Home Blog Page 234

மத்திய அரசின் வீடு திட்டத்தை தமிழக அரசு எவ்வளவு மோசமாகக் கையாண்டது எனக் காட்டுவதே மதுரை சின்னப்பிள்ளை வீடியோ!

BJP Narayanan Thiruppathi - 2026
#image_title

மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தினை தமிழக அரசு எவ்வளவு மோசமாக கையாண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதே சின்னப்பிள்ளை வெளியிட்ட வீடியோ. அதை பெருமையாக முதல்வர் ஸ்டாலின் சொல்வது அவரையே குற்றம் சொல்லிக் கொள்வது போல் ஆகும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்:

“பத்ம ஸ்ரீ சின்ன பிள்ளை அவர்கள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இது வரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன். “கவலை வேண்டாம்”! ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவருக்குப் புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும்” :- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவதுவது மாநில அரசு தான். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதும் மாநில அரசு தான். அதன்படி பத்ம ஸ்ரீ சின்னப்பிள்ளை அவர்களின் கவலைக்கு காரணம் உங்கள் அரசு தான் முதல்வர் அவர்களே! அவரின் வேதனைக்கு காரணம் உங்கள் அரசின் சோதனை தான் என்பதை உணருங்கள். இப்போதைய உங்கள் அறிவிப்பையாவது முறையாக செயல்படுத்த முனையுங்கள். தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? – நாராயணன் திருப்பதி.

முன்னதாக, மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில், “இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.

மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையறிந்த நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சின்னப்பிள்ளை அவர்களுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ‘மகளிர் மேம்பாடு’ எனும் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று உதயநிதி பதிவிட்டுள்ளார்.

ஆனால், மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்வது குறித்தும், திட்டத்தை பயனாளிகளுக்கு சரிவர சென்றடையாமல் இருப்பது குறித்தும் மாநில அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

திமுக., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி! காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டி!

stalin press meet - 2026

2024 மக்களவைத் தேர்தலுக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தது. இதன் விவரம் :

திமுக – 21
காங்கிரஸ் – 9 + புதுச்சேரி
விசிக – 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ – 2
சிபிஎம் – 2
மதிமுக -1
இயூமுலீ – 1 (ராமநாதபுரம்)
கொமதேக – 1 (நாமக்கல்)

தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு முடிவடைந்த நிலையில் இருந்தது. விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ ஆகியவை தலா இரண்டு தொகுதிகள் பெற்ற நிலையில், மதிமுக., முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை தலா ஒரு இடம் பெற்ற நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும் கூட்டணியில் பேச்சு வார்த்தை நடத்தியது.

இந்நிலையில் இன்று மதியம், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் இந்தத் தேர்தலில் திமுக., கூட்டணிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும், போட்டியிடவில்லை என்றும், அடுத்த ஆண்டு காலியாகும் மாநிலங்களவை இடம் ஒன்று தருவதாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானகக் கூறினார்.

இதனிடையே இன்று மாலை காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் திமுக., தொகுதிப் பங்கீட்டுக் குழுவை சந்தித்தனர். அதன் படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக., தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கே.சி.வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் இருந்தனர். காங்கிரஸ் கேட்கும் மொத்த தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதன் இறுதியில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து திமுக., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட தமிழகம் புதுச்சேரியில் பாதிக்குப் பாதியாக 21 இடங்களில் மட்டுமே திமுக., போட்டியிடுகிறது.

போதைக் கடத்தல் ஜாபர் சாதிக் கைது! நிதியுதவிகள் குறித்து தீவிர விசாரணை!

drug mafia jaffar sadiq - 2026

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தேடலில் இருந்து தலைமறைவாக இருந்து வந்த திமுக., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் வசித்து வந்த ஜாபர் சாதிக் (36). திமுக.,வில் னெ்னை மேற்கு மாவட்ட அயலக துணை அமைப்பாளராக இருந்தார். 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக, ஜாபர் சாதிக்கை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் திடீரென தலைமறைவானார். இந்நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் தடுக்க லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை மேற்கொண்ட மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். மேலும், ஜாபர் சாதிக் போலி பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில், இரண்டு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது. ராஜஸ்தானில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பிற்பகல் 2 மணிக்கு இது குறித்து விளக்க செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

சர்வதேச போதை கடத்தல் மன்னனும் திமுக., முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் இன்றுகாலை கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரது கைது குறித்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் வெளியிட்ட தகவல்கள்…

ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமான தொழிலில் முதலீடு செய்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜாபர் சாதிக் மீது 2019-ல் மும்பை சுங்கத்துறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு பெரும் புள்ளிகளுடன் தொடர்புள்ளது. ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார்.

உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளார். ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மெத்தம்பெட்டமைன் தயாரிப்பின் மூலப்பொருளான சூடோபெட்ரைனை கடத்தினால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை உறுதி. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார் அவர்.

முன்னதாக, தமிழக பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம் – என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

12 ஆண்டுக்குப் பின் வந்த சங்கு; திருக்கழுக் குன்றத்தில் குவிந்த பக்தர்கள்!

thirukkazhukundram sangu - 2026

12 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கையாக வரும் சங்கு தென்பட்டதை அடுத்து, அதை தரிசிக்க அன்பர்கள் ஏராளமானோர் திருக்கழுக்குன்றத்தில் குவிந்தனர்.

செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கழுக்குன்றம், அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பிகா ஸமேத ஸ்ரீ வேதகிரீஸ்வர ஸ்வாமி ஆலயத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தகரையில் இயற்கையான முறையில் தோன்றும் சங்கை கொண்டுதான் வேதாச்சலபதிக்கு சங்குகாபிஷேகம் நடத்துவார்கள்.

மகரிஷி மார்கண்டேயர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாத நிலையில், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி பெருமானை வணங்கினார். அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியது. அதை பெருமானே தனது வழிபாட்டுக்கு வழங்கியதாக எண்ணி மகரிஷியும் வழிபட்டார். இதனால் இந்தக் குளத்துக்கு சங்கு தீர்த்தக் குளம் என பெயர் ஏற்பட்டது.

இதுவரை மார்க்கண்டேயர் காலம் தொட்டு இந்த சங்கு பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறது அவ்வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பெடுத்த சங்கு 2024 ஆம் ஆண்டு பனிரெண்டு ஆண்டுகள் முடிய நேற்று சங்கு தீர்த்தகரையில் தென்பட்டுள்ளது. இந்த சங்கு சுத்தம் செய்யப்பட்டு பார்வையாளர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும். பின்னர் பழைய சங்குகளுடன் இணைக்கப்பட்டு வேதாசலபதியின் பிரத்யேக சங்காபிஷேக விழாவில் பயன்படுத்தப்படும்

திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்தக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும். இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும். இதனைக் கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.

சங்கு தீர்த்தக் குளத்தில் கடந்த 2011ம் ஆண்டு செப்.1 அன்று, புதிய சங்கு வெளியே வந்தது. இதன் பின்னர் 12 வருடங்கள் காத்திருந்து, தற்போது சங்கு தீர்த்தக் குளத்தில் புதிய சங்கு வரும் என பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரையில் ஒதுங்கியது. இதனைக் கண்ட பக்தர்கள் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். .

இந்நிலையில், புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அதனைக் காணக் குவிந்தனர். சங்கைப் பார்த்து பக்தியுடன் வழிபட்டனர். பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத் தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்கு தீர்த்தக் குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இதுவரை 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

போராட்டங்களின் அநியாயம்!

