சென்னை: பொதுத் துறைகள் வேலைவாய்ப்பில் தமிழருக்கு துரோகம் இழைப்பதா என்று என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கு 104 இளநிலை பொறியியல் உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டு, ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கு இந்தியாவின் அனைத்து பகுதியை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுக்கு எதிரானது ஆகும். மத்திய அரசுக்கு சொந்தமான பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலைக்கு குறைவான பணியிடங்கள் நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு தான் நிரப்பப்படுகின்றன. அதிகாரிகள் நிலையிலான பணியிடங்களுக்கு மட்டுமே அகில இந்திய அளவில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உதாரணமாக, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ளிழிநிசி) மும்பைப் பிரிவில் 24 வகையான பணியிடங்களுக்கு 205 பணியாளர்களை தேர்வு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு இப்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த பணிகளில் சேருவதற்கான முக்கிய நிபந்தனையே விண்ணப்பதாரர்கள் மராட்டியத்தில் உள்ள ஏதேனும் ஒரு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது தான். இதன் மூலம் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இப்பணிகளில் சேர முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆந்திரத்தின் காக்கிநாடா மற்றும் ராஜமுந்திரியில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக(ளிழிநிசி) ஆலைகளில் 23 வகையான பணிகளுக்கு 183 பேர் அண்மையில் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அந்நிறுவனம் அறிவித்திருந்த முக்கிய நிபந்தனையும் விண்ணப்பதாரர்கள் ஆந்திராவிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது தான். அதன்படியே அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணிகளில் சேர்க்கப்பட்டனர். மற்ற மாநிலங்களிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களிலும் இதேமுறையில் தான் ஆட்தேர்வு நடக்கிறது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் அறிவித்த பணியிடங்களும், சென்னை பெட்ரோலிய நிறுவனம் அறிவித்த பணியிடங்களும் அதிகாரிகள் நிலைக்கு கீழானவை தான். எனவே, மராட்டியம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்கப் பட்டதைப் போல சென்னை பெட்ரோலிய நிறுவனமும் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்திருப்பவர்கள் மட்டும் தான் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். தமிழகத்தின் இயற்கை வளங்களால் தான் சென்னை பெட்ரோலிய நிறுவனம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறது. அந்நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு தான் வழங்குகிறது. அந்த நிறுவனம் வெளியேற்றும் கழிவு மற்றும் மாசுவால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் தமிழக மக்கள் தான் தாங்கிக் கொள்கின்றனர். ஆனால், அந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பயன்களை மட்டும் மற்ற மாநிலத்தவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது நியாயமானதல்ல. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், சென்னை பெட்ரோலிய நிறுவனம் ஆகிய இரண்டுமே பெட்ரோலிய அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் போது ஒரு பொதுத்துறை நிறுவனம் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தான் வேலை என்பதும், இன்னொரு நிறுவனம் எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வேலைக்கு சேரலாம் என்பதும் முரண்பாடாகும். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகின்றன. ஒரே நாட்டில் வெவ்வெறு மாநிலங்களுக்கு வெவ்வெறு அளவுகோல்களை கடைபிடிப்பது முறையல்ல. எனவே, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலைக்கு கீழான பணிகள் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு பொது அறிவிப்பு வெளியிட வேண்டும். அதேபோல், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் 50 விழுக்காடு இடங்கள் அந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். – என்று கூறியுள்ளார்.
மூன்று புதிய படங்களுக்கு நாயகன், நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு
சென்னை: ஹிந்து ரோஹித் ரமேஷ், “காக்கா முட்டை” இயக்குனர் மணிகண்டன், GA ஹரிகிருஷ்ணன் இணைந்து 3 புதிய படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த கௌரவம், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த ஹிந்து ரங்கராஜன் அவர்களின் பேரன் ரோஹித் ரமேஷ் தனது WTF எண்டர்டெயின்மெண்ட் மூலமாக, இந்த ஆண்டின் சிறந்த குழந்தைகளுக்கான படமாக தேர்வு செய்யப்பட்டு 2 தேசிய விருதுகளை பெற்ற காக்கா முட்டை படத்தின் இயக்குனர் M.மணிகண்டன் மற்றும் பல படங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்த G.A. ஹரி கிருஷ்ணனுடன் இணைந்து 3 படங்களை தயாரிக்கிறார். முதல் படமாக காக்கமுட்டை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சங்கையா எழுதி இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது. விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கான நாயகன், நாயகி மற்றும் தொழிற்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது.
“விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான கூடமாகி விட்டது!”
“விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான கூடமாகி விட்டது!” கட்டுரையாளர்-ரா.கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஸ்ரீசரணர்கள் காஞ்சி வியாஸச்ராந்தலேயேச்வரர் ஆலயத்தில் தரிசனம் கொடுத்து வந்த காலம். ஒருநாள் உணர்ச்சிப் பெருக்கை உடலெல்லாம் தேக்கிய ஓர் ஆந்திர தம்பதி ஒரு பெண் குழந்தையுடன் வந்தார்கள். தம்பதியில் ஸதியாக இருந்த பெண்மணி புகழ்பெற்ற பத்திரிகையாளரான ‘ஆந்திரப்ரபா’ ஆசிரியரும், காந்திஜியிடம்’நெருக்கம்’என்று சொல்லுமளவுக்குப் பழக்கம் கொண்டவருமான நீலம் ராஜு வேங்கடசேஷய்யாவின் மகளார்.. தேர்ந்த காந்தியவாதியாக இருந்த நீலம் ராஜு பின்னாளில் பெரியவாளின்பரம பக்தரானார். அவர் குடும்பம் முழுதும் பெரியவாள் பக்தியில் மூழ்கித் திளைத்தது. அன்று அந்த அம்மணியும் அவரது பதியும் திருச்சந்நிதியில் தங்கள் உணர்ச்சியை,அதற்குக் காரணமான நிகழ்ச்சியை உரையாக்கிக் கொட்டினர். அவர்கள் வசித்தது லண்டனில். அங்கிருந்து அவர்கள் வேறேதோ தேசத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பெரியதொரு கோளாறு ஏற்பட்டது. ‘ஸேஃப் லாண்டிங்’குக்கு வாய்ப்பேயில்லை என்பது போன்ற ஆபத்து நிலை என்று விமான ஓட்டிகள் அறிவித்து விட்டனர். பிரயாணிகளின் மனநிலையைச் சொல்ல வேண்டுமா?. இத் தம்பதியின் மனம் பெரியவாளிடந்தான் ஓடி, அதைக் கெட்டியாகக் கட்டிப் பிடித்து ஆபத்து நிவாரணம் கோரியது. அவர்களுக்கு மஹானின் காப்பில் இருந்த நம்பிக்கையுறுதி காரணமாக, அஞ்சிக் கொண்டிருந்த மற்ற பயணிகளுக்கும், தங்களது இந்திய தேசத்திலுள்ள ‘ஸேஜ் ஆஃப் காஞ்சி’யைத் தெய்வத்தின் அவதாரமாகவே வர்ணித்து,ஆபத்பாந்தவரான அவரை வேண்டினால் விபத்து ஓடிப் போய்விடும் என்று தைரியமூட்டினர். உயிராபத்து என்றால் உய்வுக்கு எதைத்தான் பிடித்துக் கொள்ள மாட்டார்கள்? விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான கூடமாகி விட்டது! சிறிதுபோதில் அதுவரை விமான இயக்குனர்களின் முயற்சிகளுக்கு வளைந்து கொடுக்காத கருவிகள் அதிசயமாக ஒத்துழைக்கலாயின! ‘மிராகிள்’ என்று அவர்கள் வியக்குமாறு விபத்து விலகி விமானம் சொஸ்தமாக நிலத்தில் இறங்கியது! சக பயணிகள் யாவரும் தம்பதியரைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்தினர்.தம்பதியர் பெரியவாளுக்குக் கடிதம் எழுதினாலோ,அல்லது அடுத்தமுறை அவரைக் காணும் போதோ தங்கள் எல்லாருடைய இதயபூர்வமான நன்றி நமஸ்காரங்களை அவருக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். தம்பதியோ உடனே இந்தியாவுக்குப் பறந்துவிட வேண்டும்; உயிர் காத்த மனித தெய்வத்துக்குப் பாத பூஜை செய்ய வேண்டும்;அப்புறந்தான் உணவருந்த வேண்டுமென்று பிரதிக்ஞை செய்து கொண்டனர். (தொடரும்) (இதனுடைய ஸ்வாரஸ்ய நிகழ்வு நாளை தொடரும்)
மல்லி மஸ்தான் பாபு உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
ஹைதராபாத்: இந்திய மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கடந்த மாதம் அர்ஜெண்டினாவில் மலைப் பகுதியில் மேற்கொண்ட பயணத்தின்போது மல்லி மஸ்தான் பாபு உயிரிழந்துள்ளார். நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது மஸ்தான் பாபு உடலுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் இறுதி மரியாதை செய்தனர். முன்னதாக, அர்ஜெண்டினாவில் இருந்து பாபுவின் உடல் நேற்று தில்லி வந்து பின்னர் ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் இன்று அவரது உடல் சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சுதந்திர கட்சி உறுப்பினர்களை சந்திக்கிறார் இலங்கை அதிபர் சிறீசேன
