கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோண தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள கீழப்பாவூரில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு நரசிம்மர் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும்
கீழப்பாவூர் அலர்மேல் மங்காபத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் நரசிம்ம பெருமாள் கோயிலின் புரட்டாசி திருவோண உற்சவ விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதே போல் இந்த ஆண்டு திருவோண உற்சவ விழாவை முன்னிட்டு காலையில் வாஸ்துசாந்தி, பிரவேசபலி, புருசசுத்த ஹோமம், வருண ஜெபம் நடந்தது.
இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி தெப்பகுளத்தை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் உற்சவ மூர்த்தியுடன் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடந்தது.
இந்த தீர்த்தவாரி விழாவை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.




