அரசு நிலத்தில் முறைகேடாக மதமாற்றச் செயல்களுக்காக கட்டப்பட்ட சர்ச் ஒன்றை நீதிமன்ற உத்தரவில் இடிக்கச் சென்ற போது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, கிறிஸ்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை குரோம்பேட்டை துர்காநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மலை உச்சியில் இந்திய சுவிசேஷ சபையின் சர்ச் ஒன்று உள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள இந்த சர்ச்சினை அகற்றும்படி அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த சர்ச்சினை இடிக்கும் படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து சர்ச் நிர்வாகத்தினர் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து பல்லாவரம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் அந்த சர்ச்சினை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் நேற்று அங்கே சென்றனர்.
காவல் உதவி ஆணையர்கள் அசோகன், சகாதேவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். ஆனால் அந்த சர்ச்சினை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த பாஸ்டர் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர். மேலும் சர்ச்ச்சின் கதவைப் பூட்டி உள்ளே அமர்ந்து கொண்டவர்களை வருவாய்த்துறையினர் வெளியேற்றினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வெளியேற்றிய பின்னர் சர்ச்சினை இடிக்கும் பணியை தொடங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றி சென்று அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் அவர்களை விடுவித்தனர்.
இதுதொடர்பாக வருவாய்த் துறையினர் கூறும்போது, “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியே போலீஸ் பாதுகாப்புடன் சர்ச் இடிக்கப்படுகிறது. இது குறித்து சர்ச் நிர்வாகத்துக்கு முன்னரே தகவல் தெரிவித்து விட்டோம்” என்றனர்.
முறைகேடான வகையில் நிலத்தை ஆக்கிரமித்து அதில் சர்ச்சு கட்டுவதும், அவ்வாறு கட்டப்படும்போது எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களை மிரட்டியோ அதிகாரிகள் மற்றும் போலீஸ் துணை கொண்டு அடக்கி வைப்பதும், பின்னர் இது போன்று சர்ச்சு கட்டி நீதிமன்றம் உணர்ந்து உத்தரவு போட்டால் அதனை மதிக்காமல் தங்கள் நோக்கம் போல் செயல்படுவதும் வெகுகாலமாகவே மக்களால் பார்க்கப்பட்டு வருவதுதான் என்றனர் சிலர்.