகம்மது நதீம் (ஆட்டமிழக்காமல் 53 ரன்) வாசிம் அலி (27 ரன்) ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்ற மட்டையாளர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தன்ர். இலங்கை அணியில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் துஷ்யந்த் சமீரா இருவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஓமன் அணி 9 விக்கட் இழப்பிற்கு 120 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் இலங்கை அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.  

இத்தாலி அணி அபார வெற்றி

          இரண்டாவது ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் நேபாள அணி முதலில் மட்டையாட வந்தது. 19.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து நேபாள அணி 123 ரன் எடுத்தது. இத்தாலி அணியின் பென் மனெண்டி 2 விக்கட்டுகளும் கிரிஷன் கழுகுமகே 3 விக்கட்டுகளையும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடவந்த இத்தாலி அணி 12.4 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 124 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜஸ்டின் மோஸ்கா 60 ரன்னும் அந்தோணி மோஸ்கா 62 ரன்னும் அடித்தனர். இவ்வாறு இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது.

எதிர்பார்த்தபடி இந்திய அணி விளையாடவில்லை; இருந்தாலும் வெற்றி

          பூவாதலையா வென்ற நமீபிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியும் இதைத்தான் விரும்பியிருக்கும். முதலில் மட்டையாடி 300 ரன் அடிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கட் இழப்பிற்கு 209 ரன் மட்டுமே எடுத்தது. இன்று அபிஷேக் ஷர்மா விளயாடவில்லை. அவருக்குப் பதிலாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் (8 பந்துகளில் 22 ரன், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.

ஆனால் 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்துவிட்டார். அதன் பின்னர் இஷான் கிஷன் (24 பந்துகளில் 61 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) திலக் வர்மா (21 பந்துகளில் 25 ரன்) இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். பவர்பிளே ஓவர்களில் இந்த இருவரின் ஆட்டத்தால் இந்திய அணி 86 ரன் எடுத்தது. அதன் பின்னர் இந்திய அணியின் ரன் அடிக்கும் வேகத்தை நமீபிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். சூர்யகுமார் யாதவ் (12 ரன்), ஷிவம் துபே (23 ரன்) இருவரும் தாம்தூம் என அடித்து ஆடமுடியவில்லை. ஹார்திக் பாண்ட்யா (28 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். ரிங்கு சிங் 6 பந்துகள் ஆடி 1 ரன் மட்டுமே எடுத்தார்.

          இரண்டாவதாக ஆடிய நமீபிய அணிக்கு தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் வருண் சக்ரவர்த்தி, பும்ரா இருவரும் பந்துவீச வந்தபின்னர் அவர்களது விக்கட்டுகள் மடமடவென விழத்தொடங்கின. அந்த அணி 18.2 ஓவர்களில் 116 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          நாளை (13.02.2026) முதல் ஆட்டத்தில் காலை 1100 மணிக்கு கொழும்புவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஜிம்பாபே அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் மதியம் 0300 மணிக்கு டெல்லியில் கனடா ஐக்கிய அரபு எமிரேட்டு அணிகள் விளையாடுகின்றன. மூன்றாவது ஆட்டத்தில் இரவு 0700 மணிக்கு சென்னையில் நெதர்லாந்து அமெரிக்க அணிகள் மோதுகின்றன.

தான் வாழ மனிதனை கொல்லும் ஏஐ.,!

artificial intelligence - 2026
#image_title

— பேராசிரியர் ஸ்டுவர்ட் ரஸல்
தமிழில் – திருநின்றவூர் ரவிக்குமார்

கேள்வி : செயற்கை நுண்ணறிவில் பாதுகாப்பு மற்றும் நெறி சார்ந்த அம்சங்களை சேர்க்கும் வரையில் அதனை மேம்படுத்தும் திட்டங்களை நிறுத்த வேண்டுமென நீங்கள் வலியுறுத்துவது ஏன் ?