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன நாளை பிற்பகல் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, வாக்குகளை பெற்றுத்தர இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானம் குறித்து அறிவிப்பது முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் அதிபரின் செயலகத்தில் இடம்பெறும் இந்தச் சந்திப்பில், தேர்தல் முறை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது. 19ஆவது திருத்தச் சட்டம் குறித்து வரும் ஏப்.27 மற்றும் 28ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறுகிறது. அன்று பிற்பகல் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திர தேவி சிலையை தகர்ப்போம்: மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்
நியூயார்க்: அமெரிக்காவின் அடையாளமாகத் திகழும் சுதந்திரதேவி சிலைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். நியூயார்க்கின் லிபர்டி தீவில் பிரசித்தி பெற்ற சுதந்திரதேவி சிலை உள்ளது. இந்தச் சிலையை பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இங்கே வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சிலையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக திடீரென மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சுதந்திரதேவி சிலையில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாகவும், சற்று நேரத்தில் அது வெடித்துச் சிதறும் என்றும் கூறியுள்ளார். இதனால் அங்கே பீதி ஏற்பட்டது. மிரட்டல் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மோப்ப நாய்களுடனும், வெடிகுண்டு நிபுணர்களுடனும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், அங்கே தீவிர சோதனை நடத்தப்பட்டும், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதனால் இது வெறும் புரளி என்று தெரியவந்தது.
நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவித்தார் சுஷ்மா ஸ்வராஜ்
புது தில்லி: நேபாள நிலநடுக்கத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான உதவிகளும் கிடைக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரக எண்கள்: +977 9851107021, 9851135141 தில்லியில் உள்ள உதவி எண்கள்: கட்டுப்பாட்டு அறை எண்கள்: +91 11 2301 2113, +91 11 2301 4104 +91 11 2301 7905 Email : controlroom@mea.gov.in
Indians in Nepal may please contact our mission in Kathmandu. Our mission will provide you all help. — Sushma Swaraj (@SushmaSwaraj) April 25, 2015
நேபாள இந்திய தூதரக வளாகத்தில் வீடு இடிந்து ஊழியர் மகள் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கட்டடங்கள் பல இடிந்து விழுந்தன. இதில், இந்திய தூதரக வளாகத்தில் இருந்த வீடும் இடிந்து விழுந்தது. அதில், தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர் மதன் என்பவரின் மகள் பலியானார். இந்தத் தகவலை இந்தோனேசிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை தாயகம் திரும்பிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இடிபாட்டில் சிக்கிய ஊழியர் மதனின் மனைவி கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
A house in our Embassy complex collapsed. Unfortunately, the daughter of our employee Madan has died. His wife’s condition is serious. — Sushma Swaraj (@SushmaSwaraj) April 25, 2015
ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வேண்டுமாம்: விடைத்தாள் திருத்தும் பணி பாதிப்பு
சென்னை: அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக சென்னையில் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அறிவித்துள்ள அகவிலைப்படியை 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர் இதனால் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்பட்டன.
விவசாயிகள் தற்கொலை: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு
புதுதில்லி: இந்தியாவில் வேளாண்மைத் துறையில் விவசாயிகள் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது என்றும், இதை அரசு தடுக்க வேண்டும் என்றும் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

