சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
51.யோகாவின் சிறப்புகள்!
சுலோகம்:
தஹ்யந்தே த்யாயமானானாம் தாதூனாம் ஹி யதா மலா: |
ததேந்த்ரியாணாம் தஹ்யந்தே தோஷா: ப்ராணஸ்ய நிக்ரஹாத்: ||
— மனுஸ்மிருதி
பொருள்:
தீயினால் சுடுவதால் தங்கம் போன்ற உலோகங்களில் இருக்கும் மலினங்கள் நீங்குவது போல பிராணாயாமத்தால் மனம் மற்றும் ஞானேந்திரியங்களில் இருக்கும் மலினங்கள் நீங்கும்.
விளக்கம்:
மனக்கவலைகள், உடல் நலக் கேட்டிற்கு முக்கிய காரணம். மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகாப்பியாசம் சிறந்த சாதனம்.
ஆன்மீக சாதனையில் கூட யோகா பயிற்சிகள் தேவை. காற்றில் மாசு அதிகமாகி வரும் இக்காலத்தில் அலர்ஜி, ஆஸ்துமா, குறட்டை விடுதல் போன்ற நுரையீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்துவதற்கு பிராணாயாமம் மிகவும் அவசியம். மனஸ்மிருதியில் உள்ள இந்த ஸ்லோகம் பிராணாயாமம் செய்வதால் வரும் லாபங்களை சூட்சுமமாகக் கூறுகிறது.
பிராணாயாமத்தால் மனதிலிருந்து விருப்பு வெறுப்புகளை நீக்கிக்கொள்ள முடியும். மனதை உயர்ந்த இலக்கை நோக்கி செலுத்துவதற்கு பிராணாயாமம் பயன்படும் என்று மனு கூறுகிறார்.
பிராணாயாமத்தால் ஐந்து அவயவங்களும் மனதும் சுத்தமாகின்றன. கெட்ட எண்ணங்கள் ஏற்படாமலும், கெட்ட ருசிகளுக்கு அடிமையாகாமலும் இருக்க யோகப் பயிற்சி உதவுகிறது. தீயவற்றை வடிகட்டும் கருவி பிராணாயாமம். இது பாரத தேசத்தின் கலையாக இருப்பது நமக்கு பெருமை தரும் விஷயம்.
நம் தேசத்தில் பழங்காலம் முதல் நாம் சேர்த்து வரும் செல்வமே யோகக்கலை. இது ருஷிகள் கருணையோடு நமக்களித்துள்ள சாதனை மார்க்கம். நூற்றுக்கணக்கான நாடுகள் சேர்ந்து ஜூன் 21ம் தேதியை யோகா தினமாக கடைப்பிடிப்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய செய்தி.