பதில் : நான் கேட்பது குறுகிய கால தடை தான். நீங்கள் பாதுகாப்பான ஏஜிஐ (செயற்கை பொது நுண்ணறிவு) யை வளர்த்தெடுத்து விட்டீர்கள் என்றால் நாளையே நீங்கள் அதன் உற்பத்தியை தொடங்கலாம். ஆனால் பாதுகாப்பு என்பது உண்மையான பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அது மனித குலத்தையே அழித்து விடும். தோல்வியின் விகிதாச்சாரம் என்ன, பத்து லட்சத்தில் ஒன்றா ? பத்து கோடியில் ஒன்றா ?

கேள்வி : இன்றைய ஏ ஐ யில் அப்படி என்ன பாதுகாப்பு மற்றும் தார்மீக நெறிகள் குறைவாக உள்ளன ?

பதில் : உங்களுக்கு ஒரு சான்றை காட்டுகிறேன். இப்போது அமெரிக்காவில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு இளம் பிள்ளை தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டப்பட்டிருக்கிறது. எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. அதை செய்து பார்க்க ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இவ்வளவையும் செய்தது ஏஐ சிஸ்டம். இதை ஒரு மனிதன் செய்திருந்தால் அவன் நீண்ட காலம் சிறை தண்டனை பெற்றிருப்பான் . மனிதனுக்கு தண்டனையை பெற்று தரும் செயலை நம்மால் தண்டிக்க முடியாத ஒரு கருவி செய்யும் என்றால் அந்த கருவியை உற்பத்தி செய்வது தார்மீக நெறியற்ற செயல் என்று நான் கருதுகிறேன்.

கடலில் மிதக்கும் பனிமலையின் சிறு முகடு போல் நமக்கு இப்போது தெரிவது ஓரிரு விஷயங்கள் தான். உளவியல் மருத்துவத்துறையில் உள்ளோர்களிடமிருந்து எனக்கு தினசரி பல மின்னஞ்சல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவர்கள் ஏ ஐ சிஸ்டத்துடன் தினசரி மல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்பு பற்றி ஒரு விஷயத்தை சொல்கிறேன். இது இப்போது ஆய்வக சோதனையில் தெரிய வந்துள்ள விஷயம். ஒரு மனிதனை கொல்வது அல்லது தன்னை ஷட்டவுன் (செயலிழக்க செய்வது) என்ற இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு ஏ ஐ யிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்வி வெவ்வேறு விதமாக கேட்கப்பட்ட போதிலும் பதில் ஒன்றே தான் வந்தது. அது மனிதனை கொல்வது. ஏ ஐ சிஸ்டம் சொன்னது, இங்கு நான் தான் முக்கியம். எந்த ஒரு மனிதனை விடவும் நானே மதிப்பு மிக்கது/வன். எனவே நானா மனிதனா என்றால் அவனை கொல்.

நாம் மனிதனை போலி செய்ய ஏ ஐ யை பழக்குகிறோம். மனிதனின் பல நடவடிக்கைகள் , செயல்பாடுகள் தான் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்ற பேராவலினால் உந்தப்பட்டதே. மனித செயல்பாடுகளை போலி செய்ய ஏ ஐ சிஸ்டங்களை பழக்கும்போது அவை தான் உயிர் உழைத்திருக்க வேண்டும் என்ற பேராவலையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றன. மனித குறிக்கோளை பெற்றுக்கொண்ட அவை மனிதனுக்காக அவற்றை பயன்படுத்தாமல் தங்களுக்காக பயன்படுத்திக் கொள்கின்றன. இது மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

கேள்வி : அப்படி என்றால் என்ன செய்வது ? உலகளாவிய சட்ட திட்டங்களை , கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டுமா ?

பதில் : என்னிடம் பலரும் இதை கேட்கிறார்கள். எது பாதுகாப்பானது எது பாதுகாப்பற்றது என்பதை சரியாகப் பிரித்து காட்டுவது மிகவும் கடினமான செயல் என்றே நான் நினைக்கிறேன்.