1713225 biharprotest - 2026

தெலுங்கில் பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்

போராட்டங்கள், இயக்கங்கள், எதிர்ப்புகள் நடத்துவது என்றால் உயர்ந்த நலனுக்காகச் செய்வார்கள் என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் உள்ளது. ஆனால் அவற்றை சுயநலத்திற்காக பயன்படுத்துபவர்கள் இருப்பார்கள் என்றோ அதன் நிர்வாகத்தில் தேசத்திற்கு துரோகம் செய்வதற்கும் பின்வாங்க மாட்டரகள் என்றோ நிறைய பேருக்குத் தெரியாது.

எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற அதிகார தாகம் கொண்டவர்கள் இப்படிப்பட்ட போராட்டங்களுக்குத் திட்டம் தீட்டுவார்கள். இதில் வியப்பு எற்படுத்துவது என்னவென்றால், போராட்டம் நடத்துவதையே தொழிலாகக் கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளார்கள் என்பது. பாதிக்கப்பட்ட ஏழைகளாகவும் தொழிலாளர்களாகவும் தம்மைக் கூறிக் கொள்ளும் இவர்கள் செல்வம் நிறைந்தவர்கள், போராட்டத்தையே தொழிலாகக் கொண்ட நிபுணர்கள். இவர்களுக்கு அயல்நாட்டு நிதியுதவி, பதவி இரை, அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு போன்றவை மிக அதிக அளவில் இருக்கிறது. குழப்பம் ஏற்படுத்துவதற்குத் தேவையான நவீன ஆயுதங்கள், போராட்ட முகாம்களில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்குப் பல மாதங்களுக்குப் போதுமான உணவுப்பொருட்கள்,  கேளிக்கைத் தேவைகளுக்கு அளவுக்கதிகமான ஏற்பாடுகள் போன்றவை செய்யப்படுகின்றன. 

அதாவது இது ஒரு தொழில். இதற்கு மேனேஜ்மென்ட், திட்டக்குழு, நிபுணர்கள் முதலான வேலை வாய்ப்புகளும் அமைப்புகளும் உள்ளன. இவற்றைத் தூண்டுவதும் மேய்ப்பதும் அரசியல் கட்சிகள்.  

எடுத்துக்காட்டாக, சில ஆண்டுகள் முன்னர் புதிதாகப் பிரிந்த மாநிலங்களுக்கு தனிப்பட்ட அந்தஸ்து வேண்டும் என்று மாநிலக் கட்சிகள் போராடின. அந்தக் கூச்சலில் அப்போதிருந்த அரசாங்கங்களை இறக்கிவிட்டு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தார்கள். வந்த பின் அந்த தனிப்பட்ட அந்தஸ்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. அதோடு போராட்டத்தால் உற்சாகமடைந்து ஓட்டு போட்ட மக்கள் ‘பிரத்தியேக ஹோதா’ என்னவாயிற்று என்று கேள்வி கேட்கக் கூட இல்லை அதாவது மக்கள் உடனடியாக மறந்து விடுகிறார்கள். போராடக்காரர்கள் மாயமாக மறைந்து விடுகிறார்கள். உண்மையில் அத்தகைய தனிப்பட்ட அந்தஸ்து என்பது அரசாங்கச் சட்டத்தின்படி நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று மாநிலத்தின் இரு கட்சிகளுக்கும் தெரியும். அது தெரியாத பொதுமக்களின் அறியாமையை ஊதி விட்டு மீண்டும் அணைத்து விடும் தனித் திறமை கட்சித் தலைவர்களிடம் உள்ளது.

அரசாங்க சொத்துக்களைப் பிடுங்கி அரசாங்க நிலங்களை அநியாயமாக ஆக்கிரமித்தவர்கள் உள்ளனர். அதிலும் நம் தேசமக்கள் அல்லாத அக்கிரம ஊடுறுவிகள் மிகப் பலர். உண்மையில் அரசாங்க நிலங்களில் அவர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு கொடுப்பதும் அரசியல் கட்சிகளே. அவர்கள் அனைவரையும் தம் ஒட்டு வங்கிகளாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக போலி அடையாள அட்டைகளை ஏற்பாடு செய்கிறார்கள். அவர்கள் தம் உதவியை நம்பி இருப்பதால் தம் விருப்பத்திற்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு கொடிய ஆயுதங்களைக் கொடுத்து பொதுச்சொத்துக்கு தீங்கிழைக்கும் குற்றவாளிகளாக மாற்றி அக்கிரமங்களுக்கும் தீய நடவடிக்கைகளுக்கும் மையமாக அந்த இடங்களை உருவாக்குகிறார்கள்.

எப்போதாவது ஏதாவது அரசாங்கம் அந்த அரசாங்க நிலங்களைத் திரும்ப பெறுவதற்கு முயற்சித்தாலும் அக்கிரம ஊடுருவவாதிகளை அடையாளம் கண்டு அங்கிருந்து விரட்டி விட எண்ணினாலும் அக்கிரமமாக கட்டிய கட்டடங்களை அகற்றி, நியாயத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சித்தாலும் உடனே குற்றவாளிகளான அவர்கள் கும்பலாக எதிர்ப்புக் குரல் கொடுத்து போராட்டம் நடத்துகிறார்கள். அரசியல்வாதிகளால் இது மதத்தின் மீதான தாக்குதலாக, ஏழைகளின் மீதான வன்முறையாக சித்திரிக்கப்படுகிறது.

உண்மை தெரிந்தாலும் ஊடகங்கள் உண்மையைக் கூறமாட்டா. அந்த அக்கிரமக்கார்ர்களுக்கு துணை நின்று அரசுக்கு எதிராக செய்தியும் விளக்கமும் எழுதுவார்கள். காட்சிகளை சித்திரித்துக் காட்டுவார்கள்.

இதில் விந்தை என்னவென்றால் இந்த தேசத்தில் பாமரர்களும் சரி படித்தவர்களும் சரி  விவேகத்தோடு ஆராய்வதில்லை. பரபரப்புச் செய்தியின் வேகத்தில் உண்மைகளை கவனிக்காமல் ஆவேசப்படுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த ஆவேசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரியணை ஏறவேண்டும் என்று ஆசைப்படும் அரசியல்வாதிகளின் முயற்சி பலனளித்து விடும்.

இத்தகைய வன்முறைகளால் நஷ்டப்படுவது தேசம் தான் என்ற விஷயம் எந்தத்  தலைவருக்கும் எந்தக் குடிமகனுக்கும் புரிவதில்லை. சட்டப்படி போராட்டத்தை அடக்க முயற்சித்தால் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியது என்று கோஷங்கள் எழும். அவற்றை பிரசுரம் செய்வதற்கு பத்திரிக்கைகள் தயாராக இருக்கும்.

சில எதிர்ப்புகள் செயற்கையானவை என்று தெரிந்தாலும் அவர்களுடைய கோரிக்கைகள் அர்த்தமற்றவை என்று தெளிவாகத் தெரிந்தாலும் அரசாட்சிக்கு எதிராக வீணாகப் பல தடைகளை மாதக்கணக்கில் உண்டாக்கினாலும் நாட்டு முன்னேற்றத்தை அழித்தாலும் யாரும் எதுவும் செய்ய இயலாத நிலைமை.

இதில் கொடுமை என்னவென்றால், இந்தப் போராட்டங்களில் ஈடுபடுபவர் எல்லோருமே,  எந்த பெயரைச் சொல்லி போராட்டம் நடத்தப்படுகிறதோ, அதோடு தொடர்பில்லாத குற்றவாளிகளும் தேச விரோதிகளும் மத வெறியர்களுமே.

