மதுரையில் பிரமிக்கவைத்த மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்:

Published:

மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது என்றால் இன்று நடந்த மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பிரமிக்கவைத்தது.திருக்கல்யாண மேடை மணமகள் மீனாட்சி அலங்காரம் திருமண விருந்து என அனைத்தும் பிரமிக்க வைத்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைதிருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்படும் சித்திரை திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

திருக்கல்யாணத்திற்காக விழாக்கோலம் பூண்ட மதுரையில் பக்தர்கள், சுவாமி வேடமணிந்த சிறுவர்-சிறுமிகள் என ஏராளமானோர் அணி வகுத்து சென்றனர்.

பல்வேறு வேடமணிந்த சிறுமிகள் கோலாட்டம் ஆடிய படியும், பாட்டு பாடியபடியும் சென்றனர். இதனைக் காண மதுரை மாநகர பகுதிகள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சுவாமி வீதிஉலா நடைபெறும் மாசி வீதிகளில் திரண்டிருந்தனர்.

இன்று காலை திருக்கல்யாண விழா தொடங்கி மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது சுந்தரேசுவரருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் ஏராளமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டபின் இன்று காலை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

கோவிலில் உள்ள வடக்குமேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். அப்போது அம்மன் சிவப்பு நிறத்தில் பட்டாடை உடுத்தி இருந்தார்.

ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ரூ. 25 லட்சம் செலவில் 10 டன் வண்ணவண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருமண மேடையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் தயாராக இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் ஆடி திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினார். இதையடுத்து 10:35 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் மிதுன லக்கினத்தில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பங்கேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி ரூ.500 கட்டணச் சீட்டில் 2,500 பேர், ரூ.200 கட்டண சீட்டில் 3,500 பேர் என 6 ஆயிரம் பேர் கட்டண அடிப்படையிலும், 6ஆயிரம் பக்தர்கள் இலவச அனுமதி அடிப்படையிலும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மொத்தம் 12 ஆயிரம் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் 3000 பேர் என மொத்தம் 15 ஆயிரம் பேர் திருக்கல்யாணத்தில் கலந்துகொண்டனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலில் திரண்டனர். அவர்கள் காலை 7 மணிமுதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்று கோவிலுக்குள் சென்றனர்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் பாட்டில் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.மேலும் திருக்கல்யாணத்தை பக்தர்கள் தெளிவாக பார்க்கும் வகையில் கோவில் வளாகம் மற்றும் மாசி வீதிகளில் 20 இடங்களில் பிரமாண்ட கணினி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் மூலமாகவும் திருக்கல்யாணத்தை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கோவில் வளாகம் மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டனர். திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. அதிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

நாளை ஏப்15-ல் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடக்கிறது. சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர். காலை 6:30 மணி தேரோட்டம் நடைபெறுகிறது.
இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதேபோல் அன்றைய தினம் மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகர் எதிர்சேவையும், மறுநாள் ஏப்16-ந்தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.மாமதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

IMG 20220414 WA0109 - 2026
IMG 20220414 WA0108 - 2026
IMG 20220414 WA0094 - 2026
IMG 20220414 WA0097 - 2026

Related articles

Recent articles

spot_img