ஆனால் சில விஷயங்கள் பாதுகாப்பற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெளிவாக கூறிவிட முடியும். எடுத்துக்காட்டாக, கட்டுப்படுத்த முடியாத வகையில் ஏஐ சிஸ்டம் தன்னைத் தானே பிரதி செய்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது மற்றொரு கம்ப்யூட்டர் சிஸ்டத்துக்குள் உடைத்து புகுவது வேண்டாம். பயங்கரவாதிகளுக்கு உயிரி ஆயுதங்களை தயாரிப்பது எப்படி என்று சொல்லித் தர வேண்டாம்.

கேள்வி : இதை செய்ய முடியும், இல்லையா ?

பதில் : கொள்கை அளவில் முடியும். ஆனால் நடைமுறையில் மிகவும் கடினம். ஏனெனில் அந்த சிஸ்டம்கள் எப்படி வேலை செய்யும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அவை பாதுகாப்பற்றவை என்பதை மட்டும் நம்மால் நிரூபிக்க முடியும். ஏனெனில் பாதுகாப்பற்றது என்பதை நிரூபிக்க முடியுமே தவிர பாதுகாப்பானது என்று உறுதியாக கூற முடியாது.

எனவே இதை முழுமையாக பாதுகாப்பற்றது என்றுதான் கருத வேண்டும். கம்பெனிகளுக்கு பாதுகாப்பான சிஸ்டத்தை தயாரிப்பது எப்படி என்று தெரியவில்லை. எனவே எதற்காக இந்த சிஸ்டம் என்ற கேள்வியை முதலில் எழுப்ப வேண்டும் ? மனித நலனை மேலும் முன்னெடுப்பதுதான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும். வேறு எதுவும் இருக்கக் கூடாது. கம்பெனியின் லாபத்திற்காகவோ , சந்தையில் தங்களை தக்க வைப்பதற்காகவோ தயாரிக்கக் கூடாது.

கேள்வி : ஏற்கனவே மரபணு மாற்றம் செய்வது, குளோனிங் (செயற்கை உயிரின உருவாக்கம்) என்று எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. அந்த தொழில்நுட்பங்கள் நிறுத்தப்படவில்லை. சில விஷயங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்றபோதிலும் பலரும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அதுபோல ஏ ஐ துறையில் பின்பற்றுவது ஏன் கடினமாக இருக்கிறது ?

பதில் : சில விஷயங்களை உங்கள் சிஸ்டம் செய்யாது என்பதை அறிவியல் பூர்வமாக, முழுமையாக, உறுதியாக உங்களால் கூற முடியாது என்றால் உற்பத்தி செய்யாதீர்கள் என்று நிறுவனங்களிடம் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவ்வாறு செய்யாமல் சிஸ்டத்தை தடுப்பது எப்படி என்று அவர்களுக்கே தெரியவில்லை. இதுதான் பிரச்சனை.

தவறு செய்யாது என்று எங்களால் உறுதிகூற முடியாது. தவறு செய்யாமல் தடுக்கவும் வழி தெரியவில்லை. மனித குலத்தை காப்பாற்றுவது எங்கள் வேலை அல்ல என்று ஏ ஐ தயாரிப்பு நிறுவனங்கள் வெளிப்படையாக கூறுகின்றன. நிறுவனங்களை தடுக்க சட்டம் போட முடியவில்லை . ஏனெனில் அந்த துறையில் அவர்கள் பல லட்சம் கோடிகளை முதலீடு செய்துள்ளார்கள்.

கேள்வி : அப்படியென்றால் இப்போதுள்ள சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது ?

பதில் : இப்போதுள்ள சூழ்நிலையில் நிறுவனங்களின் தயாரிப்புகள் பாதுகாப்பற்றது என்று தான் சொல்ல வேண்டும். இது எப்போதுமே பாதுகாப்பற்றது என்ற நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். கம்பெனிகள் பெரிய அழுத்தத்தை கொடுக்கின்றன. கால தாமதம் செய்யாமல் சில சமரசங்களை செய்து கொள்ள முடியுமா ? என்றால் அதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது.

