
இன்று முதல் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ளது. ஐப்பசி பிறந்து விட்டால் போதும்… தீபாவளி பண்டிகை குறித்த நினைவுகள் நமக்கு வந்துவிடும். ஐப்பசி தீபாவளியை அடுத்து, அன்பர்களின் உள்ளம் கவர் பண்டிகையாக, ஆற்றுப் படுத்தும் விரதமாக ஆறுமுகனை மனத்தில் கொண்டு எடுக்கும் விழா தான் கந்த சஷ்டி விழா.
தீபாவளிக்கு முந்தைய நரக சதுர்த்தசி கழிந்து, அமாவாசை கழிந்ததும், முதல் நாள் பிரதமை திதி முதல், அடுத்து வரும் சஷ்டி திதி வரை ஆறு நாட்கள் ஆறுமுகனை நோக்கி மேற்கொள்ளும் விரதம் அன்பர்கள் பலராலும் கடைப்பிடிக்கப் படுகிறது.
சஷ்டி என்பது ஆறாவது திதி. ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்பசியில் எடுக்கும் இந்த விழாவில் கலந்து கொண்டாலோ விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டாலோ மணமாலை சூடும் வாய்ப்பு உருவாகும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வரும்.
‘மு’ என்றால் ‘முகுந்தன்’ – திருமால். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ – சிவன். ‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மா!மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும்.

வந்தவினை மட்டுமல்ல வரப்போகும் வினையையும், முன்கூட்டியே தீர்க்கின்ற ஆற்றல் வேலன் வழிபாட்டிற்கு உண்டு.
சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று மாற்றம் பெற்றுவிட்டது. அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், அகப்பை எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை வரம் இனிதே அமையும்!

ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியன்று விரதமிருந்து ஆலயங்களுக்குச் சென்று, முருகப்பெருமானை வழிபட்டு வருபவர்களும் உண்டு. அதைப்போல ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று கந்தனை வழிபட்டால் மிகுந்த நற் பலன்கள் கிடைக்கும்.
அமாவாசை அடுத்த ஆறு நாட்களிலும் அதிகாலையில் குளித்து, தூய ஆடை அணிந்து, கந்தனுக்கு உகந்த அப்பமான கந்தரப்பத்தை நைவேத்தியமாக வைத்து, கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தால் சந்தான விருத்தி கிடைக்கும். சங்கடங்கள் தீரும்.
ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள், சஷ்டியன்று மட்டும் முழுமையாக விரதம் இருக்கலாம். முருகப்பெருமான் திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக புராண வரலாறு சொல்வதால், தெய்வாம்சம் பொருந்திய அந்தத் திருத்தலத்திற்கு சென்று வழிபட்டு வரலாம். அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்றும் ஆறுமுருகனை வழிபடலாம். வீட்டிலுள்ள பூஜை அறையிலும் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் கூடிய படத்தை, திருவுருவத்தை வைத்து மானசீகமாக வழிபடலாம்.

புத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, செல்வாக்கு போன்ற பதினாறு பேறுகளும் பெற்று, செல்வ வளத்தோடு வாழ சஷ்டி வழிபாடு துணைபுரிகிறது.
நாளென் செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்வந்து தோன்றிடினே! -என்ற பாடல் மூலம் முருகப்பெருமானின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!