இந்த நிலையை ஏற்படுத்தும் கட்சிகள், வெளிநாட்டுக் குற்றவாளிகளோடு கை கோர்த்து,  அவர்கள் அளிக்கும் பணத்தை அக்கிர வழிகளில் பெற்று இத்தகைய போராட்டங்களுக்காக  செலவிடுகிறார்கள். 

முன்னேற்றப் பாதையில் செல்லும் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் வெளிநாட்டு அமைப்புகளோடும் பகை நாடுகளோடும் கை கோர்ப்பதற்குக் கூட பின்வாங்காத அதிகார வெறி பிரித்து ஆடும் அரசியல்வாதிகளை அடக்குவதற்கு வழியில்லாதபடி திடமான சதியைத் தீட்டுகிறார்கள். 

சமூக ஊடகங்களின் புண்ணியமா என்று சில உண்மைகள் தெரிய வருகின்றன. சில ஆய்வாளர்களும், நாட்டு முன்னேற்றத்தை விரும்பும் தேசிய வாதிகளும் உண்மைகளை வெளியிடுகிறார்கள்.

இந்தப் பின்னணியில் மக்களிடம் புரிதல் வளர வேண்டும். தேர்தல் நல்ல விதத்தில் குற்றம் குறைகள் இன்றி, கள்ள ஓட்டு விழாமல், வாக்காளர்களின் பெயர்கள் காணாமல் போகாமல், வன்முறையின்றி, ஒவ்வொருவரும் வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொண்டால் ஜனநாயகம் நல்ல பதிலை அளிக்கும்.

மக்களிடம் அத்தகு சைதன்ய விழிப்பை, உள்ளத் தூய்மை கொண்ட தேச பக்தர்கள் ஏற்படுத்த வேண்டும்.

(தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ் மார்ச், 2024)

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (38): பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய:

samskrita nyaya - 2026

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன் 

பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய: – முற்பகல் நிழல், பிற்பகல் நிழல்.

பூர்வாஹ்னம் – சூரியோதயத்திலிருந்து ப௧ல் 12 மணி வரை. அபராஹ்னம் – பகல் 12 மணியிலிருந்து மாலை வரை
சாயா – நிழல்

சூரியன் உதயமான பின் சூரிய கிரணங்கள் எந்த கோணத்தில் விழுகின்றன எனபதைப் பொறுத்து நம் நிழல் பூமியின் மேல் விழுகிறது. ‘பூர்வாஹ்னம்’ எனப்படும் முற்பகலில் நம் நிழல் மிகவும் நீளமாக விழுகிறது. நேரம் ஆக ஆகக் குறைந்து, சூரிய பகவான் தலைக்கு மேல் வரும்போது (அபிஜித் லகனம் பகல் 12 மணி) நிழல் முடிவடைகிறது. அப்போதிலிருந்து நிழல் சிறிது சிறிதாக வளர்ந்து மாலையில் மிகவும் பெரிதாகத் தெரிகிறது. இது அபராஹ்ன சாயை – பிற்பகல் நிழல்.

கவிஞர்கள் இந்த இரண்டு நிழல்களையும் ஆராய்ந்து பார்த்துக் கூறியது தான் இந்த நியாயம். நட்பும் தொடர்பும் சிறிது சிறிதாக வளர்ந்து வர வேண்டும் என்ற செய்தியை இந்த இயற்கை நியதியிலிருந்து நாம் அறிய வேண்டும்.

நல்லவர்களோடு கொண்ட நட்பு சிறிது சிறிதாக வளர்ந்து நிலைத்து நிற்கும் என்பது சான்றோர் கூற்று. மனிதனுக்கு ஏற்படும் அறிமுகங்கள் உயிர்த் தோழமையாக மாற வேண்டும் என்பது கருத்து. இதனை மத்தியான நிழலோடு ஒப்பிடுகிறது இந்த நியாயம். சுயநலத்தோடு ஆரம்பமாகும் நட்புகள் ஆர்பாட்டமாகத் தொடங்கி, குறைந்து கொண்டே  போகும்.

புகழ் பெற்ற சமஸ்கிருத கவிஞர் ப்ரத்ருஹரி, சிநேகத்தை நிழலோடு ஒப்பிட்டு இவ்வாறு கூறுகிறார்.

ஆரம்ப குரவீ க்ஷயிணீ க்ரமேண
லக்வீ புராவ்ருத்திமுபைதி பஸ்சாத் |
தினஸ்ய பூர்வார்த்த பரார்த்த பின்னா
சாயேவ மைத்ரி கல சஜ்ஜனானாம் ||

பொருள் – காலையில் விழும் நிழலைப் போல கீழானவர்களின் சிநேகம், தொடக்கத்தில் பெரியதாகத் தோன்றி, சிறிது சிறிதாகக் குறைந்து விடும். நல்லவர்களின் சிநேகம் அவ்வாறின்றி முதலில் சிறியதாகத் தொடங்கி, மத்தியான நிழலைப் போல சிறிது சிறிதாகப் பெரிதாக வளரும்.

உயர்ந்த நோக்கமும் சுயநலமற்ற குணமும் உடையவர்களிடம் நட்பு கொள்ள வேண்டும்  என்பது இந்த நியாயம் அளிக்கும் செய்தி. சுயநலத்திற்காகச் செய்யும் சிநேகம் நீண்ட நாள் நிற்காது. நல்ல நண்பர்களுக்கு இருக்க வேண்டிய குனங்களை பர்த்ருஹரி இவ்வாறு விவரிக்கிறார்.

பாபான்னிவாரயிதி யோஜயதே ஹிதாய
குஹ்யம் நிகூஹதி குணான் பிரகடீகரோதி |
ஆபத்கதஞ்ச ந ஜஹாதி ததாதி காலே
சந்மித்ர லக்ஷணமிதம் ப்ரவதந்தி ஸந்த: ||

பொருள் – தீமை செய்யாமல் நண்பனைத் தடுப்பது, நல்ல செயல்கள் செய்யும்படி நண்பனை உற்சாகப்படுத்துவது, வெளியில் சொல்லக் கூடாத விஷயங்களை ரகசியமாக வைப்பது, நண்பனிடமுள்ள நல்ல குணங்களைப் புகழ்ந்து எல்லோருக்கும் சொல்வது. ஆபத்தில் நண்பனை விட்டு விலகாமல் அருகில் இருப்பது, தேவைப்படும் போது நண்பனுக்கு உதவுவது.

இப்படிப்பட்ட குணங்களை பழக்கப்படுத்திக் கொள்வதற்கும் இப்படிப்பட்ட நண்பர்களை முயற்சித்து அடைவதற்கும் இந்த ஸ்லோகம் உற்சாகமளிக்கிறது.

இந்த நியாயத்தில் ‘பூர்வாஹ்ன சாயை’ போல ஆடம்பரமாகத் தொடங்கும் நட்புக்கு உதாரணமாக மகாபாரதத்தில் கர்ணன்- துரியோதனன் நட்பை ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. மகாபாரதம் ஆதிபர்வம் 135 வது அத்தியாயத்தில் கர்ணனை அறிமுகப்படுத்தும் கட்டத்தில், அவர்கள் இருவரின் நட்பு முதல் பார்வையிலியே ஆரம்பாமாகி பூர்வாஹ்ன சாயை நியாயத்தில் கூறப்படும் சிநேகம் போல எவ்வாறு மாறியது என்பது விவரிக்கப்படுகிறது.

