Home Blog Page 18

பரமன் அளித்த பகவத் கீதை (13): வியாச பகவானின் வானவியல் அறிவு

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 13
மகாபாரதக் கதை

வியாச பகவானின் வானவியல் அறிவு (தொடர்ச்சி)

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

அர்ஜுனனுடன் தொடர்பு கொண்ட பல்குனி நட்சத்திரம்

         அர்ஜுனனின் பத்து பெயர்களில் பல்குனன் என்ற பெயர் மிகவும் முக்கியம் வாய்ந்தது.இது அவனுடைய நட்சத்திரம். பூர்வ பல்குனி மற்றும் உத்தர பல்குனி என்று அழைக்கப்படும் பூரம் மற்றும் உத்தர நட்சத்திரங்கள் சிம்ம ராசி மற்றும் கன்யா ராசியில் உள்ளன. இவற்றுக்கு நேர் எதிரில் 180 டிகிரியில் உள்ள அவிட்ட நட்சத்திர அதிபதியான வசுவான பீஷ்மரை அர்ஜுனன் குறி பார்த்து அடித்தான். வசுக்கள் காக்கும் பசு அடையும் துன்பம் போல பீஷ்மர் துன்பம் அடைந்தார்! மாசி மாதம் என்றாலே பசுக்களுக்கு நோய் வரும் மாதம்.

நண்டைக் குறிக்கும் கடக ராசியில் உள்ள தாய் நண்டு குஞ்சு நண்டு பிறக்கும் போது தன் உயிரை விட்டு அடையும் துன்பம் போல பீஷ்மரும் உயிரை விடும் துன்பத்தை அடைந்தார். கடகம் மற்றும் மகர ராசி 180 டிகிரியில் நேர் எதிராக உள்ளன! இந்தப் பொருள் அனைத்தையும் உள்ளடக்கித் தான் மேலே கூறிய செய்யுளை வியாஸர் இயற்றினார். அதன் உண்மைப் பொருளை விநாயகர் தேர்ந்து பின் மேலே எழுதத் தொடங்கினார்.

பத்து நாட்கள் போர் மர்மம்

         இத்துடன் இந்த செய்யுளின் ஆழ்ந்த பொருள் நின்று விடவில்லை. மஹாபாரதப் போரில் முதல் பத்து நாட்களுக்குத் தலைமை ஏற்று நடத்திய பீஷ்மர் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் வீரர்களை அழிப்பேன் என்று வீர சபதம் செய்து அதன் படியே செய்தார் தியோ என்ற வசுவுக்கு மார்த்தாண்டன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. மார்த்தாண்டன் என்றால் சூரியன்.

தீபிகா என்ற ஜோதிட நூல், ‘சூர்யான் உச்சான்’ என்று தொடங்கி ‘நீசான் சுநீசான்’ என்று முடியும் நான்கு அடிகளில் சூரியனுக்கு பத்து நாட்கள் மட்டுமே அதிக வலிமை உண்டு என்று வலியுறுத்துகிறது. பத்தாயிரம் சூரிய வீரர்களான நாராயணி சேனாவுடன் பீஷ்மர் போரிட்டதை மஹாபாரதம் விளக்குகிறது ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தின் போது பத்தாயிரம் ராக்ஷஸர்கள் அழிகின்றனர் என்று ரிக் வேதம் (I-35.10) கூறுகிறது. பத்தாயிரம் கதிர்களுடன் காலை பவனி வரும் சூரியன் போல பீஷ்மர் ஓவ்வொரு நாளும் போரில் நாராயணி சேனாவுடன் புகுந்தார்.

         சூரியன் வடக்கே நகரத் தொடங்கிய நாள் முதலாக ஒவ்வொரு நாளும் வலிமை பெறுகிறான். அதாவது நாள் பொழுது அதிகரிக்கிறது. இரவுப் பொழுது குறைகிறது. ஆறு மாதம் கழித்து அவன் தெற்கே செல்லும் போது அவன் வலிமை குறைகிறது. அதாவது நாள் பொழுது குறைகிறது.

இரவுப் பொழுது அதிகரிக்கிறது. பாரதப் போரில் தக்ஷணாயனத்தில் சூரியன் வலிமை குன்ற மார்த்தாண்டனான பீஷ்மர் வலி குன்றுகிறார். மகாபாரத யுத்த காலத்தில் சப்த ரிஷி மண்டலத்திற்கு சமீபத்தில் மக நட்சத்திரத்தின் அருகே வான ரேகை சென்றது. இந்த நட்சத்திரத் தொகுதிக்கு சிகண்டி மண்டலம் என்று பெயர்.

சிகண்டி என்றால் மயில் என்று பொருள்! பூரம் உத்தர நட்சத்திரங்களுக்கு முன்னே சித்ர சிகண்டி மண்டலம் வருகிறது. சிகண்டியைக் கண்ட பீஷ்மர் போர் புரிய மறுத்து போர் புரிவதை நிறுத்துகிறார்.சூரியன் மக நட்சத்திரத்தில் இணையும் போது அவிட்ட நட்சத்திரம் மேற்கே மறைகிறது! வானவியல் படி 180 டிகிரி நேர் எதிரே இருப்பதால் இந்த மறைவு ஏற்படுகிறது.

          மாசி மாதம் பசுக்களுக்கு நோய் வரும் மாதம், தாய் நண்டு பிரசவிக்கும் போது இறந்து படும் வேளையில் அடையும் துயரம், மார்த்தாண்டனான பீஷ்மர் என்னும் வசு பல்குனனால் சிகண்டி மண்டலத்தை முன்னிட்டு அடிக்கப்படும் போது வீழ்ந்து பட்டான் என்ற அனைத்தையும் உள்ளடக்கி இந்த ஒரே ஒரு செய்யுளில் வியாஸர் விளக்கும் மகாபாரதப் போரின் ஒரு பெரும் பகுதியைப் போல இன்னொரு செய்யுள் உலக இலக்கியத்தில் எங்கேனும் உள்ளதா? எனக் கேட்டால், இல்லை என்பதே மறுமொழி!

