உலகில் 20 கோடி நபர்களில் ஒருவருக்கு பிறக்கக் கூடிய ஐடெண்டிக்கல் ட்ரிப்ளெட்ஸ் (identical triplets) எனப்படும் ஒரே மாதிரியான மூன்று குழந்தைகளை அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவித்துள்ளார்.
ஜாரா அமிராபடி எனும் 28 வயது இப்பெண், ரோயா, அதினா மற்றும் செஃபியா எனப்படும் தன் மூன்று குழந்தைகளை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பிரசவித்தார். இந்த ட்ரிப்ளெட்களை 12ஆவது வார ஸ்கேனின் போது இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஜாரா அவரது கணவர் அஷ்ரஃப் இருவரது குடும்ப வம்சாவளியிலும் இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ள நிலையில், இருவரும் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் தான் பிறக்கும் என வேடிக்கையாக பேசியபடி ஸ்கேன் செய்ய சென்றுள்ளனர்.
ஆனால், இவர்களது ஸ்கேன் முடிவுகளில் தன் வயிற்றில் இரண்டல்ல மூன்று குழந்தைகள் உள்ளன என்பதைக் கண்டறிந்த ஜாரா ஆச்சரியத்தில் உறைந்துள்ளார்.
முன்னதாக இரண்டு ஒரே மாதிரியான ஆண் குழந்தைகளும் , ஒரு பெண் குழந்தையும் பிறக்கக் கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் 17ஆவது வார ஸ்கேனின் போது தான் மூன்று பெண் குழந்தைகள் என்பதை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.
மேலும், இந்தக் குழந்தைகள் பிறந்ததும் அச்சு பிசகாமல் ஒரே மாதிரியாக இருந்ததை அடுத்து உடனடியாக அவர்களை சோதனை செய்து பார்த்ததாகவும், அதன்படி, மூவரும் ஒரே மாதிரியான உருவத்தைக் கொண்டிருக்கும் ட்ரிப்ளெட் குழந்தைகள் எனக் கண்டறிந்ததாகவும் ஜாரா தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று குழந்தைகளும் தற்போது ஜாராவின் வீட்டில் வளர்ந்து வரும் நிலையில், ஜாராவின் சகோதரிகளும், சகோதரரும் குழ்ந்தைகளை மாறி மாறி பார்த்துக் கொண்டுள்ளனர்.
‘குழந்தைகள் மூவரும் இரவில் நீண்ட நேரம் தூங்குவதால் இப்போதைக்கு எந்தத் தொல்லையும் இல்லை. ஆனால் அனைத்துக்கும் சேர்த்து வளர்ந்தால் இருக்கு’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜாரா.