Home Blog Page 6220

ஆரியங்காவு பாலருவிக்கு செல்ல வனத்துறை தடை

palaruvi வனவிலங்குகள் நடமாட்டம் எதிரொலியாக ஆரியங்காவு பாலருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

 கேரள மாநிலம் ஆரியங்காவில் பாலருவி உள்ளது. இங்கு எப்போதும் தண்ணீர் விழும். இதனால் தினமும் அங்கு சுற்றுலா பயணிகள் குவிவார்கள். குறிப்பாக குற்றாலம் சீசன் காலங்களில் பாலருவியில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது போதிய மழை இல்லாததால் பாலருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மேலும் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து கேரள வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, தற்போது பாலருவியில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது. மேலும் கோடை காலம் என்பதால் வனப்பகுதியிலும் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக பாலருவிக்கு வரும் சூழ்நிலை உள்ளது. இந்த சமயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்தால் அவர்களுக்கு ஆபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது.
அதனை கருத்தில் கொண்டே பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்கள் வரை பாலருவிக்கு செல்லவோ, அருவியில் குளிக்கவோ யாரும் செல்லக்கூடாது. மே மாதம் கடைசியில் தொடங்கும் தென்மேற்கு பருவ மழையை பொறுத்துதான் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்க குழந்தைகளுடன் சென்ற தாய்

isis-children ரஷ்ய பெண் ஒருவர் தன் குழந்தைகளை ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்த்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் செசன்யா மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7, 8 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நெதர்லாந்தின் மான்செஸ்டர் நகரில் வசித்து வந்த இவர்களிடையே ஏற்பட்ட பிணக்கால் இருவரும் பிரிந்துள்ளனர். அந்தப் பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் தனது 2 பெண் குழந்தைகளை, கிரீஸ் நாட்டுக்கு விமானம் மூலம் கடத்திச் சென்றுள்ளார். அங்கிருந்து சில ஐரோப்பிய நாடுகளைக் கடந்து, ஐ.எஸ்-யின் தலைமையகமாக விளங்கும் சிரியாவின் ரக்கா நகரத்துக்குச் சென்றுள்ளார். அங்கே தனது குழந்தைகளை ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துள்ளார். இந்தத் தகவலை நெதர்லாந்து அரசு உறுதி செய்துள்ளது. https://www.youtube.com/watch?v=bEuBoRAJBRw

ஜாட் இனத்தை ஓபிசியில் சேர்த்தது செல்லாது

புதுதில்லி: ஜாட் இனத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. ஜாட் இனத்தை ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தருண் கோகோய், நாரிமன் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு இன்று அளித்த உத்தரவில், ஜாட் இனத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகக் குறிப்பிட்டுள்ளது.

மனைவியை சூட்கேஸில் வைத்து கடத்த முயன்ற கணவர் சிக்கினார்

போலந்து நாட்டில் மனைவியை சூட்கேசில் அடைத்து வைத்து கடத்த முயன்ற கணவர் ரயில் நிலையத்தில் சிக்கினார். போலந்து நாட்டில் பெலாரஸ் எல்லையில் உள்ள தெரஸ்போல் ரயில் நிலையத்துக்கு ஒருவர் மிகப் பெரிய சூட்கேசை எடுத்து வந்தார். அதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அது குறித்து விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த சூட்கேசைத் திறந்து பார்த்தனர். உள்ளே 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். உயிருடன் இருந்த அவரைக் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த அதிகாரிகள் அவர் குறித்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் கணவன், மனைவி என்றும் ஆண் பிரான்ஸையும், பெண் ரஷியாவையும் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர்கள் போலந்தில் இருந்து பெலாரஸ் செல்ல முயன்றனர். மனைவிக்கு பாஸ்போர்ட் இல்லாததால், கணவர் அவரை சூட்கேசில் வைத்து கடத்தியது தெரிய வந்தது.

