spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: தருவர் இவர் ஆகும்!

திருப்புகழ் கதைகள்: தருவர் இவர் ஆகும்!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் பகுதி 305
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தருவர் இவர் – சுவாமி மலை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி இருபதாவது திருப்புகழான “தருவர் இவர்” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, பொருள் வேண்டி, மூடரைப் பாடாது, அருள்வேண்டி உன்னைப் பாட அருளவேண்டும்” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு

     தனைவிடுசொல் தூது தண்ட …… முதலான

சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப

     தருமுதல தான செஞ்சொல் …… வகைபாடி

மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து

     வரினுமிவர் வீத மெங்க …… ளிடமாக

வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்

     மடையரிட மேந டந்து …… மனம்வேறாய்

உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து

     உழல்வதுவு மேத விர்ந்து …… விடவேநல்

உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப

     முதவியெனை யாள அன்பு …… தருவாயே

குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்

     குதிகொளிள வாளை கண்டு …… பயமாகக்

குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு

     குருமலையின் மேல மர்ந்த …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – குருகு, நாரை, அன்றில் முதலிய பறவைகள், இரைகள் தேடி வாழ்கின்ற நீர் நிலைகளான இடங்களை, குதிக்கின்ற இளம் வாளை மீன்கள் கண்டு அஞ்சும்படி, ஒலிக்கின்ற கடல்களே அதிர்ந்து வருவதுபோல் பொங்கி வரும் காவிரியின் கரையில் விளங்கும் சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே;

     இவர் பொருள் தருவார் என்று எண்ணி, பணத்தாசையால், வண்டு விடு தூது, தண்டகம் முதலிய இன்ப கவிமாலைகள், சிந்து கலித்துறைகள், ஏசல், மகிழ்ச்சியை விளைவிக்கும் தரு முதலிய செந்தமிழ்க் கவிகளை வகை வகையாகப் பாடிச் சென்று, அடிக்கடி ஒழியாது வருகின்றேன் என்று புலவர்கள் கூறியும், பூமி தேய்ந்து, ஆதிசேடன் முடி தெரிய நடந்து வந்தும், மனம் இரங்கி, `வருவது போதும் இந்தா‘என்று ஒரு பணங்கூடத் தராமல் உதாசினம் செய்யும் மடையரிடம் நடந்து மனம் மாறுபட்டு, உள்ளம் உருகி, மிகவும் வெந்து, பாடல்கள் பாடித் திரிந்து அலைவதை விடுத்து, நல்ல இரு திருவடிகளில் அன்பு வைத்து இம்மை மறுமை நலங்களைப் பெற்று உய்யுமாறு அடியேனை ஆட்கொள்ள அன்பு தருவீராக – என்பதாகும்.

     “இவர் நமக்கு நிரம்ப பணந் தருவார் என்று கருதி” புலவர்கள் பொருளாசையால், கொடாத பரமலோபிகளிடம் கவி பாடி அலைவதை அருணகிரியார் இப்பாடலில் கண்டிக்கின்றார். மேலும் இப்பாடலில்

குருகினொடு நாரை அன்றில் இரைகளது நாடு இடங்கள்

     குதிகொள் இள வாளை கண்டு …… பயமாகக்

குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு

     குருமலையின் மேல் அமர்ந்த …… பெருமாளே.

என்ற வரிகளில் சுவாமிமலையின் நீர்வளம், நிலவளம் பற்றிப் பாடுகிறார். சுவாமிமலை தலத்தில் குருகு, நாரை, அன்றில் என்ற நீர்ப்பறவைகள், தங்களது இரைகளைத் தேடி நாடுகின்ற நீர்நிலை இடங்களில் குதிக்கின்ற இளம் வாளை மீன்கள் கண்டு பயங்கொள்கின்றனவாம். அந்த அளவிற்கு அங்கே நீர்வளம் அதிகமாக உள்ளது. அந்த நீர்வளம் காவிரி நதியால் வந்தது. ஒலிக்கின்ற கடல்களே அதிர்ந்து வருவதுபோல் காவிரியாற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றதாம். அத்தகைய எழில் வயல்கள் சூழ்ந்து விளங்குகின்ற, சுவாமிமலை மீது எழுந்தருளியுள்ள பெருமை மிகுந்தவரே என அவர் முருகப் பெருமானை புகழ்ந்து பாடுகிறார்.

     மேலும் இப்பாடலில் தமிழில் உள்ள சில பிரபந்த வகைகளான தூது, தண்டகம், சரச கவிமாலை, சில பாவகைகள் ஆகியவைபற்றியும் அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe