Home Blog Page 5842

மதுரை காவல் ஆணையாளரிடம் தினதந்தி நிர்வாகம் புகார் !

 
மதுரையில் தினதந்தி பத்திரிகையின் புகைப்படக்கலைஞரை பணிசெய்ய விடாமல் தடுத்து திட்டி தாக்கி அவரது உடமைகளை பறிமுதல் செய்த காவல்ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளரிடம் தினதந்தி நிர்வாகம் புகார் அளித்துள்ளது .
 
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் கதிர் அறுப்பு வைபவ விழா இன்று 23-01-2016 நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் அருள்மிகு மீனாட்சி அம்மன் சுவாமி வீதி உலா மேல அனுப்பானடி பகுதியில் சென்று கொண்டு இருந்ததுஅந்த நிகழ்வை மதுரை தினதந்தி பத்திரிகையின் புகைப்படக்கலைஞர் சரவணன் இன்றுசுமார் காலை 11.45 மணி அளவில் புகைப்படசெய்தி பதிவு செய்ய சென்றார்.
 
அப்போது அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் சேதுமணி மாதவன் என்பவர் அநாகரீகமான தகாத வார்த்தைகளை பயன்படுத்தி சரவணனை நீ பத்திரிகையில் வேலைபார்த்தால் என்ன பெரிய …… ( பதிவிட முடியாதா வார்த்தைகள்) திட்டி தாக்கி அவரை பணிசெய்ய விடாமல் தடுத்து நீ என்னை ஒன்றும் புடுங்க முடியாது, என்று மிரட்டல் விடுத்துள்ளார்.மேலும் அவரது புகைப்படக்கலைஞரின் இரு சக்கர மோட்டார் சைக்கிள், ஏடிஎம் கார்டு, மணி பர்ஸ், மற்றும் தினதந்தி பத்திரிகையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்று விட்டார்.
 
இந்த நிலையில் காவல்ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளரிடம் தினதந்தி நிர்வாகம் புகார் அளித்துள்ளது .
 

நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்கள்: பிரதமர் மோடி வெளியிட்டார்

புது தில்லி:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மர்ம மறைவு தொடர்பாக மத்திய அரசின் காப்பகத்தில் இருந்த நூறு ரகசிய கோப்புகளை நேதாஜியின் பிறந்தநாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்திலும் செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசியப் படை என்ற மாபெரும் விடுதலைப் போர்ப் படையை உருவாக்கி உலகப் புகழ் பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இரண்டாம் உலகப் போரின் நிறைவில், ஜப்பான் சரணடைந்த தகவல் வெளியானபோது, அவர் விமான விபத்தில் இறந்து விட்டதாகக் கூறப்பட்டது. இதனால், அவரது மரணத்தில் சில சந்தேகங்களை எழுப்பப்பட்டது.

மேலும், அவர் விமான விபத்துக்குப் பிறகு உயிருடன் இருந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவர் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியானதால் சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய உண்மை என்ன என்பதில் மர்மம் நிலவியது. அடிக்கடி அவரைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும்.

அந்த வரிசையில் கடந்த சில தினங்களாக இங்கிலாந்து இணைய தளம், சுபாஷ் சந்திர போஸின் மரணம் நிகழ்ந்த தேதி, மற்றும் அவர் உடல் எரியூட்டப்பட்டு இறுதிச் சடங்கு நடந்த தேதி போன்ற விவரங்களை உரிய ஆவணங்களுடன் வெளியிட்டது. தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மகள் அனிதா போஸ், அந்த இணைய தள ஆவணங்களை பார்வையிட்டு, அவை நம்பும்படி இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேதாஜியின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அவர் மறைவு தொடர்புள்ள அனைத்து ஆவணங்களையும் வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, நேதாஜியின் பிறந்த நாளான ஜன.23 சனிக்கிழமை இன்று அவர் மரணம் தொடர்பான 100 கோப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.