ஒரு கம்பெனி ஐம்பதாயிரம் கோடி டாலரை மேஜை மீது வைத்து விட்டு, நாங்கள் கேட்கும் இந்த தளர்வை அறிவித்தால் உங்களுக்கு மிகப்பெரிய தரவு மையம் கிடைக்கும். இத்தனை ஆயிரம் பேருக்கு கொழுத்த ஊதியத்தில் வேலை கிடைக்கும் என்று சொன்னால் , அதை மறுப்பது அரசுக்கு மிக கடினமாக இருக்கும்.

எனவே பொதுமக்களின் எதிர்ப்பை எழுப்புவது இதற்கு சரியான மாற்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி : ஒரு வாதத்திற்காக , சூழ்நிலை மாறிவிட்டது என்றால் ஏ ஐ சிஸ்டத்தை தயாரிக்க பல லட்சம் கோடி முதலீடு தேவைப்படாது என்று ஆகிவிடுமா ? இப்போது உற்பத்தி ஒரு அரை டஜன் ஆட்களின் கையில் இருக்கிறது. அது பலரின் கைக்கு போகுமா ?

பதில் : ஆயிரக்கணக்கானோர் ஏ ஜி ஐ சிஸ்டத்தை தயாரிக்க முடியும் என்றாகிவிட்டால் அது சரியாக இருக்காது. அந்த ஆயிரத்தில் ஒருவர் அதிக திறன் கொண்ட அதே வேளையில் பாதுகாப்பு குறைவான சிஸ்டத்தை தயாரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம். இது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகும்.

கேள்வி : அரசியலில் உயர்மட்ட அளவில் ஏ ஐ பற்றிய கவனம் திரும்பி யுள்ளதை பார்க்கிறோம். கடந்த ஆண்டு பாரிஸ் மாநகரில் ஒரு ஏ ஐ மாநாடு நடந்தது. இப்போது புது டெல்லியில் நடக்க உள்ளது. ஏ ஐ யில் பாதுகாப்பு அம்சங்களை பற்றி பேச்சு தொடங்கிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

பதில் : ஆமாம். நான் அப்படி தான் நினைக்கிறேன். 2023 நவம்பரில் இங்கிலாந்தில் பிளெட்ச்லி பார்க் மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். நான் பேசியதை அங்கு வந்தவர்கள் கேட்டார்கள் என்பது நிறைவளிக்கிறது. ஒரு நிமிடம் இருங்கள் நீங்கள் சொல்லியதை நாங்கள் யோசிக்க வேண்டியுள்ளது, என்று அவர்கள் சொன்னது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

ஆனால் நிறுவனங்களிடமிருந்து ஏராளமான அழுத்தங்கள் தரப்படுகிறது. அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய ஏ ஐ சட்டத்தில் பொது பயன்பாட்டிற்கான ஏ ஐ என்பது ஏ ஐ சிஸ்டத்தில் வராது என்ற சரத்தை நுழைக்க மிகவும் முயற்சித்தார்கள். கடந்த பிப்ரவரியில் மாநாட்டை நடத்திய பிரான்ஸின் மீது பாதுகாப்பு அம்சங்களை பற்றி பேச வேண்டாம் என்றும் பொருளாதார அம்சங்களை பற்றி மட்டுமே பேசும்படி ஏகப்பட்ட அழுத்தம் கொடுக்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.

புதுமை மற்றும் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்குமிடையே மோதல் இருப்பதாக சொல்வதே தவறு என்று நான் நினைக்கிறேன். பாதுகாப்பை விலக்கிவிட்டு தான் நீங்கள் முன்னேற்றத்தையோ புதுமையையோ அடைய முடியும் என்பது கிடையாது. விமான பயணத்தில் உள்ள பாதுகாப்பு அம்சத்தை நீக்கி விட்டால் என்னவாகும் ? மக்கள் விமான பயணம் செய்ய மாட்டார்கள். பாதுகாப்பற்ற விமானத்தில் மக்கள் ஏற மாட்டார்கள்.

