Home Blog Page 36

சபரிமலை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய திட்டம் தேவை: இந்து முன்னணி

sabarimalai crowd - 2026

சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் உடனடியாக செய்து தர வேண்டியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை கேரளா அரசு செயல்படுத்த வேண்டியும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை வெளியிடுள்ளார். அவரது அறிக்கையில் கோரியிருப்பதாவது…

சபரிமலை ஐயப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். வருடம் தோறும் கார்த்திகை முதல் தை மாதம் வரை கோடிக்கணக்கான பக்தர்கள் கடும் விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர். தென் மாநிலங்கள் மட்டுமல்லாது, வட மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் ஆகிய வசதிகள் கூட்டத்திற்கு தகுந்த மாதிரி இல்லாமல் மிகவும் குறைவாக உள்ளது. வருடா வருடம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதால் அதற்கு தகுந்தவாறு கேரளா அரசாங்கமும், கோவில் நிர்வாகமும் இணைந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்.

10 வயதிற்கு சிறு குழந்தைகள் முதல் 50 வயதிற்கு மேலான பெண்கள் உள்பட பலரும் வருகை தருவதால் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எந்த விதமான சிறப்புத் திட்டங்களும் இல்லை. சபரிமலையில் பணியாற்றும் காவல் துறையினர் கூட்ட நெரிசலை தவிர்க்க கடுமையாக பணியாற்றி வந்தனர். ஆனால் தற்பொழுது அவர்கள் அந்தப் பணியை மனிதாபிமான முறையில் செய்வதில்லை.

நேற்று கூட சபரிமலையில் கூட்ட நெரிசல் அதிகமாகி பக்தர்கள் அவதிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறையினர் சரிவர பணியாற்றவில்லை என்று கோவில் நிர்வாகம் கேரளா ஐ.ஜிக்கு தகவல் கொடுத்த பின்பு, அவர் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு காவல்துறையினரை பணியாற்ற வைத்தார் என்ற செய்தி நேற்று பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வந்துள்ளது.

காவல்துறையினருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாகவே பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல 10 மணி நேரம் முதல் 15 மணி நேரம் ஆகிறது.

ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திலும் அதிகமான பக்தர்கள் கடுமையான நெருக்கடியில் நிற்பதால் பக்தர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசமாகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திற்கும் கழிப்பிட வசதி குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணையத்தின் வாயிலாக பதிவு செய்பவர்களை அந்தந்த தேதி வாரியாக முறையாக அனுமதித்தால் கூட்ட நெரிசலை சரி செய்ய முடியும். ஆனால் கோவில் நிர்வாகமோ ஒரே நாளில் அனைவரையும் அனுமதிப்பதால் பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

அதேபோல வாகனங்களை நிறுத்தும் நிலக்கல்லிலிருந்து பம்பைக்குச் செல்ல அதிகமான பேருந்து வசதிகளை கேரளா அரசு ஏற்படுத்தி தர வேண்டும். ஒரே பேருந்தில் அளவுக்கு அதிகமான ஐயப்ப பக்தர்களை ஏற்றுவதால் காலதாமதமும் ஏற்படுகிறது. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்ல ஒரு மணி நேரம் போதுமானது. ஆனால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவால் நிலக்கல்லில் மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை பக்தர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

சன்னிதானத்தில் தரிசனம் முடித்து பக்தர்கள் கீழே இறங்கும் கழுதை பாதை பல பகுதியில் பாதை சேதம் ஏற்பட்டு இருப்பதால் பக்தர்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்தப் பாதையையும் புனரமைத்து தர கேரளா அரசாங்கம் முன்வரவேண்டும்.

பெருவழிப்பாதையில் செல்லும் பக்தர்கள் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் என தங்கிச் செல்வது வழக்கம். பெருவழிப் பாதையில் அதிகமான வியாபார கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நேற்று கூட கூட்ட நெரிசலால் ஐயப்ப பக்தர் ஒருவர் மரணம் அடைந்த செய்தி பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி காலங்களில் பக்தர்களால் அதிகமான வருமானம் வருகிறது. அந்த வருமானத்தைக் கொண்டு கோவிலுக்கு நிறைய அடிப்படை வசதிகளை உருவாக்கித் தர முடியும். ஆனால் வருவாயை மட்டும் எடுத்துக் கொண்டு பக்தர்களின் நலனில் அக்கறை காட்டாமல் அரசாங்கம் இருந்து வருகிறது.

குறிப்பாக இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கேரளா அரசாங்கம் விதித்திருக்கிறது. நாடு முழுக்க இருந்து வரும் ஐயப்ப பக்தர்களை இது கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.

உடனடியாக கோவில் நிர்வாகமும், கேரளா அரசும் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ள நிர்வாக சீர்கேடுகளை சரி செய்து ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பையும், உரிய அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இந்துமுன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

அச்சன்கோயிலில் மண்டல மகோற்சவ விழா துவக்கம்..

1001070574 - 2026

அச்சன்கோயிலில் மண்டல மகோற்சவ விழா கார்த்திகை முதல் நாள் திங்கட்கிழமை பாக்கு மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.கோயில் மேல்சாந்தி நடத்திய இந்த பூஜை சடங்குகளில் திரளான பக்தர்கள் பங்கெடுத்தனர்

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோயில்களில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் 41 நாள் மண்டல மகோற்சவ விழா பாக்கு மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை பாண்டிய மன்னன் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 முதல் துவக்கி வைத்த 41 நாள் மண்டல பூஜை வழிபாடு தற்போது சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலிலும் விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது இதுபோல் இந்த 41 நாள் மண்டல பூஜை விழா ஐயப்பனின் படை வீடு கோவிலான அச்சன்கோவிலிலும் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது.

