தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“No sense of history for Indians – இந்தியர்களுக்கு வரலாறு பற்றிய உணர்வு கிடையாது!”
“இந்தியர்களுக்கு வரலாற்றைக் கூறும் நூல்களே இல்லை” என்று பிரிட்டிஷ் ஆட்சியர்கள் கூறியது முழுப் பொய். பாரத தேசம் மிகமிகப் புராதனமான நாகரிகம் கொண்ட தேசம்.
இந்த பூமியின் மேல் படைப்புத் தோன்றி 197 கோடி 29 லட்சம் 49 ஆயிரம் 118 ஆண்டுகள் ஆகிறதென்பது நம் முனிவர்கள் அளித்துள்ள கணக்கு.
பூமி, படைப்பு, வயது போன்றவற்றைப் பற்றி உலகப் புகழ் பெற்ற புவியியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங் A brief History of Time என்ற நூலில் நம் பாரதிய சித்தாந்தத்தை ஆதரித்துப் பேசியுள்ளார்.
பாரதிய இலக்கியத்தையும் வரலாற்றையும் அழிப்பதற்கு மாக்ஸ் முல்லர், மெக்காலே போன்றவர்கள் செய்த சதி கொஞ்சநஞ்சமல்ல. வேதங்களையும் சமஸ்கிருத நூல்களையும் வக்கிரமாக மொழிபெயர்த்தவர் ஒருவர். பாரதிய கல்வி முறையை வேரறுத்தவர் மற்றொருவர். இவர்கள் நம் தேச வரலாற்றைப் பீடித்த கரையான்கள்.
வந்தேறிகளின் ஆட்சி காலம் முழுவதும் பாட புத்தங்களில் அந்த பொய்களையே கற்பித்தார்கள். அவற்றைப் படித்த நம்மவர்களை பிரிட்டிஷார் தம் மானசிக புதல்வர்களாக உருவாக்கினார்கள். பாரத தேசத்திற்கு வரும் ஒவ்வொரு ஆங்கிலேயனுக்கும் இந்தியாவைப் பற்றி போதிப்பதற்காக கிறிஸ்துவத்திற்கு ஒத்துழைப்பான நூல்களை தயாரித்தார்கள்.
பாரத தேசத்தை எப்போதுமே பார்த்திராத, எந்த ஒரு பாரதிய மொழியோடும் அறிமுகம் இல்லாத, எந்த இந்தியனையும் எப்போதுமே சந்தித்திராத ஜேம்ஸ்மில் என்ற ஒரு போலி வரலாற்று ஆசிரியரைக் கொண்டு இந்த நூல்களை எழுதி வாங்கிக் கொண்டார்கள்.
மெக்காலேவின் மானசிக புதல்வர்களான நம் தேசத்தில் பிறந்து வளர்ந்த சிலர். இந்த ஜேம்ஸ்மில்லுக்கும் சீடர்களே!
இந்த ஜேம்ஸ்மில்லில் வாரிசுகளே நம் செக்யூலரிஸ்டுகள்! இவர்களே வரலாற்று நூல்களைத் தயாரித்து நம் மாணவர்களை படிக்க வைக்கிறார்கள். இந்தியர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை தோற்றுவிப்பதே ஆங்கிலேயர்களின் லட்சியம். அதற்காக நம் ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாறு அனைத்தும் பொய் என்று பிரசாரம் செய்தார்கள்.
நமக்கு உள்ள வரலாற்று நூல்கள் எவை?
நம் தேசத்தை ஆண்ட சக்ரவர்த்திகள் பலரின் வரலாற்றை விவரமாகக் கூறும் புராணங்கள் பல உள்ளன. இதிகாசம் என்றால் இவ்வாறு நிகழ்ந்தது என்று பொருள். வால்மீகி முனிவரும் வியாச முனிவரும் அளித்தவை நம் இதிகாசங்கள்.
“சர்கஸ்ச பிரதி சர்கஸ்ச வம்சா மன்வந்தராணிச வம்சானுசரிதம் சேதி புராணம் பஞ்ச லக்ஷணம் !!” என்ற சூத்திரத்தின்படி அஷ்டாதச புராணங்களனைத்தும் வரலாற்று நூல்களே!
“பூர்வ வருத்தம் கதா ரூபம் இதிஹாசம் ப்ரசக்ஷதே” – முற்காலத்தில் நடந்த கதையை தெரிவிப்பதே இதிஹசம். ராமாயணமும் மகாபாரதமும் நடந்த சம்பவங்களைத் தெரிவிப்பவை. இவை வரலாற்று நூல்கள் இல்லையா?