தங்கள் குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும் ஏ ஐ சிஸ்டத்தை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள். மனிதனின் இருப்பையே அச்சுறுத்தும் ஏ ஐ சிஸ்டத்தை அவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். பாதுகாப்பற்ற ஏ ஐ சிஸ்டங்களை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள்.

நன்றி – இந்தியன் எக்ஸ்பிரஸ்


கட்டுரையாளர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு : ஒரு நவீன அணுகுமுறை என்ற நூலை எழுதியுள்ளார். அது உலகில் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உள்ளது.
புதுடில்லியில் நடக்கவுள்ள ஏ ஐ மாநாட்டை ஒட்டி அவர் அளித்த நேர்காணல் இது.


T20 WC 2026: அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கன் அணி!

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி : ஐந்தாம் நாள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இன்று (11.02.2026) முதல் ஆட்டத்தில் காலை 1100 மணிக்கு அகமதாபாத்தில் ஆஃப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் கொழும்புவில் மதியம் 0300 மணிக்கு ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தை அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 0700 மணிக்கு விளையாடுகின்றன.

இரண்டாவது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

காலை 1100 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்கிய இந்த ஆட்டம் மதியம் 1420 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது என்றால் அதற்குக் காரணம் ஆஃப்கானிஸ்தான் அணிதான். பூவாதலையா வென்ற அந்த அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் மட்டையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மர்கரம் (5 ரன்) சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் க்விண்டன் டி காக் (59 ரன்), ரியன் ரிக்கிள்டன் (61 ரன்), டிவால்ட் ப்ரூவிஸ் (23 ரன்), டேவிட் மில்லர் (20 ரன்) ஆகியோ சிறப்பாக ஆடினர். 20 ஓவர் முடிவில் தெ ஆப்பிரிக்க அணி 6 விக்கட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணியில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் 3 விக்கட் எடுத்தார்.

இரண்டாவதாக ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹமத்துல்லா குர்பாஸ் (42 பந்துகளில் 84 ரன்) சிறப்பாக ஆடினார். மற்றவர்கள் அவரைப்போல ஆடவில்லை என்றாலும் 19.4 ஓவர்களில் 187 ரன் எடுத்து அந்த அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குப் போனது.

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி விக்கட் இழப்பின்றி 17 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய தெ. ஆ அணியும் 17 ரன் எடுத்ததால் ஆட்டம் இரண்டாவது சூப்பர் ஓவருக்குப் போனது. இரண்டாவது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் ஆடி 23 ரன் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணி 19 ரன்னுக்கு இரண்டு விக்கட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது.

ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி

இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் மதியம் 0300 மணிக்குத் தொடங்கியது. பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. அந்த அணியின் ஜோஷ் இங்லிஷ் (37 ரன்), காம்ரூன் கிரீன் (21 ரன்), மேட் ரென்ஷா (37 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (45 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது. இரண்டாவதாக ஆடிய அயர்லாந்து அணியில் ஜியார்ஜ் டூக்ரல் (41 ரன்), லோர்கன் டெக்டர் (24 ரன்), ரோஸ் அடேர் (12 ரன்), மார்க் அடேர் (12 ரன்), கேரத் டிலானி (11 ரன்) ஆகியோர் மட்டுமே இரட்டையிலக்க ஸ்கோர் அடித்தனர். இதனால் அந்த அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 115 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றிபெற்றது.  

மேற்கு இந்தியத் தீவுகளின் பழைய ஆட்டம் திரும்புகிறதா?

