“தங்கக் காசா? நேந்திரங்காய் வறுவலா?
(மயிலாப்பூர் பண்டிதரின் ஏமாற்றம்)
(பெரியவா சொன்னது இடுகுறிப்பெயரா? சிலேடையா?)
சொன்னவர்; இந்துவாசன்-வாலாஜாபேட்டை
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.
“ஓரு பாட்டிலில் நூறு, நூற்றம்பது பவுன் காசுகளைத் தயார் செய்து,கொண்டு வா உடனே செய்” என்று உத்தரவிட்டார்கள் பெரியவா ஒரு நிமிஷம் எனக்குப் புரியவில்லை.பின், அவர்கள் கூறியதைப் புரிந்து கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்து வெளியே வந்தேன்..
வெளியில் பல பேர்கள் தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.பெரியவாள் என்னிடம் பேசின பேச்சு. எல்லோர் காதிலும் விழுந்திருக்கிறது. “நூறு,நூற்றம்பது பவுன் காசுகள்!… நமக்கும் இரண்டு,மூன்று கிடைத்தால் தேவலையே! பூஜையில் வைத்துக் கொள்ளலாமே?’ என்று சில பேர்களுக்கு நப்பாசை.
எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள் “எனக்கு இரண்டு,மூன்று காசு வாங்கிக் கொடு” என்று பிரார்த்தனை. ‘ஆகா’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்
பெரியவாளைத் தரிசனம் செய்வதற்கு, வேத பண்டிதர்கள், சாஸ்திரம் படித்தவர்கள் வருவார்கள்.அவர்களுக்கு பெரியவா முக்யத்வம் கொடுத்து, சால்வை,சன்மானம் கொடுத்து ஆசீர்வதிப்பார்கள்.
நான் அங்கிருந்து வேகமாக நகர்ந்த போது, மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு மகா பண்டிதர், என்னை நயமாகக் கூப்பிட்டார். “எனக்கு பத்து,பன்னிரண்டு தங்கக்காசு வாங்கிக் கொடுக்கணும்” என்றார்.’சரி’ என்றேன்.
நேந்திரங்காயை,தங்கக்காசு போல் வட்டமாகச் சீவி வறுவல் செய்வதைத் தான் பெரியவாள்,(பலர் முன்னிலையில் விளக்கமாகச் சொல்ல வேண்டாமே என்பதால்) அவ்வாறு சொன்னார்கள். ஒரு மணி நேரத்தில் நான் தயார் செய்து பாட்டிலை பெரியவா முன்பாக வைத்த போது,மயிலாப்பூர் பண்டிதர் சொன்னதைக் கூறினேன். பெரியவா,”அவரைக் கூப்பிடு ” என்றார்கள், அவர் வந்தார்
“ரெண்டு கையையும் நீட்டுங்கோ…”
பண்டிதருக்குப் பனிமழை பொழிந்தாற் போல உள்ளூர ஆனந்தம்.
இரண்டு கைகளையும் நீட்டினார்….பெரியவா பாட்டிலிலிருந்து ஒரு பிடி வறுவல் எடுத்துப் போட்டார்கள் பண்டிதருக்கு ஒன்றும் புரியவில்லை..என்றாலும் பெரியவாளிடம் எப்படிக் கேட்பது? என்னவென்று கேட்பது?
வறுவலைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்ததும் என்னைக் கேட்டார் “பெரியவா,ஏன் எனக்கு வறுவல் கொடுத்தா?”
“நீங்கதானே கேட்டேள்!”-நான்
” நானா ! நான் ஏன் வறுவல் கேட்கிறேன்?.. ..எப்போது கேட்டேன்?..-பண்டிதர்
“ஒரு மணி நேரம் முன்னாடி என்னிடம் கேட்டேள். பெரியவாளிடம் சொன்னேன்…”
அவர் விழித்தார். “தங்கக்காசு என்றல்லவா காதில் விழுந்தது..”
“அது இதுவே தான்! ..பெரியவா,சிலேடையாகக் கூறியது இது தான்….”
வித்வானுக்கு மகா ஏமாற்றம்.”பெரியவா கொடுத்த பிரசாதம்” என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.
இடுகுறிப்பெயரால் அழைப்பது, சிலேடையாகப் பேசுவது எல்லாம் பெரியவாளிடம் அபரிமிதமாக இருந்ததை நாங்கள் ரசித்திருக்கிறோம்.


