
வேளாண் சட்டங்களை கண்டித்து தில்லியில் நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக கிசான் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் வி.எம்.சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவ.26ம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தில்லியை நோக்கி படையெடுத்தனர்.
தில்லியின் புராரி மைதானத்தில் மையம் கொண்ட அவர்கள், விவசாயிகளுக்கு ஊறு விளைவிக்கும் அந்த சட்டங்களை நீக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல நாட்கள் இந்த போராட்டம் நீடித்தது,
அந்த சட்டங்களுக்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய விவசாயிகள், குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன் படியே, நேற்று தில்லியில் 3 லட்சம் டிராக்டர்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேரணி தொடங்கியது. ஆனால், ஒரு சில மணி நேரங்களிலேயே காவல்துறைக்கும் போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தில்லி கலவர பூமியானது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் கிடையாது என்றும் அவர்கள் கலிஸ்தான் இயக்கத்தினர் என்றும் விவசாயிகள் தரப்பில் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், தில்லியில் நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அகில இந்திய கிசான் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் வி.எம்.சிங் அறிவித்துள்ளார்.

வேறு யாரோ வழிநடத்துதலுடன் ஒரு போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க முடியாது என்பதால் போராட்டத்தில் இருந்து இப்போதே விவசாய அமைப்புகள் விலகிக் கொள்கின்றன என்றும் வேறு விதத்தில் எதிர்ப்புகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.