திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சிபாரிசு கடிதத்தில் ஒதுக்கப்பட்ட வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. வி.ஐ.பி பிரேக் தரிசனநேரம் குறைக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் தினமும் இலவச தரிசன பக்தர்கள், ரூ.300 டிக்கெட் பக்தர்கள், வி.ஐ.பி. பிரேக் தரிசன பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாதாரணப் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிபாரிசு கடிதத்தில் ஒதுக்கப்பட்ட வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது.
வி.ஐ.பி. பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை சாதாரணப் பக்தர்களுக்கு ஒதுக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச தரிசன பக்தர்களுக்கு கூடுதலாக தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. அத்துடன் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தரிசன நேரத்தை ஒரு நாளைக்கு 2 மணிநேரம் கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.என திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.