கோப்புகளை வெளியிட்ட பின்னர் சுமார் அரைமணி நேரம் அவற்றில் உள்ள குறிப்புகளை படித்துப் பார்த்தார் மோடி. பின்னர் நேதாஜியின் குடும்பத்தாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கெனவே, நேதாஜி மரணம் தொடர்பாக  64 முக்கிய ஆவணங்களை மம்தா பாணர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசும் தமது ஆவணக் காப்பகத்தில் இருந்து 100 ரகசிய கோப்புகளை எடுத்து வெளியில் விட்டுள்ளது.

இது குறித்து மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட செய்திகள்…

 

வள்ளலார் நினைவு இல்லம்: கொடுத்த வாக்கை அரசு நிறைவேற்ற ராமதாஸ் வேண்டுகோள்

 சென்னை: வள்ளலார் நினைவு இல்லம் விவகாரத்தில் கொடுத்த வாக்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டில் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு கடந்த 5 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை  நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்கள் நன்றாக  அறிவர். ஆனால், கடந்த முறை தமிழகத்தை ஆண்ட போது அளித்த வாக்குறுதிகளிலும் பலவற்றை ஜெயலலிதா அரசு நிறைவேற்றவில்லை. அரசின் இந்த அலட்சியத்தால் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வடலூர் இராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லம் பொலிவிழந்து நாற்றமடிக்கும் இடமாக மாறியுள்ளது.

வள்ளலாரின் வாழ்க்கையில்  வடலூர் சத்திய ஞான சபையை விட மிகவும் முக்கியமான இடம் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் தான். அந்த பெருமை மிகு இல்லம் சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் 32/14 என்ற இலக்கத்தில் தான் உள்ளது. வள்ளலார் 2 வயது குழந்தையாக இருந்த போதே அவரது  தந்தை காலமாகிவிட்டார். அதன் பின்னர் வள்ளலார் உள்ளிட்ட குழந்தைகளுடன் இந்த வீட்டில் தான் அவரது தாயார் குடியேறினார். தமது 51 ஆண்டு கால வாழ்நாளில் 33 ஆண்டுகளை இவ்வீட்டில்தான் வள்ளலார் கழித்தார். திருவருட்பாவின் முதல் 5 திருமுறைகளை இங்கு தான்  எழுதினார்; உருவ வழிபாடு கூடாது என்ற சிந்தனை அவருக்கு உதித்ததும் இங்கு தான்.

இத்தகைய சிறப்புமிக்க இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்று இராமலிங்க அடிகளாரின் வழிநடப்பவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். சட்டப்பேரவையிலும் இதுகுறித்து பா.ம.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பியதன் பயனாக கடந்த 04.04.2003 அன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அப்போதைய அமைச்சர் செ.செம்மலை, வள்ளலார் வாழ்ந்த ஏழுகிணறு இல்லம் நினைவிடம் ஆக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 13 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதை செயல்படுத்த இன்றுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. இந்த விஷயங்களையெல்லாம் சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நாளில்  அறிக்கை வெளியிட்ட நான், வள்ளலார் வாழ்ந்த சென்னை ஏழுகிணறு இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான பணிகளை தாமதமின்றி தொடங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியிருந்தேன்.

