மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி சேலம் மாநகராட்சி மைதானத்தில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனையை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் பொதுமக்களிடையே பேசினார்.
பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஒரு தவறான குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்லி வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எப்போதும் என்னுடைய நினைவுதான் இருக்கிறது. நாம் விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரே நமக்கு விளம்பரம் கொடுக்கிறார். அவர் என்னை பேசாத நாள் கிடையாது
இன்றைக்கு, துறை வாரியாக தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். மின்சாரத் துறையில், தேசிய விருது, வேளாண்மைத் துறையில் தொடர்ந்து ஐந்தாண்டு காலம் உணவு தானிய உற்பத்தி. இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்து தேசிய விருதை பெற்ற ஒரே அரசு தமிழ்நாடு அரசு என தெரிவித்தார்.
விவசாயம் என்றால் ஸ்டாலினுக்கு என்னவென்றே தெரியாது எனக்கூறினார். ஒரு விவசாயி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, நான் தான் உதாரணம் என்றார்.
சமீபத்தில் ஸ்டாலின் கரும்பு தோட்டத்திற்குள் சிமெண்ட் சாலை போட்டு, கால்களில் சாக்ஸ் அணிந்து கொண்டு நடந்ததை பற்றி கூறி. அதன் புகைப்படத்தையும் மக்களிடையே காட்டினார்.
ஆனால் நான் ஏர்பிடித்து விவசாயம் செய்தவன். சேற்றில் கால் வைத்து உழைத்தவன், நான் சமீபத்தில் நெற்கதிர் அறுவடை செய்ததை கூட பார்த்திருப்பீர்கள்.
விவசாயி என்று சொன்னாலே பெருமைதான். அடுத்தவனிடத்தில் கையேந்தாதவர்கள் விவசாயிகள். தனது உழைப்பால் உயர்ந்து நிற்கும் ஒரே மனிதர் விவசாயிதான். மற்றவர்களை நம்பி வாழக்கூடியவர்கள் அல்லர்.
விவசாயிதான் தன் சொந்தக் காலில் நிற்பவர். அவ்வாறு சொந்தக்காலில் நின்று வாழ்கிறவர்களை எதிர்த்துப் போராடி வெல்ல முடியாது.
விவசாயி உழைப்பதற்காகவும் மற்றவர்களுக்கு உணவு அளிப்பதற்காகவும் பிறந்தவர்கள். மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைப்பவர்கள் விவசாயிகள்.
பச்சை துண்டு போட்டால் விவசாயி ஆகிடலாமா என எதிர்க்கட்சி தலைவர் கேள்வி கேட்கிறார். விவசயியால் மட்டுமே பச்சை துண்டு அணியமுடியும் என பேசினார்.
இந்த விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தலைவர் ஜி.கே. வாசன், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பேசுகையில்“டெல்டா மாவட்ட பகுதிகளை பாதுக்காக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒட்டு மொத்த டெல்டா மாவட்ட விவசாயிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சி உள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஒரு விவசாயி முதல்வராகப் பதவி ஏற்றதுடன், வெற்றிகரமான ஆட்சியையும் நடத்திவருகிறார்” என்றார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “தஞ்சைத் தரணி மீது ஜெயலலிதா எவ்வளவு பற்றும் பாசமும் கொண்டிருந்தார் என்பது இங்குள்ள விவசாயிகளுக்குத் தெரியும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, சட்டப் போராட்டங்கள் நடத்தி மத்திய அரசிதழில் வெளியிடவைத்தவர் அவர்.
இதற்காக தஞ்சாவூரில் பாராட்டு விழா நடத்தியபோது, என்னுடைய 33 ஆண்டு கால அரசியல் வாழ்கையில் இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான நாள் இருக்க முடியாது என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரு புண்ணிய பூமி, இதற்கு அச்சுறுத்தலாக ஹைட்ரோ கார்பன் திட்டம் இருந்துவந்தது. மக்களின் அச்சத்தைப் போக்கவும், இந்தப் பகுதியைக் காக்கவும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, வரலாற்றில் பதிவுசெய்திருக்கிறோம்” என்றார்.