
சர்வதேச நிதியத்தின் முதல் பெண் துணை நிர்வாக இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியர் கீதா கோபிநாத். பொருளாதார அறிஞரான அவர் , ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர்தான். இதற்காக அவருக்கு ஹார்வட் பல்கலைக்கழகம் விடுமுறை அளித்தது.
இந்நிலையில், அவர் அந்தப் பதவியில் இருந்து விலக இருப்பதாகவும் பேராசிரியர் பணியை, ஜனவரி முதல் தொடர இருப்பதாகவும் கடந்த அக்டோபர் மாதம் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைப்பின் துணை நிர்வாக இயக்குனராக தற்போதுள்ள ஜெப்ரி ஒஹமோடோ (Geoffrey Okamoto)வின் பதவிகாலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைகிறது. இதையடுத்து அந்தப் பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா ( Kristalina Georgieva) செயல்பட்டு வரும் நிலையில் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது முதல்முறை என்று கூறப்படுகிறது.