
உத்தான ஏகாதசி. விரதம் இருந்து, மகாவிஷ்ணுவை வழிபடுவோர் மகத்தான பலன்களைப் பெற்று மகோன்னதமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
உத்தான ஏகாதசி விரதம் இருப்பது, வீட்டின் தரித்திர நிலையை மாற்றிவிடும். வீட்டில் சுபிட்சம் நிலவும். கூடுமானவரை, விரதத்தை முறையாக அனுஷ்டிப்பது உத்தமம். இயலாதவர்கள், வயதானவர்கள் பால், பழம், மிதமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை. மாலையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். எல்லா சத்விஷயங்களும் உங்களைத் தேடி வரும்
உத்தான (அ) பிரபோதினீ ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் பிரம்மாவிற்கும் நாரத முனிவருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.
பிரம்ம வைவர்த்த புராணம், கார்த்திகை மாதம், சுக்லபட்ச ஏகாதசி அதாவது ப்ரபோதினி ஏகாதசி என்று அழைக்கப்படும் . தேவோத்தானி – ஹரிபோதினி – என்னும் பெயர்களாலும் இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனிடம் – “ஹே அர்ஜூனா, நீ எனக்கு அதிபிரிய தோழனாவாய். ஹே பார்த்தா!, இப்பொழுது உனக்கு பாபங்களை அழிக்க வல்ல மற்றும் புண்ணியத்தையும், முக்தியையும் அளிக்கவல்ல ப்ரபோதினி ஏகாதசி விரத மஹிமையின் கதையையும் மற்றும் இது தொடர்பாக நாரதருக்கும், பிரம்மதேவருக்கும் இடையில் நடந்த சம்பாஷணையையும் உனக்கு கூறுகிறேன். சிரத்தையுடன் கேள்.
ஒரு முறை, நாரத ரிஷி பிரம்மதேவரிடம் ” தந்தையே!! ப்ரபோதினி ஏகாதசி விரதம் கடைபிடிப்பதால் கிட்டும் பலனை பற்றி விஸ்தாரமாக உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டி நின்றார்.
பிரம்மதேவர் பதிலளிக்கையில் “மகனே ! கார்த்திகை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் பலனானது, ஆயிரம் அஸ்வமேத யாகம், நூறு ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் பலனிற்கு இணையானது ஆகும்” என்றார்.
நாரதர் பிரம்ம தேவரிடம் – “தந்தையே, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருத்தல், இரவு மட்டும் உணவு உட்கொண்டு விரதம் அனுஷ்டித்தல், நாள் முழுவதும் உபவாசம் இருந்து விரதம் மேற்கொள்ளுதல் இவற்றினால் கிட்டும் பலன்களின் வித்தியாசத்தை பற்றி கூறுங்கள்” என்றார்.
பிரம்மதேவரும்,-” நாரதா! ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் அனுஷ்டிப்பதால் இரண்டு ஜென்மாவின் பாபங்கள் நீங்குகிறது. நாள் முழுவதும் உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டிப்பதால் ஏழு ஜென்மங்களின் அனைத்து பாபங்களும் நீங்கப்பெறுகிறது.
மூவுலகங்களிலும் கிடைக்கப்பெறாத பொருளும், ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கப்பெறும். ப்ரபோதினி ஏகாதசி விரதத்தின் பலனால் பாபங்களில் மிகவும் பெரிய பாபமும் க்ஷண நேரத்தில் நஷ்டமடைகிறது.
பூர்வ ஜென்மத்தில் செய்த அநேக தீய வினைகளின் பாபங்கள் ப்ரபோதினி ஏகாதசி விரதத்தினால் க்ஷண நேரத்த்தில் நஷ்டமடைகின்றன. எவர் ஒருவர் தன்னுடைய ஸ்வபாவத்தினபடி ப்ரபோதினி ஏகாதசியை விதி பூர்வமாக விரதத்தை கடைபிடிக்கிறாரோ, அவருக்கு விரதத்தின் பூரண பலன் கிட்டுகிறது.
எவர் ஒருவர் சிரத்தையுடன் இத்தினத்தில் சிறிதளவேனும் புண்ணியம் செய்தால், அது மலையளவிற்கு ஈடாகிறது. ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதாக சங்கல்பத்தை தன்னுடைய மனதில் நினைத்தாலே நூறு ஜென்ம பாபங்கள் அழிந்து விடுகின்றன.
ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதத்தை அனுஷ்டிப்பவரின் பத்து தலைமுறை மூதாதையர் மற்றும் எதிர்கால சந்ததியினர் விஷ்ணுலோகம் அடைந்து வாசம் செய்யும் பாக்கியத்தை பெறுகின்றனர். நரகத்தில் அனேக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவருடைய பித்ருக்களும் விடுதலை அடைந்து விஷ்ணு லோகம் அடைந்து சுக வாழ்வு பெறுவர்.

“ஹே, புத்ர !, பிரம்மஹத்தி போன்ற கொடிய பாபங்களும் ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் நிவர்த்தி பெறுகிறது. அஸ்வமேத யாகம் போன்ற மகத்தான யாகங்கள் செய்வதால் கிட்டும் பலனை விட பன்மடங்கு பலன் ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கப் பெறுகிறது.
ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலன், சர்வ புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி பெறும் புண்ணியம், கோ (பசு) தானம், ஸ்வர்ண (தங்கம்) தானம், பூமி (நிலம்) தானம் ஆகியவற்றால் கிடைக்கப்பெறும் புண்ணியம் இவற்றிற்கு ஒப்பானதாகும்.
மேலும் நாரதா, ” இவ்வுலகத்தில் எவர் ஒருவர் ப்ரபோதினி ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைப்பிடித்து தன்னுடைய குலத்தை பவித்ரமாக ஆக்குகிறாரோ, அவர் தன் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் ஆவார். உலகத்தில் எத்தனை விதமான புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதோ, மேலும் எத்தனை விதமான புண்ணிய தீர்த்தங்களை விரும்ப முடியுமோ, அத்தனையும் ப்ரபோதினி ஏகாதசி விரதம் கடைபிடிப்பவரது வீட்டிலேயே அமைந்து இருக்கிறது.
இறைவனின் திருஅருளைப் பெற கார்த்திகை மாதம், சுக்லபட்சத்தில் வரும் ப்ரபோதினி ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் மற்ற அனைத்து செயல்களையும் துறந்து விதி பூர்வமாக அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். எவர் ஒருவர் இவ்விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் தனவானாக, யோகியாக , தபஸ்வியாக மற்றும் இந்திரனையும் வெற்றி கொள்ளும் வல்லமை பெற்றவராக ஆகிறார். ஏனெனில் ஏகாதசி திதியானது பகவான் விஷ்ணுவிற்கு மிகவும் ப்ரியமான நாளாகும். இவ்விரதத்தின் பலனாக, இதைக் கடைபிடிப்பவர் மறுபிறவி இல்லா நிலையை அடைகிறார்.

இவ்விரதம் மேற்கொள்வதால், உடல், சொல், மனம், இம்மூன்றினாலும் செய்த பாபங்கள் நஷ்டமடைகின்றன. இவ் ஏகாதசி நாளன்று பகவானின் அருள் வேண்டி எவர் ஒருவர் தானம், தவம், ஜபம், ஹோமம், யக்ஞம் ஆகியவற்றை செய்கிறாரோ, அவர் என்றும் குறையாத புண்ணிய பலனை பெறுகிறார்.
பால பருவம், யௌவன மற்றும் முதுமை என்று அனைத்து பருவத்தின் சர்வ பாபங்களும், ப்ரபோதினி ஏகாதசியன்று விஷ்ணு பூஜை செய்வதால் நீங்குகிறது. ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனானது, சூரிய கிரகணத்தின் போது ஸ்நானம் செய்வதால் கிட்டும் புண்ணியத்தை போன்று ஆயிரம் மடங்கு அதிகமானது.