அறிவியலும் புராணமும் இணையும் அற்புத நட்சத்திரங்களாக பல்குன நட்சத்திரமும் அவிட்ட நட்சத்திரமும் திகழும் அதிசயத்தைப் பார்க்கும் போது நட்சத்திர மர்மம் அவிழ்கிறது. புரியாத ஆழ்ந்த பொருளும் புரிகிறது, இல்லையா!

சட்டப்படி டிரம்ப் தவறாக இருக்கலாம், ஆனால்…!

donald trump - 2026

— ராம் மாதவ்
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

அமெரிக்க அதிரடி படையினரால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு தூக்கி செல்லப்பட்ட நிகழ்வுடன் இந்த புத்தாண்டு துவங்கியது. டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் இந்த துணிச்சலான செயலால் உலகமெங்கும் திகைப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி உருவாகியுள்ள ‘டான்ட்ரோ டாக்டரின்_ என்ற புதிய சொல்லாடலை விமர்சகர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வசதிக்கேற்ப விளக்கி கொண்டிருக்கிறார்கள்.

ஆச்சரியப்படத்தக்க வகையில் (வெனிசுலா தலைநகரான) கராகஸ் கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்க, மதுரோவின் ஆதரவாளர்கள் மட்டும் ஜனவரி 4ஆம் தேதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மதுரோவின் ஆட்சியில் எங்கும் பரவி இருந்த ஆயுதமேந்திய தனியார் தீவிரவாத படையான கோலிக்டிவோ எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளையும், அமெரிக்க ஆதரவாளர்கள் என்று அவர்கள் சந்தேகப்படுபவர்களின் வீடுகளையும் தாக்கினார்கள்.

வெனிசூலாவில் டிரம்ப் ஆட்சியின் செயல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. ஐநா சபை , சர்வதேச நீதிமன்றம் போன்ற பல பரிமாணங்களைக் கொண்ட உலக அமைப்புகளின் கையறு நிலையை இது மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளது.

அமெரிக்க படையினரின் செயல் திரைப்பட சாகசம் போல் இருந்தாலும் இது போன்ற ஒருதலைப்பட்சமான செயல்களில் அமெரிக்கா ஈடுபடுவது புதிதல்ல. 1983 இல் அமெரிக்க சிறப்பு அதிரடி படையினர் கிரேனேடாவில் இருந்த கம்யூனிச ஆட்சியை அகற்ற அந்த நாட்டில் அதிரடியாக புகுந்தார்கள். அதன் பிறகு ஆறாண்டுகள் கழித்து பனாமா நாட்டில் இருந்த இடதுசாரி சர்வாதிகாரியான மேனுவல் நோரிக்காவை இப்படித்தான் கைது செய்தார்கள். ஜார்ஜ் புஷ் 2003 இல் ஈராக்கின் அதிபர் சதாம் உசேனையும் இப்படிதான் ஐநாவின் அனுமதி பெறாமல் பிடித்தார். அதேபோல்தான் டிரம்ப்பும் கடந்த ஆண்டு சிரியா, ஈரானை தாக்கிய போது ஐநாவின் சம்மதத்தை கேட்கவில்லை. 2011 இல் ஒசாமா பின் லேடனை பிடிக்கும் போதும் பாகிஸ்தானின் வான்பரப்பில் நுழைய அதன் அனுமதியை அமெரிக்கா கோரவில்லை. இது போன்ற ஒவ்வொரு நிகழ்வின்போதும் உலகில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதும் பலர் மகிழ்ச்சி தெரிவிப்பதும் நடந்துள்ளது.

இந்த சம்பவத்திலும் கூட நியாயமான கோபம் தொலைக்காட்சிகளில் வெளிப்பட்டாலும் லத்தின் அமெரிக்க மக்கள் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. பெருவாரியானவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். இயற்கை வளம் கொழிக்கும் இந்த பகுதியில் உருவாகி வரும் அதிகார சக்திகளின் போட்டியே மக்களின் இந்த கமுக்கமான எதிர்வினைக்கு காரணம். வன்முறை, போதைப் பொருள்கள், பாதுகாப்பின்மை இவற்றிற்கு எதிரான பொதுமக்களின் மனநிலையே மிதவாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக திரண்டு வருகிறது.

கடந்த எண்பது ஆண்டுகளில் லத்தின் அமெரிக்கா பல்வேறு அலைகளை பார்த்து வருகிறது. 1959 இல் 32 வயதான புரட்சிகர மாணவர் தலைவரான பிடல் காஸ்ட்ரோ கியூபாவில் அதிகாரத்தை கைப்பற்றினார். அதன் மூலம் இடதுசாரி சர்வாதிகாரிகளின் அலை முதலில் கிளம்பியது. அதன் பிறகு பிரேசில், அர்ஜென்டினா, சிலி, உருகுவே, பொலிவியா, நிகரகுவா, கிரனெடா, எல் சால்வடார், பனாமா, பெரு, கெளதிமாலா என்று பல நாடுகள் அவர்களின் (இடதுசாரி சர்வாதிகாரத்தின்) கீழ் வந்தன. இது அமெரிக்க எதிர்ப்பு மனநிலையை எழுப்பியது. லத்தின் அமெரிக்கா தனது அலட்சியத்தால் பனிப்போர் போட்டியில் சிப்பாயாகி அடிபட்டது . பனிப்போர் பயத்தினால் 1980 , 90 களில் ரொனால்ட் ரீகனும் (மூத்த) ஜார்ஜ் புஷ்ஷும் கம்யூனிஸ எதிர்ப்பு தலைவர்களுக்கு ஊக்கம் அளித்தனர். அதனால் ஜனநாயக அலை வீச தொடங்கியது.

