
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்
சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. இவருக்கான தண்டனை காலம் முடிந்து வரும் 27 ஆம் தேதி அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப் படுவார் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், திடீரென கொரோனா தொற்று அவருக்கு உறுதி செய்யப் பட்டுள்ளதால், அவர் அன்றைய தினம் விடுதலையாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
நேற்று முன் தினம், சிறையில் சசிகலாவுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் இருந்ததால் கொரோனா வைரஸ்க்கான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சி.டி., ஸ்கேன் எடுக்க பௌரிங் மருத்துவமனையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு சசிகலா நேற்று மாற்றப்பட்டார்.
நேற்று நள்ளிரவு மீண்டும் மூச்சுத் திணறல் இருந்த நிலையில், அவருக்கு நுரையீரல் தொற்று உள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபி.சிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப் பட்டதால், அவரது குடும்பத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.