தமிழகத்தில் வள்ளலாரின் வழியை பின்பற்றி வரும் லட்சக்கணக்கான பொதுமக்களின் விருப்பமும் இதுவாகவே உள்ளது. ஆனால், தமிழக அரசு இக்கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை. எந்த உயிரையும் கொல்லக் கூடாது, புலால் உண்ணக்கூடாது, யாரையும் துன்புறுத்தக் கூடாது, பசித்தவருக்கு உணவளிக்க வேண்டும், பெற்றோரை மதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அவரின் போதனைகள் உலககெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதும் சமயங்களைக் கடந்து வள்ளலாரின் வழி நடப்பவர்கள் அவரது நினைவாக எண்ணற்ற பணிகளை செய்துவருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்கவர் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்றி அவருக்கு பெருமை சேர்க்க கிடைத்த வாய்ப்பை கடந்த 13 ஆண்டுகளாக  அரசு தட்டிக் கழித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இராமகிருஷ்ண பரமஹம்சர் எவ்வாறு போற்றப்படுகிறாரோ, அதே அளவுக்கு வள்ளலாரும் உலகம் முழுவதும் போற்றப்படுகிறார். ஆனால், பரமஹம்சர் மற்றும் அவரது சீடர் விவேகானந்தரின் நினைவாக  அமைக்கப்பட்டுள்ள இல்லங்களில் பத்தில் ஒரு பங்கு கூட வள்ளலாரின் நினைவாக அமைக்கப்படாதது வருத்தமளிக்கிறது.  வள்ளலாரின் ஏழுகிணறு இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு இப்போது வரை செயல்படுத்தப்படாததால், அவருக்கு நினைவு இல்லமே இல்லாமல் போய்விடுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. வள்ளலார் வாழ்ந்த இல்லம் இப்போது லீலாவதி என்பவரிடம் உள்ளது. வேறு சிலரிடம் வாங்கிய பணத்தை அவரால் திருப்பித் தர முடியாததால் பணம் கொடுத்தவர்கள் வள்ளலார் வாழ்ந்த  வீட்டை பல பிரிவுகளாக பிரித்து வீடுகளாகவும், அச்சகமாகவும் மாற்றியுள்ளனர். பராமரிப்பு இல்லாததால் அவ்வீடு சுகாதாரக்கேடு நிறைந்ததாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மாறிவிட்டது.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் வாழ்ந்த இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பா.ம.க. உட்பட பல்வேறு தரப்பினரும் கோரி வந்த நிலையில் அதை தமிழக அரசு அலட்சியம் செய்தது. அதன்விளைவு அந்த இல்லத்தை கட்டுமான நிறுவனத்தினர் வாங்கி கடந்த ஆண்டு இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்காவிட்டால் அதற்கும் இதேநிலை ஏற்படலாம். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க வள்ளலார் வாழ்ந்த  ஏழுகிணறு இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் தொடக்கம்

சென்னை:

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இன்று சென்னையில் துவங்குகின்றது.

இதுகுறித்த அரசு செய்தி குறிப்பில்,

“படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குறுந்தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூபாய் 5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சியில் இருந்து விலக்கு அளித்து 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். வேலைவாய்ப்பு முகாம், சென்னை கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கில் இன்று தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் தாலுகாவுக்கும், நாளை பெரம்பூர், அயனாவரம் தாலுகாவுக்கும் நடக்கிறது.

சென்னை கிண்டி தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் 25 ஆம் தேதி, எழும்பூர், அமைந்தகரை தாலுகாவுக்கும், 27 ஆம் தேதி மயிலாப்பூர், வேளச்சேரி தாலுகாவுக்கும் நடக்கிறது. சென்னை கிண்டி தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் 28 ஆம் தேதி கிண்டி, மாம்பலம் ஆகிய தாலுகாவுக்கு நடக்கிறது.

மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் உள்ளவர்களும், இதர தாலுகாக்களில் உள்ளவர்களும் இந்த முகாம்களில் கலந்து கொள்ளலாம்.

இதுகுறித்த விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர், தொழில் வணிகத்துறை அலுவலகத்தை 044-22501620, 22501622 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

சிறப்பு முகாமில் கலந்துகொள்ள 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 18 வயது பூர்த்தி ஆகியவற்றுக்கு சான்றாக பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள், முகவரிக்கு குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் ஆகியவற்றுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மாற்றிய கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “நவீன பராசக்தி” !

 
கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “பராசக்தி” திரைப்பட கதை வசனத்தை இது, இன்றைய பராசக்தி! எனும் தலைப்பில் எவரோ செமையாக நக்கல், நையாண்டி செய்து நவீனமாக மாற்றியமைத்து வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளார் .
 
வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “பராசக்தி” கதை வசனமாவது :
 
இது, இன்றைய பராசக்தி!
 
கருணாநிதி-
 
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமுமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப்பாதையிலே சர்வ சாதாரணமாக காணக்கூடிய ஜீவன்தான்.
 
தமிழக அரசியலில் குழப்பம் விளைவித்தேன். முதல்வரை தாக்கி அவதூறாக எழுதினேன் என்றுகுற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் . நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்… நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று… இல்லை!நிச்சயமாக இல்லை!! தமிழக அரசியலில் குழப்பம்விளைவித்தேன். அரசியல் கூடாது என்பதற்காக அல்ல. அரசியல் எங்கள் குடும்பத்தை விட்டு அடுத்தவர்களின் கைகளுக்கு செல்லக்கூடாது என்பதற்காக. அதிமுக ஆட்சியை தாக்கினேன்.. ஊழல் கூடாது என்பதற்காக அல்ல. எங்களுக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக.
 
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் குடும்பநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு இனத்தை பெருக்குகிறதே மீன்! அதைப்போல.
 
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் நான் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே.. தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
 
தமிழ்நாட்டிலே திருவாரூரரில் திருக்குவளையில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம். தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சென்னை!
 
டிக்கெட் எடுக்க வழியின்றி டிரைன் ஏறி திருவாரூரில் இருந்து வந்த என்னை இந்த மாநிலத்தையே விலைக்கு வாங்குமளவிற்கு வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது.
 
இதோ என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களே அம்மையார். அவர்களால் தான் நான் ஆட்சியை இழந்தேன், அடுத்தவர்களின் ஆட்சியை சகித்து கொள்ளும் பழக்கம் எனக்கு என்றும் இருந்ததில்லை. அதனால் தான் ஆட்சியை பழி சொன்னேன். தற்பொழுது இங்கு வந்து நிற்கிறேன்.
 
ஆட்சி இல்லாததால் ராஜாத்தி அம்மாள் கனிமொழியை காப்பாத்த என்னை மிரட்டுகிறார். பயந்து போய் கோபாலபுரம் சென்றேன் அங்கே ஸ்டாலின் தலைவர் பதவி கேட்டு என்னை துரத்தினார் அலறி அடித்து அறிவாலயம் வந்தேன். அங்கே அழகிரி அதிகாரம் கேட்டு அதட்டினார்.. ஓடினேன் ஓடினேன் அன்பழகன் வீட்டிற்கு..
 
அங்கும் வந்து நின்றார் தயாநிதி தாத்தா எதாவது தா தா என்று. ஓடினேன் ஓடினேன் ஒருவர் வீடு பாக்கியில்லாது. ஓடினேன் பதவி இருந்திருந்தால் நான் ஓடியிருப்பேனா?
 
என் ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? ஆள விட்டார்களா என்னை ?
 
அரசு வக்கீல்:
 
குற்றவாளி வழக்கிற்கு சம்பந்தமில்லாமல் பேசுகிறார்..
 
கருணாநிதி-
 
இதுவும் வழக்கோடு சம்பந்தம் உள்ளதுதான்..
 
என்னை ஆட்சிக்கு எதிராக பேச வைத்தது யார் குற்றம்? ஊழலின் குற்றமா? அல்லது ஊழலின் பெயரைச் சொல்லி என் ஆட்சியை மாற்றிய தமிழர்களின் குற்றமா? பணம் பறிக்கும் எங்கள் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் எங்களின் குற்றமா? பகுத்தறிவின் பெயரால் மஞ்சள் துண்டை போர்த்தி கொண்டு போலிப் பகுத்தறிவாதி களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? பெரியாரின் குற்றமா? அல்லது பெரியாரின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை கருணாநிதிகளும் வீரமணிகளும் குறையப்போவதில்லை.
 
இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்..
 
நீதிபதி-
 
வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது..
 
கருணாநிதி-
 
இதுக்கு தான் இவ்வளவு பில்டப் விட்டேனா… குற்றவாளிகள் நாங்களல்ல எத்தனை மனைவி, துனைவி, இனைவி வச்சுகிட்டாலும்,எத்தனை குற்றம் செஞ்சாலும் இன்னும் என்னை தலைவனாக நினைக்கும் முழு மூடர்கள் தான் குற்றவாளிகள்.
 