ஆனால் இந்த புதிய நூற்றாண்டில் இடது சாய்வு கொண்ட ஆதிக்கவாதிகளின் எழுச்சி அலை மீண்டும் கிளம்பியது. இது பிங்க் அலை என்று சொல்லப்பட்டது. வெனிசூலாவில் ஹ்யூகோ சாவேஸ் , பிரேசிலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, அர்ஜென்டினாவில் நெஸ்டர் கிர்சினர், பொலிவியாவில் எவோ மொராலெஸ், ஈக்வடாரில் ராபாயெல் கொரெரா , உருகுவேயில் தபாரே வாஸ்குவேஸ் என சர்வாதிகாரிகள் உருவாகி , பல நாடுகளில் பிங்க் அலை பரவியது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக லத்தீன் அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதால் போதை பொருள், ஆயுத கும்பல்களின் அபாயகரமான வளர்ச்சி ஏற்பட்டது. ஐநா அமைப்பின் மதிப்பீட்டின்படி உலகில் 3700 டன் கோகெயின் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. அதை தயாரிக்க பயன்படும் கச்சா பொருளான கோகா உலகில் பொலிவியா, பெரு, கொலம்பியா என்ற மூன்றே நாடுகளில் உற்பத்தியாகிறது.

ஒட்டுமொத்த லத்தின் அமெரிக்காவும் போதை பொருள் களமாகியுள்ளது. ஆயுத, போதை பொருள் வியாபாரத்தால் மாபியா தலைவர்களும் அரசியல் தலைவர்களும் செல்வந்தர்கள் ஆகியுள்ள நிலையில் சாதாரண மக்கள் வன்முறை, குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டனர்.

இப்போது, (இடதுசாரி சர்வாதிகாரத்திற்கு எதிரான) மிதவாத / பழமைவாத அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் எழுச்சி பெற்று வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்த டிரம்ப் இந்த பகுதியில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். போதைப் பொருள் மாபியா மற்றும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான போரை துவங்கியுள்ளார். அர்ஜென்டினாவில் மிதவாத தலைவரான ஜேவியர் மிலே தலைமையிலான ஆட்சிக்கு இருபது மில்லியன் டாலர் உதவி வழங்கியுள்ளார். இது அந்த பகுதியில் பெருத்த ரீங்காரத்தை எழுப்பி உள்ளது.

ஈக்வடார் மிதவாத தலைவரை மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது. பொலிவியாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. பிரேசில் , கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, பெரு நாடுகளிலும் மிதவாத தலைவர்கள், கட்சிகள் எழுச்சி பெற்று வருகின்றன.

லத்தீனோபாரோமெட்ரோ என்ற சிசிலியன் அமைப்பு நடத்திய ஆய்வு கடந்த இரண்டு தசாப்தங்களில் 18 நாடுகளில் வலதுசாரிகளின் ஆதரவு இதுவரை எட்டாத உச்ச நிலைக்கு வளர்ந்துள்ளதாக கூறுகிறது. அந்த ஆய்வின்படி லத்தின் அமெரிக்க பகுதியில் பொதுமக்கள் மதிப்பில் எல் சால்வடாரின் வலதுசாரி ஜனாதிபதியான நயீப் புக்கெலே முதலிடத்திலும் வெனிசுலா அதிபர் மதுரோ கடைசி இடத்திலும் உள்ளார்கள்.

சர்வதேச சட்டங்களின் பார்வையில் டிரம்ப் தவறிழைத்தவராக இருக்கலாம். ஆனால் கருத்தியல் மற்றும் புவியரசியலில் அவர் கை ஓங்கி இருப்பதாகவே தெரிகிறது.


கட்டுரையாளர் தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவர்

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்


பரமன் அளித்த பகவத் கீதை(12): வியாச பகவானின் வானியல் ஞானம்!

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 12: மகாபாரதக் கதை
வியாச பகவானின் வானவியல் அறிவு

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

வேத வியாஸர் தான் இயற்றியுள்ள மஹாபாரதத்தில் நடக்கும் மாபெரும் போரை வானில் பார்த்துத் தான் எழுதினாரா? வியாஸரின் மஹாபாரதத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு என்று சொல்வதை நிரூபிக்கும் வகையில் அர்ஜுனனின் நட்சத்திரமும் பீஷ்மரின் நட்சத்திரமும் அமைந்துள்ளது எவ்வளவு அற்புதமான விஷயம்! நட்சத்திர அதிசயங்கள் வரிசையில் இந்த மர்மத்தைப் பார்க்கலாம்!

வியக்க வைக்கும் புதிர் சுலோகம்

மகாபாரதத்தில் ஒரு சுவாரசியமான சுலோகம் பீஷ்ம அர்ஜுன யுத்தத்தின் மர்மத்தையும் வானில் நடக்கும் மஹாபாரதப் பெரும் போரையும் விளக்குகிறது.

அர்ஜுனஸ்ய இமே பாணா நேமே பாணா: சிகண்டின:|
க்ருதந்தி மம காத்ராணி மாக மாஸே கவாமிவ||

– மஹாபாரதம் பீஷ்ம பர்வம்

சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் மாசி மாதத்தில் பசுக்கள் எப்படி துன்பம் அடைகின்றனவோ அது போல என்னைத் துன்பம் அடையச் செய்கின்றன என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

இந்த சிலேடை செய்யுளின் இன்னொரு அர்த்தம் : சிகண்டியை முன்னே வைத்து அர்ஜுனன் விடும் இந்த பாணங்கள் தாய் நண்டு குஞ்சு நண்டை பிரசவிக்கும் போது, தன் மரணத்தால் அடையும் துன்பத்தைப் போல என்னைத் துன்பப்படுத்துகிறது என்பதாகும்.

எத்தனை அற்புதமான ஆழ்ந்த பொருளுடைய செய்யுளாக இது அமைந்துள்ளது! ‘மாக மாஸே கவாமிவ’ என்ற சொற்றொடருக்கு மாசி மாதத்தில் பசுக்கள் அடையும் துன்பம் போல எனப் பொருள் கொள்ளலாம். அதையே மாகமா என்றால் தாய் நண்டு என்றும் ஸேசுவா என்றால் குஞ்சு நண்டு என்று பிரித்தும் இன்னொரு பொருள் கொள்ளலாம். தாய் நண்டு பிரசவிக்கும் போது அது மரணமடைகிறது. குஞ்சு நண்டு பிறக்கிறது. அது போல என் வேதனை உள்ளது என்று பீஷ்மர் கூறுவதாக உள்ள சுலோகம் வியாசர் ஒரு மிருக இயல் நிபுணர் என்பதை  உணர்த்துகிறது. மேலும் அவர் ஒரு வானவியல் நிபுணர் என்பதையும் நிரூபிக்கும் வண்ணம் இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது. 

பசுக்களுடன் தொடர்பு கொண்டுள்ள அவிட்டம்

டெல்பினஸ் என்று மேலை நாட்டில் அழைக்கப்படும் ச்ரவிஷ்டா அல்லது அவிட்ட நட்சத்திரம் மகர மற்றும் கும்ப ராசிகளில் உள்ளது. இந்தத் தொகுதியில் ஏழு நட்சத்திரங்கள் இருக்கின்றன. பிரதான நட்சத்திரமாக அவிட்டம் திகழ்கிறது. இதை சீனா உள்ளிட்ட பல தேசங்களும் காளை அல்லது பசு போன்ற தோற்றமுடைய நட்சத்திர மண்டலம் என்று குறிப்பிடுகின்றன. இதில் உள்ள இரு பெரும் நட்சத்திர கணங்கள் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ஒளி ஆண்டுகள் தள்ளி உள்ளன என்று அறிவியல் கூறுகிறது. கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரம் இது. இந்த அவிட்ட நட்சத்திரத்தின் அதி தேவதை வசுக்கள். பீஷ்மரின் பிறப்பைப் பற்றி அனைவரும் அறிவர். 

அஷ்ட வசுக்களான தரன், த்ருவன், சோமன், அஹன், அநிலன், அநலன், பிரத்யூஷன், ப்ரபாசன் ஆகியோர் ஒரு முறை மனைவிமார்களுடன் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றனர். அங்கே இருந்த நந்தினி என்ற காமதேனுவைப் பார்த்த அவர்கள் அதை அடைய ஆசைப்பட்டனர். ப்ரபாசன் என்றும் த்யோ என்றும் அழைக்கப்படும் வசு நந்தினியைக் கவர்ந்தான். அதை அறிந்த வசிஷ்டர் அந்த எட்டுப் பேரையும் மனிதப் பிறவி எடுக்கும்படி சபித்தார். 

வசுக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பசுவைக் கவர்ந்த தியோ மட்டும் நீண்ட நாள் பூமியில் வாழ வேண்டும் என்றும் ஏனைய ஏழு பேரும் உடனே தம் லோகம் திரும்பலாம் என்றும் சாப விமோசனமும் கொடுத்தார். பிரபாசன் அல்லது தியோ என்று அழைக்கப்பட்ட எட்டாவது வசுவே பீஷ்மர்! 

அவர் துரியோதனனுடன் சேர்ந்து பஞ்ச பாண்டவரை மஹாபாரத யுத்தத்தில் எதிர்த்தார். 18 நாட்கள் நடந்த யுத்தத்தில் முதல் பத்து நாட்களுக்கு பீஷ்மர் சேனாபதியாக இருந்து உக்கிரமாக போரிட்டார். பத்தாம் நாள் சிகண்டியை முன்னிலைப் படுத்தி அர்ஜுனன் விடுத்த பாணங்களால் அடிபட்டு வீழ்ந்தார். முன்பே செய்த பிரக்ஞையின் படி சிகண்டியுடன் போர் புரிய பீஷ்மர் மறுத்து விட்டார். உத்தராயணம் வரும் வரை காத்திருந்து பின்னர் தன் உயிரை விட்டார்.

கோயில் இடத்தில் தர்கா கொடி; நீதிபதி சொன்னதால் புகார் பெற்று வழக்குப் பதிவு!

dargah flag in thiruparankundram hill - 2026

திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பில் புகார்!

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் சட்டவிரோதமாக சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு கொடி கட்டியதாக கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்பரங்குன்றம் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், அனுமதியின்றி உள்ளே நுழைதல், பொது அமைதிக்கு பங்கம் இழைத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தர்கா நிர்வாகம் மற்றும் சில நபர்கள் இணைந்து மலையில் உள்ள கல்லத்தி மரத்தின் உச்சியில் பிறை கொடியைக் கட்டியுள்ளனர்.

அந்த மரம் மற்றும் அந்தப் பகுதி அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமானது என்றும், அங்கு அனுமதியின்றி கொடி கட்டியது சட்டவிரோதமானது என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கோவில் உள்துறை நிர்வாக அதிகாரி சத்திய சீலன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் அனுமதியின்றி அத்துமீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, மலை மீதுள்ள தர்கா முன், பிறை போட்ட கொடி உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன், அருகில் உள்ள கோவிலின் தல விருட்சமான கல்லத்தி மரத்திலும் தர்காவை சேர்ந்த சிலர் கொடி கட்டினர். இதுகுறித்து, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், ஹிந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர், ‘கோவில் இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில், கொடி ஊன்றப்பட்டுள்ளது’ என, கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், போலீசில் புகார் செய்யுமாறு கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன், போலீசில் புகார் அளித்தார்.

