சப்-இன்ஸ்பெக்டரை கட்டியணைத்த ஒய்சிபி. எம்எல்ஏ…
கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜநகரைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ.,வும், ‘காப்பு’ கார்ப்பரேஷன் சேர்மனுமான ஜக்கம்பூடி ராஜு, ஒரு எஸ்ஐ.,யை கட்டிப்பிடித்து ஆரத் தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்ட நிகழ்ச்சி பரபரப்பான செய்தியாகி உள்ளது.
அவர் வேறு யாரும் அல்ல. சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் ஜக்கம்பூடி ராஜுவை பகிரங்கமாக லத்தியால் அடித்து வெளுத்து வாங்கிய ராமச்சந்திராபுரம் எஸ்ஐ. நாகராஜு. அதனால் இந்தச் செயல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒய் எஸ் ஆர் சி பி இளைஞரணி தலைவராக உள்ள ஜக்கம்பூடி ராஜுவை 2017 அக்டோபரில் எஸ்ஐ தாக்கினார். அவரை லத்தியால் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நிகழ்வு அப்போது தீவிரமான பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜக்கம்பூடி ராஜுவை நாகராஜு தாக்கிய நிகழ்வு அரசியல் சாயம் பூசிக் கொண்டது.
ஒய்எஸ்ஆர்ஸிபி உயர்மட்ட தலைவர்கள் இதற்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்தக் கட்சியின் மேலவை எம்எல்ஏ விஜயசாயி ரெட்டி அன்றைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பகிரங்க கடிதம் எழுதினார். மாநிலத்தில் அராஜகம் அரசாள்கிறதென்று குற்றம் சாட்டினார்.
தம் கட்சித் தலைவர் ஜக்கம்பூடி ராஜுவை பகிரங்கமாக தாக்கிய செயல் மனிதத்தன்மை அற்றது என்று ஒய்எஸ் ஆர் சி பி தலைவர்கள் மாவட்ட அளவில் பந்த் செய்வதற்கு அழைப்பு விடுத்தார்கள். நாகராஜை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அப்போது அவர்கள் வலியுறுத்தினார்கள். அதன் பின் சிறிது காலத்தில் அந்த விஷயம் அடங்கிப் போனது.
சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து அதே அக்டோபர் மாதத்தில் நாகராஜு மரியாதை நிமித்தமாக ஜக்கம்புடி ராஜுவை சந்தித்தார். பழைய நிகழ்ச்சியை நினைவு படுத்தி…. பணி நிமித்தமாக… கடமையாற்றுவதன் ஒரு பகுதியாக தாம் அன்று அவ்வாறு நடந்து கொள்ளும்படி ஆயிற்று என்று கூறி மன்னிப்புக் கோரினார்.
அதற்கு பதிலாக ஜக்கம்புடி ராஜு அவரை ஆரத் தழுவிக் கொண்டார். அந்த விஷயத்தை எப்போதோ தான் மறந்து போய் விட்டதாக தெரிவித்தார். தோள்மேல் கைபோட்டு “உங்கள் கடமையில் நீங்கள் நேர்மையாக நடந்து கொண்டீர்கள்” என்று பாராட்டினார். எதிர்காலத்தில் காவல் துறையில் மேலும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வாழ்த்தினார்.