விரைவில் சந்திக்கிறேன்: பிரசாந்த் பூஷனுக்கும் யோகேந்திர யாதவுக்கும் கேஜ்ரிவால் பதில்

புது தில்லி: உங்கள் இருவரையும் விரைவில் சந்திக்கிறேன் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ள பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் இருவருக்கும் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் பதிலளித்துள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திக்க சில தினங்களுக்கு முன் யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷன் விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், விரைவில் சந்திக்கவுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ் மற்றும் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் கட்சியில் இருந்து இரு தலைவர்களும் ஓரங்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகிய இரு தலைவர்களின் சார்பில் கேஜ்ரிவாலுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று அனுப்பபட்டது. இதற்கு பதிலளித்த கேஜ்ரிவால் இருவரையும் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வன்முறை- உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: அவைத் தலைவர்

திருவனந்தபுரம்: கடந்த 13ம் தேதி கேரள சட்டப் பேரவையில் வெடித்த வன்முறை சம்பவத்துக்கு, வன்முறையில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள சட்டப்பேரவைத் தலைவர் சக்தன் கூறியுள்ளார். நம் நாட்டின் எந்தவொரு சட்டப்பேரவையிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்காது. அந்த நாள் சட்டப் பேரவையின் கருப்பு தினமாகும். அந்த சம்பவத்துக்காக நாம் தலைகுனிய வேண்டும், மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். 13ம் தேதி சட்டப் பேரவையில் என்ன நடந்தது என்பதை உலகமே வேடிக்கை பார்த்துள்ளது. இதனால் புகழ்பெற்ற சட்டப் பேரவைக்கே இழுக்கு ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார் அவர்.

சீன அதிபரை விட மோடியின் சம்பளம் அதிகம்!

உலகின் இரண்டாவது பொருளாதார வலிமையான நாடு என்று பெயரெடுத்த சீனாவின் அதிபரை விட மோடியின் சம்பளம் அதிகமாம். சர்வதேச நாடுகளில் பிரதமர். அதிபர்களின் சம்பளம் குறித்து ஓர் ஆய்வறிக்கை நடத்தப்பட்டது. தகவல்கள் பெறும் சட்டத்தின் அடிப்படையில் உள்ளூர் ஊடகம் பெற்ற தகவல்படி, மோடியின் சம்பளம் ரூ. 16 லட்சம் என்றும், அது வருடத்துக்கு 30 ஆயிரம் டாலருக்கும் சற்று அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் அதிபர் ஸீ ஜிங் பிங் கின் சம்பளம் வருடத்துக்கு 22 ஆயிரம் டாலராம். அதுவும் இந்த வருடத் துவக்கத்தில் 60% அதிகரித்த பிறகாம்! இந்தப் பட்டியலில் 4,03,700 டாலர் சம்பளம் பெற்று வரும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் முதல் இடத்தில் உள்ளார். 4 லட்சம் டாலர் சம்பளமாகப் பெற்று வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரண்டாம் இடத்தில் உள்ளார். அவருக்கு கூடுதலாக 50 ஆயிரம் டாலர் வரிவிலக்கும் உண்டு. கடந்த 2001ல் புஷ் பெற்ற சம்பளத்தை விட தற்போதைய நிலையில் இரண்டு மடங்கு இது. ஜெர்மனியின் மார்கல் 234,383 டாலரும், பிரிட்டிஷ் பிரதமர் 214,782 டாலரும் பெறுகின்றனராம்.

