50 வயதைத் தாண்டியதால் என்னால் பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை என அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுரை டி.வி.எஸ் நகரில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பொது மக்களுக்கு அரிசியை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “தமிழகத்தில் உள்ள 32,982 நியாய விலைக்கடைகள் மற்றும் 1,450 அமுதம் அங்காடிகளில் பொது மக்களுக்கு முக கவசங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வழங்கப்படும்.
தரமான முகக் கவசங்கள் வழங்கப்படும். முகக் கவசங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனாவில் இருந்து மீண்ட நான் பிளாஸ்மா தானம் செய்ய தயாராக உள்ளேன். ஆனால் நான் 50 வயதைக் கடந்து விட்டதால், பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை! என் உயிரைப் பற்றி நான் என்றுமே கவலைப்பட்டது கிடையாது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும். கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் மருத்துவமனை செல்வதால் இறப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! கொரோனாவால் மட்டுமே யாரும் இறக்கவில்லை, இணை நோய்களால் இறப்பு ஏற்படுகிறது. கொரோனாவை தூசி போல ஊதித் தள்ளி விடலாம்.
மக்கள் மத்தியில் பிளவை உண்டாக்கவே கடவுள்கள் குறித்த சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர்” என்றார்.
- செய்தி: ரவிக்குமார், மதுரை