ஒருவர் பிறப்பிலிருந்து இது நாள் வரை செய்த புண்ணியங்கள், ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனை இவற்றை சமன் செய்து நோக்குகையில், இது நாள் வரை அனுஷ்டித்த விரத பலன் ஒன்றுமில்லாமல் போகிறது எனலாம். அதாவது, வாழ்நாளில் ப்ரபோதினி ஏகாதசி விரதம் மேற்கொள்ளாதவரின் புண்ணியபலன்கள் வியர்த்தமாகிறது.
கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் தான, தர்மங்களை விட, சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ள விரத கதைகளை பக்தியுடன் ஸ்ரவணம் செய்வது பகவானுக்கு மிகுந்த ப்ரீதியை அளிக்கிறது. கார்த்திகை மாதம், பகவத் லீலா கதைகள் சிறிதளவேனும் பாராயணம் செய்வது அல்லது ஸ்ரவணம் செய்வது, நூறு கோ (பசு) தானம் செய்த புண்ணிய பலனுக்கு நிகரான பலனை அளிக்க வல்லது.
அந்தணர்களில் சிறந்தோனே! ஒருவர் விடியற் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, வாயை கழுவி, குளித்து, பகவான் கேசவனை வழிபட வேண்டும். பிறகு கீழ்க்கண்டவாறு கூறி சபதம் ஏற்க வேண்டும். நான் ஏகாதசியன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு, பிறகு துவாதசியன்று உணவு உட்கொள்கிறேன்.
ஓ! புண்டரிகாக்ஷா! ஓ! அச்யுதா! நான் உம்மிடம் சரணடைகிறேன். என்னை காப்பாற்றுங்கள். இவ்வாறு சபதம் ஏற்று ஒருவர் மகிழ்ச்சியுடன் பக்தியுடனும் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும்.
இந்த ஏகாதசியின் இரவு, ஒருவர் விழித்திருந்து பகவான் விஷ்ணுவின் அருகாமையில் இருக்க வேண்டும். இரவு விழித்திருக்கையில் ஒருவர் பகவானின் உன்னதமான குணங்களைப் பற்றி கேட்டுக் கொண்டும், ஜெபித்துக், கொண்டும், பாடிக்கொண்டும் இருக்க வேண்டும்.ஒருவர் ஏகாதசியன்று தற்பெருமைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளை கடைபிடிப்பவர் உன்னத இலக்கை அடைவார். பிரம்மா தொடர்ந்தார். ஒருவர் கதம்ப மலர்களைக் கொண்டு ஜனார்தனரை வழிபட்டால் அவர் யமராஜாவின் இருப்பிடத்திற்குச் செல்லமாட்டார்.
கார்த்திகை மாதத்தில் ரோஜா மலர்களால் பகவான் கருடத்வஜா (அ) விஷ்ணு வழிபடுபவர் நிச்சியமாக முக்தி அடைவார். பகுலா மற்றும் அசோக மலர்களால் வழிபடுபவர். சூர்ய சந்திரர் விண்ணில் இருக்கும் வரை தன் கவலைகளில் இருந்து விடுபடுவார்.
சாமி இலைகளைக் கொண்டு பகவானை வழிபடுபவர் யமராஜாவின் தண்டனையில் இருந்து தப்புவார். தேவர்களின் காப்பாளரான பகவான் விஷ்ணுவை மழைக் காலத்தில் சம்பகா மலர்களால் வழிபடுபவர். மீண்டும் இந்த ஜட உலகில் பிறவி எடுக்க வேண்டியதில்லை.
மஞ்சள் நிற கேதகி மலர்களை பகவான் விஷ்ணுவிற்கு சமர்ப்பிப்பவரின் லட்சக்கணக்கான பிறவிகளில் சேர்க்கப்பட்ட அனைத்து பாவ விளைவுகளும் அழிக்கப்படும். நறுமணத்துடன் நூறு இதழ்களைக் கொண்ட செந்நிற தாமரை மலர்களை பகவான் ஜனார்தனருக்கு சமர்ப்பிப்பவர். ஸ்வேதத்வீபம் எனக்கூடிய பகவான் இருப்பிடத்திற்குத் திரும்புவார்.