காளிதாசர் அளித்த ரகுவம்சம் 19 சர்கங்கள் கொண்ட மகா காவியம். இது ஒரு பெரும் வரலாற்று நூல். இதில் ரகுவம்சத்தைச் சேர்ந்த 29 அரசர்களின் வரலாறு உள்ளது. கவிஞர்களுக்கெல்லாம் குரு காளிதாசர். இதில் அரசர்களின் வாழ்க்கைச் சிறப்புகளோடு கூட அந்த காலத்தில் இருந்த அரசாட்சி அமைப்பு, கல்விமுறை போன்றவற்றை மிகமிக விரிவாக வர்ணித்துள்ளார்.
அதுமட்டுமின்றி புவியியல், ஒளி விஞ்ஞானம், சமுத்திரங்களின் விஞ்ஞானம், பல்வேறு தீர்த்தங்களின் வர்ணனை போன்றவை இந்த புராணங்களில் விவரமாக உளளன.
உதாரணத்திற்கு, அக்னி புராணத்தில் 118-120 அத்தியாயங்களில் பாரத தேசம், அதன் எல்லைகள், அந்ததந்த பிரதேசங்களின் விஸ்தீரணம் போன்ற அனைத்து செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இவை வரலாற்று நூல்கள் இல்லையா?
மகாபாரதம் பாரதிய சமுதாய வரலாற்றுக்கு நிலைக் கண்ணாடி. இந்த பவித்திர பாரத தேசத்தில் நடமாடிய எத்தனையோ புராண புருஷர்களின் வரலாற்றை அளித்த ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட ‘ராஜ கிரந்தம்’ இது.
ஸ்ரீகிருஷ்ணர் முதல் ஸ்ரீராமரின் சரித்திரம், நள மகாராஜா சரித்திரம், ஹரிச்சந்திர சரித்திரம் போன்றவற்றை அளித்த சிறந்த நூல் அல்லவா மகாபாரதம்!
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிஹாசங்களில் குறிப்பிடப்பட்ட அநேக நகரங்கள், மலைகள், நதிகள் இப்போதும் இருப்பதை விட வரலாற்று ஆதாரங்கள் வேறென்ன வேண்டும்?
மகாபாரத காலத்தில் நம் தேசம் தெற்கில் நர்மதை வரை, மேற்கில் மகா நதி வரை, கிழக்கில் சைனா வரை பரவியிருந்தது. நல்ல ஜாதி குதிரைகளுக்கும். தரமான துணிகளுக்கும் புகழ் பெற்ற காம்போஜ தேசம் – இன்றைய ஹிந்துகுஷ் மலைப் பகுதியில் இருந்து – நேற்றைய திபெத்தில் இருந்து இன்றைய லடாக் வரை பரவியிருந்தது என்று மகாபாரதத்தில் வரலாறு கூறப்படுகிறது.
மகாபாரதப் போரில் பாண்டவர்கள், கௌரவர்கள் தரப்பில் இணைந்த பல்வேறு அரசர்களின் வர்ணனை வரலாறு இல்லையா?
ஸ்ரீராமச்சந்திரனே ஆச்சர்யப்படும்படி சுக்ரீவ மகாராஜா வர்ணித்த பூகண்டம், அதன் பல்வேறு பிரதேசங்கள் இப்போதும் இருப்பது வரலாற்று ஆதாரங்கள் இல்லையா?
வரலாற்றைத் துடைத்தழிக்கும் முயற்சியில் பல நகரங்களின் பெயர்களை மாற்றினர் முரட்டுக் கொள்ளையர்களான அரசர்கள்.
“வரலாற்றைப் படித்தறியாதவர்களை வரலாறே அழித்து விடும்” என்பது சொலவடை.
அண்மையில் கிடைத்த வரலாற்று ஆதாரங்களான சரஸ்வதி நதி, நீரில் மூழ்கிய துவாரகை, ராம சேது முதலான பாரத தேச உயர்ந்த வைபவத்திற்கு சாட்சி ஆதாரங்கள், விக்கிரகங்கள், கோவில்கள், பிற அடையாளங்கள்… நம் தேசத்தில் மட்டுமின்றி உலகில் பல இடங்களிலும் கிடைப்பது… போலி வரலாற்று மேதாவிகளை வாயடைக்கச் செய்துள்ளது. இவை அனைத்தும் நிச்சயமாக ஆறாயிரம் ஆண்டுகளை விட அதிகம் வயதுள்ள ஆதாரங்களே! நவீன விஞ்ஞான முறைகளான கார்பன் டேடிங், நானா படங்கள் போன்றவை நம் புராணங்கள் அனைத்தும் வரலாற்று நூல்களே என்று கூறாமலே கூறுகின்றன.