மேகதாது அணை திட்டத்தை தடுக்கக்  கோரி மார்ச் 23ல் பா.ம.க. போராட்டம்

சென்னை:
மேகதாது அணை திட்டத்தை தடுக்கக் கோரி மார்ச் 23ல் பா.ம.க. போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சி இன்று வெளியிட்ட அறிக்கை:

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் காற்றில் பறக்கவிட்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருக்கிறது. மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகளை கடந்த நவம்பர் மாதத்தில் கோரிய கர்நாடக அரசு, இப்போது ஒப்பந்தப்புள்ளி தயாரிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ததுடன், அதற்காக பட்ஜெட்டில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கடந்த 4 மாதங்களாக கர்நாடக அரசு தீவிரப் படுத்தி வரும் நிலையில், அதைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  நாடாளுமன்ற மக்களவையில் 37 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அ.தி.மு.க. இந்த பிரச்சினை குறித்து தனியாக தீர்மானம் கொண்டு வரவோ அல்லது தனி விவாதத்திற்கு முன்மொழியவோ முயற்சி மேற்கொள்ளவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அண்மையில் மக்களவையில் இப்பிரச்சினை குறித்து பேசிய போது, அவரை பேசவிடாமல் தடுக்கும் நோக்குடன் கர்நாடக மக்களவை உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். அவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அன்புமணி இராமதாசு அவரது கருத்துக்களைப் பதிவு செய்தார். அப்போது, தமிழக நலன் சார்ந்த இந்தப் பிரச்சினையில் அவருக்காக குரல் கொடுக்கக்கூட அ.தி.மு.க. உறுப்பினர்கள் முன்வரவில்லை. இப்பிரச்சினையில் அதிமுகவின் அக்கறை இவ்வளவு தான்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் பாசனத்திற்காக காவிரி நீரை நம்பியுள்ள 14 மாவட்டங்கள் பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, போதிய நீர் ஆதாரம் இல்லாத மாவட்டங்களுக்கு காவிரி ஆற்றிலிருந்து தான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. புதிய அணை கட்டி முடிக்கப்பட்டால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும். எனவே, தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், எதிர்கால அரசியல் கணக்குகளை கருத்தில் கொண்டு இப்பிரச்சினையில் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் விரைவில்  அமைக்கப்படும் என்று மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி அறிவித்த நிலையில், அதற்கு கர்நாடக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த அறிவிப்பை மத்திய அரசு கிடப்பில் போட்டு விட்டது.
தமிழக அரசும் இந்த பிரச்சினையில் பொறுப்பில்லாத அணுகுமுறையைத் தான் கடைபிடித்து வருகிறது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 4 மாதங்கள் ஆகியும் அதை விசாரணைக்குக் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் தருவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதில் எடுக்கப்படும் முடிவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து தெரியப்படுத்த  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் ஏற்கவில்லை.
இத்தகைய சூழலில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் 48 டி.எம்.சி. கொள்ளளவுள்ள  புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் வரும் 23 ஆம் தேதி திங்கட்கிழமை  தொடர் முழக்கப் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது. சென்னையில் நடைபெறும் தொடர் முழக்கப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமை வகிப்பார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையிலும், அரியலூரில் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ. குரு தலைமையிலும் போராட்டம் நடைபெறும். சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையிலும் அறப்போராட்டம் நடைபெறும்.

