மதுரை நகர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் மதுரை தெற்கு வெளி வீதியில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் பணியாற்றிய அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இதுபோல் அவருடன் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 20க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் மதுரை மாநகரத்தில் பணியாற்றிவரும் அனைத்து போலீஸ்காரர்களுக்கும் முக கவசம் உள்ளிட்ட தடுப்பு உடைகள் வழங்கப்பட்டுள்ளது.
அனைவரும் அதனை முறையாக பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போல் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
- ரவிச்சந்திரன், மதுரை