நீதிபதி உத்தரவிடாவிட்டால் மலையை ஆக்கிரமிக்கும் தர்கா நிர்வாகத்தின் சதிச் செயலுக்கு திமுக., அரசின் அறநிலையத்துறை உடந்தையாக இருந்து திருப்பரங்குன்றம் மலையையே அவர்களுக்குக் கொடுத்திருக்கும் என்றும், இந்து மக்களின் உரிமையான மலையை ஓட்டுக்காக அவர்கள் வசம் அள்ளிக் கொடுத்திருக்கும் என்றும் மக்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

பொங்கல் சிறப்பு ரயில்கள்; காலையில் முன்பதிவு தொடங்குது!

railway news - 2026
#image_title

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்களை திருநெல்வேலி மேட்டுப்பாளையம் போத்தனூர் செங்கோட்டை இடையே இயக்க தென்னக இரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு வரும் ஞாயிறு ஜனவரி 11 அன்று காலை 08:00 மணிக்கு துவங்கப்படும்

திருநெல்வேலி — மேட்டுப்பாளையம்
வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பழனி உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி ….. கிணத்துக்கடவு கோயம்புத்தூர்

ஜனவரி 12 || திருநெல்வேலி
ஜனவரி 13 || மேட்டுப்பாளையம்

போத்தனூர் — சென்னை — செங்கோட்டை

வழி : திருப்பூர் ஈரோடு சேலம் ஜோலார்பேட்டை காட்பாடி அரக்கோணம் பெரம்பூர் சென்னை எழும்பூர் தாம்பரம் செங்கல்பட்டு மேல்மருவத்தூர் விழுப்புரம் விருத்தாச்சலம் அரியலூர் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி ….

ஜனவரி 14 || போத்தனூர் & சென்னை
ஜனவரி 15 || செங்கோட்டை

முன்பதிவு வரும் ஞாயிறு ஜனவரி 11 அன்று காலை 08:00 மணிக்கு துவங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இந்த நாட்களில் இந்த வழித்தடங்களில் பயணிக்க கூடிய பயணிகள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் முன்பதிவு வசதி உள்ளது திருநெல்வேலி மேட்டுப்பாளையம் ரயிலில் முன்பதிவு இல்லா பெட்டிகள் உள்ளது .

ஏற்கனவே 15 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் !! கூடுதலாக இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தங்கம் காணாமல் போன வழக்கில் சபரிமலை தலைமை தந்திரி கைது; விசாரணை!

sabarimala aiyappa concluding pooja - 2026

சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் இருந்த விலைமதிப்பற்ற தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் காணாமல் போன விவகாரத்தில், கோயிலின் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவருவை கேரளா காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் வெள்ளிக்கிழமை கைது செய்து மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சபரிமலை கோயில் கருவூலத்திலிருந்து தங்க நகைகள் திருடப்பட்ட புகார் எழுந்ததைத் தொடர்ந்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போற்றி மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவர் பத்மகுமார் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையும் நடவடிக்கையும் இதுவரை
சிறப்புப் புலனாய்வு குழுவின் கண்டுபிடிப்புகளின்படி, தந்திரி ராஜீவருவுக்கும், உன்னிகிருஷ்ணன் பொட்டிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, கருவறையின் கதவு சட்டங்கள் மற்றும் துவாரபாலகர் சிலைகளுக்குத் தங்க முலாம் பூசும் பணிகளை மேற்கொள்ள தந்திரி பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நடைமுறைகளின் போது முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, இரகசிய இடத்தில் வைத்து தந்திரியிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னர் அவரைத் தங்களது அலுவலகத்திற்கு அழைத்து சென்று கைது நடவடிக்கையை முறைப்படி பதிவு செய்தனர்.

சபரிமலை போன்ற புனிதத் தலத்தின் மிக உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது ஐயப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு மூன்று புதிய நீண்ட வழித்தடத்தில் அம்ரித்பாரத் ரயில்கள்!

railway news - 2026
#image_title

தமிழகத்திற்கு மூன்று புதிய நீண்ட வழித்தடத்தில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருச்சியிலிருந்து நியூ ஜல்பைகுரி, தாம்பரம்-சந்த்ராகச்சி மற்றும் நாகர்கோவில்-நியூ ஜல்பைகுரி ஆகிய வழித்தடங்களில் மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது; இவை, மலிவான மற்றும் நவீன பயண அனுபவத்தை வழங்கும் வகையில், நீண்ட தூர இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அம்ரித் பாரத் ரயில்கள்:
திருச்சி-நியூ ஜல்பைகுரி: இந்த சேவை திருச்சி ஜங்ஷனில் தொடங்கி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் மற்றும் சென்னை வழியாக நியூ ஜல்பைகுரிக்குச் செல்லும்.

தாம்பரம்-சந்த்ராகச்சி: தாம்பரத்தில் இருந்து சென்னை எழும்பூர், விஜயவாடா, புவனேஷ்வர் வழியாக சந்த்ராகச்சி வரை இயக்கப்படும்.

நாகர்கோவில்-நியூ ஜல்பைகுரி: நாகர்கோவிலில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், காட்பாடி, விஜயவாடா, புவனேஷ்வர் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக நியூ ஜல்பைகுரி வரை செல்லும் நீண்ட தூர வழித்தடம் இதுவாகும்.

இந்த ரயிலில் சிறப்பம்சங்களாக குளிர்சாதன வசதி இல்லை. இந்த ரயில்கள் குளிர்சாதன வசதி இல்லாத ஸ்லீப்பர் மற்றும் ஜெனரல் பெட்டிகளுடன் கூடியவை, இது பயணச் செலவைக் குறைக்கிறது.

