கட்சி கொள்கைக்கு எதிராக வைேகா செயல்படுகிறார் என்றும் ம.தி.மு.க.வை கலைத்து விட்டு தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று சிவகங்கை, விருதுநகர் உள்பட அக்கட்சியின் 3 மாவட்ட செயலாளர்கள் பேட்டி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்ட பரபரப்பான சூழலில் நாளை புதன் கிழமை மதிமுக கட்சியின் பொதுக்குழு கூடுகிறது.
ம.தி.மு.க.வில் தலைமை நிலைய செயலாளர் பதவி துரை வைகோவுக்கு கொடுக்கப்பட்டது. இது மூத்த நிர்வாகிகள் பலருக்கு பிடிக்கவில்லை.இதனால் அதிருப்தியில் இருக்கும் அவர்கள் வைகோவின் நடவடிக்கைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்கள்.
அதிருப்தி மாவட்ட செயலாளர்களில் புலவர் செவந்தியப்பன் (சிவகங்கை), சண்முகசுந்தரம் (விருதுநகர்), செங்குட்டுவன் (திருவள்ளூர்), உயர்மட்டகுழு உறுப்பினர் அழகு சுந்தரம் ஆகியோர் நேற்று சிவகங்கையில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் வைகோவின் முடிவுகளுக்கு அதிருப்தியை வெளியிட்டதோடு கட்சியை தி.மு.க.வுடன் இணைத்து விடுங்கள் என்று கருத்து தெரிவித்தனர்.
கட்சியில் மூத்த நிர்வாகிகளும் பலர் அதிருப்தியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் நாளை புதன் கிழமை கட்சியின் பொதுக்குழு கூடுகிறது. 15-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தை அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் புறக்கணிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிருப்தியாளர்களையும் கூட்டத்தில் பங்கேற்க வைத்து அவர்களை சரிகட்ட வைகோ முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.





