திருப்புகழ் கதைகள்: வராஹ அவதாரம்!

Published:

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் பாகம் 318
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

வாரம் உற்ற – சுவாமி மலை|
வராஹ அவதாரம்

     கீதையின்சாரம் என்று எங்கும் ஓர் உபதேசம் பரப்பப்படுகிறது. “எது நடந்ததோ அது நன்றாக நடந்தது…… இன்று எது உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவனுடையது ஆகிறது…” ஆனால் கீதையின் சாரம் அதுவல்ல. கண்ணன் அவதாரமும் அதற்காக அல்ல. ஶ்ரீமத்பகவத்கீதையின் சாரம் என்பது வேறு. பகவான் கண்ணன் எதற்காக நான் அவதரித்தேன் என்பதை பகவத் கீதையில் இவ்வாறு கூறுகிறார்.

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

     தீயவர்களை வதம் செய்வதற்கு மட்டுமே கிருஷ்ணர் அவதாரம் இல்லை. அவருடைய அவதார நோக்கமே தீயவர்களை அழித்து, நல்லோர்களைக் காப்பதுமாகும். பெரிய பெரிய சாதுக்களும் முனிவர்களும் மற்றும் ஏராளமான பாகவதர்களும் பகவானை தங்கள் கண்ணால் காணவேண்டும்; அவனை தினமும் ஆராதித்து இறுதியில் அவன் திருவடியை அடைய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். திருமால் யுகங்கள் தோறும் அவதரிப்பதே அந்த மகான்களின், சாதுக்களின், பக்தர்களின் பக்திக்காகத்தான். அவர்களின் விருப்பப்படி, பாடி ஆடி ஆராதித்து இறுதியில் தனது திருவடியை அடையவேண்டும்! என்பதற்காக இறைவன் அவதரிக்கிறான்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

     அவ்வாறு தர்மத்தைக் காப்பாற்ற திருமால் எடுத்த அவதாரங்கள் பத்து. அவையாவன: (1) மச்ச அவதாரம், (2) கூர்ம அவதாரம், (3) வராக அவதாரம், (4) நரசிம்ம அவதாரம், (5) வாமன அவதாரம், (6) பரசுராமர் அவதாரம், (7) இராம அவதாரம், (8) பலராம அவதாரம், (9) கிருஷ்ண அவதாரம், (10) கல்கி அவதாரம். பெருமாளின் அவதாரங்களில் வராஹ அவதாரம் மூன்றாவது அவதாரமாகும். பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.

     சிருஷ்டி என்பது இருவகைப்படும். முதலில் இறைவன் தாமாகவே மாயையின் பலத்தினால் மகத்தில் இருந்து பஞ்சபூதங்களும், ஐம்புலன்களும் உண்டாகப் படைத்தார். இதற்குப்பின் தான் பிரமன் தோன்றினார். பரமனின் ஆணைப்படி தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் அனைத்தையும் பிரமன் படைத்தார். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்களைப் படைத்து சிருஷ்டித் தொழிலை மேற்கொள்ளும்படி பணித்தார்.

     பிரமன் புருவங்களின் நடுவிலிருந்து ருத்திரன் தோன்றினான். அதன்பின் மரீசி, அத்ரி, ஆங்கீரசர், புலஸ்தர், புலகர், க்ருது, பிருகு, வசிஸ்டர், தக்ஷர், நாரதர், இதன்பின் வேதங்கள், சத்வகுணங்கள், காயத்ரி, பிரணவம் இத்யாதி ஆகியவற்றைப் படைத்தார். என்ன படைத்தும் பிரம்ம குலம் பெருகவில்லை. இதனால் பிரம்மா மிகவும் மனம் உடைந்து போனார். அதன் காரணமாக அவருடைய உடல் இரண்டாகப் பிரிந்தது. அவை ஆண், பெண் உருவங்களாக மாறின. அந்த ஆண் சுவாயம்புவமனு என்றும், அந்த பெண் சத்ரூபா என்றும் அழைக்கப்பட்டனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

     சுவாயம்புவமனு பிரம்மாவைப் பார்த்துக் கேட்டார்: பிரபோ! நானும் என் மனைவியும் தற்சமயம் என்ன பணி செய்வது? “உங்களைப் போன்ற மக்களைப் பெற்று பூமியை ஆட்சி செய்து பல யக்ஞங்களை செய்து ஸ்ரீ ஹரியை சந்தோஷப்படுத்துக” என்று பிரமன் கட்டளையிட்டார். உங்கள் சொல்லை நான் தட்டமாட்டேன். ஆயினும் பூமியில் நான் வசிக்க இடமில்லையே! பூமி கடலின் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறதே. என்றான் மனு. பூமியில் மானிடர்களைப் படைக்க வேண்டும் என்று நான் எண்ணிய சமயத்தில் பிரளயம் வந்துவிட்டதே என்று கவலையில் ஆழ்ந்தார் பிரம்மா. உடனே ஸ்ரீஹரியை நோக்கி தியானம் செய்தார்.

     மனத்தில் ஸ்ரீஹரியை சிந்தித்துக் கொண்டே, “நான் எந்தப் பரந்தாமனுடைய கிருபையால் உருவானேனோ, அதே பிரபு இதோ இங்கே ஜலசமுத்திரத்தில் அமிழ்ந்து கிடக்கும் உலகத்தை வெளிக்கொண்டு வந்து நிலைக்கச் செய்யட்டும்” என்று தியானித்தார்.

அப்போது அவருடைய நாசியில் இருந்து ஒரு கட்டை விரல் அளவேயான ஒரு வராகம் வெளிப்பட்டது. ஸ்ரீமந்நாராயணன், பிரம்மாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவே அந்த பன்றி (வராக) ரூபத்தை எடுத்தார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

     எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே அந்தச் சிறிய பன்றி உருவம் பூதாகரமாக யானை அளவு வளர்ந்தது. அதைப் பார்த்து பிரம்மா மெய்சிலிர்த்து புளகாங்கிதம் அடைந்தார். என் எண்ணத்தை நிறைவேற்றவே நாராயணன் இவ்வாறு அவதாரம் எடுத்திருக்கிறார் என்று மகிழ்ந்து வேதபாராயண ஸ்தோத்திரங்களைச் சொன்னார். அதனால் சந்தோஷம் அடைந்த மூர்த்தி கர்ஜனை செய்தார். அந்த பிரமாண்ட ஒலி ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்டது. இதைக்கேட்ட மகிரிஷிகள் மகிழ்ந்தார்கள்.

Related articles

Recent articles

spot_img