அருள்பெற்ற நாதமுனி… அவதரித்த நன்னாள்!

Published:

nadhamunigal - 2026

ஆனி அனுஷம்.. : நம்மாழ்வாரின் அருள் பெற்றவரும் , நானிலத்தில் குருவரையை நாட்டியவருமான ஸ்வாமி நாதமுனிகளின் திருநக்ஷத்ரம்..

இன்று ஆனி‌ அனுஷம் : நாதமுனிகள் வருஷ திருநட்சத்திரம்
நமோ சிந்த்யாத்புதா க்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார்
அருளிச் செயலை அறிவாரார் -அருள்பெற்ற
நாதமுனி முதலாம் நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே உண்டோ பேசு

நாதமுனிகள் கிபி 824 ம் வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம் என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ; ஆனி மாதம், அனுச நட்சத்திரம் ; பௌர்ணமி திதி புதன் கிழமையன்று சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர் அம்சமாக திருவரங்கநாதன் என்னும் இயற்பெயருடன் பிறந்தவர்.

வீரநாராயணபுரத்தில் நாதமுனிகள் காட்டுமன்னனார் கோயிலில் மலர், திருவிளக்கு கைங்கரியம், கோயில் நந்தவனப் பராமரிப்பு, பிரசாதம் சமைத்தல், இறைவனை அலங்கரித்தல் என்று இறைத் தொண்டு செய்து வந்தார். அவ்வாறு செய்து வருகையில் ஒருநாள், திருக்குடந்தை ஆராவமுதன் (சார்ங்கபாணி) கோயிலுக்கு புனிதயாத்திரை வந்த சில வைணவர்கள்,

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

உழலையென்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான் கழல்களவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் மழலைத் தீரவல்லார் காமர்மானேய நோக்கியர்க்கே
……திருவாய்மொழி 5-8-10*

என்னும் பாடல் முடிய பத்து பாடல்களையும் பாடினர்.

ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்’ என்று அவர்கள் பாசுரங்களை முடித்த போது அருளிசையில் மயங்கி நின்ற நாதமுனிகள், ‘’ஐயா.. பத்துப் பாசுரங் களை கேட்டதே இவ்வளவு ஆனந்தமாய் உள்ளதே மொத்தமாய் ஆயிரத்தையும் பாடக் கூடாதா?’’ என்று கேட்டார். அதற்கு அவர்களோ “தாமிரபரணிக் கரையில் திருக்குருகூரில் வசிக்கும் நம்மாழ்வாரின் சீடர் பராங்குசதாசனுக்கும் தான் அத்தனையும் தெரியும்” என்றனர்.

ஆழ்வார் திருநகரியில் மதுரகவி ஆழ்வார் ஶிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்தார். பராங்குச தாசர், நாதமுனிகளுக்கு கண்ணிநுண்சிறுத்தாம்பு 11 பாசுரங்களை சொல்லிக் கொடுத்து, அதை 12000 முறை திருப்புளியாழ்வார் ((நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன்பு அனுசந்திக்க சொன்னார்.

நாதமுனிகள் ஏற்கனவே அஷ்டாங்க யோகத்தில் வல்லவராக இருந்தமையால், உடனே நம்மாழ்வாரைத் தியானித்து 12000 முறை கண்ணிநுண்சிறுத்தாம்பை அனுசந்தித்து முடித்தார். உடனே நம்மாழ்வாரும் நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகி அஷ்டாங்க யோகம், நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதனுடைய ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினார். எப்படி எம்பெருமான் நம்மாழ்வாருக்கு ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினானோ, அதே அர்த்தங்களை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளினார்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இதைத் தான் உபதேஶரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச்செய்தார்.

Related articles

Recent articles

spot_img