என்று கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “பராசக்தி” திரைப்பட கதை வசனம் நவீனமாக மாற்றிய அமைத்து சமூக ஊடக உலகில் வைரலாக பரவிவருகிறது .

இந்திய குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கி கைதான ஈரான் நாட்டு காதல் ஜோடி !

 
ஈரான் நாட்டில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்த காதல் ஜோடியை இந்திய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்னர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் இருந்து கோவா வழியாக வந்த விமானத்தில், ஈரான் நாட்டை சேர்ந்த முகமது ரிஷா என்பவரும், ஆஸ்மி மன்சூ என்ற பெண்ணும் உள்நாட்டு பயணிகளாக சென்னைக்கு வந்தனர்.
 
 
குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் வழக்கத்தைவிடசோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.இந்நிலையில், பன்னாட்டு விமான நிலையத்துக்கு உள்நாட்டு பயணிகளாக வந்த ஈரான் நாட்டை சேர்ந்த காதல் ஜோடிகளின் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
 
காதல் ஜோடிகளின் விமான பயணச்சீட்டு, மற்றும் “போர்டிங் பாசை” குடியுரிமை அதிகாரிகள் கேட்ட போது அவர்களிடம் டிக்கெட் மட்டும் இருந்தது. விமானத்தில் வரும் போது “போர்டிங் பாசை” கீழே போட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
 
 
இதையடுத்து 2 பேரின் பாஸ்போர்ட்டையும் அதிகாரிகள் சோதனை செய்தபோது ஈரான் நாட்டு பாஸ்போர்ட்டு மற்றும் இஸ்ரேல் நாட்டு பாஸ்போர்ட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
 
 
அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் காதல் ஜோடி என்றும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்ததாகவும் கணவன் மனைவியாக சுற்றிய தாங்கள் சென்னையில் இருந்து லண்டன் செல்ல உள்ளதாகவும் கூறினர்.
 
 
ஆனால் அவர்கள் இருவரும் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த காதல் ஜோடி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.காவல்நிலையத்தினர் போலி பாஸ்போர்ட்டு வழக்குப் பதிவு செய்து ஈரான் நாட்டை சேர்ந்த காதல் ஜோடி இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

விஜயதாரணியை கழற்றி விட்டு ஜான்ஸிராணியை ஆதரித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் !

 
காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியின் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பறித்து அந்த பதவியை எம்.ஜான்ஸிராணிக்கு வழங்க கடந்த சில தினங்களுக்கு முன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரிந்துரை செய்தாக கூறப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜனார்த்தன் துவிவேதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலின் பேரில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்படுவதாகவும் அந்த பதவிக்கு எம்.ஜான்ஸிராணி நியமிக்க பட்டுள்ளதாகவும் ஜனார்த்தன் துவிவேதி அதிரடியாக அறிவித்துள்ளார்.
 
தமிழக மகளிர் காங்கிரஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜான்சி ராணி (39), திண்டுக்கல் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். இவர், நிலக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மறைந்த ஏ.எஸ். பொன்னம்மாளின் பேத்தி ஆவார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் ஜான்சிராணி பொறுப்பு வகித்து வந்தார். தற்போது, சென்னை போரூரில் வசித்து வருகிறார்.
 
பொன்னம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, உடல்நலம் விசாரிப்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தொடர்பு கொண்டதன் மூலம், ஜான்சிராணிக்கு முக்கியத்துவம் கிடைத்தது. அதன் எதிரொலியாக, தற்போது மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்துள்ளது.
 
கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிருக்கு அதிகாரமளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளங்கோவனின் படத்தை சிறியதாக வைத்தது தொடர்பாக அவர் ஆதரவாளர்கள் விஜயதாரணியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மகளிர் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தியின் பேனர்களையும் கிழித்து எறிந்தனர்.
 