அரச குமாரர்கள் அஸ்திரப் பயிற்சியைக் காட்டும் தருணம். அர்ஜுனன் மிகச் சிறப்பாக கத்தி. வில், கதை முதலான ஆயுதங்களால் பல வியூஹங்களைச் செய்து காட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினான். குறி பார்த்தான். துரியோதனனுக்கு பயம் ஏற்பட்டது. அவன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது. அர்ஜுனனின் மேல் அசூயை ஏற்பட்டது. அதே நேரம் களத்தில் இறங்கினான் கர்ணன். எல்லாப் புறமும் கண்களைத் திருப்பி, துரோணாசாரியாரையும் கிருபாசாரியாரையும் அலட்சியமாக நோக்கி, வணக்கம் தெரிவித்தான். (ப்ரணாமம் க்ருபயோ: நாத்யத்ருதி மிவாகரோத்). மேகம் போல் கம்பீரமான குரலில் முன் எப்போதும் பார்த்திராத அர்ஜுனனை உத்தேசித்து, நீ செய்து காட்டிய வித்தைகளை விடச் சிறப்பான வித்தைகளை நான் செய்வேன் என்று கர்ஜனை செய்தான். அரசனல்லாதவனோடு நான் போட்டியிடமாட்டேன் என்றான் அர்ஜுனன். அப்போது துரியோதனின் துர்புத்தி விழித்தது. அர்ஜுனனுக்குப் போட்டியாக வரக் கூடியவனை  தேடிக்கொண்டிருந்த துரியோதனனுக்கு கர்ணன் கிடைத்தான். அந்த சுயநலத்தால் கர்ணனை அங்க ராஜ்ஜியத்திற்கு அதிபதியாக அபிஷேகம் செய்தான். ‘பூர்வாஹ்ன சாயை’  போல அவர்களின் நட்பு அட்டகாசமாகத் தொடங்கியது.

துரியோதனன் மகிழ்ச்சியோடு கர்ணனிடம், ‘அத்யந்தம் சக்யமிச்சாமி’ என்றான். நல்ல நண்பனுக்கு இருக்கவேண்டிய ஒரு நல்ல குணம் கூட இல்லாதவனான கர்ணன் தனக்கிருக்கும் குறைகளை எப்போதுமே துரியோதனனிடம் வெளிப்படுத்தவில்லை. திரௌபதியின் துகிலுரிப்பு நேரத்தில் அது தவறு என்று நண்பனுக்கு எடுத்துக் கூறவில்லை. முக்கியமான நேரத்தில் பீஷ்மரோடு தகராறு செய்து தன் அகம்பாவத்தால் அநாவசியமாகக் காலத்தை வீணடித்தான் கர்ணன். குந்திக்குக் கொடுத்த வாக்கை ரகசியமாக வைத்திருந்தான். அதன் பின் அவர்களின் நட்பால் ஏற்பட்ட கொடூரத்தை நாமறிவோம். அவர்களுடைய நட்பு சுயநலத்தால் ஏற்பட்டது.

சுயநலமான நட்புக்கு மற்றுமொரு உதாரணம் பிரிட்டிஷ் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தோடு செய்த கபட நட்பு. அந்த நட்பு முஸ்லீம் சமூகத்திற்கு நன்மை செய்ய வில்லை. பாரத தேசத்திடம் பகை கொள்ளாமலிருந்தால், ஹிந்துகளைக் கொன்று கோவில்களை இடித்து துவம்சம் செய்யாமல் இருந்தால், இந்தியர்களுக்கு இன்றைய பாகிஸ்தான் ஒரு சிறந்த யாத்திரைத் தலமாக இருந்திருக்கும். பிரிட்டிஷாரின் பேச்சைக் கேட்டு தேசத்தை துண்டு துண்டாக்கி, இன்று பல இன்னல்களைச் சந்திக்கிறது பாகிஸ்தான். கூடா நட்பால் வந்த விளைவு இது.

கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையேயான சிநேகம் உயர்ந்த லட்சியத்தோடு கூடியது. தர்மத்தை ரட்சிப்பதற்காக ஏற்பட்டது. ‘அபராஹ்ன சாயை’ நியாயத்திகு இது எடுத்துக்காட்டு.  தான் தேர்ந்தெடுத்த நண்பனின் மூலம் வேதாந்த ஞானம் கிடைக்கப் பெற்றான் அர்ஜுனன்.

‘க்ருண்வந்தோ விஸ்மார்யம்’ என்ற உயர்ந்த எண்ணத்தோடு பாரத தேசம் உலகில் பல தேசங்களோடு நட்பு கொண்டுள்ளது. முக்கியமாக அகதிகளாக நம் தேசத்திற்கு வந்த யூதர்களுக்கு மிகவும் கௌரவத்தோடு அடைக்கலம் கொடுத்தது. இஸ்ரேல் தேசம் ஏற்பட்டபின் அவர்கள் வெளியிட்ட நூல்களில் அவர்களை எத்தகு உயர்ந்த நட்போடு பாரத தேசம் ஆதரித்தது என்பதை குறித்துள்ளார்கள். பாரத்-இஸ்ரேல் நட்பு ‘அபராஹ்ன சாயை’ நியாயத்திற்கு எடுத்துகாட்டாக நிகழ்காலத்தில் தொடர்கிறது.

தேசத்தை விரிவுபடுத்தும் ஆசையில் நட்பு பாராட்டும் வழக்கம் மொண்ட சீனாவோடு கை கோர்த்த தேசங்களின் வாழ்வு எவ்வாறு கெட்டது என்பதை ஸ்ரீலங்கா, மாலத்தீவுகள், திபெத், பாகிஸ்தான் போன்ற தேசங்களின் வரலாற்றைப் பார்த்தால் புரிந்து போகும். இது ‘பூர்வாஹ்ன சாயை’ நியாயத்திற்கு எடுத்துக்காட்டு.

‘இந்தியாவுடனான நட்பு நம்பிக்கைக்கும் உலகளாவிய வளர்சசிக்குமான அடையாளம்’. சௌதி அரேபியா இந்த உண்மையை உணர்ந்து தீவிரவாத பாகிஸ்தானோடு கொண்ட சிநேகத்தை விட்டு ‘Modified’ பாரதத்தோடு நட்பு கொண்டுள்ளது.

(மேலும் வரும்)

ஐயா வைகுண்டர் அவதார நிகழ்வில் ஆளுநர் ரவி பேசியதும், பின்னணியும்!

governor ravi in ayya vaikundar function - 2026

தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி, ஐயா வைகுண்டரின் அவதார தினத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதில், ஐயா வைகுண்டர், நாராயணரின் அவதாரம் என்று அவரது வழி வந்தவர்கள் கருதுகிறார்கள் என்றும், அவர் ஆங்கிலேய கிறிஸ்துவ மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதில் முக்கியப் பங்காற்றியதாகவும் கூறினார். இதை வழக்கம் போல் சர்ச்சை ஆக்கிய தமிழக ஊடகங்கள், சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகள் சொன்ன மறுப்பை மட்டும் பிரதானமாக பேசி வருகின்றன. இந்நிலையில், இதன் உண்மை என்ன பின்னணி என்ன என்பது குறித்து சமூகத் தளங்களில் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் பா.இந்துவன் எழுதிய கருத்து இங்கே…


ஆளுநர் ரவி அவர்கள், மகான் அய்யா வைகுண்டர் அவதார தினத்தின் 192வது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்வில், சனாதன தர்மத்தை அதை அழிக்க சதி செய்தவர்களிடமிருந்து பாதுகாப்பதில் அய்யா வைகுண்டர் வழங்கிய ஆழமான பங்களிப்பை நினைவுகூர்ந்தார். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தார். அவர் கொண்டிருந்த பார்வை, அனைவருக்கும் சமமான நலத்திட்ட அணுகலையும் திட்டங்கள் அனைவருக்குமானது என ஒருவரைக் கூட விட்டு விடாமல் உறுதிப்படுத்தும் #பிரதமர்மோடி தலைமையிலான அனைவரையும் உள்ளடக்கிய பாரதத்தில் உயிர்ப்புடன் விளங்கி #சப்காசாத்சப்காவிகாஸ் என்ற அனைவருடனும் அனைவரின் நலனுக்காகவும் என்ற உள்ளடக்கிய வளர்ச்சி மாடலில் பிரதிபலிக்கிறது.