இன்று முதல் துவங்கிய இந்த 41 நாள் மண்டல பூஜை வழிபாடு தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு அபிஷேகம் ஆராதனை காலை ஏழு மணிக்கு பூஜை பகல் 12 மணிக்கு மேல் உச்சி பூஜை மாலை 6:30க்கு தீபாராதனை வழிபாடு தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் மகா தீப மகா தீபம் ஏற்று வழிபாடு நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் டிசம்பர் 16ஆம் தேதி அச்செங்கோல் ஐயப்பனுக்கு திருப்பாவரணம் அணிவித்து பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

ஐயப்பனின் படைவீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா கோயிலில் மண்டல மகோற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்கவாள், கிரீடம், கவசம் உள்ளிட்ட ஆபரணங்களும், பூரணபுஷ்கலா அம்பாள் மற்றும் கருப்பனுக்கு நகைகள் அணிவிக்கப்படுவது வழக்கம்.

இதையொட்டி, பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், கோமேதகம், வைடூரிய நகைகள் அடங்கிய திருஆபரணப் பெட்டி கேரள மாநிலம், புனலூா் கருவூலத்தில் உள்ள திருவிதாங்கூா் தேவஸம்போா்டு கிருஷ்ணன் கோயிலில் இருந்து எடுத்து வரப்படும்.

ஐயப்பனின் ஆபரணப் பெட்டியில் ஐயனின் கை, கால், முகம், மாா்பு உள்ளிட்ட கவசங்கள் இருக்கும். 10 நாள்கள் நடைபெறும் ஆராட்டு விழாவை முன்னிட்டு அச்சன்கோவில் தர்மசாஸ்தா வுக்கும் வெள்ளி கவசம் கருப்பசாமி க்கும் இந்த நகைகள் அணிவிக்கப்படும். இந்தப் பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டைவாசல், புளியரை செங்கோட்டை வழியாக தென்காசி வழியில், பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவிலுக்கு திருபாவரணபெட்டி கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கு அனிவித்து பூஜை வழிபாடுகள் நடைபெறும்.இந்த ஆண்டு இந்த திருபாவரண கோஷ யாத்திரை வரும் டிச 16ல் நடைபெறும்.

மறுநாள் டிச 17ல் காலை கோயில் தங்க கொடி மரத்தில் வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கி நடைபெறும்.

விழாவில் 3, 4, 5ஆம் நாள்களில் உற்சவபலி, 6, 7, 8 ஆம் நாள்களில் கருப்பன்துள்ளல் நிகழ்ச்சி, 9 ஆம் நாள் தேரோட்டம்,10 ஆம் நாள் ஆராட்டு விழா, 11 ஆம் நாள் மண்டல பூஜை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, நாள்தோறும் அன்னதானம் நடைபெறும்.ஏற்பாடுகளை அச்சன்கோவில் தேவஸ்தானம் செய்து வருகிறது.

சபரிமலையில் துவங்கியது மண்டல பூஜை ..

1001070445 - 2026

சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை இன்று அதிகாலை புதிய மேல்சாந்தி நடை திறந்து வைக்க பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க ஐயப்பனுக்கு கோலாகோலமாக மண்டல பூஜை தொடங்கியது.

இன்று பகலில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து நெய் அபிஷேகம் முடித்துள்ளனர்.
அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய நடை பந்தல், சிறிய நடை பந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்

1001070443 - 2026

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள்.

சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. கார்த்திகை 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை, சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும். இதற்காக, ஞாயிற்றுக்கிழமை மாலை, 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்த போது, பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, கோயிலை வலம் வந்த மேல் சாந்தி, 18 படிகள் வழியாக வந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். பின், 18 படிகளுக்கு கீழே இருமுடி கட்டுடன் நின்று கொண்டிருந்த புதிய மேல் சாந்திகள், சபரிமலை பிரசாத் நம்பூதிரி , மாளிகைப்புறம் மனு நம்பூதிரியை கைப்பிடித்து அழைத்து வந்தார்.

1001070444 - 2026

ஐயப்பன் சன்னிதி முன்புறம் வந்ததும் அவர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது. புதிய மேல் சாந்தி மாலை, 6:30 மணிக்கு சன்னிதி முன் நடந்த சடங்கில், சபரிமலை புதிய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரிக்கு, தந்திரி மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி சன்னிதிக்குள் அழைத்து சென்றார். இதுபோல, மாளிகைப்புறம் கோவில் முன்புறம் நடந்த சடங்கில், மனு நம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது.

தொடர்ந்து, தந்திரி மகேஷ் மோகனரரு, ஐயப்பன் சிலையில் அபிஷேகம் நடத்திய பின், நெய்யபிஷேகத்தை துவங்கி வைத்தார். டிசம்பர் 27ம் தேதி வரை எல்லா நாட்களிலும் அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 முதல், 11:30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 3:30க்கு கணபதி ஹோமம், 7:30க்கு உஷ பூஜை, 12:00-க்கு களபாபிஷேகம், கலசாபிஷேகம், 12:-30க்கு உச்சபூஜை முடிந்து மதியம், 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மீண்டும் மதியம், 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை, 6:30-க்கு தீபாராதனை, இரவு, 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம், 9:30 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும். 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். தினமும் ஆன்லைன் முன்பதிவில், 70,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில், 20,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

Ind Vs SA Test: சொதப்பலாக முடிந்த முதல் டெஸ்ட்!

ind vs sa test - 2026

இந்தியா- தென் ஆப்பிரிக்கா – முதல் டெஸ்ட் – கொல்கொத்தா –
இந்திய அணியின் பரிதாபத் தோல்வி 16.11.2025

