சென்னை: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுபதி கமிஷன் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு தொடர்ந்து தன்னிடம் விசாரணை நடத்த தடை உத்தரவு பெற்றார். இந்நிலையில் நீதிபதி ரகுபதி கமிஷன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு நீதிபதி ரகுபதி கமிஷன் அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம்: அடுத்த மாதம் செயல்படத் தொடங்கும்!
துர்காபுர்: இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் அடுத்த மாதம் 14ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று தெரிகிறது. மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இந்த விமான நிலையத்தை பிஏபிஎல் என்ற பெங்கால் ஏரோட்ரோபொலிஸ் பிராஜக்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்குகிறது. இந்த விமான நிலையம் அனேகமாக ஏப்ரல் மாதம் 14ம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துர்காபுரில் மாநில போக்குவரத்து செயலர் அலபன் பந்தோபாத்யாய கூறுகையில், புதிய விமான நிலையத்திற்கான பணிகள் நிறைவடைந்து விட்டன, மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் ஒப்புதலை எதிர்நோக்கியுள்ளோம் என்றார். காஸி நஸ்ருல் இஸ்லாம் விமான நிலையம் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த விமான நிலையம், வங்க காலண்டரின்படி, வருட முதல் நாளான ஏப்ரல் 14ம் தேதி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஐசிசி தரவரிசை: தோனி 2 இடங்கள் முன்னேற்றம்
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கேப்டன் தோனி 2 இடங்கள் முன்னேறி 8-ம் இடத்தில் உள்ளார். பேட்டிங் தரவரிசையில் ஷிகர் தவான் 7-ம் இடத்திலும், விராட் கோலி 4ஆம் இடத்திலும் உள்ள்னார். தென்னாப்பிரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸ் 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். அவருக்குப் பின்னர் இலங்கையின் சங்ககரா 861 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளார். இலங்கையின் தில்ஷன் 5-ம் இடத்திலும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில், கேன் வில்லியம்சன், ஷிகர் தவன், தோனி, மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி ஆகியோரும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா 17-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 25-ம் இடத்திலுள்ளார். பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில், முதல் பத்து இடங்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் எவரும் இல்லை. பந்துவீச்சு தரவரிசை விவரம்:
போலீஸ் என மிரட்டி காதலனுடன் சென்ற பெண்ணைக் கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு வலைவீச்சு
காரைக்குடி: காரைக்குடியில் தாங்கள் போலீஸ் என்று கூறி மிரட்டி, காதலனுடன் சென்ற பெண்ணை மிரட்டி கடத்திச் சென்று பலாத்காரம் செய்த 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். காரைக்குடி கல்லூரிச் சாலையில் மொபைல் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் ஒரு பெண்ணும் அவரது காதலனான தேவகோட்டை ரஸ்தா காளிதாசும் (26) நேற்று இரவு 7 மணிக்கு மேல் தனியாகச் சென்றுள்ளனர். வேலங்குடி செல்லும் சாலையில் ரயில்வே டிராக் அருகே இருவரும் தனியாகப் பேசி கொண்டிருந்தனராம். இந்த சாலையின் இருபுறமும் முந்திரிக் காடு உள்ளது. அப்போது அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தாங்கள் “போலீஸ்’ எனவும், “அய்யா’ கூப்பிடுகிறார் வண்டியில் ஏறு எனவும் அந்தப் பெண்ணை மிரட்டி ஏற்றியுள்ளனர். உடன் வந்த காளிதாசையும் மிரட்டி விரட்டியுள்ளனர். இதன்பின்னர் அந்தப் பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரிடம் இருந்த இரண்டரை பவுன் தங்கச் செயினையும் பறித்துள்ளனர். இதனிடையே அவர்களிடம் இருந்து தப்பி வந்த காளிதாஸ் செட்டிநாடு போலீசில் சென்று புகார் செய்தார். இதை அடுத்து, டி.எஸ்.பி.,முத்தமிழ் தலைமையில் போலீசார் காட்டுக்குள் சென்று தேடினர். இந்நிலையில், அதிகாலை 4 மணிக்கு, அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றவர்கள், காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் அவரை விட்டுவிட்டு தப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தான் வேலை செய்த மொபைல் கடை உரிமையாளருக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். அவர் போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில், டி.எஸ்.பி., முத்தமிழ், அப்பெண்ணை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தப்பியோடிய 2 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
சுங்கக் கட்டணக் கொள்ளையை ஒழிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் கோரிக்கை!