கைவினை கம்பளத் துறை திறன் மையம்: தில்லியில் நாளை துவக்கம்

புது தில்லி: கைவினை மற்றும் கம்பளத் துறை திறன் மையம் என்ற புதிய நிறுவனத்தை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (தனிபொறுப்பு), நாடாளுமன்ற விவகார துறையின் இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி நாளை துவக்கி வைப்பார். 20வது கைவினை ஏற்றுமதி விருது வழங்கும் விழாவின் போது இந்த புதிய நிறுவனம் துவக்கி வைக்கப்படும். சமூதாயத்தின் அடித்தளத்தில் உள்ள கலைஞர்கள், கைவினை பொருட்கள் மற்றும் கம்பள பொருட்களின் ஊழியர்கள் ஆகியோரின் திறன் மேம்பாட்டை இந்நிறுவனம் ஊக்குவிக்கும். அவர்கள் மேம்பட்ட குறைகளை கையாளவும், உற்பத்தியை பெருக்கவும் இது உதவும். தொழில்சார் தரத்தை உயர்த்தவும், ஊழியர்கள் சந்தையில் உள்கட்டமைப்பை அமைப்பதும், சான்றிதழ் மற்றும் ஆய்வு முறையை அறிமுகப்படுத்துவதும், கலைஞர்களுக்கு கைவினை லைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டிற்கு அனைத்து விதமான வழிகாட்டுதல் அளிப்பது ஆகியவற்றிக்கு இந்த மையம் பொறுப்பாகும். இநத் மையம் புதுதில்லியில் இருந்து செயல்படும். பிரதமர் நரேந்திர மோடி திறன் மேம்பாட்டிற்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை வைத்து இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒரே மாதிரியான, சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திறன் மேம்பாட்டின் முக்கியதுவத்தை பிரதமர் எடுத்துரைத்துள்ளார். ஏற்கனவே, செப்டம்பர் 28, 2014ல் பிரதமர் தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்ததாவது: திறன் மேம்பாட்டிற்கு நாங்கள் முக்கியதுவம் கொடுத்துள்ளோம். திறன் மேம்பாட்டிற்காக நாங்கள் தனி அமைச்சகம் அமைத்துள்ளோம். ஏற்கனவே ஆகஸ்ட் 31, டுவிட்டர் வலையதளத்தில் பிரதமர் தெரிவித்ததாவது:- இந்தியா இளைஞர்களின் தேசம் திறன் மேம்பாட்டிற்கு நாங்கள் முக்கியதுவம் கொடுப்போம். தரம், குறையோ அல்லா பொருள், ஒழுக்கம் என அனைத்துக்கும் நாங்கள் முக்கியதுவம் அளிப்போம்: பிரதமர் இதன் அடிப்படையில் இந்த மையம் நாளை ஆரம்பிக்கப்படுகிறது. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (தனி பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகார துறையின் இணை அமைச்சர் இம்மையத்தை துவக்கி வைப்பார். மத்திய ஜவுளி துறையின் இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. சந்தோஷ் குமார் கங்வார், மத்திய ஜவுளி துறையின் செயலர் திரு. எஸ்.கே. பாண்டா, கைவினை பொருட்கள் துறையின் வளர்ச்சி / மேம்பாட்டு ஆணையர் திரு. எஸ்.கே. பிஸ்வாஸ், தொழிற்துறையின் நிபுணர்கள், கைவினை பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். புது தில்லியில், நாளை மாலை 6.30 மணிக்கு இந்த மையம் துவங்கப்படும்.

ஹெட்போன் அணிந்த புத்தர் படம்: பேஸ்புக்கில் வெளியிட்டவருக்கு இரண்டரை ஆண்டு சிறை

மியான்மர் நாட்டின் யங்கூன் நகரில் வி கேஸ்ட்ரோ என்ற இரவு விடுதியை நடத்தி வரும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பிலிப்ஸ் பிளாக்வுட் ( வயது 32) தனது இரவு விடுதி விளம்பரத்திற்காக கடந்த டிசம்பர் மாதம் புத்தர் ஹெட்போன் அணிந்திருப்பது போல் ஒரு போஸ்டரை வடிவமைத்து பேஸ்புக்கில் வெளியிட்டார். இந்த போஸ்டருக்கு மியான்மரில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது புத்தரையும் புத்த மதத்தையும் அவமதிப்பது போல் உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மியான்மர் அரசு அந்த இரவு விடுதியை மூட உத்தரவிட்டது. மேலும் விடுதியின் உரிமையாளர், பிளாக்வுட், மியான்மியரைச் சேர்ந்த துன் துரியன், ஹுட்டுட் கோகோ லிவின் ஆகிய பணியாளர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது புத்த மதத்தை அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நியூசிலாந்தைச் சேர்ந்த பிளாக் வுட்டுக்கு இரண்டரை வருட சிறைத் தண்டனையும் மியான்மியரை சேர்ந்த 2 பேருக்கு 2 வருட சிறைத் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பிளாக் வுட்டுக்கு தண்டனை அளித்திருப்பதற்கு சர்வதேச மனித உரிமைகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.