இது தொடர்பாக நவம்பர் 27-ஆம் தேதி இளங்கோவனை நேரில் சந்தித்து, விஜயதாரணி புகார் தெரிவித்தார். அப்போது விஜயதாரணி யை இளங்கோவன் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து விஜயதாரணி தில்லியில் புகார் செய்தார். மகளிர் காங்கிரஸை சேர்ந்த சாந்தாஸ்ரீநி, மானசா ஆகியோர் காவல்துறையினரிடம் இளங்கோவனுக்கு எதிராகப் புகார் கொடுத்தனர். அதன் பின் சோனியா காந்தி, ராகுல்காந்தியின் உத்தரவின்பேரில் அந்தப் புகார் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
அதிரடியாக நீக்கம் தொடர்பாக விஜயதாரணி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :-.
 
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், என் மீது நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் அநீதியாகும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்னைத் தரக்குறைவாகப் பேசினார். என் பக்கம் உள்ள நியாயம் தொடர்பாக சோனியாகாந்தியிடம், ராகுல்காந்தியிடமும் நேரில் தெரிவித்தேன். காங்கிரஸ் கட்சியில் உள்ள பிற தலைவர்களும் எனக்கு ஆதரவாக மேலிடத்தில் பேசினர். ஆனால், எதற்காக என் மீது நடவடிக்கை எடுத்தனர் எனத் தெரியவில்லை.
 
சோனியாகாந்தியையும், ராகுல்காந்தியையும் நேரில் சந்தித்து, என் நீக்கம் தொடர்பாக விளக்கம் கேட்பேன். அவர்கள் சொல்லும் பதிலுக்கேற்பவே, என் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். என்னைப் பதவியிலிருந்து நீக்கம் செய்தின் பின்னணியில் இளங்கோவன்தான் உள்ளார் என்றார்.
 
விஜயதாரணி நீக்கம் தொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்க ள் கருத்து கேட்டதற்கு அவர் கூறியுள்ளதாவது :-.
 
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணியை பதவியிலிருந்து நீக்கம் செய்ததால் இனி காங்கிரஸ் பொலிவுபெறும் என்றார்.

www.dhinasari.com இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் ஆண்ட்ராய்டு ஆப் அறிமுகம் !

தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் வாசகர்களே வணக்கம்..

 

உங்களுடைய பெரும் ஆதரவுடன் இயங்கி வரும் நமது செய்தித் தளத்தில் ஜாதி, மத, அரசியல் வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தை கருத்தில் கொண்டு எவர் மனதும் புண்படாமல் தவறுகளை சுட்டிக் காட்டும் நோக்கில் அரசியல், விவசாயம், சிறுகதை, தொழில்நுட்பம், ஆன்மிகம், மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு, சினிமா, கவிதைகள், நகைச்சுவை, சமையல் குறிப்புகள், பொது தகவல்கள் மற்றும் செய்திகள், கட்டுரைகள், போன்றவைகளை தொடர்ந்து வழங்கி வருவதை அனைவரும் அறிந்ததே.!

 

வாசகர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஆண்ட்ராய்டு கைப்பேசியில்ஆப் மூலம் செய்திகளை வழங்க எனும் நோக்கத்தில் www.dhinasari.com இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் ஆப்பை வெளியிடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

 

மேலும் நமது செய்தித் தளத்தில் வெளியாகும் செய்தி பதிவிலேயே அந்த செய்திக்குரிய உங்களுடைய கருத்தினை பதிவிட அனுமதி அளித்து அதை உலகிற்க்கு வெளிகாட்ட வேண்டும் எனும் நோக்கில் வசதி செய்யப் பட்டுள்ளது.

 

நமது தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் ஆப்பை ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் dhinasari என பதிவிட்டு பதிவிறக்கம் செய்து பயன் படுத்தலாம். அல்லது கீழே கொடுக்கப் பட்டுள்ள QR-Code அல்லது லிங்கை பயன்படுத்தியோ பதிவிறக்கம் செய்து பயன் படுத்தலாம்.

 

என்றும் உங்களுடைய பெரும் ஆதரவை தொடர்ந்து நாடும் …

தினசரி இணைய தமிழ் செய்தித் தளம். நன்றி.!

 

தினசரி ஆண்ட்ராய்டு ஆப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணையதள லிங்கை பயன்படுத்துக.

