தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி கோயில்களை திறக்க தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவால் நடை சாத்தப்பட்டிருக்கும் தமிழக திருக்கோயில்களை வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி திறக்க தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் : கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன் விளைவாக தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் நடை சாத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கும் மேலாக தமிழக மக்கள் திருக்கோயிலுக்குச் சென்று தங்களுக்கு இஷ்டமான தெய்வங்களை வழிபட இயலாமல் தவித்து வருகிறார்கள். வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருக்கோயில்களின் நடை தொடர்ந்து சாத்தப்பட்டுள்ளது.
மக்களின் ஆன்மீக வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கோயில்கள் மற்றும் நீதிமன்றங்களை தவிர அனைத்தும் இயங்கிவருகிறது. விமானம் முதல் டாஸ்மாக் கடைகள் வரை தற்போது இயங்கி வருகிறது. இந்நிலையில் கர்நாடகம் மற்றும் மேற்குவங்க மாநில அரசுகள் வருகின்ற ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் தங்கள் மாநிலங்களில் உள்ள திருக்கோயில்களை ஒரு சில கட்டுப்பாடுகளுடன் நடை திறக்க உத்தரவிட்டுள்ளார்கள்.
அதை போலவே தமிழகத்திலும் சமூக இடைவெளி விட்டு முகவுரை அணிந்து திருக்கோயில்களில் தெய்வங்களை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதிக்க வேண்டும் .
அதிக கூட்டம் கூட கூடிய கோயில்களில் ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு நாளொன்றுக்கு நூறு முதல் 300 பக்தர்கள் வரை தரிசிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொடர்ந்து கோயில்களில் நடை சாத்தப்பட்டு இருந்தால் இறைவனை மக்கள் வழிபடக்கூடிய வழிபாட்டிற்கு தடை ஏற்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் ஆன்மீகம் ஒரு அங்கம் .
அதில் திருக்கோயில் தரிசனம் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த திருக்கோயில் தரிசனம் இல்லாமல் கடந்த 2 மாதத்திற்கு மேலாக தமிழக மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுடைய ஆன்மீகத் தவிப்பை தமிழக அரசு தனது கவனத்தில் எடுத்துக்கொண்டு, சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்து ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கி சமூக இடைவெளியில் முகவுரை அணிந்து இறைவனை தரிசிக்க திருக்கோயில்களை திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் திருக்கோயில்களில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஆண்டு உற்சவங்கள், மாத நிகழ்வுகள், நட்சத்திர விழாக்கள் மற்றும் ஆகமவிதிப்படி குடமுழுக்கிற்கு தயாராக உள்ள கோயில்களில் குடமுழுக்கு சமூக இடைவெளிவிட்டு நடத்தவும் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.