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸ் (159, மர்க்ரம் 31, முல்டர் 24, டோனி டி ஸோரி 24, ரியன் ரிக்கில்டன் 23, பும்ரா 5/27, சிராஜ் 2/47, குல்தீப் 2/36, அக்சர் படேல் 1/21) இரண்டாவது இன்னிங்க்ஸ் (பவுமா ஆட்டமிழக்காமல் 55, காபின் போஷ் 25, ஜதேஜா 4/50, குல்தீப் 2/30, சிராஜ் 2/2, பும்ரா 1/24, அக்சர் 1/36) இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் (189, கே.எல். ராகுல் 39, வாஷிங்க்டன் சுந்தர் 29, பந்த் 27, ஜதேஜா 27, சைமன் ஹார்மர் 4/30, மார்கோ ஜேன்சன் 3/35, கேசவ் மஹராஜ் 1/66, காபின் போஷ் 1/32) இரண்டாவது இன்னிங்க்ஸ் (93, வாஷிங்க்டன் சுந்தர் 31, அக்சர் படேல் 26, ஜதேஜா 18, சைமன் ஹார்மர் 4/21, கேசவ் மஹராஜ் 2/37, மார்கோ ஜேன்சன் 2/15, மர்க்ரம் 1/5) தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டத்தின் தொடக்க நாள் முதலே தெ ஆப்பிரிக்க அணி தடுமாறியது. நேற்று மாலை வரை இந்திய அணி நிச்சயமாக வெல்லும் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய பேட்டர்கள் 124 ரன்கள் எடுக்க முடியாமல் இந்த முதல் டெஸ்டில் தோற்றுப் போனார்கள். இந்திய அணியின் திறமையான பேட்டர்களான ஜெய்ஸ்வால் இரண்டு இன்னிங்க்ஸிலும் (12 & 0) சரியாக ஆடவில்லை. கே.எல். ராகுல் இரண்டாவது இன்னிங்க்ஸில் 6 பந்து விளையாடி 1 ரன் எடுத்தார். துருவ் ஜுரல் இரண்டு இன்னிங்க்ஸிலும் 13 மற்றும் 14 ரன் எடுத்தார். இந்த நிலையில் இந்திய அணி எப்படி வெற்றிபெற முடியும்? 

இந்திய விளையாட்டு தளங்களை சுழல் பந்து சாதகமாக அமைக்கும்போது இந்திய அணி பேட்டர்கள் சுழல் பந்தை திறமையாக ஆடவும் செய்ய வேண்டும். டெஸ்டில் களத்தில் எத்தனை நேரம் ஆட்டமிழக்காமல் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். தென் ஆப்பிரிக்க அணியின் அணித்தலைவர் 136 பந்துகள் ஆடி ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார். இது அவர்களது அணியின் வெற்றிக்கு அடிகோலியது. இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர் மட்டுமே 92 பந்துகள் ஆடினார். அணி வெற்றி பெறா வேண்டிய நிலையில் மிக மோசமாக ஆடிக்கொண்டிருந்தபோது ரிஷப் பந்த், ஜதேஜா போன்றவர்கள் நிலைத்து ஆடாமல் ஆட்டமிழந்தது துரதிருஷ்டவசமானது. 

அடுத்த டெஸ்டில் தங்களது தவறுகளை இந்திய அணி திருத்திக்கொள்ளுமா எனப் பார்க்கலாம்.   

சபரிமலை கோயில் மண்டல பூஜை விழாவுக்கு நடை திறப்பு.. புதிய மேல்சாந்தி பதவியேற்பு…

1001068456 - 2026

உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பை நதிக்கு மேல் உயர்ந்த மலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் இந்த ஆண்டு மண்டல பூஜை மஹோற்சவ விழாவுக்கு பக்தர்கள் சரணஹோஷம் முழங்க ஞாயிற்றுக்கிழமை மாலை நடை திறந்து வைக்கப்பட்டது.நாளை திங்கட்கிழமை கார்த்திகை முதல் நாள் 41நாள் மண்டல பூஜை வழிபாடுகள் சபரிமலை ஐயப்பனுக்கு தொடங்குகிறது .மண்டல பூஜையை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகள திங்கட்கிழமை 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் திறந்து வைத்தார். பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது சபரிமலை நடை திறக்கப்பட்டதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முதல் நாளிலேயே ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகை தந்திருந்தனர் இவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர் . இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. தீபாராதனைக்கு பின்னர் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

சபரிமலை மேல்சாந்தியாக பிரசாத்தும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக மனு நம்பூதிரியும் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். கார்த்திகை 1ம் தேதியான நாளை (17ம் தேதி) முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலையில் இந்த புதிய மேல்சாந்திகள் தான் முக்கிய பூஜைகளை நடத்துவார்கள். டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றுடன் 41 நாள் மண்டல காலம் நிறைவடையும்.

தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த இரு வாரங்களுக்கு முன் தொடங்கியது. நாளை முதல் டிசம்பர் 1ம் தேதி வரை 16 நாட்களுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. இதுவரை 22 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.தினமும் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும் நேரடியாக பம்பை நிலக்கல் பகுதியிலிருந்து ஸ்பாட் புக்கிங் ஆக 20 ஆயிரம் பக்தர்களும் பதிவு செய்து 90 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தினமும் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் கூறியதாவது, சபரிமலையில் மண்டல காலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டன. மொத்தம் 6 கட்டங்களாக 18,741 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். நிலக்கல், பம்பை, சன்னிதானம் என மூன்று மண்டலங்களாக பிரித்து தலா ஒரு எஸ்பி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஜிபி ஸ்ரீஜித் மேற்பார்வையில் டிஐஜிகளான அஜீதா பேகம், சதீஷ் பினோ மற்றும் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மாவட்ட எஸ்பிக்களான ஆனந்த், சாபு மேத்யூ, சாகுல் அமீது ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் நாளை திங்கட்கிழமை தொடங்குகின்றன.அன்று முதல் தினமும் 18 மணிநேரம் நடை திறந்திருக்கும். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் இரவு நடை சாத்தப்படும் நேரம் கூட்டப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

1001068544 - 2026

சபரிமலை புதிய மேல்சாந்தியாக சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆரேஸ்வரம் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயத்தின் மேல்சாந்தியாக இருந்து தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதேபோல் மாளிகைபுரம் கோவில் புதிய மேல்சாந்தியாக கொல்லம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய மேல்சாந்திகள் இருவரும் இருமுடி கட்டி இன்று சபரிமலை வந்தடைந்தனர்.இவர்களை சபரிமலை தற்போதைய தந்திரி மேல்சாந்தி வரவேற்று பதிவியேற்று வைத்தனர்.நடப்புஆண்டு மண்டல பூஜை சீசன் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் மற்றும் திருப்பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள். நாளை மண்டல பூஜை தொடங்குவதற்கு முன்னதாக அவர்கள் மேல்சாந்தியாக இன்று பொறுப்பேற்றனர்.

மைதிலி தாக்குர்: பாரதத்தின் அடையாளமான Gen-Z ஐ எம்எல்ஏ.,வாக்கி அழகு பார்த்த பாஜக.,!

mythili thakkur bjp youngest mla in bihar - 2026

ஆயுதம் ஏந்தியும் வன்முறைகளைக் கட்டவிழ்த்தும் கட்டுக்கடங்காமல் செல்லும் போராட்டங்களுக்கான கருவிகளாக Gen-Z  ஜென் – ஸி எனப்படும் இளைய தலைமுறையை ராகுலின் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் முன்னுதாரணப்படுத்திக் கொண்டு பொதுவெளியில் சொல்லிக் கொண்டிருக்க,  பாரதத்தின் இளைய தலைமுறை எப்படிப்பட்டது என்பதை காட்டும் வகையில் பாஜக சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளது.  பாரதத்தின் ஜென்-ஸி அடையாளமாக  சமூக தளங்களில் இளைய தலைமுறையின் உள்ளம் கவர்ந்த இளம் வயது பாடகியான மைதிலி தாக்குரை கட்சியில் சேர்ந்த மறு நாளே வேட்பாளராக அறிவித்து அவரை வெற்றி பெறவும் வைத்து இதுதான் பாரதம் கனவு காணும் ஜென்-ஸி என்று முன்னிலைப்படுத்தி இருக்கிறது பாஜக.,!

இளவயது சட்டமன்ற உறுப்பினர் எனும் பெருமையை பெற்றுள்ளார் மைதிலி தாக்குர். பீஹார் சட்டசபையின் இளம் எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைதிலி தாக்குர் 25 வயதுள்ள நாட்டுப்புற பாடகி. இவர், பாஜக.,வில் இணைந்த ஒரே நாளில் எம்எல்ஏ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  

இவர் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே பிரபலமானவர். அண்மையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில், பாரதத்தின் இளம் சாதனையாளராக விருது பெற்றார். அப்போது இவர் பாடிய பாடலும் பேச்சும் பலரையும் கவர்ந்திருந்தது. அவரை பிரதமர் மோடி மனதாரப் பாராட்டி, ஊக்குவித்தார். பின்னர் இவர் பாஜக.,விலேயே சேர்ந்து, மறுநாளே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இப்போது அலிநகர் தொகுதியில் வென்று எம்எல்ஏ., ஆகி உள்ளார். இதன் மூலம் பீஹார் அரசியலில் மிக இளம் வயது எம்எல்ஏ., என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.  இவர் எதிர்த்துக் களம் கண்டவர், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான வினோத் மிஸ்ரா என்பதுதான் ஆச்சரியப்படத்தக்க செய்தி. காரணம், அலிநகர் தொகுதி ஆர்ஜேடியின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட தொகுதி. அதன் வலிமையான வேட்பாளரான வினோத் மிஸ்ராவை எதிர்த்து, இவர் வெற்றி பெறுவாரா என்று பலரும் ஐயம் தெரிவித்தனர். இந்த நிலையில், அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி இன்று பாஜக., சார்பில் எம்எல்ஏ., ஆகி உள்ளார். 

இள வயது மைதிலி தாக்குரின் ஆச்சரியப்படத் தக்க அரசியல் பயணம், பீஹார் மாநில அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

தமது வெற்றி குறித்து மைதிலி தாக்குர் கூறியபோது, இந்த வெற்றி எனக்கு கனவு போல இருக்கிறது. மக்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. முதல்முறையாக எம்எல்ஏ., ஆகி உள்ளேன். என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் மகள் போல் சேவை செய்வேன். மக்களுக்காக எப்படி பணி செய்ய வேண்டும் என்பதே என் ஒரே எண்ணமாக உள்ளது என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார். 

மேலும், இன்று நான் உங்கள் மகளாக நிற்கிறேன் உங்கள் பிரதிநிதியாக அல்ல!உங்கள் அளவற்ற அன்பு, நம்பிக்கை மற்றும் ஆசீர்வாதங்களால். இந்த வெற்றி என்னுடையது மட்டுமல்ல – இந்த வெற்றி அலிநகர், ஒவ்வொரு அலிநகர் குடும்பத்திற்கும், எனக்கு ஆசீர்வாதம் அளித்த ஒவ்வொரு கைகளுக்கும் உரியது.

இந்த பிரச்சாரம் பொதுமக்களிடம் சென்றடைய இரவு பகல் பாராமல் உழைத்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள், அனைத்து காரியகர்த்தாக்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பூத் அளவிலான காரியகர்த்தாக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

உத்வேகம் மற்றும் வழிகாட்டுதல் எங்கள் முழு குழுவையும் வலுப்படுத்திய மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் நிதிஷ் குமார் ஜி ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய திரு ஜே பி நட்டா, மதிப்பிற்குரிய திரு நித்யானந்த் ராய் ஆகியோருக்கு நன்றி

அலிநகர் என் சகோதர-சகோதரிகள், தாய்-பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள்… என்னை உங்கள் மகள், உங்கள் சகோதரி, உங்கள் பிரதிநிதியாக்கி நீங்கள் எனக்கு கொடுத்த பொறுப்பு – நம்பிக்கை உடைந்து விடமாட்டேன் என உறுதியளிக்கிறேன். இது என் வெற்றி அல்ல – உங்கள் நம்பிக்கையின் வெற்றி. நன்றி அலிநகர்… உங்கள் அன்பு தான் என் மிகப்பெரிய பலம். – என்று

பீஹாரின் மதுபானி மாவட்டம், பெனிபட்டியில் 2000ஆம் ஆண்டு பிறந்த மைதிலி தாக்குர் சிறு வயதிலேயே இசைத்துறையில் தனியிடம் பிடித்துவிட்டார். பாரம்பரிய கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். நாட்டுப்புற இசையை தந்தையிடம் இருந்தும் தாத்தாவிடம் இருந்தும் கற்றார்.  பள்ளிப் படிப்பை தில்லியில் முடித்தார். பத்து வயதுச் சிறுமியாக இருந்த போதே, பள்ளியில் அனைவரையும் கவர்ந்தவர். தில்லி பல்கலை.க்கு உட்பட்ட ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் 2022ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தார். அப்போது, 2021ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதை வென்றவர்.

பேஸ்புக், யூடியூப் மூலம் தமது இசைத் திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். 2020ல் இவர் தமிழில் பாடிய கண்ணான கண்ணே பாடலை இன்றும் சமூகத் தளங்களில் தமிழ் இசை ஆர்வலர்கள் பார்த்து மெய்சிலிர்த்து பாராட்டியிருக்கிறார்கள்.  சமூக வலைதளங்களில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்களைப் பெற்றவர் மைதிலி தாக்குர்.

சபரிமலை மண்டல பூஜை விழா; நவ.16ல் நடைதிறப்பு! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

sabarimala mandalapooja nada thruappu security arrangements - 2026
சபரிமலை நடைபாதையில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

சபரிமலையில் மாபெரும் விழா மண்டல பூஜை நவ 16ல் நடை திறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் வரும் 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நடை திறந்த பின்னர் அடுத்த ஒரு வருடத்திற்கான புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

மறுநாள் நவ17 முதல் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயிலில் புதிய மேல்சாந்திகள் நடை திறந்து பூஜைகளை நடத்துவார்கள். அன்று முதல் நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் தொடங்கும். டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். இந்நிலையில் மண்டல கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நவ1முதல் துவங்கி நடந்து வருகிறது.

பக்தர்கள் sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். வண்டிப்பெரியார் சத்திரம், எருமேலி, நிலக்கல், பம்பா ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் செயல்படும். ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி கவுண்டர்கள் மூலம் 20 ஆயிரம் பேருக்கும் முன்பதிவு செய்யலாம்.

பக்தர்கள் மரணமடைந்தால் இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டத்துக்கு நிதி சேகரிப்பதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ரூ. 5 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயம் அல்ல. இந்த இன்சூரன்ஸ் பலனை அடைவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஆவணங்கள் தேவைப்படுவதால் பக்தர்கள் முடிந்தவரை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

சபரிமலையில் இந்த ஆண்டு பாதுகாப்பு நடவடிக்கையாக ஏ.ஐ. கேமராக்கள்-டிரோன் மூலம் கண்காணிப்படுகிறது

இதுவரை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 21.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
6 கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் அடுத்த 15 நாட்களுக்கான முன்பதிவு முடிவடைந்து விட்டது. 16-ந் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் மொத்தம் 21.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இனி பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டி பெரியார் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள உடனடி கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த நாட்களில் தரிசனம் செய்ய முடியும். சபரிமலைக்கு மண்டல-மகரவிளக்கு யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை சிறப்பாக செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இது குறித்து கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. ரவாடா சந்திரசேகர் கூறுகையில், நிலக்கல், பம்பா மற்றும் சன்னிதானம் ஆகிய 3 முக்கிய மண்டலங்களிலும் 6 கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

கூட்ட நடமாட்டம் மற்றும் போக்குவரத்தை கண்காணிக்க டிரோன் கண்காணிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்து, மொபைல் பிரிவுகள் பயன்படுத்தப்படும். முக்கிய இடங்களில் கமாண்டோ படையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். திருட்டுகளை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் சிறப்பு திருட்டு எதிர்ப்பு படை மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் இயக்கப்படும் சி.சி.டி.வி. கேமராக்கள் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

பீகார் வெற்றி; உற்சாகத்தில் பாஜக.,! தொண்டர்கள் கொண்டாட்டம்!

bihar election modi thanks - 2026

பீகாரில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆளும் தேஜ.,கூட்டணி 203 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் மகா கட்பந்தன் கூட்டணி, 33 தொகுதிகளில் வென்றுள்ளது.

தேர்தல் ஆணைய தளத்தின் அறிவிப்பின் படி,
பீகார் தேர்தல் முடிவுகள்

பாஜக., – 89
ஐஜத., – 85
லோக் ஜன சக்தி – 19
ரா.ஜ.த., – 25
இ. காங்கிரஸ் – 6
ஏஐஎம்ஐஎம் – 5
ஹிந்துஸ்டானி அவாமி மோர்ச்சா – 5
ராஷ்டிரீய லோக் மோர்ச்சா – 4
சிபிஐ எம் எல் – 2
ஐஐபி – 1
சிபிஎம் – 1
பிஎஸ்பி – 1

பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜ, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில், பீகார் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டுள்ளார். மாலை பாஜக., அலுவலகத்துக்கு வந்து, தொண்டர்கள் மத்தியில் பேசினார். கையில் வைத்திருந்த அங்க வஸ்திர துண்டை மேலே சுழற்றி தொண்டர்களை உத்ஸாகப்படுத்தினார். பின்னர் பீகார் வெற்றி குறித்து அவர் குறிப்பிட்டபோது,

பிரதமர் மோடி பாராட்டும் மகிழ்ச்சியும்!

நல்லாட்சி வென்றது. வளர்ச்சி வென்றது. பொதுநல உணர்வு வென்றது. சமூக நீதி வென்றது. 2025 சட்டப்பேரவை தேர்தலில் தேஜகூ.,வுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் வரலாறு காணாத வெற்றியை ஆசிர்வதித்த பீகார் என் குடும்ப உறுப்பினர்களுக்கு மிக்க நன்றி. இந்த அபரிமிதமான வெற்றியானது மக்களுக்கு சேவை செய்யவும் பீகாரில் புதிய தீர்மானத்துடன் பணியாற்றவும் நம்மை வலுப்படுத்தும்.

தேஜகூ., மாநிலம் முழுவதும் முன்னேறிவிட்டது. நமது பாதை சாதனையையும் மாநிலத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் நமது பார்வையையும் பார்த்து மக்கள் எங்களுக்கு இந்தப் பெரும் பெரும்பான்மையை அளித்துள்ளனர். இந்த அபார வெற்றிக்கு முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தேஜகூ., குடும்பத்தின் எங்கள் சகாக்கள் சிராக் பாஸ்வான், ஜீதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோரை வாழ்த்துகிறேன்.

அயராது உழைத்த தேஜகூ.,யின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது வளர்ச்சி மாதிரியை முன்வைக்க பொதுமக்கள் மத்தியில் சென்று எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு பொய்களுக்கும் கடுமையாக பதிலடி கொடுத்தார்கள். நான் அவர்களை முழுமையாக மனதார பாராட்டுகிறேன்!

இனி வரும் காலங்களில் பீகாரின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, மாநில கலாச்சாரத்தின் புதிய அடையாளத்தைத் தர கடுமையாக உழைப்போம். இங்குள்ள இளைஞர் சக்தியும் பெண் சக்தியும் இணைந்த வளமான வாழ்க்கைக்கு, அபரிமிதமான வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வோம். – என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி!

நன்றி தெரிவித்த நிதிஷ்குமார்

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ்குமார், அரசு மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கும், பிரதமர் மோடியின் ஆதரவுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார், மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

2025ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் எங்கள் அரசின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையை வைத்து அதை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும், தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடியிடம் இருந்து கிடைத்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன். நமது முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தியதின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி மிக பெரும் பெரும்பான்மையை பெற்றிருக்கிறது.

மகத்தான இந்த வெற்றிக்கு, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களான சிராக் பாஸ்வான், ஜிதன்ராம் மஞ்ஜி, உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுடன் பீஹார் மேலும் முன்னேறும். நாட்டின் வளர்ந்த மாநிலங்களில் பீஹாரும் விரைவில் இடம்பெறும் – என்று நிதிஷ்குமார் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தைப் பின்தொடர்வோம்

income tax raid - 2026

— பல்பீர் பூஞ்ச்
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

வருமான வரித்துறை தன் வரம்பை மீறி செயல்படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தலையங்கம் மூலமாக குற்றம் சாட்டியுள்ளது. அது தாங்கி பிடிக்கின்ற அரசு சாரா அமைப்புகள் என்ஜிஓ க்கள் மீதும் அதே குற்றச்சாட்டை வைக்க முடியுமே ? அவற்றில் பல எந்த காரணத்தை சொல்லி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றார்களோ அந்த நோக்கத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத விஷயங்களுக்கு அந்த பணத்தை மடை மாற்றி விடவில்லையா ?

ஜனநாயகத்தில் குடிமை சமுதாயத்தின் செயல்பாடுகளையும் கருத்து சுதந்திரத்தையும் வருமான வரித்துறை கட்டுப்படுத்துகிறது என்கிறது அந்த தலையங்கம் . கோமணத்தை தலையில் கட்டிக் கொண்டுள்ளது போல் இருக்கிறது இது. வெளிநாட்டு நிதி உதவி பெறும் பல என் ஜி ஓ க்கள் ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அரசின் முடிவுகளாக , திட்டங்களாக செயல்படுத்தப் படுவதை கெடுக்கின்றன. இது ஜனநாயக வழிமுறைகளை சிதைப்பது ஆகாதா ? சட்ட புத்தகத்தில் நுண்ணிய எழுத்துக்களில் இருப்பதைக் கொண்டு என்ஜிஓ க்கள் குறி வைக்கப்படுகின்றன என்கின்றது அந்த தலையங்கம். இந்த வாதமே துர்நாற்றம் வீசுவதாக இருக்கிறது. சட்டத்தினால் வலியுறுத்தப்படும் நெறிமுறைகள் பின்பற்றியாக வேண்டும்.

என் ஜி ஓ க்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தங்களை அரசு எப்போதும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறது என்ற பயம் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என கூறுகிறது அந்த தலையங்கம். அதாவது வெளிநாட்டு நிதி உதவி பெறும் என் ஜி ஓ க்களை கூர்ந்து கவனிக்க கூடாது என்கிறது அது. ஏன் கண்காணிக்க கூடாது? வெளிநாட்டு நிதி உதவி பெறும் என் ஜி ஓ க்களையும் இதர என்ஜிஓ க்களையும் அரசு வெவ்வேறு விதமாக நடத்த வேண்டும் என்கிறதா இந்தியன் எக்ஸ்பிரஸ்?

கட்சி வேறுபாடுகளை கடந்து பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த என் ஜி ஓ க்களின் செயல்பாடுகளை பற்றி கண்டனம் எழுப்பி உள்ளனர். 2005 இல் நடந்த 18 வது கட்சி மாநாட்டில் சிபிஎம் தலைவர் பிரகாஷ் கராத், அரசுக்கு வெளிநாட்டு நிதி உதவி என்பது ஒரு வகை. அரசு சாரா அமைப்புகள் -என்ஜிஓ- என்கின்ற தன்னார்வ அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி உதவி என்பது வேறொரு வகை. பல என்ஜிஓ க்களின் செயல்பாடுகளுக்கு ஏராளமாக வெளிநாட்டு நிதி உதவி வருவதைப் பற்றி நம்முடைய கட்சி தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது. அது போல் மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் நிதி உதவி மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிப்பதற்காகவும் இடதுசாரி இயக்கங்களிடமிருந்து மக்களை விலக்கி வைப்பதற்காகவும் அளிக்கப்படுகிறது, என்று கூறியுள்ளார்.

1984 ல் கராத் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் , வெளிநாட்டு நிதி உதவி பெறும் எல்லா அமைப்புகள் மீதும் சந்தேக பார்வை வேண்டும். அவற்றின் நோக்கங்கள் , செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும், என்று எழுதியுள்ளார்.

இதுபோன்ற அமைப்புகள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுப்பது அடிப்படை அற்றது என்றும் ‘சதி செய்யும் வெறிகொண்டு அலைபவை’ என்று என்ஜிஓ களை சித்தரிப்பது சரியல்ல என்றும் தலையங்கம் கூறுவது சரிதானா ? இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் ஆழ்ந்த சதி நோக்கத்துடன் அவை செயல்படுவதை 2019 ல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியான ஒரு ஆய்வு , இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவின் பொருளாதாரம் வானுயர பறந்து கொண்டிருப்பது ஏன் ? என்ற தலைப்பில் வெளியான ஆய்வு கட்டுரை, அம்பலப்படுத்தி உள்ளது.

அந்த கட்டுரையில், 1985 இல் இந்தியா மற்றும் சீனாவின் தனிநபர் வருமானம் ஒரே மாதிரியாக 293 டாலராக இருந்தது. ஆனால் இப்போது சீனாவின் தனிநபர் வருமானம் 13 ஆயிரம் டாலராகவும் இந்தியா வெறும் 2700 டாலராகவும் இருக்கிறது. 2024 இல் இந்தியாவின் மொத்த உற்பத்தி 4 டிரில்லியன் ஆக இருக்கும் வேளையில் ஏறத்தாழ அதைவிட ஐந்து மடங்கு அதிகமாக 18.5 டிரில்லியன் டாலராக சீனாவின் மொத்த உற்பத்தி உள்ளது.

இரண்டு அண்டை நாடுகள் இடையே ஏன் இந்த பெரிய இடைவெளி ? இரண்டு நாடுகளிலும் கட்டப்பட்ட அணைகளை பற்றிய ஒப்பீடு – ஒன்று இந்தியாவில் கட்டப்பட்டது. மற்றது சீனாவில் கட்டப்பட்டது – இந்தியாவை விட சீனா வேகமாக தாவியதத்திற்கான காரணத்தை விளக்குகிறது. உலகில் மிகப்பெரிய புனல் மின்சக்தி திட்ட அணையான மூன்று ஆழ்ப்பள்ளத்தாக்கு அணையை சீனா 15 ஆண்டுகளில் கட்டியது. அதைவிட மிகச்சிறிய சர்தார் சரோவர் அணையை கட்ட இந்தியாவுக்கு 56 ஆண்டுகளானது . ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த அந்த திட்டத்தினால் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்ட பல தனிநபர்கள் பலனடைந்தனர்.

2012 பிப்ரவரி மாதம் ஒரு அறிவியல் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ‘உதாரணமாக, கூடங்குளத்தில் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். அணுமின் உற்பத்தி திட்டம் பிரச்சனையில் சிக்கிக் கொண்டது. அதற்கு காரணம் அமெரிக்காவில் உள்ள என் ஜி ஓ க்கள்தான் என்று நான் கருதுகிறேன். நம் நாட்டின் மின் சக்தி உற்பத்தி அதிகரிப்பதை அவை விரும்பவில்லை’, என்று கூறியுள்ளார். எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் இந்தியாவின் திட்டத்தில் அமெரிக்க என் ஜி ஓ க்களுக்கு என்ன நாட்டம்? ஏன் அந்த திட்டத்தை எதிர்க்க நிதி உதவி செய்தன ?

அண்மையில் , சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் சீன எல்லையில் உள்ள சாலைகளை 10 மீட்டருக்கு அகலப்படுத்த மோடி அரசு உச்சநீதிமன்றத்தின் அனுமதியை கோரியது . சிட்டிசன்ஸ் ஃபார் கிரீன் டூன் என்ற என் ஜி ஓ அந்த திட்டத்தை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தை அணுகியது. பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. சீன நாட்டு எல்லையில் சீன அரசு மேற்கொண்டு வரும் கட்டுமான நடவடிக்கைகளை பற்றிய விவரமான அறிக்கையை மத்திய அரசு சீல் இடப்பட்ட உறையிலிட்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன் பிறகு உச்ச நீதிமன்றம் சாலை விரிவாக்கத்திற்கு சார்தாம் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. தீர்ப்பு அளித்த போது, பாதுகாப்பு படையினரின் அடிப்படை கட்டமைப்பு தேவைகளைப் பற்றி இந்த நீதிமன்றத்திற்கு இரண்டாவது பார்வையில்லை…. (அதாவது எல்லையோரங்களில் சாலை கட்டமைப்பு அவசியம்), என்று தன் கருத்தை தெரிவித்திருந்தது.

திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள விழுஞ்சியம் சர்வதேச துறைமுக திட்டம் வந்த போது உள்ளூர் மீனவர்கள் மிகப்பெரிய அளவில் அதை எதிர்த்தனர். 2022 ஆண்டு 23 தேதி கேரளா சட்டமன்றத்தில் மாநில முதல்வர் பினராய் விஜயன், இப்போது நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளூர் மீனவர்களால் தன்னெழுச்சியாக நடத்தப்படுவதாக கருத முடியவில்லை. சில பகுதிகளில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை பார்க்கும் போது அவை உள்நோக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்றே கருத வேண்டி உள்ளது, என்று குறிப்பிட்டார்.

குஜராத்தில் சர்தார் சரோவர் அணைக்கு எதிர்ப்பு, கூடங்குளத்தில் அணு மின் உலைகள் நிறுவ எதிர்ப்பு, தமிழ்நாட்டில் காப்பர் உற்பத்தி ஆலையை மூட நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டங்கள், கேரளாவில் துறைமுகம் அமைக்கும் பணிகளை நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், உத்தரகாண்டில் சார்தாம் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு ஆகிய எல்லாவற்றிலும் ஒரு விஷயம் பொதுவாக உள்ளது. இவை எதுவும் தன் எழுச்சியான எதிர்ப்புகள் அல்ல. மாறாக பினராய் விஜயன் சொன்னது போல், ‘திட்டமிட்டு எழுப்பப் படுபவை’. வெளிநாட்டு நிதி உதவி பெறும் என் ஜி ஓ க்களால் எதிர்க்கப்படும் திட்டங்களை பட்டியலிட்டால் அது மேலும் விரிவாகிக் கொண்டே போகும்.

மத்திய புள்ளியியல் அமைப்பின் அறிக்கையின்படி நம் நாட்டில் 30 லட்சம் என்ஜிஓ க்கள் இருக்கின்றன. நாட்டிலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட இது இரண்டு மடங்கு அதிகம் ! உலகிலேயே மிகப்பெரிய பள்ளி கல்வி திட்டத்தைக் கொண்ட இந்தியாவில் 14.89 லட்சம் பள்ளிகள் உள்ளன.

2023 அக்டோபர் 14 தேதி நிலவரம் படி வெளிநாட்டு நிதியுதவி பெற பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ க்களின் எண்ணிக்கை 16,686. 2017 – 18 ஆண்டு முதல் 2021- 22 ஆண்டு வரை வெளிநாட்டு நிதி உதவி பெற பதிவு செய்யப்பட்ட என்ஜிஓ களுக்கு 88,882 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

இந்திய அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தொகையை வெளிநாட்டினர் ஏன் செலவிடுகிறார்கள்? ஓசி சோறு என்பது இல்லை, என்ற சொலவடையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

நவீன யுத்தங்கள் எல்லையில் மட்டுமே நடப்பதில்லை. போலிகள் மூலமாக புதிய காலனித்துவம் செயல்படுகிறது. எதிரிகளை கண்காணிக்கும் போது நம்முடனே இருக்கும் எதிரிகளை கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

கட்டுரையாளர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் அமைப்பின் முன்னாள் தலைவர்.

சுசீந்திரத்தில் தெப்பக்குளம் மதில் சரிந்தால் பரபரப்பு..

1001063259 - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரத்தில் தாணுமாலயாமூர்த்தி கோயில் தெப்பக்குளம் உள் சுற்று சுவர் சரிந்து விழுந்தது .இதனால் இக்கோயிலுக்கு வந்து பக்தர்கள் உள்ளூர் மக்கள் பதட்டமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரத்தில் உலக பிரசித்தி பெற்ற சிவன் ஹரி பிரம்மா மூவரும் இணைந்து காட்சி தரும் தாணுமாலயாமூர்த்தி கோயில் உள்ளது.இக்கோயிலை ஒட்டியுள்ள தெப்பக்குளத்தில் உள்ள சுற்று சுவரில் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.இதனால் பரபரப்பு நிலவுகிறது. குளத்தில் ஆழமாக மண் எடுப்பதாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையாலும், தெப்பக்குளத்தை சுற்றியுள்ள மதில் சுவர்கள் வலுவிழந்து இடிந்து வருகின்றன.

மதில் பல இடங்களில் பிளவுகள் தோன்றி, பெரிய கற்கள் கீழே விழத் தொடங்கியதை கண்ட மக்கள் பதட்டமடைந்துள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்து, உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
சுசீந்திரம் தெப்பக்குளம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தி யுள்ளார்.

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயர் சுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தில் நடைபெறும் தூர் வாரும் பணிகள் முறையாக நடைபெறாததால், பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. தொடர்ந்து மழை நீடித்தால் அருகிலுள்ள குடியிருப்போர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, அரசு போர்கால அடிப்படையில் தூர் வாரும் பணிகளையும், சுவர் சீரமைப்பையும் உடனடியாக தொடங்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (13.11.2025) சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த அவர், தூர் வாருதலில் சரியான திட்டமிடல் இல்லை என்றும், இரவு நேரங்களில் கல் மற்றும் வண்டல் மண் எடுத்ததாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். எவ்வளவு ஆழம் தோண்டப்பட்டது, எவ்வளவு மண் மற்றும் பாறைகள் எடுக்கப்பட்டன, சுற்றுச்சுவர் ஏன் இடிந்தது போன்ற விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை வெளிப்படையாக விளக்க வேண்டும் என அவர் கூறினார்.

ஒரு மாதத்தில் தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழா வர உள்ளதால், பொறியாளர்களை கொண்டு புதிய சுற்றுச்சுவர் திட்டம் தயாரித்து உடனடியாக சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்றும், தவறுகள் செய்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து மழை பெய்தால் மேலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அரசு மற்றும் அறநிலையத்துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தெப்பக்குளத்தின் பிற சுற்றுச்சுவர்களையும் பரிசோதித்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.