ஆயுத பூசையும் அறிவாலயமும்
ஆயுத பூசை இந்த ஆண்டும் வந்தது. வழக்கம் போல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் . வழக்கத்துக்கு மாறாக கருணாநிதி, சென்ற ஆண்டைப் போல, ஆரியர் திருவிழா என்று சொல்லவில்லை. திகார் திகிலில் சிக்கியதால், சென்ற ஆண்டைப் போல திராவிட பல்கலைகழகத்தில் பாடம் படிக்க வேண்டும் என்று யாருக்கும் அறிவுரை வழங்கவில்லை. இவரின் கலைஞர் தொலைகாட்சி, விடுமுறை தின நிகழ்ச்சி என்று தன் சிறப்பு மசாலாக்களை ஒளி பரப்பியது. வாழ்த்தாததினால் மிகவும் சிறப்பாக இந்த ஆரிய திருவிழா நடை பெற்றது. ஆரியத் திருவிழா, திராவிடத் திருவிழா என்று யார் நிர்ணயிப்பது? ரம்ஸானும் கிருஸ்துமஸும் திராவிட திருவிழாக்களா? இதற்கெல்லாம் வாழ்த்து தெரிவிப்பதனால், கருணாநிதி ஐரோப்பியர் ஆகி விடுவாரா அல்லது அராபியர் ஆகி விடுவாரா? அப்படியே இவர் ஆக விழைந்தாலும், அவர்கள் இவரை ஏற்பார்களா? எது எப்படியோ, ஆயுத பூசைக்கு வருவோம்.
தொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம், ஒரு மன்னனையும் அவன் அரசாட்சியையும் எப்படி புகழ்ந்து பாட வேண்டும் என்று இலக்கணம் வடித்துள்ளது. ”உளியின் ஓசை பாடல் அரங்கேற்றம், 50ம் திரைப்படக் கதை வசனம், பெண் சிங்கம் வெற்றி விழா” போன்றவற்றை எல்லாம் புகழ்ந்து பாடுவதை பிழைப்பாகக் கொள்ளக் கூடாது என்பதற்காக எழுதப்பட்ட இலக்கணம் தொல்காப்பியம். ஆனால் விழா நடத்துவதே இலக்கணமாக கொண்ட ”பூங்கா கண்ட நவீன தொல்காப்பியர் கருணாநிதி”யின் கண்ணில் படாத, தொன் பெரும் தொல்காப்பியத் திணைக்கு பாடான் திணை என்று பெயர். இதில் ஆயுத பூசை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மானார்ச் சுட்டிய வாண்மங்கலமும்
(பொருள் அதிகாரம் 91)
மானார் என்ற சொல்லுக்கு மாண்புடையவர், போர் பயிற்சி பெரும் மாணவர், வெற்றி பெற்றவர் என்றெல்லாம் உரையாசிரியர்கள் பொருள் படுத்துகிறார்கள். ஆனால் அனைவரும் ஒப்புக்கொள்வது, இவர்கள் போர் கலங்களை நீராட்டிப் பூசை செய்கிறார்கள் என்பது தான். இதன் மூலம் ஆயுத பூசை போற்றிப் பாடப்பட வேண்டிய ஒன்று என்று முதல் தமிழ் நூல் குறிப்பிடுகிறது. இப்படி ஆயுத பூசை போற்றிப்பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்துவது தொல்காப்பியம்.
எதிரியின் கோட்டையை சுற்றி வளைத்து பிடிப்பதைப் பற்றிய விவரத்தை சொல்லுவது உழிஞை திணை. இதில் வெற்றி பெற்ற வாளை அபிஷேகம் செய்யும் குறிப்பு உணர்த்தப்படுகிறது.
வென்ற வாளின் மண்ணோ டொன்ற
(பொருள் அதிகாரம் 68)
”உடன் படு மெய்” என்பதற்கு ஆசிரியரும் மாணவியும் புணர்ந்ததை உதாரணம் காட்டிய தொல்காப்பியப் பூங்கா எழுதிய வக்கிரப் பார்வையோனுக்கு ஆயுத பூசை எப்படி கண்ணில் படும்?
