
பாரத அரசு தேசிய அளவில் வழங்கும் மிகச் சிறந்த அரசு மருத்துவமனைக்கான விருது, இந்த முறை செங்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்குக் கிடைத்துள்ளது. மத்திய அரசின் இந்த ‘காயகல்ப் விருது’ ரூ.15 லட்சம் பரிசுடன் கூடியது. தமிழ் மாநில அளவில் மிகச் சிறந்த மருத்துவமனையாக செங்கோட்டை அரசு மருத்துவமனையைத் தேர்வு செய்து பரிசு அறிவித்துள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்புறத் தூய்மை, பராமரிப்பு, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனையை தேர்வு செய்து, ஒவ்வோர் ஆண்டும் ‘காயகல்ப்’ என்ற விருதை அளித்து, ஊக்கப் படுத்தி வருகிறது மத்திய அரசு.
இதற்காக 5 பேர் கொண்ட குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் கள ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு மதிப்பெண் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாநிலத்தில் முதல் மற்றும் 2 வது இடம் வகிக்கும் மருத்துவமனைகளுக்கு ‘காயகல்ப்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. மதிப்பெண்களில் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும் மருத்துவமனைகளுக்கு ஆறுதல் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது, நடப்பு ஆண்டுக்கான (2020-2021) மத்திய அரசின் காயகல்ப் விருது, தமிழ் மாநில அளவில் சிறந்து விளங்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்குக் கிடைத்துள்ளது. முதல் பரிசாக ரூ.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை அரசு மருத்துவமனை கடந்த 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் பெற்று வந்தது குறிப்பிடத் தக்கது.
செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரும், கடந்த 2018 ஆம் ஆண்டு டாக்டர் பி.சி.ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவருமான டாக்டர் ராஜேஷ் கண்ணா, இந்த விருது பெற்றது குறித்து கூறியபோது…
தமிழகத்தில் சிறந்த மருத்துவமனையாக செங்கோட்டை அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது. இதற்குக் காரணம் இங்கு வரும் நோயாளிகள், தன்னார்வலர்கள் சுகாதாரப் பணிகளுக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் உள்ள அனைத்துப் பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பு உணர்வுக்கும் கிடைத்த விருது இது.” என்று பெருமிதம் பொங்கத் தெரிவித்தார்.

செங்கோட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்த சித்த மருத்துவப் பிரிவும் இங்கே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தூய்மையான பராமரிப்பு, மூலிகைத் தோட்டம் என கவனமெடுத்து கண்காணித்து வருகிறார் சித்த மருத்துவர் கலா.
1956க்கு முன்னர் கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது தமிழகத்தில் உள்ள செங்கோட்டை மருத்துவமனை, கேரள மாநில எல்லையை அடுத்துள்ள முதல் மருத்துவமனை என்பதால், இது தனிக் கவனம் பெற்றுள்ளது. நோயாளிகள் அதிகம் பேர் வந்து செல்லும் போதும், தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் சிறப்பான பராமரிப்புடன் பழைமையான திருவாங்கூரின் பாரம்பரிய கட்டட அமைப்பையும் கொண்டு திகழ்வது பெருமைக்குரிய ஒன்று!

மத்திய அரசின் காயகல்ப் விருது பெற்றதற்காக, இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா, இதர மருத்துவர்கள், செவிலியர்கள், சித்த மருத்துவர் கலா உள்ளிட்டோருக்கு தேசிய மருத்துவர்கள் தினமான இன்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.