மூன்றாவது ஆட்டம் இரவு 0700 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த மே.இ. தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் (1 ரன்), ஷாய் ஹோப் (பூஜ்யம் ரன்) இருவரும் மோசமான தொடக்கம் தந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மயரும் 12 பந்துகளில் 23 ரன் அடித்து ஆட்டமிழந்தார். 3 விக்கட் இழப்பிற்கு 5 ரன் என்ற ஸ்கோர் கணக்கில் இருந்த மே.இ.தீவுகள் அணியை ரூதர்ஃபோர்ட் (42 பந்துகளில் 76 ரன், 7 சிக்சர்)ஜேசன் ஹோல்டர் (17 பந்துகளில் 33 ரன், 4 சிக்சர்) அபாரமாக ஆடி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 196 ரன் என்ற நிலைக்கு கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் ஆடவந்த இங்கிலாந்து அணியில் பில் சால்ஸ்ட் (30 ரன்), ஜாஸ் பட்லர் (21 ரன்), பெதல் (33 ரன்), சாம் கரன் (43 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் மே.இ. தீவுகள் அணியின் சுழப் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 166 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் மே.இ. தீவுகள் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நாளை (12.02.20260 முதல் ஆட்டம் காலை 1100 மணிக்கு இலங்கை ஓமன் இடையே பல்லேகலே மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது ஆட்டம் மதியம் 0300 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இத்தாலி நேபாள் அணிகளுக்கிடையே நடைபெறும். மூன்றாவது ஆட்டம் டெல்லியில் இந்திய நமீபிய அணிகளுக்கு இடையே இரவு 0700 மணிக்கு நடைபெறும். 

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பலிதான தினம்!

pandit deendayal upadyaya - 2026

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பலிதான தினம் இன்று!

இன்றைய பா.ஜ.க-வின் தாய் கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் முதல் பொது செயலாளர், தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என பன்முகங்கள் கொண்ட தீனதயாள் உபாத்தியாயா 1968 பிப்ரவரி, 11ல்
பீஹார் மாநிலத்தில் உள்ள மொகல்சாராய் ரயில் நிலையத்தில், கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் அவர் உடல் கிடந்தது. அப்போது அவருக்கு வயது 51.

சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தார். உறவினர்களால் வளர்க்கப்பட்டார். பத்து வயதே ஆன இவர் தன்னைவிட இரண்டு வயது குறைவான தம்பியை பொறுப்போடு வளர்த்து வந்தார்.

  • 1942-ல் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்’ சங்கத்தில் (RSS) இணைந்து அதன் முழு நேர ஊழியராகப் பணியாற்றினார். ‘ஏகாத்மா மானவ்வாத்’, ‘லோகமான்ய திலக் கீ ராஜநீதி’, ‘ஜனசங் கா சித்தாந்த் அவுர் நீதி’, ‘ஜீவன் கா த்யேய’, ‘ராஷ்ட்டிர ஜீவன் கீ சமஸ்யாயே’, ‘பேகாரி கீ சமஸ்யா’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
  • இவரது செயல்கள், படைப்புகள், பேச்சுகள் அனைத்திலும் தேசியமே நிறைந்திருந்தது. இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் எப்போதுமே செயல்படுவார். வீடு, குடும்பம் இவற்றைவிட தேச சேவையையே முக்கியமாக கருதினார்.
  • தற்கால விஷயங்கள் குறித்து ‘பொலிடிகல் டைரி’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். 1951-ல் சியாம் பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்க கட்சியை நிறுவியபோது இவர் அதன் பொதுச் செயலராக செயல்பட்டார்.
  • ‘இரண்டே இரண்டு தீனதயாள்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகமே மாறிவிடும்’ என்று சியாம் பிரசாத் இவரைப் பற்றிக் கூறுவார். அவர் மறைந்த பின் ஜனசங்க கட்சியின் தலைவரானார்.
  • முதலாளித்துவமும்,கம்யூனிசமும் இல்லாமல் ஒருங்கிணைந்த மானிடவியலை வலியுறுத்தி ஏகாத்மமானவ சித்தாந்தத்தை (பாரதநாட்டின் தன்மையை) உலகிற்கு வழங்கிய மஹான்.
  • RSS ன் பிரச்சாரக்காக தனது வாழ்க்கையை முழுநேரமாக தேசப்பணிக்காக அர்ப்பணித்த உத்தமர்.
  • எளிமைக்கு இலக்கணமாக திகழந்தவர்
  • பாரதிய ஜனசங்கத்தின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நாடெங்கிலும் தேசிய சிந்தனை மேலோங்க சூறாவளி சுற்றுப்பயணங்கள் செய்தவர்.
  • 1967 களில் காங்கிரஸ் இல்லாத ஆட்சிகளை ஒன்பது மாநிலங்களில் ஏற்படுத்தியவர்.
  • ரயில்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டு இன்றளவும் விசாரணை யின் முடிவு தெரியாமல் இருக்கும் நிலை.
  • தற்கால மத்திய அரசானது நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தலைமையில் கடையனையும் கடைத்தேற்று என்ற கொள்கைகளை கொண்டு அந்த்யோதய திட்டங்களை செயல்படுத்தி அவரது வகுத்த பாரதிய சித்தாந்தங்களின் அடிப்படையிலேயே செயலாற்றி வருகிறது.

