ராகுல் காந்தியின் ராஜினாமா அறிவிப்பும், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை குறித்தும் தான் தற்போது அரசியல் பேச்சு களை கட்டியிருக்கிறது.
காங்கிரஸ் தலைவராக ராகுல் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டார். ஆனால் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல், கடந்த முறையைப் போலவே படுதோல்வியை சந்தித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தை கூட்டி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். ஆனால் அதனை உடனடியாக காங்கிரஸ் செயற்குழு ஏற்க மறுத்தது.
இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் இனி நான் காங்கிரஸ் தலைவர் இல்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு கட்சிக்குத் தான் உள்ளது; என் முடிவில் மாற்றமில்லை! விரைவில் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுங்கள் என்றார்.
இதை அடுத்து 90 வயது கடந்த மோதிலால் வோராவை தற்காலிகத் தலைவராக காங்கிரஸ் அறிவித்தது. இது பலராலும் விமர்சிக்கப் பட்டு வந்தது. மீண்டும் ராகுல் ஒரு அனுதாப அலையுடன் உள்ளே வருவார். அதற்குத்தான் இவ்வளவு வயதான நபரை தலைவராக்கிவிட்டு, அடுத்த தேர்தல் வரும் வரை தாம் வேறு பணிகளில் ஈடுபடலாம் என்று ராகுல் கழன்று கொள்கிறார் என்று விமர்சித்தார்கள். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கொண்டு ராகுல் பெரிதாக எதையும் பெறப் போவதில்லை என்கின்றனர்.
இந்நிலையில் ராகுல் ராஜினாமா குறித்து பாஜக.வைச் சேர்ந்த மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியபோது… ராகுல் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறுவது, அவரது பழமையான கட்சியின் புதிய நாடகம்; இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை! எங்கள் கட்சியில் தேர்தல் மற்றும் உறுப்பினருக்கான டைம்டேபிள் ஏற்கெனவே தயாராக உள்ளது. எங்களுக்கு ஒரு செயல் தலைவர் உள்ளார். மற்ற கட்சியில் அதுபோல் நடக்கவில்லை என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்? என்று கேள்வி எழுப்பினார்!