கல்ஹணரின் ராஜ தரங்கிணியில் குறிப்பிட்ட ராஜாதிராஜாக்களின் வரலாறு நமக்கு பெருமை அளிக்கும் காதைகள்!
ஸ்ரீராமன், ஹரிச்சந்திரன், ஸ்ரீகிருஷ்ணன் போன்ற மகாத்மாக்களை கற்பனை கதாபாத்திரங்களாக வர்ணித்து பிரசாரம் செய்வதால் அத்தகைய ஆதர்ச புருஷர்களை அனுசரிப்பவர்கள் குறைந்து போகும் அபாயம் உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சி செய்தவர்கள் (நேரு வம்சத்தினர்) பிரிட்ஷாரின் வழிமுறைகளைப் பின்பற்றியதால் கல்வித் துறையில் தவறான வரலாற்றை பல தலைமுறைகளாக கற்பித்து வருகிறோம்.
குப்தர்களின் காலத்திற்குப் பிறகு நடந்த ஆயிரம் ஆண்டுகால வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களால் நம் தேசத்திற்கு நேர்ந்த மிகப் பெரும் நஷ்டங்களை நம் மாணவர்களுக்கு தெரிவிக்கிறோமா? எழுபதாண்டுகளுக்கு முந்தைய வரலாறான பாரத தேசம் துண்டாடப்பட்ட சோகக்கதை இந்த தலைமுறைக்குத் தெரியுமா?
சந்திரசேகர ஆசாத், வீர சாவர்கர், சத்திரபதி சிவாஜி போன்றோரை சரியான கோணத்தில் மாணவர்களுக்கு போதித்து வருகிறோமா?
அந்நிய மத வன்முறையாளரின் வரலாற்றை கற்றுத் தருகிறோமே தவிர சோழர்களின், காகதீயர்களின் அரசாட்சி, விஜநரக அரசர்களின் வைபவம் கற்றுத் தருவதில்லை. இன்றைய இந்திய மாணவனுக்கு சரியான வரலாற்றைக் கற்றுத்தர வேண்டும்.
வீரசிவாஜியும் சத்திய ஹரிச்சந்திரனும் ஸ்ரீராமனும் மீண்டும் அவதரிக்க வேண்டுமென்றால் அவர்களிடமிருந்து மாணவர்கள் ஊக்கம் பெறும் விதமாக அவர்களைப் பற்றிய வரலாறு போதிக்கப்பட வேண்டும்.
ஒருவர் வாழ்நாளில் படிக்க இயலாத அளவு வராலாற்று நூல்கள் நமக்கு இருக்கையில் தவறான தலையணை நூல்களை கல்வி நிலையங்களில் கற்பிப்பது வருத்தத்தக்கது.
இந்த புராண இதிஹாசங்கள் எனப்படும் வரலாற்று நூல்களை ஆழமாகப் படித்தறிந்து ஆய்வு செய்து நம் ஒளிமயமான பண்டைய நாகரிகத்தை வெளிப்படுத்தி அளித்துள்ள மகநீயர்கள் பலர். அவர்களில் ஸ்ரீகோட்ட வெங்கடாசலம், ஸ்ரீராம்நாத் போன்ற சிறந்த அறிஞர்கள் எழுதியளித்த நூல்கள் படிக்க உகந்தவை.
மெக்காலேக்கள், தேசதுரோக இடதுசாரிகள் எழுதிய பொய்யான வக்கிரமான வரலாற்றைத் துவைத்து வெயிலில் உலர்த்திய திரு எம்விஆர் சாஸ்திரி எழுதிய ‘எது வரலாறு?”, ‘இது வரலாறு!’ போன்ற நூல்களை தேச பக்தர்கள் படிக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டும்.
வரலாறு என்றால் அந்த மஹா புருஷர்களின் வாழ்க்கை தரும் ஊக்கத்தால் சிறந்த இளைஞர்கள் உருவாகுவதே! நமக்கு வரலாறு இல்லை என்ற பொய்யை வன்மையாக கண்டிக்க வேண்டும். லட்சக்கணக்கான ஆண்டுகால நம் பண்டைகால வரலாறு நம் பெருமைக்கு காரணமாக வேண்டும்!
Source: ருஷிபீடம், பிப்ரவரி, 2019