தினசரி ஒரு வேத வாக்கியம்: 47. எது சத்சங்கம்?

Published:

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

47. எது சத்சங்கம்? 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“புனர்தததாக்னதா ஜானதா சங்கமே மஹி” – ருக் வேதம்

“தான குணமுள்ளவர், துன்புறுத்தாதவர், நம்பிக்கை துரோகம் செய்யாதவர் ஞானி – இவர்களோடு நாங்கள் சத்சங்கம் செய்வோமாக!

சத்சங்கம் என்றால் என்ன? என்று கூறுகிறது வேதமதம். அத்தகைய சத்சங்கம் தினமும் தேவை என்று எடுத்துரைக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளோரின் தொடர்பின் தாக்கம் நம் மீது கட்டாயம் இருக்கும். எனவே நம்மோடு பழகுபவர்களுக்கு மூன்று குணங்கள் இருக்க வேண்டும். மூன்றும் ஒன்றாக இருப்பவரும் இருப்பார்கள். அல்லது ஏதோ ஒரு குணம் இருந்தாலும் சிறந்ததே!

முதலாவது – தான சீலராக இருக்க வேண்டும். தானம் செய்வது என்றால் தன்னிடம் இருப்பதை தேவையானவருக்கு அளிப்பது. சமுதாயத்தில் இது மிகவும் தேவை. பிறருக்கு அன்பையும் செல்வத்தையும் பகிர்வது தானம். பிறருக்கு அன்போடு ஆபத்தில் உதவுவது சிறந்த குணம். அப்படிப்பட்ட ஒரு நட்பு கிடைப்பது முக்கியம். இது பிரதான லட்சணம். “ததாதி காமான்” என்று பர்த்ருஹரி விவரிக்கிறார். 

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

அடுத்து “அக்னத” – அதாவது துன்புறுத்தாத குணம். எவ்விதமான ஹிம்சையும் செய்யாதவரே நட்புக்கு தகுந்தவர். பேச்சாலோ செய்கையாலோ பிறரைக் காயப்படுத்தாமல் இருப்பது நண்பனின் இரண்டாவது தகுதி. மனதையோ, மனிதனையோ துன்புறுத்தக்கூடாது. அனைத்தையும்விட நன்றி மறப்பது, நம்பிக்கை துரோகம் செய்வது போன்ற இயல்புகள் இல்லாமல் இருக்க வேண்டும். இதுவே “அக்னத”. 

நம்பிக்கை துரோகத்தை மிஞ்சின பாவம் வேறு இல்லை. நட்புக்கு பிரதானம் விசுவாசம். இவன் நம்மை சேர்ந்தவன், இவனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற எண்ணம் சினேகத்திற்கு அடித்தளம். அந்த நம்பிக்கையை தகர்க்கும் இயல்பால் நட்பு குலைகிறது.

மூன்றாவது ‘ஜானதா’. இதற்கு அறிவது என்று பொருள். அது இருவிதம். நண்பனின் நல்லது கெட்டது குறித்தும், சூழ்நிலை குறித்தும், நண்பனின் மனதைக் குறித்தும் புரிதலோடு நடந்து கொள்வது ஒரு விதம். இரண்டாவது – விவேகம், விசாரணை, அறிவுக்கூர்மை பெற்றிருப்பது. இதுபோன்றவரோடான சாங்கத்தியம் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அளித்து சன்மார்க்கத்தில் வழிநடத்தும்.

இந்த மூன்று குணங்கள் உள்ளவருடன் நட்பு நன்மை பயக்கும். அதே போல் பிறர் நம்மோடு நட்பாக இருக்க வேண்டும் என்றால் நாமும் இந்த மூன்று குணங்களைப் பெற்றிருக்க வேண்டும். இது பிறர் விரும்பும் குணம் மட்டுமல்ல… நாம் பிறருக்குக் கொடுக்க வேண்டிய குணங்களும் இவையே என்பதை உணரவேண்டும்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

முதலிரண்டும் இதயத்தோடு தொடர்புடைய இயல்புகள் மூன்றாவது புத்தியோடு தொடர்புடையது. இத்தகைய குணங்கள் உள்ளவரின் நட்பால் பல்முனை முன்னேற்றத்தை அடையமுடியும்

ayurveda
ayurveda

எப்படிப்பட்டவரோடு நட்பு கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளது இந்த வேத வாக்கியம். இதனை இதுவரை லௌகீகமாக அலசினோம். 

இனி, ஆன்மீகமாக பார்ப்போம். பக்தியையும் ஞானத்தையும் பகிர்பவர் சத்சங்கத்திற்கு தகுதியானவர். தனக்குள்ள ஞானச் செல்வத்தை பிறருக்கும் பகிரும் குணம் முதல் தகுதி. இரண்டாவது, நமக்குள்ள சிறிதளவு ஞானத்தை கெடுக்காமல் இருக்க வேண்டும்.

மூன்றாவது, அவருக்குத் தெரிந்ததை நமக்கு எவ்வாறு அளிப்பது? நம் ஸ்தாயி என்ன? நாம் எவ்வித மார்க்கத்தில் சென்றால் இலக்கை அடைவோம்? என்பதை அறிந்தவராக வேண்டும். 

இதுபோன்றவரின் சத்சங்கம் நம்மை ஆன்மீகமாக மிக உயர்ந்த மார்க்கத்தில் வழிநடத்தும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img