திருப்புகழ்க் கதைகள் பகுதி 250
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
பாரியான கொடை – பழநி
சங்க பாணியன்
பஞ்சாயுதங்கள் எனப்படுபவை ஸ்ரீமந்நாரயணின் திருக்கைகளில் உள்ள சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகியவை ஆகும். ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் பாஞ்சசன்யம் என்ற பெயர்கொண்ட சங்கினையும் சுதர்சனம் என்ற பெயர்கொண்ட சக்கத்தினையும் கிருஷ்ண பரமாத்மா பயன்படுத்தினார். கௌமோதகி என்ற பெயர்கொண்ட கதாயுதத்தை பலராமன் பயன்படுத்தினார். இராமாவதாரத்தி. வில்லினைப் பயன்படுத்தினார். கல்கி அவதாரத்தில் வாலைப் பயன்படுத்துவார். தன்னுடைய ஐந்து திருக்கரங்களில் பஞ்சாயுதங்களையும் ஆறாவது திருக்கரத்தில் செந்தாமரையும் கொண்டிருப்பார் பகவான் ஸ்ரீமந்நாராயணன்.
திவ்யபிரபந்தத்தில் பஞ்சாயுதங்கள் பற்றிய பாடல்கள் பல உள்ளன. சான்றாக –
செங்கம லப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்
பங்கிகள் வந்துஉன் பவளவாய் மொய்ப்ப
சங்கு வில் வாள் தண்டு சக்கர மேந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ வச்சோ
ஆரத் தழுவாவந்து அச்சோ வச்சோ.
மூளவெரி சிந்தி முனி வெய்தியமர்
செய்துமென வந்த அசுரர்,
தோளுமவர் தாளுமுடி யோடுபொடி
யாகநொடி யாம ளவெய்தான்,
வாளும் வரிவில்லும் வளையாழி
கதை சங்கமிவை யங்கை யுடையான்,
நாளுமுறை கின்றநகர் நந்திபுர
விண்ணகரம் நண்ணு மனமே,
பஞ்சாயுதங்களின் திருநாமங்களாவன – சக்கரம்-சுதர்சனம்; சங்கம்-பாஞ்சசன்யம்; கதாயுதம்-கௌமோதகீ; வில்-சாரங்கம்; வாள்-நந்தகம். இவை ஒவ்வொன்றையும் பற்றிப் பாடும் ஸ்தொத்திரம் ஒன்றினை ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாரயணத்தின்போது நாம் அனைவரும் சொல்லுவோம். அது ‘ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்திரம்’ எனச் சொல்லப்படுகிறது.
பாஞ்சஜன்யம் சங்கு
விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்யத்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே
மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளிவரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும் தன் கம்பீர ஓசையால் அசுரர்களுக்கு ஒலி அச்சத்தைக் கொடுக்கக்கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் வலம்புரிச் சங்கும் திருமகளும் அடங்குவர். மஹாவிஷ்ணு சங்கையும் தேவியையும் ஏற்றுக் கொண்டார். சங்குகளில் மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. இவற்றில் வலம்புரி சங்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலே உள்ள இந்த சங்குகள் பின்வரும் திருக்கோயில்களில் பெருமாளின் திருக்கரங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. திருப்பதி பெருமாள்-மணி சங்கு, ரங்கநாதர்-துவரி சங்கு, அனந்த பத்மநாபன்-பாருத சங்கு, பார்த்தசாரதி பெருமாள்-வைபவ சங்கு, சுதர்ஸன ஆழ்வார்-பார் சங்கு, சவுரிராஜப் பெருமாள்-துயிலா சங்கு, கலிய பெருமாள்-வெண் சங்கு, நாராயணன்-பூமா சங்கு.
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே பவமானாய தீமஹி
தந்நஸ் சங்க: ப்ரசோதயாத்
என்பது பாஞ்சசன்ய காயத்ரி ஆகும்.
சுதர்சனம் – சக்கரம்
ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யேமிமி
தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும், கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போல பிரகாசமானதும் அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.
காக்கும் கடவுளான கருணை மிக்க மஹாவிஷ்ணு தீமைகளை அழித்து நன்மைகளை வழங்க சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது. வைணவப் பெருமக்கள் இதனை ஒரு ஆயுதம் எனக் கருதாமல் ஸ்ரீசக்கரத்தாழ் என வழிபடுகின்றனர். பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துபவர் இவர். தடாகத்தில் கஜேந்திரன் இறங்கியபோது. முதலை அவனது காலைக் கவ்விப்பிடித்து தண்ணீருக்குள் இழுக்கவே, “ஆதிமூலமே‘ என்று கஜேந்திரன் குரல் கொடுக்க, மஹா விஷ்ணு உடனே கருட வாகனத்தில் தோன்றினார். திருமாலின் கையிலிருந்து புறப்பட்ட ஸ்ரீசுதர்சனச் சக்கரம் முதலையை வதைத்து, கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றியது. பகவானுக்கு ஐந்து ஆயுதங்கள். ஆனால், அவருக்கு காவல் இருக்கும் ஸ்ரீசுதர்சனாழ்வாருக்கோ பதினாறு ஆயுதங்கள்.
பெருமாளுக்கு திருப்பல்லாண்டு பாடும்போது பெரியாழ்வார் சுதர்சன ஆழ்வாரையும் சங்கத்தையும் வாழ்த்திப் பாடுகிறார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்கு முழுங்கும் அப்பாஞ்ச்சன்னியமும் பல்லாண்டே.
சுதர்சன காயத்ரி
ஓம் சுதர்சனாய வித்மஹே சக்ர ராஜாய தீமஹி தந்நோ சக்ர ப்ரசோதயாத்.
கௌமேதகம் கதாயுதம்
ஹிரண்மயீம் மேருஸமான ஸாரம்
கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
வைகுண்ட வாமாக்ரகராபிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிசபாக்யம் பெற்றதுமாகிய கௌமேதகம் என்ற கதையை சதா சரணமடைகின்றேன்.
பலராம அவதாரத்தில், பகவான் கலப்பையை தாங்கி இருந்தாலும் போரில் கௌமோதகி என்ற கதாயுதத்தையே பிரதானமாக கொண்டார். பலராமன், பீமனுக்கும் துரியோதனனுக்கும் அவர் கதாயுத ஆசானாவார். துவாபர யுகத்தில், தசாவதர சங்கு–சக்ரதாரி கண்ணனும் கதாயுதபாணி பலராமனும் ஒன்றுபட்டு செயல்பட்டது அரும் சிறப்பு. பெருமானின் சிறிய திருவடியாகிய சிரஞ்சீவி அனுமனின் ஆயுதமும் கதாயுதமாகும்.
நந்தகம் வாள்
ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேதக்ஷரச் சோணித திக்ததாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி செந்நிற ஒளியுடன் காட்சிதரும் நந்தகம் என்னும் பெயருடைய வீரவாளை என்றும் சரணமடைகிறேன்.
சார்ங்கம் வில்
யஜ்ஜ்யாநீ நாத ஸ்ரவபணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பர்ணவர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக்கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப் போதும் சரணமடைகிறேன்.