spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?வேல் வாங்கும் பொழுது வியர்வை துளிரும் அதிசயம்..!

வேல் வாங்கும் பொழுது வியர்வை துளிரும் அதிசயம்..!

- Advertisement -

நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் நகரில் இருந்து மேற்கே 6 கி. மீ. தொலைவிலும்,திருவாரூர் நகரில் இருந்து கிழக்கில் அளவாக 20 கி. மீ. தொலைவிலும், கீழ்வேளூர் ஊரில் இருந்து கிழக்கில் 6 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலன் முருகன் கோயில் . தெற்கே விநாயகரும், வடக்கே தண்டபானியும் காட்சி தருகின்றனர்.

இரண்டவது சுற்றில் சனீஸ்வரர், தட்சினாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன.
கோவிலின் மையத்தில் உயரமான படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான். கட்டுமலயின் கீழ்பக்கம் இறைவி வேல் நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது.

மல்லிகை தான் இங்கே தலவிருக்ஷம் என்றார்கள். ஒரு காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடமாம். ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையான கோயில். வசிஷ்டர் ஆசிரமம் இருந்த இடம் என்று தலவரலாறு சொல்கிறது.

சிக்கல் வந்த கதை தேவலோகத்துப் பசுவான காமதேனு தன் சாபம் நீங்க, வசிஷ்டரின் ஆசிரமம் அமைந்திருந்த மல்லிகை வனம் என்னும் சிக்கல் தலத்திற்கு வந்து, மேற்குப் பக்கம் உள்ள தீர்த்தத்தில் தன் பாவம் தீர வேண்டுமென நினைத்து நீராடியது. காமதேனு முழுகி எழுந்த போது அதனுள் இருந்த ஆத்ம சக்தி பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது.

அந்த குளமே இன்று “தேனு தீர்த்தம்’ எனவும் வழங்கப்படுகிறது அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணெயைத் திரட்டி எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை மாற்று இடத்தில் சேர்க்க எண்ணி அதை எடுக்க முயன்றார்.

அது எடுக்க இயலாமல் அந்த வெண்ணெய் லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்றும் காமதேனு நீராடிய தீர்த்தம் பாற்குளம் என்றும் விளங்குகிறது. இறைவன் வெண்ணெய்யப்பர், நவநீதேஸ்வரர் எனவும் வழங்கப்பெறுகிறார்.

அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சம்பந்தர். இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் தானமாகப் பெற திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து நவநீதேஸ்வரரை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனால் இத்தலப் பெருமாள் “கோல வாமனப்பெருமாள்’ என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருளுகின்றார்.பிரசித்தி பெற்ற சிக்கல் ஆலயத்தில் முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலராக வள்ளி, தெய்வானையுடன் தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அளிக்கிறார். அம்பாளுக்கு நெடுங்கண்ணி என்பது பெயராகும். அம்பாளுக்கு வேல் நெடுங்கண்ணி என பெயர் மாறியதற்கு ஒரு வரலாறு உண்டு:

‘ஒருகாலத்தில் சூரபத்மன் என்ற அரசன், மக்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அழியா வரம் பெற்ற அவனை வதம் செய்ய முருகனால் மட்டுமே முடியும் என்று கருதிய தேவர்கள் முருகனிடம் மன்றாட, முருகனும் சூரனை வதம் செய்ய சம்மதித்தார்.

சூரன் சிவனிடம் அழியா வரம் பெற்றதால், அவனை அழிப்பதற்கான வேல் வேண்டி முருகப்பெருமான் சூரனை அழிக்க திருச்செந்தூரில் பாடி வீட்டிலேயே பஞ்ச லிங்கங்களை நிறுவி, அர்ச்சனை செய்து சிரத்தையுடன் வழிபட்டார். சிவபெருமான் நேரில் தோன்றி, “போரில் வெற்றி உனக்கே சித்திக்கும்’ என வரம் தந்ததோடு, “உன் அன்னை நீ வெற்றி பெற வேண்டுமென மல்லிகை வனத்தில் தவம் இருக்கிறார்.

ஆதலால் அங்கு சென்று வேண்டி நீ சக்தியைப் பெற்றுச் செல்’ என ஆசி வழங்கினார். அதன்படி, முருகப்பெருமான் மல்லிகை வனம் சென்று தாயான சக்தி தேவியிடம் சூரனை வதம் செய்வதற்காக அனுமதி கேட்டார். இந்தத் தலத்தில் அம்மை – அப்பன் முன் தவமிருந்தார் முருகன்.

இறுதியில் மகனின் தவத்தை மெச்சிய சக்தியும் தன் தவ வலிமையால் வேல் ஒன்று உருவாக்கி அதனை இத்தலத்தில் சிங்காரவேலவருக்கு வழங்கினார் சக்தி மிக்க வேலை வழங்க, அந்த வேலுடன் திருச் செந்தூர் சென்று சூரனை வதைத்து அவனை மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆக்கிக் கொண்டார் செந்தூர் குமரன்.

குமரனுக்கு வேல் வழங்கியதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் “வேல்நெடுங்கண்ணி அம்மன்’ என்னும் திருநாமம் பெற்றார். அன்னையிடம் வாங்கிய வேல் கொண்டு சூரசம்ஹாரத்தை நிகழ்த்தி போரில் வெற்றி பெற்றார் முருகப்பெருமான் என்கிறது கந்த புராணம். சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அன்று முதல் சிங்காரவேலன் ஆனார் முருகன்.

ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டியன்று சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் காட்சி, ‘சக்தி – வேலன் புறப்பாடு’களுடன் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும். அப்படி வழியும் வியர்வையை அர்ச்சகர்கள் துடைப்ப தும், துடைக்கத் துடைக்க வியர்வை துளிர்ப்பதும் மிகவும் ஆச்சர்யமானது. இந்த அதிசயத்தைக் காண வெளி நாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் குவிந்து விடுவார்கள்’’

விஸ்வாமித்திரர் பெண்ணிடம் சபலம் கொண்டு இழந்த தவவலிமையைத் திரும்பப் பெற்றிருக்கிறார் எனச் சொல்கின்றனர். மேலும் முசுகுந்தச் சக்கரவர்த்தியின் பிரம்மஹத்தி தோஷமும், இங்கே தான் நீங்கியது எனச் சொல்கின்றனர்.

அகத்தியரும் வந்து வழிபட்டதாய்க் கூறுகின்றனர். இந்தத் தலத்தில் ஈசன் மட்டுமில்லாமல், முருகன், திருமால், அநுமன் என நால்வருமே பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை இங்கேதான் மிகவும் சிறப்பு வாய்ந்தது எனச் சொல்லப் படுகிறது. அம்மனின் சக்தியே வேலாக மாறி முருகனுக்குக் கொடுக்கப் பட்டதால் இந்த அர்ச்சனையை இங்கே சஷ்டி விழா நடக்கும்போது மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

‘‘சூரபத்மனின் முரட்டுப் பிடியில் சிக்கித் தவித்த தேவர்களையே காப்பாற்றிக் கரை சேர்த்தவர் இந்த சிங்காரவேலர், அப்பேர்ப் பட்டவருக்கு சாதாரண மானுட பக்தனின் சிக்கல்களெல்லாம் எம்மாத்திரம்? இவரது அருட் பார்வை பட்டதுமே எப்பேர்ப்பட்ட சிக்கலும் சுக்குநூறாகிவிடும்’’

‘‘சிக்கலில் வேல்வாங்கி
செந்தூரில் போர் முடித்து
சிக்கல் தவிர்க்கின்ற
சிங்காரவேலனை
நித்தம் பாடுவோம்’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe