விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -22
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
22. Discipline
உடல் நலம் பேணல் வேண்டும்:- தலைவன் தன் பணிகளில் முனைந்து ஈடுபட்டு உடல் நலத்தை கவனிக்காவிட்டால் ஆபத்து. நேரத்திற்கு உணவருந்துவது, மருந்துகளை தகுந்த முறையில் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது… போன்றவற்றில் அலட்சியம் காட்டினால் ஆபத்து. இந்த எச்சரிக்கையை மகாபாரத்ததில் நாரதர் தர்மபுத்திரனிடம் தெரிவிக்கிறார். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்.
கச்சிச்சாரீர மாபாதம் ஔஷதைர்னியமேனவா !
மானசம் வ்ருத்தசேவாபி: சதா பார்தாபகர்ஷிஸி !!
(மகாபாரதம் சபா பர்வம் 5-90)
பொருள்:- தர்மராஜா! உடல் நலம் கெடும்போது மருந்து உட்கொள்கிறாய் அல்லவா? சாஸ்திரம் விதித்த உபவாச விரதங்களைச் செய்தபடி ஆரோக்கியமாக உள்ளாய் அல்லவா? பெரியவர்களை வணங்கி உன் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறாயல்லவா?
சரீரமாத்யம் கலு தர்ம சாதனம்
தேஹே ஸரோகே து ந சார்த ஸித்தி: !!
உடல் இருந்தால்தான் தர்மச் செயல்களைச் செய்ய முடியும். உடல் நோய்வாய்ப்பட்டால் உன் இலக்குகளை எவ்வாறு சாதிப்பாய்? என்று வினவுகின்றனர் நம் ரிஷிகள். அதற்காகவே ஆரோக்கிய சூத்திரங்களை விதித்தனர். அவற்றைக் கடைப்பிடித்து உடல் நலனைப் பேண வேண்டுமென்பது அவர்களின் விருப்பம். சரக சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை முதலான நூல்களில் இது குறித்த நியமங்களை கூறியுள்ளனர்.
காலை உதயத்தில் நித்திரை விழித்தபின் செய்யவேண்டிய உடற்பயிற்சிகள், யோகாசனங்கள், பிராணாயாமம் போன்ற செயல்கள் உடலை திடமாக இருத்த உதவுகின்றன.
அன்னம் பரப்பிரம்ம சொரூபம்:-
தலைவனுக்கு முதல் எச்சரிக்கை “சதம் விஹாய போக்தவ்யம்” – அதாவது நூறு வேலைகள் இருந்தாலும் ஒதுக்கிவைத்து விட்டு நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும் என்பது. பசியை அடக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தும் வாக்கியம் இது. நாம் உண்ணும் உணவு விஷயத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஜாக்கிரதைகளை ஆயுர்வேத நூல்கள் எடுத்துரைக்கின்றன.
சுகமுச்சை: சமாசீன: சமுதேஹோன்னதத்பர:
காலே சாம்யம் லகு ஸ்நிக்தம் க்ஷிப்ரமுஷ்ணம் த்ரவோத்தரம் !
புபுக்ஷிதோன்ன மஸ்நீயாத் மாத்ராவத்விகதாகம:
காலே புக்தம் ப்ரீணயதி சாம்யமன்னம் ந பாததே !!
(சுஸ்ருத சம்ஹிதை 46-464)
உயரமான பலகையின் மீது சுகமாக அமர்ந்து, சரியான நேரத்தில் பசியைப் பொறுத்து எளிதாக செரிக்கக் கூடிய, நெய்யோடு கூடிய, சூடான அன்னத்தைப் புசிக்க வேண்டும். கனமான பதார்த்தங்களை முதலில் உண்ண வேண்டும். ரசம் மோர் போன்ற திரவ பதார்த்தங்களை இறுதியில் உண்ண வேண்டும். பசி எடுத்தால்தான் உண்ண வேண்டும். மிதமான, சுலபமாக ஜீரணமாகும் உணவுகளை நேரத்தோடு சீக்கிரமாக உண்ணவேண்டும்.
“அஜல்பன் அ ஹசன் தன்மனா புஞ்ஜீத” – சரக சம்ஹிதை. அனாவசியமாக பேசமல் சிரிக்காமல் மனம் ஒன்றி உண்ணும்படி ஆயுர்வேத சாஸ்திரம் போதிக்கிறது.
“ஜுகுப்சித கதானைவ ஸ்ருணுயாதபி வா வதேத்” – உண்ணும் போது அருவருப்புப்பானவற்றைப் பேசுவதோ கேட்பதோ கூடாது என்பது ருஷிகளின் கட்டளை.
சென்ற தசாப்த காலத்தில் பல சிறந்த தலைவர்களை பாரத தேசம் இழந்து விட்டது. இவர்களின் அகால மரணங்களுக்குக் காரணம் தம் ஆரோக்கியத்தின் மீது அவர்கள் அசிரத்தையாக இருந்தார்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்து. தலைவர்கள் கட்டாயம் தம் உடல்நலம் மீது கவனம் செலுத்த வேண்டும்.
உடற்பயிற்சி:-
உடற்பயிற்சியை அதிகமாகச் செய்வது நல்லதல்ல. அதற்காக முழுவதும் செய்யாமல் இருப்பதும் சரியல்ல. உடலுக்கு சோர்வு ஏற்படாமல் உற்சாகமாக இருக்கும்படி தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல உடபயிற்சி. முக்கியமாக நாம் உண்ணும் உணவுக்குத் தகுந்த அளவு உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி அதிகமாகச் செய்து விட்டு உணவைக் குறைவாக எடுப்பதோ நேரத்தைக் கடைபிடிக்காமலும் உண்ணாமலும் இருப்பதோ உடலுக்கு நல்லதல்ல. அதனால் சூரிய நமஸ்காரம் எத்தனை செய்ய வேண்டும் என்பதை அவரவரே தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
ஆரோக்கியத்திற்காக தியானம் செய்பவர்களுக்கு கீதை கூறும் நியமங்கள்…
நாத்யஸ்னதஸ்து யோகோஸ்தி ந சைகாந்த மனஸ்னத: !
ந சாதிஸ்வப்ன சீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுன !!
(பகவத்கீதை 6-16)
பொருள்:- அர்ஜுனா! அதிக உணவு உண்பவருக்கு யோகம் அமையாது. முழுவதும் எதுவும் உண்ணாதவருக்கும் யோகம் அமையாது. அதிகம் உறங்குபவருக்கும் தூக்கமே இல்லாதவருக்கும் யோகம் அமையாது.
யுக்தாஹார விஹார்ஸ்ய யுகதசேஷ்டஸ்ய கர்மசு !
யுக்தஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா !!
(பகவத் கீதை 6-17)
பொருள்:- மிதமான உணவு, மிதமான நடத்தை உள்ளவருக்கும் தகுந்த விதமாக பணி புரிவோருக்கும் தகுந்த விதத்தில் உறங்குபவருக்கும் தகுந்த விதமாக விழித்திருப்பவருக்கும் மட்டுமே துயரத்தை நீக்கும் யோகம் கிட்டும்.
சுபம்!