வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், நாளை வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் வரும் 24ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். லேசான மழைசென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.
நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம் 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
இது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின் புயலாகவும் மாறும்.எனவே, அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு, 75 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் நாளை வரை இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
நேற்று 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, கிருஷ்ணராயபுரம் 3; நெடுங்கல், ஆரணி, மாயனுார், பாப்பிரெட்டிப்பட்டி 2; பில்லிமலை எஸ்டேட், கோத்தகிரி எஸ்டேட் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கைக்காக, சென்னை, கடலுார், நாகை, எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், துாத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் துறைமுகங்களில், 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வெயில் உச்சம் நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தி, மதுரை நகரம் மற்றும் மதுரை விமான நிலையத்தில், 40 டிகிரி செல்ஷியஸ், அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தஞ்சாவூர், திருச்சியிலும், 100 டிகிரி பாரன்ஹீட்டான, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியது.
சென்னையில் 34; சென்னை விமான நிலையம், கோவை மற்றும் புதுச்சேரியில் 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
மாநிலத்தில் குறைந்தபட்சமாக, கொடைக்கானலில் 18; ஊட்டியில் 21 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருந்தது.
அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து: வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான புயல், அந்தமான், நிகோபார் தீவுகள் வழியாக சென்று, மியான்மரில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்தமான், நிகோபார் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை வரை மூடப்பட்டுள்ளன. இதனால், சென்னையில் இருந்து அந்தமான் செல்ல பயணியர் முன்வரவில்லை.
சென்னையில் இருந்து காலை 4:35, 7:10, 8:30, 8:45 மற்றும் 10:45 மணிக்கு புறப்பட வேண்டிய ஐந்து விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், இதர விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.