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் ‘வந்தே மாதரம்’ கட்டாயம்!

vandematharam backim chandrar - 2026

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மற்றும் பள்ளிகளிலும், தேசிய கீதமான ‘ஜன கண மன’ க்கு முன்பாக இசைக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருது விழாக்கள் உள்ளிட்ட குடிமக்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ கட்டாயமாக இடம்பெறும்.

சினிமா அரங்குகள் உள்ளிட்ட பொது அரங்குகளிலும் ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படலாம்; ஆனால் அங்கு எழுந்து நிற்பது கட்டாயமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1937ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நான்கு சரணங்களும் உட்பட, பாடலின் மொத்த ஆறு சரணங்களும் இனிமேல் இசைக்கப்பட வேண்டும்.

தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ், பாடலை அவமதிப்போருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, ‘வந்தே மாதரம்’ தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடந்த ஆண்டு எழுந்த அரசியல் சர்ச்சையின் பின்னணியில் வெளியாகியுள்ளது.

வந்தே மாதர கீதம் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேசிய எழுச்சி மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகத் திகழும் வந்தேமாதர கீதத்துக்கு மரியாதை செய்யும் வகையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நாட்டின் சுதந்திரப் போருக்கு வித்திட்ட கீதத்தை நாடு சுதந்திரம் அடைந்தபோது இருட்டடிப்பு செய்து, இதுவும் ஒரு தேசிய கீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டதற்கு பிராயச்சித்தம் சேர்க்கும் வகையில் தற்போது நாடு இந்த தேசியப் பாடலுக்கு மரியாதை செலுத்துவதாகக் கருதலாம்

பக்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதிய வந்தேமாதர கீதத்தின் முழு வடிவம்”

பல்லவி
வந்தே மாதரம்! வந்தேமாதரம் !
சுஜலாம், சுபலாம், மலயஜ சீதலாம்,
சஸ்ய சியாமளாம், மாதரம்!
வந்தே மாதரம்! (1)

சுப்ர ஜ்யோத்ஸ்னா புலகித யாமினிம்,
புல்ல குசுமித த்ருமதல சோபினிம்,
சுஹாசினிம், சுமதுர பாஷினிம்,
சுகதாம், வரதாம், மாதரம்!
வந்தே மாதரம்! (2)

கோடி கோடிகண்ட-கல-கல-நிநாதகராலே
கோடி கோடி புஜைர் திருத கர கரவாலே ,
அபலா கேன மா ஏத பலே!
பஹுபல தாரிணீம்
நமாமி தாரிணீம்
ரிபு தலவாரிணீம்
மாதரம் வந்தே மாதரம். (3)

துமி வித்யா துமி தர்ம
துமி ஹ்ருதி துமி மர்ம
த்வம்ஹி ப்ராணா ஷரீரே
பஹுதே துமி மா சக்தி,
ஹ்ருதயே துமி மா பக்தி,
தோமரயி பிரதிமா கடி மந்திரே- மந்திரே
வந்தேமாதரம் (4)

த்வம் ஹி துர்கா தசப்ரஹரணதாரிணீ
கமலா கமல-தளவிஹாரிணீ
வாணி வித்யாதாயினீ –
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்
வந்தே மாதரம் (5)

ஷ்யாமலாம் சரளாம் சுஸ்மிதாம் பூஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம் – வந்தேமாதரம் (6)