நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. ஐதராபாத் சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் முடிவடைந்து விட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினை முழுவதும் முடிவடைந்த பிறகு, அல்லது தடுப்பூசி அமலுக்கு வந்த பிறகு தான் மீண்டும் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என அஜித் கறாராகக் கூறி விட்டதாக முன்னர் கூறப்பட்டது.
இதனால் வலிமை படப்பிடிப்பு தாமதமாகும் எனவும் தகவல்கள் வெளியாகியது. இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வைரலானது.
அதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அடுத்த மாதம் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமாகும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
படத்தில் பணியாற்றும் அனைத்து நடிகர்களுக்கும் இம்முடிவு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு அஜித் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தெரிகிறது.
தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் வலிமை படப்பிடிப்பு நடைபெறும் என்றும், வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருந்த காட்சிகள் இந்தியாவிலேயே படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா பிரச்னை முழுவதுமாக தீர மேலும் பல மாதங்கள் ஆகும் என்பதால் இந்த முடிவை அஜித் எடுத்துள்ளதாக தெரிகிறது.