தினம் ஒரு வேத வாக்கியம்.
5.அந்தர்யாமி யார்?
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“ஆத்மா௨ஸ்தர்யாம்யம்ருத:”
— பிரஹதாரண்யக உபநிஷத்.
“ஆத்மா அந்தர்யாமி. அமிர்தம்”
பிரபஞ்சம், பரமாத்மா இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பை கூறும் அற்புதமான விளக்கத்தைக் வேதாந்த சாஸ்திரம் போதிக்கிறது.
“யார் சகலப் பிராணிகளிடத்தும் இருந்து சகலப் பிராணிகளையும் நடத்துவிக்கிறாரோ – ஆனால் சகல ஜீவர்களும் யாரை அறியாவோ – யாருக்கு சகல ஜீவிகளும் சரீரமோ – அனைவரிலும் இருந்துகொண்டு (அந்தர:) நடத்தி வைத்தபடி (யமயதி) உள்ளாரோ அவரே ஆத்மா – அவர் சாஸ்வதமானவர்” என்று விவரித்து அதற்கும் முன்பாக “பஞ்ச பூதங்களிலும் இருந்துகொண்டு யார் நடத்துவிக்கிறாரோ, யாரை பஞ்சபூதங்களும் அறியாதோ” என்று விஸ்தாரமான விவேகத்தை அளிக்கிறது உபநிஷத்து.
அந்தர்யாமியாக விளங்கும் பரமாத்மாவை உணர்வதற்கு ஞானச் சுரங்கமான உபநிஷத்து எத்தனை அற்புதமாக விவரிக்கிறதோ கவனிக்கவேண்டும்.
கண்ணில் தென்படும் பஞ்சபூதங்கள், புலன்கள், உடல்கள் – இவை பரமாத்மா அல்ல. அதற்காக இவற்றை ‘இல்லை’ என்று கூறுவதற்கும் வழியில்லை.
ஆனால் அவற்றின் உள்ளே சைதன்யமாக இருப்பவன் பரமாத்மா. உண்மையில் சைதன்யத்தால்தான் இவை உருவாகின. சைதன்யத்தால்தான் இருப்பு பெற்றுள்ளன. மீண்டும் சைதன்யத்தில் லீனமாகிவிடுகின்றன.
பஞ்சபூதங்கள், உடல்கள்… போன்ற அனைத்திலும் சைதன்யம் உள்ளது என்ற பார்வையோடு நோக்கினால்… சைதன்யத்தால்தான் இவை அனைத்தும் நடத்துவிக்கப்படுகின்றன என்பதை உணரலாம். ஆனால் நடத்துவிக்கப்படும் பிரபஞ்ச உயிர்களின் உடல்கள் நடத்துவிக்கும் சைதன்யத்தை அறிய இயலாமல் உள்ளன.
அனைத்தையும் எந்த கண்ணால் பார்க்கிறோமோ அந்தக் கண்ணை நாம் பார்க்க இயலாது அல்லவா? அதே போல் அனைத்தையும் நடத்துவிக்கும் சைதன்யத்தை அறிய இயலாமல் போகலாமே தவிர, இல்லை என்று கூற இயலாது. தென்படவில்லை என்பதால் கண் இல்லை என்று கூறுவோமா?
வெளிப்பார்வைக்கு உடல்கள் தென்படும். அந்தர்முக பார்வையால் சைதன்யத்தை உணர இயலும்.
அந்த சைதன்யமே ‘நான்’ எனப்படும் ஆத்மா. அது அழிவில்லாதது.
அழியும் குணம் கொண்ட உடல்களால் ‘நான்’ என்னும் சைதன்யம் இருப்பதில்லை. உடலினுள்ளே அதனை நடத்துவிக்கும் சைதன்யம் உள்ளது. அதனால்தான் அது அந்தர்யாமி எனப்படுகிறது.
நம்மிடத்தில் உள்ள ‘நாம்’ என்ற சைதன்யம் அந்த அந்தர்யாமியுடையதே! நம் ‘இருப்பு’ அந்த ‘அமிர்த’ தத்துவத்தால் ஆனது என்ற சத்தியத்தை உள்ளது உள்ளபடி உணர்ந்து கொள்வதே ஞானம்.
அதனை அடைந்தவர் ‘அமிர்தன்’ ஆகிறார். உடல்களுக்கு அடைக்கலமான சைதன்யத்தை அறிவதே ஆன்மிக சாதனையின் பரமார்த்தம்.
அந்த அந்தர்யாமியையே பக்தர்கள் பகவான், ஈஸ்வரன், பகவதி என்று குறிப்பிடுகையில், ஞானிகள் பிரம்மா, ஆத்மா என்று அழைக்கிறார்கள்.