புஷ்-புல் தொழில்நுட்பம்: இரட்டைப் பெட்டிகள் (Locomotives) ரயிலின் இரு முனைகளிலும் இணைக்கப்பட்டு, தள்ளு-இழுக்கும் (Push-Pull) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

நவீன வசதிகளாக மேம்படுத்தப்பட்ட இருக்கைகள், அவசரப் பிரேக் அமைப்பு, மற்றும் நவீன வசதிகளுடன் கூடியவை.

இந்த புதிய ரயில்கள் தமிழகத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்துவதோடு, ஏழை எளிய மக்களுக்கான பயணத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரமன் அளித்த பகவத் கீதை(11): குட்டு ஸ்லோகங்கள்

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 11மகாபாரதக் கதைகுட்டு ஸ்லோகங்கள்

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          வியாசர் பாரதக்கதையை எழுத நினைக்கிறார். எப்படி எழுதுவது என அவருக்குத் தெரியவில்லை. அதனால் அவர் பிரம்மனை வேண்டுகிறார். பிரம்மா அவரை விநாயகரை வேண்டுமாறு பணிக்கிறார்.

விநாயகரின் நிபந்தனை

          வியாசரும் விநாயகரை வேண்டி தவமிருக்கிறார். விநாயகர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்ல தான் எழுதுவதாக வாக்களிக்கிறார். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறார். தன் எழுத்தாணி இடைவிடாமல் செயல்படும்படி வியாசர் சுலோகம் சொல்ல வேண்டும் எனக் கூறுகிறார்.

          அதற்கு வியாசர் ஒரு எதிர் நிபந்தனை விதிக்கிறார். அதாவது பொருள் புரிந்து கொண்டே சுலோகங்களை எழுத வேண்டும் என்று சொல்கிறார். தான் அடுத்துவரும் ஸ்லோகங்களை யோசிப்பதற்காக இடையிடையே ஒரு கடினமான பொருளுடைய ஸ்லோகத்தை வியாசர் வைக்கிறார். இவை  குட்டு ஸ்லோகங்கள் எனப்படும். மிகவும் கடினமான சாதாரணமாக எளிதில் அர்த்தம் புரியாத சிலேடைகளுடன் நிறைந்த சுலோகங்கள் இவை. இவற்றை  வியாஸர் அவ்வப்பொழுது சொல்ல ஆரம்பித்தார். விநாயகர் இதன் உண்மைப் பொருள் என்ன என்று யோசிக்க வேண்டி இருந்தது. அதற்குள் வியாஸர் பல சுலோகங்களை மனதில் கவனம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட சுலோகங்களுக்கு குட்டு சுலோகங்கள் என்று பெயர். சுமார் 8000 குட்டு சுலோகங்கள் மஹாபாரதத்தில் உள்ளன.

எடுத்துக்காட்டாக

கேஶவம் பதிதம் த்ருஷ்ட்வா பாண்டவ: ஹர்ஷநிர்வ: ।
ரோதந்தி ஸர்வே கௌரவ: ஹா ஹா கேசவ் கேசவ் ।।

“கேசவரின் (கிருஷ்ணன்) வீழ்ச்சியைக் கண்டு பாண்டவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர், கௌரவர்கள் அனைவரும் ‘ஹா கேசவ்’ ‘ஹா கேசவ்’ என்று அழத் தொடங்கினர்” என்பது முதல் பார்வையில் இதன் பொருள். கிருஷ்ணனின் வீழ்ச்சியைக் கண்டு, பாண்டவர்கள் எப்படி மகிழ்ச்சியில் திளைப்பார்கள், கௌரவர்கள் ஏன் அழத் தொடங்குவார்கள்? மகாபாரதப் போரில் கிருஷ்ணர் போர் புரியவே இல்லை. அப்படியானால் அவர் எப்படி இறந்து விழுவார்?

          இந்த ஸ்லோகம் விநாயகரைக் குழப்புவதற்காக வியாசர் எழுதிய ஸ்லோகம். இதன் அர்த்தம் – கே (அ) – தண்ணீரில், ஶவம் – பிணம், பதிதம் – விழுந்து, த்ருஷ்ட்வா – பார்த்தல் பாண்டவர் – மீன்கள், ஹர்ஷனிர்வா – மகிழ்ச்சியால் நிறைந்தது, ரோதந்தி – அழ ஆரம்பித்தார்கள், ஸர்வே – அனைத்து, கௌரவர்கள் – காகங்கள், ஹா கேசவ் – தண்ணீரில் இறந்த உடல். அதாவது தண்ணீரில் விழுந்து கிடப்பதைக் கண்டு நீர்வாழ் மீன்கள் மகிழ்ச்சியில் திளைத்து, காகங்கள் அனைத்தும் இறந்தது தண்ணீரில் மூழ்கிவிட்டதாக அழ ஆரம்பித்தன.

          வியாசரின் இந்தக் கூற்றில், விநாயகரும் சிந்தனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணர் மகாபாரதத்தில் எங்கும் விழுந்ததில்லை, அவர் விழுந்தாலும், கிருஷ்ணர் விழுந்ததைக் கண்டு பாண்டவர் மகிழ்ச்சியில் குதிப்பது ஏன்? மேலும், எதிரி தரப்பின் தீய கௌரவர்களே! ஹா! கேசவ்! கேசவ்! அவரை விழவைத்துவிட்டு ஏன் அழ வேண்டும்?

