
இந்திரன் மகாலட்சுமியை துதிக்கும்போது, “த்வித்களா சர்வ யோஷிதா” என்கிறான். “ஒவ்வொரு பெண்ணிலும் உன் களை இருக்கிறதம்மா!” என்று இந்திரன் போற்றுகிறான். “ஒவ்வொரு பெண்ணிடமும் ஜகன்மாதாவின் மகிமை இருக்கிறது. பெண்களை ஜகன்மாதாவாக கௌரவிக்க வேண்டும்” என்ற வாக்கியம் ருஷி வாக்கியமாக உள்ளது.
“மஹாகாளி மஹாலக்ஷ்மி மஹாசரஸ்வதி காயத்ரி ராதா ராஜராஜேஸ்வரி முதலான தெய்வ வடிவங்களில் உள்ள ஜகன்மாதா ஒவ்வொரு பெண்ணிலும் மகிமை வாய்ந்தவளாக ஒளி வீசுகிறாள். எனவே அம்பாளின் அருள் வேண்டுமென்றால் முதலில் பெண்களுக்கு கௌரவமளிக்க வேண்டும்” என்று தேவி பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
“பெண்களை கஷ்டப்படுத்துபவர்கள், பெண்களிடம் கடினமாக பேசுபவர்கள் தேவியை வழிபடுவதற்கு அருகதையற்றவர்கள். அவர்கள் அம்பாளின் அருளைப் பெற இயலாது” என்று புராணங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
“பெண்களை அவமரியாதை செய்யும் மனிதனுக்கு முன்னேற்றம் இருக்காது. இன்னும் கீழே விழுவானே தவிர உயர்வு இருக்காது” என்று எடுத்துக் கூறுவதற்கு நம் தேசத்தில் இரண்டு இதிகாசங்கள் பிறந்துள்ளன.
ராவணன் ஒரு பதிவிரதையான பெண்ணை அவமானம் செய்தான். கூண்டோடு நாசமடைந்தான். நிறைந்த சபையில் ஒரு பெண்ணை அவமானப்படுத்திய காரணத்தால் கௌரவர்கள் மொத்தமாக அழிந்தார்கள். ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இது ஒன்று புரிந்தால் போதும். வேறு எதுவும் கூறத் தேவையில்லை.
பெண்களை கௌரவிக்க வேண்டும் என்று அத்தனை அழுத்தமாக எடுத்துரைத்த பாரதீய ரிஷிகளுக்கும் பாரதீய கலாசாரத்திற்கும் நாம் நமஸ்கரிக்க வேண்டும்!
பெண்களுக்கு கௌரவம் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு பெண்களுடையதே! ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுத் தர வேண்டும். அப்படிப்பட்ட பண்பாட்டை கற்றுக் கொள்ளாததால்தான் இளைஞர்கள் பெண்களிடம் தாறுமாறாக நடந்து கொள்வது காம கண்களோடு பார்ப்பது ஆசிட் ஊற்றுவது துன்புறுத்துவது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கு காரணம் என்னவென்றால் ஒரு பெண்ணாகிய தாய் தன் பிள்ளைகளுக்குச் சரியாக வழிகாட்டாததே! எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பிள்ளைகளுக்கு தங்களின் தாய் நினைவு வரும்படி அந்தத் தாய் பாடம் புகட்ட வேண்டும். ஜகன்மாதாவின் சொரூபம் ஒவ்வொரு பெண்ணிலும் இருக்கிறது என்ற கருத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
“பரநாரீ சோதரா!” என்று அற்புதமாக கூறுகிறார் தியாகராஜர் தன் கீர்த்தனையில். ராமச்சந்திர மூர்த்தியைப் புகழும்போது, “பிற பெண்களின் சகோதரனே!” என்று வர்ணிக்கிறார். அதாவது ஒவ்வொரு பெண்ணையும் ஒரு சகோதரியாக ஒரு தாயாக பார்க்கிறான் ராமன்.
சுவாமி விவேகானந்தர் அயல்நாட்டில் உரையாற்றும்போது பாரத தேசத்துப் பெண்களைப் பற்றி கூறுகையில், “பாரத தேசத்தில் பெண்களை அன்னையாகப் பார்த்து மதிப்பார்கள்” என்று பெருமிதத்தோடு கூறினார். “அம்மா!” என்று அழைப்பது ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்க வேண்டிய முறைமை.
ஒவ்வொருவரின் உடலிலும் அடிப்படை உணர்வுகளான காமம் மோகம் போன்றவை இருக்கும். ஆனால் சம்ஸ்காரத்தால் அவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நல்லொழுக்கங்களை கற்றுத் தருவதற்காகத்தான் கல்வியறிவு.
ஆனால் படிப்பதற்காக சென்று அங்கு பண்பாட்டை இழந்து தாறுமாறாக நடந்து கொள்கிறார்கள் என்றால் அதற்கு பிள்ளைகளைப் பெற்ற பெற்றோரும் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களும்தான் பொறுப்பு.
வெறும் படிப்பு சொல்லித் தருவது மட்டுமின்றி நல்ல பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டும். அடிப்படை மிருக உணர்வுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் கற்றுத்தர வேண்டும். “பெண்களை ஜகன்மாதாவாக பார்க்கத் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் அழிவு நிச்சயம்!” என்று பயமுறுத்தி பிள்ளைகளை வளர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே பெண்களைத் துன்புறுத்துவதில் பாரத தேசம் முதலிடத்தில் உள்ளது என்று அபகீர்த்தியை நாம் பெற்று வருகிறோம். இதற்கு காரணம் நம்முடைய பண்பாட்டிலிருந்து பிள்ளைகளை விலக்கி வளர்த்து வருவதுதான்.

பிள்ளைகளுக்கு சரஸ்வதி தேவியை வணங்குவது, லக்ஷ்மி தேவியை வழிபடுவது போன்றவற்றைக் கற்றுத் தரவேண்டும். கல்வியின் தாய் சரஸ்வதி தேவி. அவளும் பெண் தெய்வமே! அதேபோல் ஐஸ்வர்யங்களின் தாய் மகாலட்சுமி. துஷ்டர்களை துவம்சம் செய்பவள் துர்கா!
சீதாதேவியை அவமானம் செய்த ராவணனை ஏளனம் செய்து அனுமன் ஒரு சிறந்த கூற்றை சொல்வார். “நீ இலங்கையில் சிறை வைத்திருப்பவள் மகாலட்சுமி தேவி. யாருக்கு? சத்புருஷர்களுக்கு அவள் மகாலட்சுமி! ஆனால் உன் போன்ற துஷ்டர்களுக்கு அவள் காலராத்திரி” என்கிறார். இங்கு காலராத்திரி என்று கூறும்போது, “உன் மரணத்திற்குக் காரணமாகும் சக்தி” என்று பொருள்.
பெண்களை வெறும் அழகின் வடிவமாகவோ கேளிக்கைப் பொருளாகவோ பார்க்கக்கூடாது. அவள் சக்தியின் வடிவம். பல அசுரர்கள் ஒன்று சேர்ந்து பயமுறுத்திய போது உதவியற்ற நிலையில் தேவதைகள் ஜகன்மாதாவை பிரார்த்தித்தார்கள். ஜகன்மாதா தேவதைகளுக்கு அபயமளித்தாள். மிக துஷ்டர்களான ராக்ஷசர்களை வதைத்து அனைத்துலகங்களையும் காத்தருளினாள் பராசக்தி. நம் புராணங்கள் ஒவ்வொரு பெண்ணையும் சக்தியின் வடிவமாகப் போற்றுகிறது.
பிள்ளைகளுக்கு பெண்களைப் பார்க்கும்போது அவர்கள் சக்தி சொரூபமான ஜகன்மாதா என்ற எண்ணம் ஏற்படும் விதமாக பெற்றோர் சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அதேபோல் பள்ளியில் ஆசிரியர்களும் இதனை கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளுக்கு பெண்களைப் பார்த்தால் பயம் ஏற்படும். மோகம் ஏற்படாது. கௌரவம் ஏற்படும். காமம் ஏற்படாது. அவ்விதமாக பண்பாட்டோடு வளர்க்க வேண்டும்.
அவர்களுக்கு பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றால் முதலில் ஹிந்து தேவதைகளை வழிபடுவதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். சரஸ்வதி, லக்ஷ்மி, துர்காதேவிகளை சிறுவயதிலிருந்தே பூஜிக்க பழக்கப்படுத்தினால், “ஒவ்வொரு பெண்ணிலும் இவர்கள் இருக்கிறார்கள். தவறாக நடந்துகொண்டால் தண்டிப்பார்கள்!” என்ற பயம் இருக்கும்.
பாரத தேசத்தில் பெண்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்திப்போம்! ஜகன்மாதாவான ஆதிப்பெண் இந்த தேசத்தை அனுகிரகிக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



