சேக்கிழார் குருபூஜை:30-5-17

Published:

sekkizar - 2026

”தந்தானை துதிப்போமே”….”சேக்கிழார் குருபூஜை”:30-5-17.,’

‘சென்னை குன்றத்தூர் வடதிருநாகேஸ்வரம் காமாட்சி அம்மன் உடனுறை நாகேஸ்வரசுவாமி
திருக்கோயில்”

நாகேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதியில் சேக்கிழார் உள்ளார்.பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி பூச நட்சத்திரத்தில் இங்கு நடைபெறுவது வழக்கம்.ஆலயத்தின் அருகிலேயே சேக்கிழார் பிறந்த வீடு உள்ளது…

இப்போது அது சேக்கிழார் ஆலயமாக விளங்குகிறது.30-5-17அன்று , காலையில் சேக்கிழார் கருவறைக்குள் சென்று நாகேஸ்வரரை தரிசிக்கும் வைபவம் நடக்கும் .அன்று இரவு முழுவதும்
விடிய விடிய திருமுறைகள் பாடி,பெரியபுராணம் பாடி திருவீதி உலா நடைபெறும்.சேக்கிழார் உலா சென்று, மறுநாள் காலையில் கோயிலுக்குத் திரும்புவார். இதனால் இரவு முழுதும் கோயில் திறந்தே இருக்கும்.

“தொகையா நாவலூராளி தொடுத்த திருத்தொண்டப் பெருமை வகையால் விளங்க உயர் நம்பியாண்டார் வகுப்ப மற்றதனைத் தகையா அன்பின் விரித்துலகோர் தம்மை அடிமைத் திறப்பாட்டின் உகையா நின்ற சேக்கிழான் ஒளிபொற் கமலத்தாள் பணிவாம்.”[ கச்சியப்ப முனிவர் ]…..

நம்பியாரூரரான சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையில் அடியவர் பெருமையை கூறுகிறார். இதனைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பி தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் கூறுகிறார். இவைகளின் அடிபற்றி விரிவாக நாம் அறிந்து கொள்ள ஏதுவாக,சிதம்பரம் நடராஜபெருமான் சேக்கிழார்க்கு ”உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுக்க,அதன் படியே அடியவர்கள் பெருமையை விரித்து உரைத்து ”உலகெலாம்”என்றே பாடி தமது ”திருத்தொண்டர் புராணம் நூலை நிறைவு செய்து அன்னை தமிழுக்கும், நம் அப்பன் ஈசனுக்கும் ,நம் போன்ற அன்பின் ஈசன் அடியவர்களுக்காகவும் சமர்பித்தார் சேக்கிழார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

பின்பு இந்நூலின் பெருமை கருதி ”பெரிய புராணம்” என்று வழங்கலாயிற்று.சேக்கிழாரின் தெய்வீக தன்மையை உணர்ந்து “தொண்டர்சீர் பரவுவார்” என்ற பட்டமளித்து பெருமை பாராட்டி மகிழ்ந்தான் அநபாய சோழன்.

இவரது வேண்டுகோள்படி தான் சேக்கிழார் ”பெரிய புராணம்”சமைத்தார் .. இந்நூல் தில்லையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நிறைவில் அநபாய சோழன் சேக்கிழாரையும், பெரியபுராண த்தையும் யானை மீது ஏற்றி, தானும் பின் இருந்து கவரி வீசி நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்துச் சென்று பெருமை சேர்த்தான்.

”தில்லைவா ழந்தணரே முதலாகச் சீர்படைத்த தொல்லையதாம் திருத்தொண்டர்த் தொகையடியார் பதம் போற்றி ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழாரடி போற்றி”…..

“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.”…

“என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.”….

சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் நிறைவாக அமைந்திருப்பது பெரியபுராணம்.”சென்னை குன்றத்தூர் வடதிருநாகேஸ்வரம் காமாட்சி அம்மன் உடனுறை நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்”.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இங்கு பரவை நாச்சியார் சுந்தரர் சந்நிதி,அருணாசலேஸ்வரர் சந்நிதி சிறப்பு.இங்கு உள்ள மூலவர் நாகேஸ்வரர் சேக்கிழாரால் பிரதிஷ்டை ஆனவர்..இக்கோயில் வடிவமைப்பு அனைத்தும் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் திருக்கோயில் சார்ந்தே இருக்கும்.சேக்கிழார் மிகவும் விரும்பி வழிபட்ட தலம் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம்
திருக்கோயில் ஆகும்..சேக்கிழார் அதுபோன்றே ஈசனுக்கு தமது அவதார தலத்தில்
ஆலயம் எழுப்ப ஆசை கொண்டு,சேக்கிழார் எழுப்பிய ஆலயமே இன்று நாம் காணும்
இந்த வட திருநாகேஸ்வரம்.

இங்கு வழிபட சகல நாக தோசங்களும் அகலும்…சென்னை பல்லாவரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும்,போரூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் குன்றத்தூர் வடதிருநாகேஸ்வரம் அமைந்து உள்ளது…இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயம் மலையில் உள்ளது…அருகில் உள்ள கோவூரில் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர்
ஆலயம் உள்ளது.”தந்தானை துதிப்போமே”….ஆம்!நம் போன்ற நாயினும் கடையர்கள் கடைத்தேற,ஈசன்,சுந்தரர்,நம்பியாண்டார் நம்பி ஆசிகள் மூலம் நம் நாயன்மார்களின் வரலாறை நாம் படித்து ,நம் வாழ்வில் உய்ய அருளிய பெரிய புராணம் தந்த அந்த தந்தானை அதாவது சேக்கிழாரை நாம் துதிப்போமே..

கட்டுரையாக்கம்:

அன்பன்.

ப்ரியமுடன்:சிவ.அ.விஜய் பெரியசுவாமி,

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

கல்பாக்கம்,9787443462…

Related articles

Recent articles

spot_img