          ஆனால் இங்கு கேசவன் என்றால் நீரில் பிணம் (கே (எரிந்த) ஷவம்), துரோணன் என்றால் காகம், கௌரவர் என்றால் குள்ளநரி என்று பொருள். இப்போது வசனத்தின் அர்த்தத்தை விளக்குங்கள். இது மகாபாரதப் போரின் கொடூரத்தை விவரிக்கிறது. எரிக்கவோ, புதைக்கவோ நேரமில்லாத அளவுக்கு ஒரே நாளில் பல சடலங்கள் விழுந்தன. சடலங்கள் தண்ணீரில் வீசப்பட்டன. காக்கைகள் ஆஹா! இப்போது இறந்த உடலில் அமர்ந்து மாதக்கணக்கில் இறைச்சி சாப்பிடலாம் என எண்ணின. ஆனால் மற்றொரு மாமிச உண்ணி குள்ளநரிக்கு நீச்சல் தெரியாது… அதனால் அது தண்ணீரில் விழுகின்ற பிணங்களைப் பார்த்தன. அதனால் சாப்பிட முடியாதே என்ற ஏக்கத்தில் ஐயோ பிணங்கள் போகின்றனவே என ஹா!..ஹா…! தண்ணீரில் சடலம்! தண்ணீரில் சடலம்! எனக் கதறுகின்றன.

அமைச்சரவை ஒப்புதல்; நடைமுறைக்கு வரும் புதிய ஓய்வூதியத் திட்டம்! அரசு அள்ளிக் கொடுக்கிறதா? வாரிச் சுருட்டுகிறதா?

tn secretariat - 2026
#image_title

டிஏபிஎஸ் – உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு பதில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – டிஏபிஎஸ் என பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தை ஜன.3ல் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதை அடுத்து, தமிழக அமைச்சரவை இந்த திட்டத்துக்கு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அடுத்து, புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, வரும் நிதியாண்டு முதல் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டதும் போராட்டத்தை பெரும்பாலான ஆசிரியர்கள் கைவிட்டனர். எனினும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்று போராட்டத்தை தொடர்ந்தனர். 

முன்னதாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரி வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன், திமுக., தனது தேர்தல் வாக்குறுதியாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்த பின், வழக்கம்போல் அதைக் கிடப்பில் போட்டு விட்டது. நான்கே முக்கால் ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வரும்  நிலையில்  மீண்டும் அதே பல்லவியை தூக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய நிலையில் திமுக அரசு மீது அரசு ஊழியர், ஆசிரியர்கள் பெரும் கோபத்திலும் ஏமாற்றத்திலும் இருந்தனர். இதனால் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வந்த அவர்கள், ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தங்கள் வாக்குறுதிக்கு மாறாக இப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த அம்சங்கள் புதிய திட்டத்தில் இருப்பதாக அரசு தெரிவித்தது.  இந்தப் புதிய  ஓய்வூதிய திட்டத்தின் படி…

மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதியை  தமிழக அரசு ஏற்கும்.

50 % உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 % குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்ச ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும். 

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். 

தமிழக முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பை அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அள்ளிக் கொடுப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தாலும் இது தங்களை ஏமாற்றம் செயல் என்று அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் உள்ள குமுறலில் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

தங்களது பணத்தை தங்களுக்கு தராமல் அரசு எடுத்துக்கொண்டு ஏமாற்றுவதாக அவர்கள் கணக்குகளை வெளியிட்டனர். எனினும் ஜாக்டோ ஜியோ நம்பி தங்கள் எதிர்காலத்தை இழந்து விட்டதாக பலரும் ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.

அரசு அள்ளிக் கொடுக்கிறதா? வாரிச் சுருட்டுகிறதா?

இந்நிலையில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் உள்ளக் குமறலை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைதள பதிவு ஒன்று வைரலானது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது…

மாதாந்திர சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வு பெறும் போது பென்ஷன் வழங்கப்படும்.

CPS ஊழியர், பணி ஓய்வு பெறும் போது.. நாம் செலுத்திய 10% அரசு செலுத்திய 10% இதற்கு வட்டி 8% எல்லாம் சேர்த்து, சுமாரா ரூபாய் ஒரு கோடி கையில் வாங்கிக் கொண்டு போகலாம் என்ற நிலை இனி இல்லை.

தமிழ்நாடு அரசு சிறப்பு பென்ஷன் திட்டத்தின் படி, 60 வயதில் ஓய்வு பெற்ற ஒருவர் 61ம் வயதில் இறந்தால் அந்த ஓராண்டில் சுமாராக 6 லட்சம் (மாதம் 1 லட்சம் என வைத்துக் கொண்டால்) பென்ஷன் வாங்கி இருப்பார். பழைய CPS திட்டத்தில் நீடித்திருந்தால் ஒரு கோடி ரூபாய் கையில் வைத்திருக்கலாம்.

உங்களை எல்லாம் ஏமாற்றுவது மிகவும் எளிது.

என் பனிக்காலத்தில் என்னுடைய சம்பளத்தில் 10% மட்டுமே பிடித்தால் அரசு பங்களிப்பு + வட்டியுடன் ஒரு கோடி ரூபாய் வரும். ஒரு கோடி ரூபாய் அரசு வைத்துக் கொண்டு எனக்கு மாதம் ஒரு லட்சம் பென்ஷன் தரும். இது விபூதி அடிக்கும் வேலை.

ஒவ்வொரு ஊழியரும் CPS Account slip ஐ வச்சுக்கிட்டு, இவ்வளவு பணம் சேர்ந்துருக்கு, அவ்வளவு பணம் சேர்ந்துருக்கு… ஓய்வு பெறும் போது லம்ப்பா கிடைக்கும் என்று இனிமேல் உதார் விட முடியாது .

60 ம் வயதில் ஓய்வு பெற்று, பெரும்பாலானவர்கள், அடுத்த 10 ஆண்டுகளில் மண்டையை போட்டு விடுவார்கள். எனவே அரசுக்கு கொழுத்த லாபம் வரும். இது IAS படிச்சவனுக்கு தெரியாதா ?

இப்பவும், எனக்கு CPS போதும்; அரசு தரும் பென்ஷன் வேண்டாம் என்று முடிவு எடுக்க ஒரு ஆப்ஷன் கொடுத்தால் CPS – ஐ தேர்ந்தெடுப்பவன் தான் புத்திசாலி.

இன்று வரை ஊழியர்கள் CPS க்கு கட்டிய சந்தா தொகையை, அப்படியே GPF அக்கவுண்டில் மாற்றி விடுகிறேன். அதற்குரிய வட்டியும் கணக்கில் சேர்த்து விடுகிறேன். அரசாங்கம் போட்ட காண்ட்ரிபியூஷனை அரசாங்கமே எடுத்துக் கொள்ளும். என்று சொல்லி, இதே பென்சன் ஸ்கீம் அறிவித்திருந்தால், சங்கங்கள் ஜெயித்ததாக அர்த்தம்.

இப்போ உங்களுக்கு நேந்திரம் வாழைப்பழத்தை சாலட் போட்டு கொடுத்திருக்காங்க என்று தான் எனக்கு தோன்றுகிறது. உங்க பணத்தை அரசாங்கம் தன் கணக்குக்கு மாற்றி விடும். அதிலிருந்து மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து போன்றவைக்கு அப்பணம் செலவிடப்படும்.

100% ரிசல்ட், ஆவரேஜ் மார்க் பிக்கப், இல்லம் தேடி கல்வி, திறன்… இப்படி புதுசு புதுசா 10 ஸ்கீம் கொண்டு வந்து பிரஷர் ஏத்தினம்னா சர்வீஸ்லயே பாதிப்பேர் செத்துப் போயிருவான். பென்ஷன் தரத் தேவை இல்லை. நேரடியா ஃபேமிலி பென்ஷனை கொடுத்து விடலாம். அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம்.

*எலிப் பொறியில் மசால் வடை வைச்சாச்சு. ஆபத்தை அறியாமல் எலி வந்து கடிச்சிருச்சு. இனி ஊர்ல இருக்குறவன் எல்லாம் ‘இவருக்கென்னப்பா பென்ஷன் வந்துருச்சு’ என்று வயிறு எரிஞ்சு பேசுவானுங்க. வரவிருந்த ஒரு கோடியை விட்டுட்டு, கடைசியா வாங்குன Basic pay ல, பாதியை அதாவது 50,000 ஐ பென்ஷன்கற பெயரில் வாங்கனும். பணி ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் உயிரோடு இருந்தால் அசல் கிடைக்கும்.

ரூபாய் ஒரு கோடியை வங்கியில் டெபாசிட் செய்தாலே ஆண்டுக்கு 9 லட்சம் வருமானம். வாங்க போற பென்ஷன் என்பது வட்டி மட்டுமே. அசல்?….

அரசு ஊழியரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு, அதற்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் வட்டி அரசு தரும். அந்த அரசு ஊழியர் இறந்த பிறகு அவருடைய மனைவிக்கு அதில் 60% தரும். அவருடைய மனைவியும் இறந்த பிறகு அரசு அப்படியே அந்த ஒரு கோடி ரூபாயை ஆட்டைய போட்டுவிடும். அரசு ஊழியரின் மனைவி அரசு ஊழியருக்கு முன்பே இறந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம்.

இதுதான் புதிய பென்சன் திட்டத்தின் சிறப்பு திருநெல்வேலி அல்வா. இதற்காகத்தான், அரசுக்கு ஆதரவாக, அரசின் வருமானத்தை உயர்த்த, சங்கங்கள் இதுநாள் வரை நடத்திய நாடகம். இப்ப அதிருப்தியில் இருந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு ஆதரவாக திருப்பியதற்கான சன்மானத்தோடு, நன்றி அறிவிப்பு கூட்டங்கள் இனிதே நடக்கும்.

சங்கங்களை நம்பிய ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் இன்று சவப்பெட்டியில் அடைத்த தினம். அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் இன்றைய தினம் கருப்பு நாள்.

பொங்கலுக்கு நெல்லை பக்கம் வாறீயளா? பெசல் ட்ரெய்ன் விடுதாங்க!

railway news - 2026
#image_title

மஹர சங்கராந்தி தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக ஐந்து வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .

திருநெல்வேலி தாம்பரம் / செங்கல்பட்டு இன்டர்சிட்டி பகல் நேர சிறப்பு ரயில்

வழி : கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் திருமங்கலம் மதுரை சோழவந்தான் கொடைக்கானல் ரோடு திண்டுக்கல் மணப்பாறை திருச்சி ஸ்ரீரங்கம் அரியலூர் விருதாச்சலம் விழுப்புரம் மேல்மருவத்தூர் செங்கல்பட்டு

திருநெல்வேலி தாம்பரம் || ஜனவரி 13 & 20

திருநெல்வேலி செங்கல்பட்டு || ஜனவரி 14

2 நாட்கள் தாம்பரம் வரையிலும் // 1 நாள் செங்கல்பட்டு வரையிலும் இயக்கப்படுகிறது

போத்தனூர் சென்னை சென்ட்ரல் இடையே ஏசி சிறப்பு ரயில் கூடுதலாக ஜனவரி 8 / 9 தேதிகளில் இயக்கப்படுகிறது

திருநெல்வேலி தாம்பரம் இடையே சிறப்பு ரயில் கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி திருவெறும்பூர் தஞ்சாவூர் பாபநாசம் கும்பகோணம் மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் பரங்கிப்பேட்டை திருப்பாதிரிப்புலியூர் பண்ருட்டி விழுப்புரம் மேல்மருவத்தூர் செங்கல்பட்டு || ஜனவரி 12 / 19 = 2 நாள்

சென்னை சென்ட்ரல் — தூத்துக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

வழி : பெரம்பூர் திருவள்ளூர் அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் நாமக்கல் கரூர் திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி தூத்துக்குடி மேலூர்

இந்த வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . இதற்கான முன்பதிவுகள் மிக விரைவில் துவங்கப்படும்

image - 2026