தமிழகத்தின் மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் “அய்யா வைகுண்டரைப்” பற்றி கூறியிருப்பது 100 சதவீதம் உண்மையாகும். அய்யா வைகுண்டர் நாரயணணின் அவதாரம், சனாதன தர்மத்துக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இராமர், கிருஷ்ணர், வள்ளலார், அய்யா வைகுண்டர் போன்றோர் அவதாரங்களை எடுத்துள்ளனர் என்று கூறியது அய்யாவழி மக்களின் ஆண்டாண்டுகால நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. அகிலத்திரட்டு அம்மானை கூறுவது போல அய்யாவழி மக்கள் காலம் காலமாக விஷ்ணுவின் அவதாரமாகவே அய்யா வைகுண்டரைக் காண்கின்றனர். அய்யா வைகுண்டரை சனாதன எதிரியாக முன்னிறுத்த நினைப்பது வரலாற்றுத் திரிபே ஆகும்.

“ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க பூரணமாய் ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் நாவினில் பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன்”

  • அய்யா வைகுண்டர் (அகிலம்)

இப்படி மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக தூது சென்ற கிருஷ்ணனும் நானே, நாராயணனும் நானே, மாயோனும் நானே என்று கூறும் அய்யா வைகுண்டர் இராமர் உட்பட விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களைப் பற்றியும் விரிவாக அகிலத்தில் குறிப்பிடுகிறார். இராம அவதாரம் பற்றி குறிப்பிடுகையில் இராவணனை போகிற போக்கில் அரக்கன் என்று கூறி மிதித்துவிட்டேச் செல்கிறார். அதாவது,

“பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும்
நாணமது கெட்ட அரக்கா உன் நல்ல பத்து தலை இழந்து சேனைத்தளம் இழந்து சிரசு இழந்து வாழ்விழந்து வானரங்கள் வந்து உன்றன் வையகத்தை சுட்டழித்து உன் சடலம் எல்லாம் உழுத்துப் புழுபுழுத்து சஞ்சலப்பட்டு சண்டாளா நீ மடிய வேண்டுவேன் தவசு விமலன்தனை நோக்கி”

அகிலத்திரட்டு அம்மானை.

“ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாம்” என்று கூறும் அய்யா வைகுண்டர், அக்காலத்தின் கொடுங்கோல் ஆட்சியாளர்களை கலிநீசன் என்று குறிப்பிட்டு மிஷநரிகளை “வெண்நீசர்கள்” என்று குறிப்பிடுகிறார். இவரை இந்துத்துவ்வாதியாக காணாமல் சனாதன எதிரியாக எவ்வாறு காண முடியும்???

“ஒரு வேதம் தொப்பி உலகமெல்லாம் போடு என்பான், மற்றொரு வேதம் சிலுவை வையமெல்லாம் போடு என்பான்”

என்று மதம் மாற்ற வந்தவர்களை நேரடியாகவேச் சாடியுள்ளார். இதனால்தான் அக்காலத்தில் அய்யா வைகுண்டருக்கு எதிராக மிஷநரிகள் லண்டன் வரை “ப்ராது” லெட்டர் எடுத்துச்சென்றனர். அதாவது மிஷநரிகளால் 1864 ஆம் ஆண்டு “Santhapooram District” ல் இருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட ரிப்போர்ட்டில் 6 மற்றும் ஏழாவது பக்கங்களில் அய்யா வைகுண்டரை விஷ்ணுவின் கடைசி அவதாரம் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டு மக்கள் அவரை வழிபட துவங்கியது மதமாற்றத்திற்கு பெரிதும் இடையூறாக இருக்கிறது என்று பதிவு செய்துள்ளனர். மேலும் 1859 ஆண்டு அனுப்பப்பட்ட ரிப்போர்ட்டில் “Ebenezer Lewis” என்பவர் அய்யா வைகுண்டரை மோசடிக்காரன் என்று நேரடியாக திட்டுகிறார். (பக்கம் 15-16)

(“Ebenezer Lewis calls Vaikundar as an “imposter”)

ஏன் தெரியுமா???

“This report presents the reply of an Ayyavazhi follower to a Christian Mossionary as, “We worship the true God, what business have you here? We need not your instructions, begone… Narayanan (Vaikuntacami) is the true God; it is he who created us… All who deny the divinity of Narayanana are fools and mad men, for no man of sense will do it.” It also says that, “thousands continue to worship him still, believing that before long he will rise from the dead.”

அதாவது இந்த லெட்டரை, ஒரு அய்யாவழிக்காரர் ஒரு மிஷநரிக்கு கூறும் பதிலாக எழுதியுள்ளார் எபநேசர் லீவிஸ். அதாவது மதமாற்றம் செய்ய வந்தவர்களிடம் “நாங்கள் உண்மையான கடவுளை வணங்குகிறோம், உங்களுக்கு இங்கே என்ன தொழில் இருக்கிறது? என்று மிஷநரிகளை அன்றே தெறிக்கவிட்டுள்ளனர் அய்யாவழிக்காரர்கள். அதோடு எங்களுக்கு உங்கள் அறிவுறுத்தல்கள் தேவையில்லை, எங்களுக்கு நாராயணன் தான் (வைகுண்டசாமி) உண்மையான கடவுள். அவர் தான் நம்மை படைத்தார் என்று, மெய்யான தேவன் இயேசு என்று சொன்ன மிஷநரிகளை விரட்டியுள்ளனர். அதோடு நாராயணனின் தெய்வீகத்தை மறுப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் மற்றும் பைத்தியக்காரர்கள் என்றும் மிஷநரிகளுக்கே பாடம் எடுத்துள்ளனர் அய்யா வழி வந்தவர்கள்.

இப்படிப்பட்ட சனாதனவாதியான அய்யா வைகுண்டர், பகவத்கீதை அத்யாயம் 7:21 ல் கிருஷ்ணர் கூறுவது போல, எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்கிறேன் என்று கூறும் வரிகளுக்கு ஏற்ப “அவரவர் மனதில் ஆனபடி இருந்து எவரெவரையும் பார்த்திருப்பேன் நான்” என்று அகிலத்திரட்டு அம்மானையில் குறிப்பிடும்போது அவரை நாராயணனின் அவதாரம் என்று குறப்பிடாமல் சனாதன எதிரி என்று குறப்பிடுவது எவ்வகையில் நியாயம்? ஏன்? நாராயணர் சனாதனத்திற்கு எதிரானவரா?

Source :

  1. Annual Report of the Travancore District Committee in Connection with the LMS,
  2. அகிலத்திரட்டு அம்மானை.

– பா இந்துவன்.

இந்தியாவின் காலடியில் ஆதிக்க சக்திகள்!

pm modi in bavani kalpakkam - 2026

மோடி கல்பாக்கம் வந்து சென்றது நம்மில் பலருக்கும் தெரியாமல் போனதுதான் மிகவும் வருத்தமானது. ஏனெனில் உலகத்தில் வளர்ந்த நாடுகள் தங்களது மின்சார தேவைக்கு பயன்படுத்துவது நியூக்ளியர் எனெர்ஜி அது விலை குறைவானது, அது தரும் மின்சாரம் மிக அதிகம். எனவே இந்தியாவும் வல்லரசு ஆக வேண்டும் என்றால் நியூக்ளியர் எனெர்ஜிக்கு செல்ல வேண்டும்.