சென்ற ஆண்டு (2010) ஜெயலலிதா ஆயுத பூசை வாழ்த்து தெரிவித்தவுடன், ஜெயலலிதாவை ஆரியர் என்றார் கருணாநிதி. அப்படி என்றால், ஆயுத பூசை கொண்டாடுபவர்களும் ஆரியர்கள் தானே? சங்க இலக்கியமான பதிற்றுப் பத்து, மள்ளர்கள் ஆயுத பூசை கொண்டாடியதை விவரிக்கிறது. ஆயுத பூசையைக் கொண்டாடிய பாவத்திற்காக, ’மலைப்பாம்பை விட்டு விட்டு மள்ளர்களை அடி’ என்று கருணாநிதி சொல்லி விடுவாரோ?
றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்பப்
( பதிற்றுப் பத்து, பாட்டு 66)
மள்ளர்கள் கேடயத்தையும், பூ மாலைபோல் பல வாள்களை கட்டி தொங்க விட்டும் , அவற்றை பனை நாரினால் தொடுத்த வாகைப் பூ மாலை இட்டு வணங்கினர் என்ற செய்தியை இந்தப் பாடல் தெரிவிக்கிறது. இந்த குறிப்பின் படி, இந்த விழவு மழைக் காலத்தில் நடந்திருக்க வேண்டும். வாகை மரம் மழைக் காலங்களிலும் பூக்கும் என்று இந்திய தாவரங்களைப் பற்றிய நூலான Flora Indica or Descriptions of Indian plants, Vol I By William Roxburgh, Nathaniel Wallich குறிப்பிடுகிறது.
வாகை மலருக்கு வட மொழியில் “சீர்ஷா” என்று பெயர். அளகாபுரி நகரில், பெண்கள் கடம்ப மலரை தலையிலும், செந்தாமரையைக் கைகளிலும், “சீர்ஷா” என்ற வாகையைக் காதுகளிலும் அணிந்து, கார் காலத்தில் அழகு பார்த்ததாக காளிதாசரின் மேகதூதம் குறிப்பிடுகிறது.
(Floriculture in India By Gurcharan Singh Randhawa, Amitabha Mukhopadhyay, p.607).
தமிழகத்தில், ’வள்ளல்’ என்ற சொல்லைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர் அதியமான். இந்த அதியமானுக்கும், தொண்டைமான் என்ற மன்னனுக்கும் போர் மூளும் தறுவாயில், அப்போரைத் தடுக்க தமிழ் மூதாட்டி ஔவையார் அதியமான் அரண்மனைக்குச் சென்றார். தொண்டைமானின் ஆயுதக் கொட்டிலில் போர்க் கலங்கள் நெய் பூசி, அலங்கரிக்கப் பட்டு வைத்திருந்ததைப் பார்த்து, தொண்டைமானிடம் அதியமான் அரண்மனையில் உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொல்லன் பட்டரையில் இருக்கிறது, ஆனால் இங்கோ பூசையில் வைக்கப்பட்டு இருக்கிறதே, என்று கேட்டதாக செய்தி ஒன்று காணப்படுகிறது. அரண்மனைக் கொட்டிலில் ஆயுதங்களுக்கு பூசை செய்யும் பழக்கம் புறநானூற்றுக் காலத்தில் இருந்த விபரம், தமிழ்ப்புரட்டு அரசியல் செய்பவர்களுக்கு தெரியவா போகிறது? புறநானூறு, கைபர்-போலன் கணவாய் வழியாக வந்தது என்று, அதற்கு விசா (VISA) கொடுக்காமல் இருந்தால் சரி.
5ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ’கருவூர் புகழ் சோழநாயனார்’; இந்த சோழ மன்னனின் பட்டத்து யானை, கோயிலுக்கு மலர் கொண்டு சென்ற பக்தன் சிவகாமி ஆண்டாரின் பூக்கூடையைத் தூக்கி எறிந்தது. இதைப் பார்த்த எரிபத்த நாயனார், பட்டத்து யானையையும் அதன் பாகனையும் வெட்டிச் சாய்த்தார் என்கிறது பெரிய புராணம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த பட்டத்து யானை புரட்டாசி நவமியன்று அபிஷேகம் செய்யப்பட்டு, அழைத்து வரப்பட்டது என்பது தான். வாகனங்களை ஆயுத பூசை காலங்களில் அபிஷேகித்து, மரியாதை செய்வது 5ம் நூற்றாண்டுத் தமிழர் மரபு. ஆனால் 21ம் நூற்றாண்டிலோ, வாகனத்தில் நிராதரவாக 5 கோடி ரூபாயை விட்டு விட்டு ஓடி விடுகிறான் அறிவாலயத் தமிழன். தவறு செய்த ஐந்து அறிவு பட்டத்து யானைக்காக, மன்னிப்பு கேட்கும் அரசர்களால் கொண்டாடப்பட்ட ஆயுத பூசை, ’தவறு செய்யாதவன் எவன் இருக்கிறான்’ என்று தவறை நியாயப்படுத்தும் புரட்டர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?
கி. பி 897 ஆம் ஆண்டு திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயக் கல்வெட்டு, சித்ரா பவுர்ணமி மற்றும் புரட்டாசி ஓணத் திருவிழாக்கள், அபிஷேகத்துடன் கொண்டாடப் பட்டதாகத் தெரிவிக்கிறது.
சித்திரை திங்கள் சித்திரையும்
பிரட்டாதி ஓணமும்.
(South Indian Inscriptions, Vol 13, NO 317, Archeological Survey of India)
புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரம், வளர் பிறை தசமி திதியில் வரும். அதுவே விஜய தசமியாக கொண்டாடப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் 12ம் நூற்றாண்டு இறையான் நறையூர் (இலவா நாசூர்) கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுக்களில், புரட்டாசி ஓணத் திருவிழா ஒரு பிரசித்தி பெற்ற பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட தகவல் காணப்படுகிறது. விஜய நகரப் பேரரசு கி.பி. 1336ல் தோன்றியது என்பது ஓரளவு வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். இப்படி இருக்க, நாயக்கர்கள் ஆயுத பூஜையை புகுத்தினார்கள் என்று சொல்வது கருணாநிதியின் அறியாமையா அல்லது வாடிக்கையான விஷ(ம)த்தனமா?
18ம் நூற்றாண்டு புதுச்சேரி மாநில ஆவணங்களில், புதுச்சேரி மாநிலத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் 2 திருவிழாக்களில் ஒன்றாக, மஹா நவமி குறிப்பிடப்பட்டுள்ளது என்று, வலங்கை இடங்கை வரலாறு என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. இந்த ஆவணத்தை சௌந்தரபாண்டியன் என்பவர் பதிப்பித்தார். புதுச்சேரியில் மஹா நவமி விழா கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்களை, Oriental Manuscript Library ஏடுகளிலிருந்து எடுத்து அவர் கையாண்டிருக்கிறார்.
தான் உய்யா விட்டாலும் கவலையில்லை, உலகத்தின் கடை நிலை மனிதன் உய்தால் போதும் என்று, சமூகத்தின் மிகவும் தாழ்த்தப்பட்டவனுக்கு இறை வழியை போதித்த இராமானுசரின் ஸ்ரீ பெரும்புதூர் கோயில் கல்வெட்டில், நவராத்திரி கொலு கொண்டாடப்பட்டதற்கான குறிப்பு, 16ம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. ’பறையனும் பள்ளச்சியும் இரவிக்கை போடுவதால் விலைவாசி ஏறி விட்டது’ என்று ”பகுத்தறிவுப் பொருளாதாரம்” பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பாசறையில் இருப்பவருக்கு, இந்தக் கல்வெட்டு கண்ணில் படவா போகிறது?
இந்த இலக்கிய குறிப்புகளிலும் கல்வெட்டு குறிப்புகளிலும் இடம் பெரும் மள்ளர்களும் (தேவேந்திர குலத்தோர்), மன்னர்களும், புலவர்களும், புரவலர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், நம் மூதாதையர்களும் தமிழர்களில்லையா ?
பன்னெடுங்காலமாக , தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா கொண்டாடி வருபவர்கள் தமிழர்களில்லையா?
அறிவாலயத்தால் அங்கீகரிக்கப்படுபவன் மட்டுமே தமிழன், கோபாலபுரத்தாருக்கு எடுக்கப்படுவதே விழா. தீர்ந்து விட்டது ஆரிய- திராவிட பிரச்சினை.