 

https://play.google.com/store/apps/details?id=com.dhinasari.dhinasari&hl=en

குற்றாலத்தில் தேசிய வாக்களர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய வாக்களர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்திய அரசு கள விளம்பர அலுவலகம், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் திரிபுரசுந்தரி தலைமை வகித்தார் களவிளம்பர உதவி அலுவலர்  போஸ்வெல் ஆசிர்  வரவேற்றார்
நிகழ்ச்சியில் தென்காசி கோட்டாட்சித் தலைவர் வெங்கடேஷ் பேசுகையில்  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி  25ம் நாளை தேசிய வாக்காளர்  தினமாக இந்திய தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்கள் அல்ல. வாக்காளர் பட்டியலில் பெயர்  உள்ளவர்கள் மட்டுமே வாக்காளர்கள் ஆவார் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18து நிரம்பிய அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர்  பட்டியலில் படிவம் 6ல் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் .
ஓவ்வொரு கல்லூரியிலும் கேம்பஸ் அம்பாசிடர்கள் இரண்டு பேர்; நியமிக்கப்பட்டுள்ளனர்;. அவர்களைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் சேர்த்திட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.
துணைத் வட்டாசியர் கவிஞர் ராஜேந்திரன் வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட பொதுமக்களிடையே எவ்வாறு விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும் என்பது பற்றி விளக்கினார். மாணவிகள் வாக்காளர் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிகளை பேராசிரியை  ஆண்டாள் இசக்கிராணி தொகுத்து வழங்கினார்  மாணவி முத்துக்குமாரி நன்றி கூறினார்.

அட்டி படத்திற்காக அஜித் ரசிகராக மாறிய மா.கா.பா.ஆனந்த்

E5 என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இமேஜனரி மிஷின்ஸ்  தயாரித்து  பரிநிதா புரொடக்‌ஷன்ஸ் சுந்தர்.சி.பாபு வழங்கும்  திரைப்படம் “அட்டி”.   

விஜயபாஸ்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் சுராஜ் அவர்களிடம் மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி “அட்டி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜூன். இவர் மெய்யழகி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

இசை : சுந்தர்.சி.பாபு. இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நாடோடிகள், ஆகிய வெற்றிப்படங்களின் வரிசையில் “அட்டி” திரைப்படமும் தமக்கு மாபெரும் வெற்றியை தரும் வகையில் பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையில் அற்புதமாக இசையமைத்துள்ளார்.

வானவராயன் வல்லவராயன் படத்தை அடுத்து மா.கா.பா. ஆனந்த் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் படம் “அட்டி”. சென்னையை மையமாக கொண்ட இக்கதைகளத்திற்கேற்ப தன்னை உருவாக்கிக்கொண்டு கதையின் நாயகனாக மிக அற்புதமாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக அஷ்மிதா, கதைக்கு ஏற்ற அறிமுகம். மிகவும் சிறப்பாக தனது கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

அட்டி திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி நடித்துள்ளார். இவர் இதுவரை நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேடத்திலும் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். அட்டி திரைபடத்தில் மீசை இல்லாமல் அற்புதமான தோற்றத்துடன் வருகிறார்.

இவர்களுடன் முன்னனி நட்சத்திரங்கள் நான் கடவுள் ராஜேந்திரன், அருள்தாஸ், அழகு, ராம்ஸ், மகாநதி சங்கர், யோகிபாபு, கலை, மிப்பு, தங்கதுரை ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதைகரு : சென்னையின் மையப்பகுதிகளான காசிமேடு, ராயபுரம், ஐஸ்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் யதார்த்தமான வாழ்க்கையையும் அன்றாடம் அவர்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களையும் சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் விவரிக்கும் கதைக்களமே “அட்டி”. இதில் கதாநாயகன் கானா பாடகராகவும், அஜித் ரசிகராகவும் நடித்துள்ளார். கதாநாயகன் தன்னை சுற்றி நடக்கும் ஒரு சம்பவத்தை தன் நண்பர்கள் உதவியோடு எப்படி கையாளுகிறார் என்பதே கதையின் கரு.