“பழையதுக்கு தொட்டுக்க வெங்காயமா?”
(மடத்து சமையற்கட்டில் நடந்த ரகசியத்தை வெளிக்கொணர்ந்த பெரியவா)
“உள்ளம் கவர் கள்வன்”-என்ற தலைப்பில்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பெரியவாளுடைய பேச்சு சாமர்த்தியம், உளவியல் ஞானம் அளவிட முடியாதது.
ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, வெகு சாமர்த்தியமாக வேறு ஒரு துறைக்குத் தடம் மாறிச் சென்று விடுவார்கள். ‘ஏன் சம்பந்தமில்லாமல் இப்படிக் கேட்கிறார்?’ என்று முதலில் தோன்றும். கடைசியில் ஒரு உண்மை தானாக வெளிப்படும்.
ஒரு சமயம், ஸ்ரீமடம் வேத பாடசாலைப் பையன்கள் தரிசனத்துக்கு வந்தார்கள். அவர்கள் வரும் போதெல்லாம் ஒரு பஞ்சாதி (வேதப்பகுதி) கூட்டாகச் சொல்வது வழக்கம்
.
எல்லாப் பையன்களும் ஒரே குரலில் இனிமையாக வேதம் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு பையனை மட்டும் அருகில் அழைத்தார்கள். அவனுடைய பெயர்,பெற்றோர், ஊர் என்றெல்லாம் சுற்றி வளைத்துவிட்டு,
“இன்னிக்குக் காலம்பர பாடசாலையிலே என்ன சாப்பிட்டே?” என்று கேட்டார்கள்.
“பழையது..”
“தொட்டுக்க?”
“வெங்காயம்”
பெரியவா சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, “வெங்காயமெல்லாம் சாப்பிடக் கூடாது…ஊறுகாய், மாங்காய்த் தொக்கு, நார்த்தங்காய், நாரத்தை இலைப் பொடி …இது மாதிரி தான் தொட்டுக்கணும்.
“ஊறுகாய் ஆயிடுத்துன்னார் சமையல் மாமா.”
“ஊறுகாய் இல்லேன்னா, இங்கே வந்து கேளு.. ஏற்பாடு செய்து தரச் சொல்றேன்..”
பையன் தலையை ஆட்டினான்.
“சரி,போ..”
இந்த சம்பாஷணை எதற்காகத் தெரியுமோ?
விதிமுறைகளுக்கு எதிராக, பாடசாலை சமையற்கட்டில் வெங்காயம் வாங்கிச் சமைக்கிறார்கள் என்ற ரகசியத்தை வெளிக் கொணர்வதற்காகத்தான்