அதற்கு பெரியளவில் பயன்படுத்தப்படுவது யுரேனியம். அதை நாம் தடையற்று வாங்க வேண்டும் என்றால், அதற்கு நாம் NSG (Nuclear Supplier Group) சேர்ந்தால்தான் அதை கொடுப்பார்கள்.

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

யுரேனியத்தில் நாம் மின்சார தேவைக்குப் பயன்படுத்தியபின் நமக்கு கிடைப்பது புளூட்டோனியம் என்ற உபரி. ஆனால் அதுதான் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தும் மூலப்பொருள். அப்படியென்றால், அதை நாம் நமது அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். ஏன் மற்றவர்களுக்கு கூட கொடுக்க முடியும்.

அதனால் நாம் கஜகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கனடா போன்ற நாடுகளிடம் இருந்து யுரேனியம் வாங்குகிறோம். அதை பயன்படுத்திய பின்னர் புளூட்டோனியத்தை அவர்களுக்கு (NPT நாடுகள்) திருப்பி கொடுக்க வேண்டும். அதை கொடுக்கவும், திரும்ப பெறவும் நம்மிடம் மிகப்பெரிய பணம் வாங்குவார்கள்.

அதை நாமே வைத்துக்கொள வேண்டுமெனில், நாம் NPT( Non-Prolifration of Nueclear Weapons) என்று சொல்லப்படும் அணு ஆய்தங்களை நாம் துறக்க வேண்டும், மேலும் எந்த அணு ஆயுத சோதனைகளை செய்யக்கூடாது. அப்படி நாம் செய்தால் பாகிஸ்தானும், சீனாவும் டுபாக்கூர் அணு ஆய்தத்தை வைத்தே நம்மை மிரட்டி பணியவைக்க மாட்டார்களா?

அப்படி செய்யாததால், நம்மால் தங்கு தடையற்ற யுரேனியத்தை வாங்க முடியவில்லை. அதனால் நாம் நியூக்ளியர் ரியாக்டர் மின் உற்பத்திக்கு அணு மின் நிலையங்களை கட்ட முடியவில்லை. வாஜ்பாய் அணு ஆயுத சோதனையை செய்து முடித்தபின்னர், நமக்கு யாரும் யுரேனியம் கொடுக்கக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள்.

அதனால் பின்பு வந்த சோனியா அரசாங்கத்திற்கு பல கட்டளைகளை போட்டார்கள். அதில் நாம் ராக்கெட் சோதனை செய்யக்கூடாது, சென்சிடிவான ஆராய்ச்சிகள் செய்யக்கூடாது என்று பல கீழ்படிதலுக்கு பின்பு நம் பொம்மை பிரதமர் யுரேனியத்தை பெற முடிந்தது. நம் தேஜஸ் விமான தயாரிப்பு முதல், விமானம்.தாங்கி கப்பல்கள் வரை நிறுத்தப்பட்டது!

அதாவது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது, வாங்கினால் தடை போடுவோம் என்ற கட்டளை போலத்தான். அப்போது ஒரு பொம்மையும், ஊழல்வாதிகளும் நாட்டை ஆண்டதால், அவர்கள் கட்டளைக்கு அடிபணிந்தது. ஆனால் இன்று நமது மோடி, முடிந்தால் தடை செய்துபார் என்றார். நமது வாத்தி, நான் வாங்குவது ரஷ்ய ஆயுள் என்றால் யூரோ யூனியன் வாங்குவது என்ன தக்காளி சட்டினியா என்று அமெரிக்க மண்ணிலேயே கேட்டு அவர்களின் ரெட்டை வேஷத்தை அசிங்கப்படுத்தினார்.

அது போன்ற தடைகள் என்பது தவிர்க்க முடியாதது. அதற்கு மாறாக தோரியம் என்ற பொருளை அணு மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். உலகில் இருக்கும் தோரியம் இருப்பில் 25% நம்மிடம்தான் உள்ளது. அதை வைத்து நம்மால் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தினால் யாரையும் இந்தியா சார்ந்திருக்க வேண்டியதில்லை.

அதற்காக நமது அணுசக்தி தந்தை ஹோமி பாபா 1954 ல் யுரேனியத்திற்கு பதிலாக தோரியத்தை பயன்படுத்தலாம் என்று சொன்னார். ஆனால் அதற்குரிய டெக்னாலஜி நமக்கு கிடைக்கவில்லை என்பதைவிட அதற்குரிய ஆராய்ச்சிக்கான டெக்னாலஜியை நமக்கு US, Euro நாடுகள் தடுத்துவிட்டது. அதை நம்மால் மட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ரஷ்யா அதை வெற்றிகரமாக செய்து முடித்தது. அதை நாமும் இப்போது செய்து முடித்துள்ளோம். எனவே நமக்கு இனிமேல் மேலை நாடுகளை யுரேனியத்துக்காக சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை, பயன்படுத்திய பின் அவர்களுக்கு புளூட்டோனியத்தை கணக்கு காட்ட வேண்டியதில்லை.

அதைதான் நமது கல்ப்பாக்கம் அணு மின் உலையில் வெற்றிகரமாக செய்துள்ளார்கள், மோடி அதை தொடக்க வந்தார். அப்படியெனில் அது உலக சாதனை, ஆனால் ஏன் நமக்கு தெரய்வில்லை!

அதைப்பற்றிய புரிதல்.என்பது மிகவும் சிக்கலானது. ஆனால் எளிதாக பார்த்து புரிந்துகொண்டால், நாமும் அணு அறிவியல் விஞ்ஞானியே, அதற்காக முயற்சிக்கிறேன்! எனக்கே அது புரிந்தால் அனைவருக்கும் புரிந்துவிடும்.என்ற நம்பிக்கையில்!

அதற்கு முன்பாக அணு பற்றி ஒரு அடிப்படை புரிதல் தேவை. ஒரு அணுவை பிளந்து அதில் உள்ள ஒரு எலெக்ட்ரானை வெளியேற்றினால், அப்போது மிக அதிக அளவில் வெப்பம் உருவாகும். அதை நாம் நீரை கொதிக்க வைத்து, டர்பைன் மூலம் இயக்கி மின்சாரம் தயாரிக்கிறோம். அதற்கு பெரயர் ஃபிஸன் (Fission) என்பதாகும்.

உதாரணமாக ஒரு யுரேனியம் தாதுவில் 92 புரோட்டான்களும், 146 எலெக்ட்ரான்களும் இருக்கிறது. அதை இரண்டையும் சேர்த்தால் (92+146=238) வருகிறதல்லவா, அதனால்தான் அதை யுரேனியம் 238 என சொல்கிறோம்.

அதில் நாம் ஒரு புரோட்டானை அதனுள் செலுத்தும்போது அது யுரேனியம் 239 ஆக மாறும் அப்போது பெருமளவில் வெப்பம் உருவாகும். அங்கே புரோட்டான், எலக்ட்ரான் சமனாக இல்லாததால் அது ஒரு புரோட்டானை 23 நிமிடங்கள் கழித்து உள்வாங்கி அது நெப்டூனியம் என்று மாறும். அப்போது அதுனுள் 93 புரோட்டான்களும், 146 நியூட்ரானுங்களும் இருக்கும்.

அதிலிருந்து மேலும் ஒரு எலெக்ட்ரானை Fission மூலம் வெளியேற்றினால், 94 புரோட்டான்கள், 145 நியூட்ரான்களை கொண்ட புளூட்டோனியமாக மாறும். இந்த புளூட்டோனியம் தான் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தும் மூலப்பொருள்.

இப்போது அடுத்த Fusion டெக்னாலஜியை பற்றி பார்க்கலாம். சென்ற முறையில் ஒரு எலெக்ட்ரானை வெளியே எடுக்கும்போது அங்கே பெருமளவில் வெப்பம் உருவாகும் என்று பார்த்தோம். அதற்கு நேர்மாறன டெக்னாலஜி தான் இந்த ஃபிஸைல் டெக்னலாஜி.

இதில் ஒரு எலெக்ட்ரானை வெளியேறுவதற்கு பதிலாக, ஒரு எலெக்ட்ரானை கூடுதலக சேர்ப்போம். அப்போதும் அதே போல பெருமளவில் வெப்பம் உறுவாகும். அதன் மூலம் கிடைக்கும் வெப்பத்தை வைத்து, நாம் மின்சாரம் பெற முடியும். ஆனால் பிரிப்பதை விட சேர்ப்பது என்பது மிக கடினமான வேலை.

எனவே அதை செய்ய அமெரிக்கா, ரஷ்யா உற்பட உலகில் பல நாடுகள் பல வருடங்களாக முயற்சி செய்து வந்தது. இந்தியாவும் பெருமளவில் முயற்சி செய்தது. அதாவது நமது அணு விஞ்ஞானத்தின் தந்தை என்ற ஹோமி பாபா, அதை 1954 ல் முன் வைத்தார்.

ஏன் இந்தியா இதற்கு முயற்சித்தது என்றால், நம் நாட்டில் தோரியம் 232 என்பது பெருமளவில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தி மற்ற நாடுகளை யுரேனியத்திற்காக சார்ந்திருக்காமல் நமது இயற்கை வளத்தையே பயன்படுத்த முடியும் என்பதால்ப்தான்..,

ஆனால் அதை நம் அடிமை அரசாங்கங்களால் செய்ய முடியவில்லை. அந்த நிலையில் ஹோமி பாபா மர்மமாக கொலை செய்யப்பட்டார். அவரின் இறப்பும் லால் பக்தூர் சாஸ்திரி இறப்பு போல காங்கிரஸ் அரசால் மூடி மறைக்கப்படது.

தோரியத்தில் இருக்கும் 232 மூலக்கூறுகளில் 90 புரோட்டான்களும், 142 எலெக்டார்ன்களும் (90+142=232) இருக்கிறது. அதில் ஃப்யூஸன் (Fusion) டெக்னாலஜி மூலம் ஒரு எலெக்ட்ரானை சேர்க்கும்போது அது யுரேனியம் 233 ஆக மாறுகிறது.

இந்த Fusion Technology ஐத்தான் நமது இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக கண்டுபிடித்து, அதை கல்பாக்கம்.அணு மின் நிலையத்தில் Fast Breader மூலம் வெற்றிகரமாக சேர்த்துள்ளார்கள். இதன் வெற்றி கண்காணிக்கப்பட்டு, பின்பு மற்ற அணு உலைகளுக்கும் விரிவாக்கி அதை தரம் உயர்த்தப்போகிறார்கள்.

அணு உலைக்கும், அணு ஆயுதத்திற்கும் என்ன வித்தியாசம்?

இந்த அணுக்களை பிளப்பதோ, அல்லது சேர்ப்பதோ கட்டுபாடாக நடந்தால் அது அணு விசை. அதுவே திறந்த வெளியில் கட்டாபாடு இல்லாமல் வெடிக்க அனுமதித்தால் அதுவே அணு ஆயுதம்!

இதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் எனு கேட்கிறீர்களா?

இந்திய விஞ்ஞானிகள் உலகளவில் சென்று மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை செய்யும்போது, இந்தியாவில் மட்டும் ஏன் செய்ய முடியவில்லை?

காரணம், நம் அரசுகளை ஆண்டவர்கள் மேலை நாடுகளின் கைக்கூலிகளாக இருந்தார்கள். இன்று ஒரு ஆண்மையுள்ள நேர்மையான, தலைவர் மோடி இருபதால்தான் கோவிட்டுக்கு தடுப்பூசி முதல் தோரியம் அணு மின் விசை வரை கண்டுபிடிக்க முடிந்தது! 1954 ல் ஒரு மாமா நேருவுக்கு பதிலாக பட்டேல் அல்லது மோடி இருந்திருந்தால், இது அன்றே நடந்திருக்கும்.

குறிப்பு: இதை என் மரமண்டையில் புகுத்த நிறைய படித்து அதை எளிதாக்கி கொடுத்திருக்கிறேன். இதை நாளை ஓட்டுப்போடும் இந்தியாவை நேசிப்பவர்களுக்கும், வருங்கால இந்தியாவை உருவாக்கப்போகும் உங்கள் குழந்தைகளுக்கும் கொண்டு சேர்த்துவிட்டேன் என்று சொன்னால் சந்தோஷப்படுவேன்! செய்வீர்களா? அதைச் செய்தால், நேற்றுவரை உலகின் கைகளில் இருந்த இந்தியாவின் கைகளில் இனி உலகம் இருக்கும்! 🌹

திருச்சிப் பாட்டியும் திராவிட ஆட்சியும்!

stalin press meet - 2026

— ஆர். வி. ஆர்

போன வாரம் திருச்சி அழைத்ததால் சென்னையிலிருந்து ஒரு நாள் அங்கு போய் வந்தேன் – ஒரு உறவினரைப் பார்க்க.

சென்ற நூற்றாண்டு அறுபதுகளின் கடைசியில், எனது ஒன்பதாவது வகுப்பின் பெரிய லீவுக்காக அம்புஜம் பாட்டி வீட்டில் கொட்டமடிக்கத் திருச்சி போயிருந்தேன். அவர் எனது அம்மாவின் அம்மா. அவர் வீட்டில் அப்போது சி. ஏ படிப்பு, காலேஜ், ஸ்கூல் என்று படித்துக் கொண்டிருந்த என் மூன்று சித்திகள் மற்றும் ஒரு மாமா, என்னுடன் தாயக்கட்டை ஆடிய என் பாட்டியின் மாமியார், அடுத்த சந்தில் வசித்த என் பாட்டியின் அக்கா, அவரின் பெண்களான எனது மற்ற சித்திகள், எல்லோரும் என் அன்பு விசிறிகள். பொறுப்பும் தலைமைக் குணங்களும் மிக்க என் பாட்டி, என்னிடம் கருணை கலந்த கறார் முகம் காட்டினார்.

திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் உள்ள பாண்டியன் பிள்ளை சந்தில் இருந்தது என் பாட்டி வீடு. இன்னும் சில சந்துகள் அந்த வீதியில் உண்டு. வீதியின் ஒரு பக்கத்துச் சந்துகளுக்கு அநேகமாக உள்புறத்தில் இணைப்புச் சந்துகள் உண்டு. எல்லா ஊர்களிலும், அதுவும் மையப் பகுதிகளில், அப்படித்தானே இருக்கும்?

நான் மதுரையில் படிக்காமல் டிமிக்கி கொடுக்கிறேன் என்று சில வருடங்களாகவே சரியாகக் கணித்திருந்தார் என் திருச்சிப் பாட்டி. லீவுக்கு வந்த என்னைப் பிடித்துவைத்து, அந்த ஊர்ப் பள்ளியில் பத்தாம் கிளாஸ், எஸ். எஸ். எல். சி, என்று இரண்டு வருடங்கள் தனது தினசரி மேற்பார்வையில் படிக்கவைத்தார் பாட்டி. கணக்கில் புலி, கண்டிப்பில் சிங்கம் என்றிருந்த நடராஜ ஐயர் நிர்வாகம் செய்த உன்னதமான ஈ. ஆர். ஹைஸ்கூல் அது. என்னையே படிப்பில் தேற்றித் தன்னை நிரூபித்த ஸ்கூல் ஆயிற்றே!