ஓ! அந்தணர்களில் சிறந்தோனே! ஒருவர் ஏகாதசியன்று இரவு விழித்திருக்க வேண்டும். துவாதசியன்று பகவான் விஷ்ணுவை வழிபட்டு அந்தணர்களுக்கு உணவளித்து, பிறகு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். ஒருவன் தன்னால் இயன்றளவு தட்சணை கொடுத்து ஆன்மீக குருவை வழிபட்டால் முழுமுதற்கடவுள் மிகவும் திருப்தி அடைவார்.
ஓ! அந்தணர்களில் சிறந்தோனே! ஒருவர் கார்த்திகை மாதத்தில் பகவான் விஷ்ணுவை வழிபட வேண்டும். கார்த்திகை மாதத்தில் ஒருவர் தானே சமைத்து உண்பதால் சந்திரயான விரதத்தின் பலனை அடைவார்.
கார்த்திகை மாதத்தில் பகவான் விஷ்ணுவைப் பற்றி கேட்பதிலும், ஜெபிப்பதிலும், ஈடுபடுவர் நூறு பக்தர்களுக்கு தானமளிப்பதன் பலனை அடைவார். நாள் தோறும் வேத இலக்கியங்களை படிப்பவர், ஆயிரம் வேள்விகளை செய்வதன் பலனை அடைவார். பகவானின் தலைப்புகளைப் பற்றி கேட்டு, பிறகு உரையாற்றியவருக்கு தன்னால் இயன்ற தட்சிணையை கொடுப்பவர் பகவானின் பரமபதத்தை அடைவார்.
உத்தான ஏகாதசி ஒருவருக்கு, காணாதவை, விரும்பாதவை மற்றும் மூவுலகங்களிலும் அரிதானவை போன்ற அனைத்தையும் அளிக்கிறது. இந்த ஏகாதசி மந்தார மலை அளவிற்கு உள்ள கடுமையான பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.
இந்த ஏகாதசியன்று புண்ணியத்தை சேர்ப்பவர் சுமேரு மலைக்கு ஈடான அளவு பலன்களை அடைவார். பகவானை வழிபடாதவர். விரதங்களை அனுஷ்டிக்க தவறியவர்கள். நாத்திகர்கள், வேதங்களை நிந்திப்பவர். மாற்றான் மனைவியை அனுபவிப்பவர். மூடர் போன்றவர்களிடத்தில் மதக் கொள்கைகள் நிலைப்பதில்லை.
ஒருவர் பாவ செயல்களில் ஈடுபடக்கூடாது. மாறாக பக்தி தொண்டில் ஈடுபடவேண்டும். ஒருவர் பக்தி தொண்டில் ஈடுபட்டிருக்கையில் அவருடைய மதக் கொள்கைகள் அழியாது. உத்தான ஏகாதசி விரதத்தை முழு நம்பிக்கையுடன் அனுஷ்டிப்பவரின் நூறு பிறவிகளின் பாவ விளைவுகள் அனைத்தும் மறைந்துவிடும்.
ஒருவர் உத்தான ஏகாதசியின் இரவு முழுவதும் விழித்திருந்தால் தன் முற்கால, நிகழ்கால மற்றும் வருங்கால தலைமுறைகள் அனைவரும் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவர்.
ஓ! நாரதா! ஒருவர் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய ஏகாதசியை அனுஷ்டிக்காமலும், பகவான் விஷ்ணுவை வழிபடாமலும் இருப்பாரெனில் தான் சேமித்து வைத்த புண்ணியம் அனைத்தும் அழிந்து விடும்.
எவர் ஒருவர் இவ் ஏகாதசி விரத மஹிமையை பாராயணம் அல்லது ஸ்ரவணம் செய்கிறாரோ, அவர் அஸ்வமேத யக்ஞம் செய்த பலனை அடைவர்.