சென்னை தமிழ்நாட்டில் சுங்கக் கட்டணக் கொள்ளையை ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: நெடுஞ்சாலைகளில் 100 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். அதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மாநிலங்களவையில் கூறியிருக்கிறார். ஏற்கனவே 62 சுங்கக் கட்டண சாவடிகளில் வசூல் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கான சாலை மத்திய மற்றும் மாநில அரசுகளின் நெடுஞ்சாலைத் துறைகளால் பராமரிக்கப்படுகின்றன. அதில் சுங்கக் கட்டண வசூலுக்கென 41 மையங்கள் அமைக்கப்பட்டு தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தமது விருப்பம்போல அவ்வப்போது சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வருகிறார்கள். இந்தக் கொள்ளையின் காரணமாக பேருந்துக் கட்டணங்கள் உயர்வது மட்டுமின்றி சரக்குக் கட்டணம் உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது. எந்தவொரு வாகனத்தைப் பதிவுசெய்வதென்றாலும் வாகனத்தின் விலையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு சாலை வரியாக மொத்தமாக வசூலிக்கப்படுகிறது. அதே வாகனத்துக்கு மீண்டும் சாலையில் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானதாகும். அரசு தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போடப்படும் சாலைகளின் செலவுக்காகத்தான் கட்டணம் வசூலிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் செலவை ஈடுகட்ட எத்தனை ஆண்டுகளுக்குக் கட்டணம் வசூல் செய்வார்கள் என்பதை அரசாங்கம் சொல்வது இல்லை. இது முழுக்க முழுக்க தனியாரின் கொள்ளைக்கு வழிவகுப்பதாகவே உள்ளது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் நடைபெறும் சுங்கக் கட்டணக் கொள்ளைக்கு உடனடியாக தமிழக அரசு முடிவுகட்டவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தில்லி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் ஆஜர்
புது தில்லி: தில்லி நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் அரவிந்த் கேஜ்ரிவால்! அவதூறு வழக்கில் தில்லி நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நேரில் ஆஜரானார். அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக தில்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கேஜ்ரிவால், சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, பிற்பகல் 2 மணிக்குள் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று பிற்பகல் நீதிமன்றம் கூடியபோது அரவிந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, யோகேந்திரா யாதவ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவு வரும் மே மாதம் 2-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் மே 2 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
ஹரியானா தேவாலயத் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் ஹிஸ்ஸார் அருகே கட்டப்பட்டு வந்த கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு குழுவால் சேதப் படுத்தப் பட்டது. அங்கிருந்த சிலுவைக்கு பதிலாக அனுமன் சிலையை அங்கு வைத்துச் சென்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தேவாலயத்தின் பாதிரியார் சுபாஷ் சந்த் அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக அனில் கோத்ரா என்ற முக்கியக் குற்றவாளியை இன்று போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். நேற்று சட்டப் பேரவையில் இது குறித்து விளக்கம் அளித்தபோது, தேவாலயம் சட்ட விரோத நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. அந்த மதகுருவுக்கும் சில உள்ளூர் நபர்களுக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்த தேவாலயம் தாக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் ஆசிரியரே பொறுப்பு
நிலம் கையகப்படுத்தும் மசோதா: சோனியா தலைமையில் கண்டனப் பேரணி
புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கண்டித்து சோனியா தலைமையில் செவ்வாய்க் கிழமை இன்று மாலை தில்லியில் பேரணி நடந்தது. குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று சோனியாவும் சில எம்பிக்களும் மனு கொடுத்தனர். முன்னதாக, நேற்று சென்ற பேரணிக்கு உள்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறிச் சென்ற காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசாருடன் மோதலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்றும் சோனியா தலைமையில் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இந்தப் பேரணி நடந்தது. சோனியா தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள், இளைஞர் காங்கிரஸார் திரண்டு சென்றனர். இதில், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரிக் கட்சிகள் உள்பட 11 எதிர்க் கட்சிகளை சேர்ந்தவர்களும் பேரணியில் கலந்து கொண்டனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100 எம்.பி.,க்கள் இந்தப் பேரணியில் சென்றனர். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு 1 கி.மீ., முன்பே அவர்கள் தடுத்த நிறுத்தப் பட்டனர் சோனியாவும் 26 எம்.பி.,க்கள் மட்டும் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று மனு கொடுத்தனர். முன்னதாக, இன்று பிற்பகல் வரை பேரணிக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை. பேரணிக்கு சற்று நேரம் முன்னர்தான் அனுமதி கொடுத்தது.

