மதுரை கருப்பாயூரணி பகுதியில் இயற்கையாக மயங்கி விழுந்து இறந்த மாமனாரை, போலீசார் அடித்ததால் அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறிய அவரது மருமகன், பிரேத பரிசோதனைக்கு உடலைக் கொண்டு செல்ல முயன்றதால், வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி முகமது சேட், அப் பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். தமிழகம் முழு வதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் அரசு கொடுத்த சலுகையை மீறி, கருப்பாயூரணியில் கடைகள் பல திறக்கப்பட்டதால், மக்கள் கூட்டம் அந்தப் பகுதியில் அலைமோதியது.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார், கடைகளை அடைக்கும்படி கூறினர். அங்கிருந்த முகமது சேட், தன் கறிக்கடையை மூட தாமதம் செய்தார். கடையை விரைந்து பூட்டும்படி போலீசார் சத்தம் போட்டனர்.
இந்நிலையில், கடைக்கு வெளியே நின்றிருந்த முகமதுசேட்டின் மாமனார் அப்துல் ரஹீம் (75), திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்துபோனது தெரியவந்தது.
ஆனால், கறிக்கடை முகமதுசேட் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று திரண்டு, போலீசார் அடித்ததால்தான் அப்துல்ரஹீம் உயிரிழந்துவிட்டார் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து அங்கே போலீசார் (குவிக்கப் பட்டனர். செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களிடமும், கறிக்கடை முகமதுசேட் உறவினர்கல், “போலீசார் அடித்ததால்தான் அப்துல் ரஹீம் உயிரிழந்தார்’ என்று பேட்டி அளித்தனர்.
அப்போது டிஎஸ்பி தலைமையிலான போலீசார் அங்கே வந்தனர். “போலீசார் அடித்ததில் இறந்தார் என்று நீங்கள் கூறினால், உடனடியாக புகார் ஒன்று கொடுங்கள். நாங்கள் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கூறினர்.
பிரேத பரிசோதனை என்றதும் பதறிய முகமதுசேட், “போலீ சார் அடித்ததில் என் மாமனார் உயிரிழக்கவில்லை. அவர் திடீரென மயங்கி விழுந்துதான் உயிரிழந்தார். போலீசார் என் கடையை அடைக்கச் சொல்லி மிரட்டியதால், நான் அவ்வாறு கூறினேன்” என்றார்.
இதை அடுத்து, அவர் சார்ந்த ஜமாத்தார் முன்னிலையில் இதனை எழுதிக் கொடுத்து விட்டு, முகமது சேட் தன் மாமனார் அப்துல் ரஹீம் உடலை பெற்றுக் கொண்டார்.
இவ்வளவு நடந்த பின்பும், காலை முதலே ஊடகங்களில் போலீசார் அடித்ததில் கறிக்கடை முகமது சேட்டின் மாமனார் அப்துல் ரஹீம் உயிரிழந்தார் என்று, சம்பந்தப் பட்ட நபர் சொன்னதை மட்டுமே உண்மையான செய்தியாக எண்ணி தொடர்ந்து ஒளிபரப்பிய நிலைமையில் தமிழக ஊடகங்கள் உள்ளனவே என்று பொதுமக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் திட்டியபடி பதிவுகளைப் போட்டுக் கொண்டிருந்தனர் .