spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?நெல்லை கிராமங்களில் உயிர்ப்புடன் திகழும் ‘கோலாட்ட ஜாத்ரா’

நெல்லை கிராமங்களில் உயிர்ப்புடன் திகழும் ‘கோலாட்ட ஜாத்ரா’

- Advertisement -
  • கே.சி.எஸ். மணியன்

மறைந்து வரும் கோலாட்டம்; செங்கோட்டையில் மறையாமல் சிறப்பாக நடக்கிறது என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தக் கோலாட்டத்தை பற்றி எனக்குத் தெரிந்தவரை….

கார்த்திகை மாதத்தில் மழை வேண்டி கோலாட்ட ஜோத்திரை நடத்துவார்கள். தீபாவளிக்கு மறுநாள் அமாவாசையில் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் நடைபெறும் இவ்விழா இப்பொழுது சுருங்கி விட்டது.இந்த வைபவத்தை நடத்த ஒரு குடும்பத்தினர் பொறுப்பேற்றுக்கொண்டு மற்றவர்களிடம் இருந்து பொருளுதவி பெற்று நடத்துவார்கள்.

முதல் நாள் ஆறு/குளம் இவற்றிலிருந்து எடுத்து வந்த மண்ணில் ஒரு பசு மாடு , கன்றுக்குட்டி உருவம் செய்து காயாமல் ஈரமாகவே ஒரு மணையில் வைத்து அதற்கு பூஜை செய்வார்கள். இதற்கு பசுவன் என்று பெயர். இந்த பசுவன் உடன் ஒரு சிறுவனை பசுவனாக உருவகப்படுத்தி அந்த பையனுக்கு தினம் ஒரு வீட்டில் உணவு அளிப்பார்கள். ( நான் சிறுவயதில் பசுவனாக இருந்திருக்கிறேன்)

நவதானியங்களை ஊறவைத்து பாலிகை கிண்ணங்களில் வைத்து சுமங்கலிகள் தினம் பாலிகை தெளிப்பார்கள். இது பதினைந்து நாட்களில் நன்கு முளைத்துவிடும். தினமும் பெண்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி கோலாட்டம் போடுவார்கள். காலையிலும் மாலையிலும் இது நடக்கும். ஜோத்திரைக்கு (ஊர்வலம்) முதல் நாள் அனைவர் வீட்டிலும் வெண் பொங்கல் செய்து கடவுளுக்கு நிவேதித்து வடாம் பொறித்து உண்பார்கள்.அன்று பெண்கள் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் வைத்து அழகு செய்துகொள்வார்கள்.

‘பசுவன்’வைத்திருக்கும் இல்லத்தில் நாள்தோறும் கோலாட்டம் நடைபெறும். மழை வேண்டலே முக்கிய நோக்கம். ‘மழை ரொம்பப் பெய்ய வேணும்; சுவாமி, குளங்கள் பெருக வேணும்; பூமியில் போட்டது பொன்னாய் விளையணும்; பொலி ரொம்பக் காண வேணும்.’ என்னும் ரீதியில் பாடல்கள் இருக்கும்.

பணம் பிரிக்கும்போது பணம் தராதவர்கள் வீட்டில், பசுவா ‘பசுவையா, எமக்குப் பணம் கொடுப்பாரில்லை, இன்னிக்கு வா என்று நாளைக்கு வா என்று ஏய்க்கிறாரே பசுவா !’ என்று நையாண்டி செய்தும் பாடுவர். ‘கோலே நா கோலே.. என்ற பாட்டும் உண்டு.

ஜோத்திரை அன்று காலை அதை ஏற்று நடத்தும் வீட்டு பெண்கள் சிலர் கோலாட்டம் போட்டுக்கொண்டு வீடு வீடாக சென்று பெண்களுக்கு நல்லெண்ணெய் சீயக்காய், மஞ்சள், குங்குமம், பூ ஆகியவைகளை கொடுத்து “ஜோத்திரையில் கலந்து கொள்ள வாருங்கள்”என்று அழைப்பார்கள். மாலையில் பசுவனுக்கு பூஜை செய்தபின் அதை ஆற்றில் கரைக்க ஒரு திறந்த மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள். பசுவனாக உள்ள சிறுவனுக்கு புது துணிமணிகள் வாங்கி கொடுப்பார்கள்.

அன்று காலை பெண்கள் அனைவரும் எண்ணெய் தேய்த்து நீராடி தங்களை நன்கு அலங்கரித்துகொள்வார்கள். கார்த்திகை மாதத்தில் தாழம்பூக்கள் அதிகம் கிடைக்கும். இதில் இரண்டு வகை உண்டு. வெளிர் மஞ்சள் நிறம் ஒன்று, வெள்ளை நிறமாக ஒன்று. இதில் மஞ்சள் அதிக மணமாக இருக்கும். இந்த தாழம்பூக்களை கத்தரித்து சிறுமிகளுக்கு பின்னலில் வைத்து தைத்து அலங்காரம் செய்விப்பார்கள். பட்டு உடுத்தி ஆபரணங்கள் அணிந்து பூ சூடி கோலாட்டம் போடுவதற்கு செல்வார்கள்.

மாலை 7 மணிவாக்கில் ஜோத்திரை ஆரம்பிக்கும். முதலில் சிறு குழந்தைகள் பாவாடை சட்டை அணியும் வயதினர் வட்டமாக நின்று கோலாட்டம் போட்டவாறு தெருவில் நகர்ந்து செல்வர். அவர்களுக்குப்பின் பாவாடை தாவணி அணிந்த பெண்களின் வட்டம். அவர்களை தொடர்ந்து புடவை அணிந்த பெண்களின் வட்டம்.

இவர்கள் மிக அழகாக பின்னல் கோலாட்டம் போட்டு, அதில் தாமரை,வண்ணத்து பூச்சி போன்ற வடிவங்களை பின்னுவார்கள். பெண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வட்டங்களின் எண்ணிக்கை அமையும். மருதாணி சிவப்பேறிய கைகளில் வண்ண வண்ண கோலாட்டங்களை பிடித்து இவர்கள் பாடி ஆடியபடி ஊர்வலமாக செல்வது பார்க்க வண்ணமயமாக இருக்கும். நாதஸ்வரம் முழங்க மேளதாளத்துடன் ஊர்வலம் செல்லும். இரு புறமும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை தலையில் சுமந்து சிலர் செல்வார்கள். ஊர்வலத்தின் பின்னே மாட்டு வண்டியில் பசுவன் மற்றும் முளைத்த பயறுகளை வைத்து எடுத்து செல்வார்கள்.

ஊர்வலம் அக்கிரகாரங்களின் வழியாக சென்று திருமுக்குளத்தில் பசுவனையும், பாலிகைகளையும் கரைத்து விட்டு, அந்த ஆண்டு மழை நன்கு பெய்து நல்ல விளைச்சல் இருக்கவேண்டும் என்று வேண்டி கொள்வார்கள். பின் அனைவருக்கும் சுண்டல் விநியோகம் செய்வார்கள். அவரவர்கள் வீட்டிலிருந்து செய்து கொண்டுவந்த (இவைகளைக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு அந்தந்த வீட்டின் ஆண்களின் பொறுப்பு) சித்த்ரான்னங்களை எடுத்து சென்று அங்கேயே குளத்துக் கரையில் அமர்ந்து உண்பார்கள்.

அக்கிரகாரத்தில் மட்டுமன்றி மற்ற சமூகத்தினரிடமும் இந்த வைபவத்தை நடத்தும் வழக்கம் உண்டு. எங்கள் ஊரில் ஒரு ஆண்டில் 4
முறை (வெவ்வேறு தெருக்களில் உள்ளவர்கள்) ஜோத்திரை நடந்த காலம் உண்டு கார்த்திகை மாதமே கார்காலம்தானே, ஜோத்திரை நடந்தால்தான் மழையா என்று கேட்கலாம். பருவ மழை பொய்த்துவிட்டால்? ஆடி பட்டம் தேடி நாற்றங்காலில் விதைத்த நெல் முளைத்து நாற்றாகி அதை எடுத்து நாற்று நட்டபின் வயலுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். வயலில் நீர் தேங்கி நிற்கும் அளவு தண்ணீர் கட்டுவார்கள். இல்லை எனில் நாற்றுகள் காய்ந்து விடும். அதனால் பருவ மழை பொய்க்காமல் நன்கு பெய்து நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி விளைச்சல் பெருகி எல்லோரும் சுபிட்சமாக இருக்கவேண்டும் என்று பூஜை நடத்தப்படுகிறது.

விஞ்ஞான பூர்வமாக பார்த்தாலும் ஒலி அதிர்வுகள் வாயு மண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். இசை மேளங்கள், மந்திர உச்சாடனங்கள் நம்மை சுற்றி ஏற்படுத்தும் அதிர்வுகளை நம்மால் உணரமுடிகிறது. அம்ருதவர்ஷினி ராகம் இசைத்தால் மழை பெய்யும் என்பதை ஏற்றுகொள்கிறோம். இம்மாதிரி உற்சவங்களை கொண்டாடும் பொழுது மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்பது ஏற்புடையதே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe