பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் பிறந்த நாள் கொண்டாடியபோது கேரளாவைச் சேர்ந்த சிறுமியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். முன்னாள் எம்எல்ஏ.,வான இவர் கடந்த 2012இல் தனது வீட்டில் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் செய்தார். அதை அடுத்து அவரின் நண்பர்கள் உதவியோடு கேரளாவிலிருந்து 15 வயது சிறுமியை ராஜ்குமாரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தினர்.
இரண்டு நாள் கழித்து அந்தப் பெண் அவரின் அப்பாவுக்கு போன் செய்து, என்னால் இங்கு இருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் என்னைத் துன்புறுத்துகிறார்கள். உடனே அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். தங்களின் வறுமை நிலை கருதி அச்சிறுமியை சமாதானப்படுத்திய அவர்கள் அங்கேயே தங்குமாறு கூறியுள்ளனர்.
இந்நிலையில், 2012 ஜூன் 27ஆம் தேதி ராஜ்குமாரின் நண்பர் சிறுமியின் தந்தையிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் மகள் தன்னை உடனே அழைத்துச் செல்லுமாறு அழுதுகொண்டே இருக்கிறார். சரியாக வேலை செய்வதில்லை என்று புகார் கூறியிருக்கிறார்.
அதற்கு அந்தச் சிறுமியின் தந்தை சந்திரன், 29-ஆம் தேதி அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். மறு நாள் காலை ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் சிறுமியின் தந்தை சந்திரனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, `உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவரைப் பார்த்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்’ என்று தகவல் அளித்துள்ளார்.
அதன்படி அவரது பெற்றோர் மருத்துவமனையில் வந்து பார்த்தபோது சிறுமி சுயநினைவின்றி இருந்துள்ளார். அங்கே மூன்று நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதை அடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊரான கேரளாவுக்கு தங்கள் மகளை அழைத்துச் செல்ல முயன்றனர்.
ஆனால், வழியில் சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமானதால் தேனி அரசு மருத்துவமனையில் 4ஆம் தேதி சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி 6ஆம் தேதி உயிரிழந்தார்.
இதை அடுத்து சிறுமியின் உடலை அடக்கம் செய்தபோது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மறுபிரேத பரிசோதனை செய்யும்படி கேரளாவில் உள்ள பீர்மேடு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ., ராஜ்குமார், அவரின் நண்பர்கள் ஜெய்சங்கர், மகேந்திரன், விஜயகுமார், அன்பரசு உள்ளிட்ட 7 பேர் மீது ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை, மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதை அடுத்து, முன்னாள் திமுக., எம்எல்ஏ., ராஜ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது பன்னீர்செல்வம் இறந்து போனார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ராஜ்குமார் முன்னாள் எம்எல்ஏ., என்பதால் எம்எல்ஏ., எம்பி.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு காவல்துறை குறிப்பிட்ட பாலியல் வன்கொடுமை, மரணத்துக்குக் காரணம், கூட்டுச் சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் எனவும் கூட்டாளி ஜெய்சங்கருக்கு கூட்டு சதி, மோசடி ஆகிய பிரிவுகளில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாகவும், இருவருக்கும் ரூ 42 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.