இணையதளங்களை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவும், சமூக வலைதளங்களை ஒழுங்குப்படுத்தவும் புதிய விதிமுறைகளை வரும் ஜனவரி இறுதியில் கொண்டுவர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நாளுக்கு நாள் பொய்யான தகவல்கள் பகிரப்படுவது அதிகரித்து வருகிறது. பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு இருப்போது போல் சமூகவலைதள மற்றும இணையதளங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
இந்நிலையில் இணையதள ஒழுங்கு முறை தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் தாக்கல் செய்துள்ளது.
அந்த பதில் மனுவில், இணையதளங்களை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனவரி இறுதியில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக அரசு, இண்டர்நெட் சேவை வழங்குபவர்கள், சர்ச் என்ஜின்கள், சமூக ஊடகங்களுடன் இணைந்த புதிய வழிகாட்டுதல்களை வடிவமைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த பிரமாண பத்திரத்தில், இணையத்தை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு தற்போதை விதிகள் திருத்தப்பட வேண்டும் என அரசு உணர்ந்துள்ளது. அதில் தனிநபர் உரிமை மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இண்டர்நெட் பயன்படுத்த குறைந்த கட்டணம், குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் கிடைப்பதால் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது ஒருபுறம் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது. அதேநேரம் மறுபுறம் வெறுக்கத்தக்க பேச்சு, போலி செய்திகள், பொது ஒழுங்கு, தேச விரோத நடவடிக்கைகள், அவதூறு பதிவுகள் மற்றும் இணைய மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி பிற சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே இணையதளங்களுக்கு புதிய வழிகாட்டுதல் தொடர்பாக அரசின் பதிலைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அரசிடம் “சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் மற்றும் தகவல்கள் பரவுகின்றன / பகிரப்படுகின்றன, அவற்றில் சில தீங்கு விளைவிக்கும். சில செய்திகள் வன்முறையைத் தூண்டும்.
நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான செய்திகளாக அவை இருக்கலாம்… இதுபோன்ற சூழ்நிலைகளில், அத்தகைய பதிவுகள், செய்திகளை உருவாக்கியவர்கள், நிறுவனங்கள், ஆகியவற்றை கண்டுபிடிப்பதற்கு முறையாக வடிவமைக்கப்பட்ட விதிமுறைகள் இருப்பது கட்டாயமாகும். அத்தகைய தகவல்களை இடைத்தரகர்களிடம் ( இண்டர்நெட் சேவை வழங்குபவர்கள், சர்ச் என்ஜின்கள், சமூக ஊடகங்கள்) பெறுவது அவசியமாக இருக்கலாம்” என்று கூறியது.
இதற்கு மத்திய அரசு நீதிமன்றத்தில், இடைத்தரகர்களை தங்கள் தளங்களில் வெளியிடப்பபடும் பதிவுகள் மற்றும் பரப்பப்படும் பதிவுகளுக்கு பொறுப்பாளர்களாக மாற்றுவதற்கான வழிகாட்டுதல்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்காக தகவல் தொழில்நுட்ப இடைத்தரகர்கள் வழிகாட்டுதல்கள் திருத்தம் விதிகள், 2018, வரைவு தொடர்பாக 171 கருத்துக்கள் பெறப்பட்டு அவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வலைதளத்தில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் தொடர்பாக புதிய வழிகாட்டுதலுக்கு அதன் தொடர்புடையவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இறுதியாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அளிக்க மூன்று மாதம் அவகாசம் கோரியுள்ளது. இதன்படி வரும் ஜனவரி இறுதியில் இணையதளங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.