ஸ்கூல் படிப்பிற்குப் பின் பலமுறை திருச்சி போயிருக்கிறேன். போன வாரம் சென்றபோது, வடக்கு ஆண்டார் வீதியில் இன்னொரு சந்தில் வசிக்கும் என் ஸ்கூல் சினேகிதன், மற்ற இடங்களில் இருக்கும் சில ஸ்கூல் சினேகிதர்கள் என்று ஒவ்வொருவராகப் பார்த்துவர சில திருச்சிப் பகுதிகளில் அலைந்தேன்.

வடக்கு ஆண்டார் வீதியில் நடந்தபோது சிறுவனானேன். அதில் முதலியார் சந்தின் பெயரை வலது சுவற்றில் பார்த்ததும் உள்ளே சுகித்தது. நேரே செல்லவேண்டிய நான், முதலியார் சந்தின் உள்ளே நுழைந்து போய் இடப்புறம் திரும்பிப் பின் வலப்புறம் சென்று மறுபடியும் இடப்புறம் திரும்பிப் பாட்டி வீட்டுப் பாண்டியன் பிள்ளை சந்தில் கால் வைத்தேன். பாட்டியின் வீடு இப்போது வெளி நபருக்குக் கைமாறி இருந்தது. அந்த வீட்டின் முன் நின்றுவிட்டு, சிறிது ஒடித்து நேராகப் பாண்டியன் பிள்ளை சந்திலேயே நகர்ந்து, திரும்பித் திரும்பி, பந்தடிமால் சந்து வழியாக மீண்டும் வடக்கு ஆண்டார் வீதியில் கலந்தேன். சில அடிகள் முன்னேறி புதுப்படிச் சந்தில் புகுந்து என் சினேகிதனைப் பார்த்தேன். போகிற வழியில் சில பழக்கமான சந்துகளில் வேண்டுமென்றே நான் சுற்றிய சுற்று, சிறு பிராயத்தில் ஜயண்ட் வீலில் சுற்றியது போல் சிலிர்த்தது.

திருச்சியில் நான் தங்கி இருந்த தென்னூர்ப் பகுதியும் சரி, வடக்கு ஆண்டார் வீதியிலும் பிற இடங்களிலும் நான் நடந்த பகுதிகளும் சரி, என் பாட்டி காலத்திலிருந்து மாறாத சில காட்சிகள் கொண்டவை. அவை, சாலை ஓரங்களிலும் சில தெருக்களின் குறுக்கிலும் ஓடும் திறந்தநிலைச் சாக்கடைகள். வீடுகளின் சமையலறை, குளியலறையிலிருந்து வெளிவரும் கழிவு நீர், மற்ற கழிவு நீர் என்று அனைத்தையும் தாங்கி வரும் ஜீவ சாக்கடைகள் அவை.

ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை, அதன் நகராட்சிகளை, ஆளுகின்றன. ஆனாலும் முக்கிய நகரான திருச்சியின் பழைய பிரதான பகுதிகளில் கூடப் பாதாளச் சாக்கடைகளை அமைத்து, அவற்றோடு எல்லா வீடுகளுக்கும் இணைப்பைச் செய்து, அவற்றை முறையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து, திறந்த சாக்கடைகளையும் அடையாளம் தெரியாமல் நிரந்தரமாக மூடவில்லை என்றால் என்ன அர்த்தம்? திராவிடக் கட்சிகளின் ஆட்சி மாமூலாக நடக்கிறது என்று அர்த்தம்.

முப்பது வருடங்களுக்கு மேலாகத் திருச்சியில் பாதாள சாக்கடைத் திட்ட வேலைகள் நடக்கின்றன, நடக்காமலும் இருக்கின்றன. பாதி அல்லது முக்கால்வாசி இடங்களில் தெருவை வெட்டி ஆழத்தில் பாதாள சாக்கடைக் குழாய்கள் அமைக்கப்பட்டு விட்டன. அந்தக் குழிகளையும் மூடி ஆயிற்று. ஆனால் நிறைய வீடுகளிலிருந்து பாதாள சாக்கடைக் குழாய்களுக்கு இன்னும் இணைப்பு ஆகாமல் – குளியலறை மற்றும் சமையலறை, கழிவறை, இவற்றில் எதற்கும் இணைப்பு ஆகாமால் அல்லது கழிவறைக்கு மட்டும் இணைப்பு ஆகி – தெரு ஓரங்களில் உள்ள பழைய திறந்த சாக்கடைகள் இன்றும் உயிரோட்டமாக இருக்கின்றன.

திருச்சியில் பாதாள சாக்கடையை அமைத்த அளவிலும் கூட, அதை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் தலைமையும் நேர்மையும் பொறுப்பும் திராவிடக் கட்சிகளிடம் இல்லை. அதுபோன்ற பண்புகள் அந்த ஊர்ப் பாட்டி ஒருவரிடம் நிரம்பி இருந்தன.

திருச்சியில் நொண்டியடிக்கும் பாதாள சாக்கடைத் திட்டம், அரசியல்வாதிகளையும் மீறிக் காலம் எவர்க்கும் தானாகக் கொண்டு தரும் வளர்ச்சி, அல்லது குன்றிய வளர்ச்சி. அந்த அளவு வளர்ச்சி அந்த நகருக்கு வந்துவிட்டதால் – தமிழகத்தில் அதற்காகக் காத்திருக்கும் மற்ற ஊர்களும் அதுபோல் பயன் பெற்றுவிட்டால் – அதற்கு ஏற்ற செழிப்பையும் கொழிப்பையும் இடைப்பட்ட காலத்தில் எப்படியோ சம்பாதிப்பவர்கள் நிச்சயம் உண்டு. அவர்கள் யார் என்பது, திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்களுக்குப் பளிச்சென்று தெரிய வேண்டும்.

தமிழகத்தில் திறந்தபடி செயல்படவேண்டிய அரசு இயந்திரம், மர்மத்தில் மூடியபடி இயங்குகிறது. போதிய வெளிப்படைத் தன்மை இல்லை. மூடியபடி தரைக்கு அடியில் ஓட வேண்டிய சில ஊர்களின் சாக்கடைகள் சாலையில் திறந்தநிலையில் ஓடுகின்றன. மாநிலத்தில் தேவையான ஆட்சி மாற்றம் வந்தால் தான், இரண்டிலும் நிலைமை தலைகீழாக மாறிச் சரியாகுமோ?

Author: R. Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
Blog: https://rvr-india.blogspot.com

அஞ்சலக திட்டங்களில் முதலீடு அதிகரிப்பு!

3d printing postoffice - 2026
#image_title

மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம் மற்றும் மாதாந்திர வருமான திட்டம் ஆகிய சிறுசேமிப்பு திட்டங்களில் செய்யப்படும் முதலீடு அதிகரித்திருப்பது தெரிய வந்து
உள்ளது.

அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள், சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.

இவற்றில் ஓய்வூதியதாரர்களால் அதிகம் நாடப்படும் மூத்த குடிமகன் சேமிப்பு திட்டத்தில், 90,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இணையான காலத்தை விட 37,000 கோடி அதிகம்.
இதே போல, மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மகளிருக்கான சேமிப்பு திட்டத்தில் இதுவரை 19,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம் மற்றும் மாதாந்திர வருமான திட்டம் ஆகியவற்றுக்கான முதலீடு வரம்பு உயர்த்தப்பட்டது, இதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.

மூத்த குடிமகன் சேமிப்பு திட்ட வரம்பு 30 லட்சமாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. மாதாந்திர வருமானம் திட்ட வரம்பு தனி கணக்கிற்கு 9 லட்சமாக மற்றும் இணை கணக்கிற்கு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.